ஈழத்தமிழரும் தமிழக சம்பவங்களும்!
தமிழகம் கொதித்துக்கொண்டிருக்கிறது. கலைஞர் வழமை போல இன்னொரு ஸ்டண்ட் அடித்து உள்ளார். இதைப்பற்றி நீங்களும் வியாழமாற்றத்தில் எழுதி, அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு என்பதை காட்டவேண்டும்.
நண்பர் ஒருவரிடம் இருந்து வந்த ஈமெயில் இது. மாணவர் போராட்டம், தமிழக அரசியல் நிலைமை என்றெல்லாம் விரிவாக எழுதலாம் தான். தகுதி இருக்கிறதா? என்று கேட்டு யாரேனும் கன்னத்தை பொத்தி அறைவார்களோ என்ற எண்ணம் வந்தது. கருணாநிதியை கொலைஞர், கிழம் என்றெல்லாம் கீழ்த்தரமாக திட்டுவதையும், 2009 இல் இதை செய்யாமல் இப்போது செய்வதை நாடகம் என்று ஏசுவதையும் பார்க்க கொஞ்சம் சங்கடமாகவும் அருவருப்பாகவும் இருக்கிறது. காலம் தாழ்த்திய, தவறான முடிவுகளை எடுத்தவர்களை எல்லாம் இப்படித்தான் திட்டவேண்டும் என்றால் நாங்கள் சேர் பொன் இராமநாதனிடம் இருந்து ஆரம்பித்து, ஜிஜி பொன்னம்பலம், செல்வா, அமிர்தலிங்கம், பிராபகரன், என் அப்பா, உங்கள் அப்பா, நான், நீங்கள் வரைக்கும் வரிசைப்படுத்த வேண்டி இருக்கும். தவறு விட்டவர்களை சந்தர்ப்பம் கிடைத்துவிட்டது, facebook இருக்கிறது என்பதற்காக கையில் கிடைத்த கற்களால் அடிக்க ஆரம்பித்தோமானால் நாம் எல்லோருமே மண்டை உடைபட்டு கிடக்க வேண்டிவரும். அத்தனை தவறுகள். தவறுகள் இல்லாமல் எங்கள் போராட்டம் இந்த நிலைக்கு வந்திருக்காது. எங்களுடைய எல்லா தவறுகளுமே கியூவில் நின்றால், கலைஞரது தவறுகள் கல்வியங்காடு சந்தி தாண்டி குச்சொழுங்கைக்குள் போய் நிற்கும். வேண்டாமே. எல்லோரையும் நக்கல் அடித்து நக்கல் அடித்து யாருமே இல்லாத அநாதைகள் ஆகவேண்டாமே. ஆகியிருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன்.

பயத்தில் தான் அந்த நாடே வேண்டாம் என்று ஓடி வந்தேன். கொஞ்சம் படித்ததால் படகேறவேண்டிய தேவை இருக்கவில்லை. மற்றும்படி அகதி தான். பின்னங்கால் பிடரியில் பட ஒவ்வொரு அடிக்கும் ஓடி ஓடி மெல்பேர்ன் வரைக்கும் வந்திருப்பவன். சுதந்திரம் என்றால் என்ன என்பதை இந்த நாடு கற்றுத்தருகிறது. சுவாசிக்கிறேன். ஆனாலும் திடீரென்று அலுவலகத்துக்கு மேலால் சுப்பர்சொனிக் ஜெட் போகும்போதோ, ரெஸ்கியூ ஹெலிகப்டர்கள் தாழ பறக்கும்போதோ அடிவயிற்றில் மட்டத்தேள் ஊரும். இந்த போலீஸ்காரர் ஹை மேட் என்றாலே ஐஸியை தேடி கை சட்டைப்பையை தடவும். அந்த பயம் இன்னமும் போகவில்லை. அது என் எழுத்திலும் இருக்கிறது. சிட்டிசன் எடுத்தால் சிலவேளை கொஞ்சம் வீரம் வரலாம். அவ்வளவே.
இப்போது சொல்லுங்கள், நான் எந்த மூஞ்சியோடு ஆதரவு தெரிவிக்க? ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா? எனக்கு அது இஞ்சி கூட கிடையாது. அரையில் கோவணம் கூட இல்லாமல் இருக்கும் நான் அரசியல் ஸ்டேட்மென்ட் விடக்கூடாது. அனேகமானோர் இங்கே அம்மணம் தான். அவர்களுக்கும் அது தெரியும். ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். எனக்கு அது முடியாது. குட்டிக்கு முன்னாலே சின்னவயதில் நின்ற குமரன் இந்த கழுதை வயதிலும் மாறவேயில்லை.
இறங்கு கண்ணினன் நான், நிறம் கரிந்திட, நிலம் விரல் கிளைத்திட மீண்டும் ஒரு முறை நின்றேன்
ஆனாலும் சேஃபாக நான் செய்யக்கூடியது சிலது இருக்கிறது. பதின்மூன்று வயது சிறுவன் ஒருவன் படலையை அண்மையில் லைக் பண்ணினான். படலையின் பத்து சதவீத வாசகர்கள் இருபது வயதுக்கு குறைந்தவர்கள். அவர்களுக்கு இது தான் தண்ணீர் என்று குளத்தை கொஞ்சம் சுவாரசியமாக, அலுப்படிக்காமல் காட்டலாம். சினிமாவை தாண்டி வாசிக்கவும் பொழுதுபோக்கவும் சிந்திக்கவும், சுவையான விஷயங்கள் இருக்கென்று சொல்லலாம். அவனுக்கு போரடித்து, பிரவுசரை கிளோஸ் பண்ண முதல் சொல்லவேண்டும். அது தான் சவால். சமாளித்துவிட்டால், அப்புறம் எனக்கு தெரியாத நீச்சலை அவன் தானாகே பழகுவான். முயன்றால் நானும் அவனோடு சேர்ந்து நீச்சல் பழகலாம்.
நவநீதம் பிள்ளை
இலங்கை அரசின் எத்தனை சுத்துமாத்துகளையும் மனிசி சும்மா சிம்பிளாக புறம்தள்ளும். “உங்களை மாதிரி ஆக்கள் என்ன பண்ணுவாங்கள் எண்டு எனக்கு தெரியாதா?” என்ற தோரணையில் அவருடைய பேச்சுகளும் பதில்களும் இருக்கும். உலகத்தின் மிகச்சிறந்த இராஜதந்திரிகளுக்கு நன்றாக அவித்து தூள் உப்பு போட்டு கொடுக்கப்பட்ட பருப்பு மனிசியிடம் மட்டும் எப்படி வேகாமல் இருக்கிறது என்ற ஆச்சர்யம் ஓரிரு வருடங்களாகவே பிடுங்கித்தின்றது. அவரைப்பற்றி கொஞ்சம் விவரம் சேகரிக்க, மனிசிக்கு முன்னால் எவனும் ரீல் விட முடியாது என்பது புரிந்தது.
1941, தென் ஆபிரிக்க, டேர்பனில் ஒரு ஏழை குடியிருப்பு பகுதியில் பிறந்தவர். தமிழ் வம்சாவளி. அப்பா பஸ் ஓட்டுனர். கூட இருந்த சக தமிழர்கள் செய்த உதவியில் படித்து 24 வயதில் சட்டத்தரணி ஆகிறார். அதே ஆண்டு திருமணம். கணவனும் ஒரு சட்டத்தரணி தான். கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ஹார்வார்டில் கலாநிதி பட்டம் பெற்ற முதல் தென் ஆபிரிக்கர் என்ற பெருமையையும் பெறுகிறார்.

பின்னர் ஆரம்பித்தது ஆட்டம். ரூவாண்டாவில் நடைபற்ற குற்றங்களை விசாரிக்கும் சர்வேதேச விசாரணைக்குழுவில் எட்டு வருடங்கள் வேலை பார்த்தார். யுத்தத்தின் போது செய்யப்படும் பாலியல் வல்லுறவுகள், பாலியல் வன்முறைகள் தனிப்பட்ட சம்பவங்கள் அல்ல, அவையும் இன ஒழிப்பின் ஒரு கூறு தான் என்று ஆணித்தரமாக வாதிட்டு பல கொடியவர்களுக்கு தண்டனை வழங்கினார்.

நவநீதம் பிள்ளை ஒருமுறை சொன்ன திருவாசகம் இது.
“From time immemorial, rape has been regarded as spoils of war. Now it will be considered a war crime. We want to send out a strong signal that rape is no longer a trophy of war”“ஆதி காலத்தில் பாலியல் வல்லுறவு என்பது போரின் கெடுதல்களாகவே பார்க்கப்பட்டது. ஆனால் இனிமேல் அது ஒரு போர் குற்றமாகவே பார்க்கப்படும். பாலியல் வல்லுறவு என்பது போரில் அடைகின்ற வெற்றி கேடயம் கிடையாது, எல்லோருக்கும் இதை அழுத்தமாக அறிவுறுத்துகிறோம்”
இலங்கை இந்திய அரசுகள் நவநீதம்பிள்ளையை கண்டு நடுங்குவதற்கு காரணம் இருக்கிறது.
வேதவியாசர் எழுதிய திரில்லர் கதை!
“கதவு ஓட்டைக்கால செல்வா பார்க்கேக்க வெளிய நாலு பொலிஸ்காரங்கள் நிக்கிறாங்கள்”
இந்த முதல் வரியை கொண்டு எப்படி ஒரு கதை எழுதிமுடிப்பாய்? என்று கேதாவிடம் கேட்டேன். இடம் கேதா-வீணா வீடு. “விளங்கின மாதிரி தான்” என்றாள் வீணா. கேதா திடீரென்று கிடைத்த பட்டிங் சான்ஸை மிஸ் பண்ணாத சேகர் தவான் போல அடித்தாட தொடங்கினான். அவன் சொன்ன கதை நகைச்சுவையாக இருந்தது. முடிவும் நகைச்சுவையாக முடிந்தது. நிமிர்ந்து உட்கார்ந்தேன்.
“இப்ப இதையே திரில்லர் ஆக்க வேண்டும் என்றால் என்ன செய்வாய்?”
பல திருப்பங்கள் சொன்னார்கள். எல்லாம் முடிந்து பொலிஸ் போனபிறகு, செல்வா கீழே பாண் வாங்க போகும்போது அவனை வெள்ளை வான் கடத்துகிறது என்ற வீணாவின் பதில் பிடித்திருந்தது. சிறுகதை வீட்டை விட்டு வெளியே போக கூடாது என்றேன். அப்படி என்றால் “பொலிஸிடம் மாட்டுப்பட போகிறேன் என்று தெரிந்த கணம், கக்கூஸ் பைப்பால் தப்பி ஓடுகிறான், பொலிஸ் சுடுகிறது என்று முடிக்கலாம் அண்ணே” என்றான் கேதா. ஆக மூவருமே ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தோம். இதிலே சந்தேகநபர்/குற்றவாளி/போராளி யார் என்றால் அவன் செல்வா தான். அதே சமயம் செல்வா கதையின் முக்கிய பாத்திரமும் கூட. ஆக துப்பறியும் வேலையை பொலிஸ்காரரிடம் விடமுடியாது. செல்வா தான் குற்றவாளி என்று முதலிலேயே சொல்லிவிடவும் முடியாது. அப்படி என்றால் யார் அதை கண்டுபிடிப்பது? மூவருமே ஏகநேரத்தில் சொன்ன பதில் “வாசகன்”.
“வாசகன்” துப்பறிகிறான் என்றால் அவனுக்கு கதை பூரா துப்பு கொடுக்கவேண்டும். வாசிக்கும்போது அவன் அதை துலக்கிக்கொண்டே வர, முடிவில் “அட செல்வா தான் சந்தேக நபர்” என்று ஊர்ஜிதப்படுத்திய பிறகு செல்வா வாளியில் இருக்கும் பொருளை எடுத்து குப்பை ஓட்டைக்குள் தொங்கப்போடுகிறான். இங்கே பொலிஸ் செல்வாவை கோட்டை விடுகிறது. வாசகன் கண்டுபிடிக்கிறான். கதையில் துர்நாற்றம் ஒரு deterrent ஆக, கவனக்கலைப்பானாக பயன்படும். முடிவில் அந்த வாளி, குப்பை துவாரம். அவன் ஏன் குப்பை துவாரத்தில் முதலிலேயே தொங்கவிடாமல் வாளிக்குள் அதை ஒளித்து வைக்கவேண்டும்? இந்த கேள்விகளின் பதிலை வாசகனிடமே விட்டுவிடுவது. இது தான் ஸ்கெட்ச். டிசைன்.
இனி துப்புக்களை கொடுக்கவென்றே சம்பவங்களை கதையில் அமைக்கவேண்டும். “ஒண்டுக்கடிக்கிறான், தண்ணீர் ஊற்றவில்லை ஏன்?”. “உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்?”. “கம்பியூட்டரை ஏன் ஷட் டவுன் பண்ணவேண்டும்?”, “அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்?”, இவை எல்லாம் குட்டி குட்டி துப்புகள்.
முக்கியமான தடயம் அந்த கார்ட்ஸ் ஆட்டம் சொல்லப்பட்ட விதம். முன்னை நாள் நடந்த காட்சியை கதை விவரிக்கிறது. அந்த காட்சியில், விளையாடிய ஆறுபேரில், செல்வாவும், ரெஜினொல்டும் இல்லை. ஆனால் செல்வா தானும் விளையாடியதாக பொலீஸிடம் சொல்லுகிறான். பொய். அதை சொல்லும்போது கூட கீழே நிலத்தை பார்த்து என்ன நடந்திருக்கலாம்? என்று ஊகித்தபடி தான் சொல்லுகிறான். அது இன்னொரு துப்பு. குடிப்பழக்கம் இல்லாத செல்வாவுக்கு புகைப்பழக்கம் இருக்க சான்ஸ் இல்லை. அது இன்னொரு பொய். இப்படி கதை முழுக்க வாசகன் கண்டுபிடிக்கும் வண்ணம் பொய்களை திரும்ப திரும்ப சொல்லுகிறான். சிங்களம் தெரியாது என்பவனுக்கு போலீஸ் சிங்களத்தில் யாரோடோ பேசுவது புரிகிறது.

“சட்டென நனைந்தது இரத்தம்” சிறுகதையிலும் இம்மாதிரி நிறைய முயற்சிகள் இருக்கும். எவற்றையும் தவறவிடாமல் வீணா அந்த கதையை உடைத்து விளக்கியபோது அப்பாடா என்ற நிம்மதி வந்தது. ஸோ இம்முறையும் வீணா தான் ஆள் என்று நினைத்து கேட்டேன். “அண்ணே சொதப்பீடீங்க” என்ற முதல் வரியுடன் ஆரம்பித்த சாட்டிங் அலுவலகம் முடியும் வரை தொடர்ந்தது. அந்த சாரம்சம் இன்னொருமுறை கதை எழுதும் பொது உதவலாம்.
முதல் தவறு, வாசகன் துப்பறிவாளன் என்றால், அதற்கு அவனை கதை தயார்படுத்தவில்லை. இது துப்பறியும் கதை என்று தெரியாத வரைக்கும் அவன் ஏன் தடயங்களை தேடப்போகிறான்? என்பது வீணாவின் வாதம். சரி முதல் தடவை கண்டுபிடிக்கவில்லை. ஆனால் முடிவு இப்படியான பின்னர், மீண்டும் வாசிக்கும்போது புலப்படும் இல்லையா என்றேன். இரண்டாம் முறை வாசிக்கச்செய்யும் அளவுக்கு முடிவு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. “It was a surprising end but not an exciting one” என்றாள். கிளீன் போல்ட்.
இரண்டாவது தவறு, கதை சொல்லும்பாணியில். கதையில் செல்வாவின் எண்ண ஓட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. அப்படியானால் அவனை வாசகன் சந்தேகிக்கமாட்டான். சொல்லும் வார்த்தையில் பொய் இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் பொய் சொல்லாது, சிலதை செலக்டிவ்வாக மறைத்து சிலதை மட்டும் நினைக்காது இல்லையா? ஆக வாசிப்பவன் செல்வாவை சந்தேகிக்க சான்ஸ் குறைவு என்று வீணா சொன்னதை கேட்டபோது, என் மூஞ்சியில் ஓங்கி ஒரு குத்து விடவேண்டும் போல இருந்தது. அடச்சீ. இதை தானே தலைவர் படிச்சு படிச்சு சொல்லியிருக்கிறார். கணையாழியின் கடைசிப்பக்கங்களில் வந்த விஷயம் இது. 1972 இல் எழுதியிருக்கிறார்.
“மனதின் எண்ணங்களை விவரமாக தருவதில் தவறில்லை, ஆனால் இந்த “அவன்”, “இவன்” கதைகளில் அது எனக்கு பிடிப்பதில்லை. “இவன் மனதின் ஆழத்தில் என்னவோ பிசைந்தது” என்றால் உனக்கு எப்படி அய்யா தெரியும்? என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது?” என்று கேட்கத் தோன்றுகிறது”
அடிக்கடி எப்போது ஜேகே புத்தகம் வெளியிடப்போறீங்கள் என்று நண்பர்கள் கேட்பார்கள். அவர்களுக்கு என் பதில்.
அதற்கு ஏதாவது எழுத தெரியவேண்டுமே 

தனிமை தனிமையோ! கொடுமை கொடுமையோ!
“எல்லாமே முடிஞ்சுது, இட்ஸ் ஓவர்” என்று திடீரென்று அவன் வந்து சொன்னபோது எப்படி இருந்தது தெரியுமா? உனக்கெங்கே அது புரியப்போகிறது. சொன்னவன் திரும்பியேனும் பார்த்தானா? கேட்டால் இட்ஸ் ஓவராம். அப்படி முடிக்கமுடியுமா என்ன? கொஞ்சம் காலம் தான். இதுவும் கடந்துபோகும். எனக்கு இது புதிதல்லவே. ஆனால் இந்த நேரத்தை நிச்சயம் நிதானமாக நான் கடக்க விரும்புகிறேன். அவன் சொல்லிய வார்த்தைகளுக்குள் மறைந்திருந்த சொல்லாத வார்த்தைகளை தேட எனக்கு அவகாசம் வேண்டும். அந்த வார்த்தைகள் எனக்கு பயன்படும். எதிர்காலத்தில், வயது ஏற ஏற, இன்னொரு தவறு நிகழாமல் இருக்க .. அது எனக்கு தேவை.
இப்ப நான் என்ன செய்வது? உன்னை விட்டால் எனக்கு யாரு தான் கதி? உன்னிடம் வந்து சேருவோம் என்றால் இந்த சனியன் பிடித்த மலை இன்னமும் முன்னால் நிற்கிறது. தாண்டவேண்டும். ஏறி கடக்கவேண்டும். மொத்த உலகமுமே என் தோளில் ஏறி மிதித்தால் நான் எப்படி ஏறுவேன் சொல்லு? ஏற ஏற குளிர் வேறு ஏறுகிறது. நல்ல காலம், முகிழ்களுக்கிடையில் தெரிகின்ற சூரிய ஒளிகள், அது தரும் வெப்பம் . இந்த குளிருக்கு இதமாக, என்னை கணகணப்பாக வைத்திருக்க உதவுகிறது. ஆனால் எனக்கு அந்த சூரியன் வேண்டாம். இதோ இந்த நிமிடம் கிடைக்கும் இந்த காதல் போதும். சூரியன் தூர இருந்து ஒளி தர தான் லாயக்கு. அட என்று அருகில் போனால் சுட்டு பொசுக்கி விடும். வேண்டாம். எனக்கு நீ, பக்கத்தே நிலவு, அது போதும். எரிக்காது. இதமான இரவிலும் உன் மடி வைத்து தலை சாய்த்தால் எறிக்கவும் செய்யும். வேறொன்றும் வேண்டாமே.
இந்த வலி, காயம் எல்லாமே போதும் போதும் என்னுமளவுக்கு பார்த்துவிட்டேன். இனி முடியாது. ஒருத்தி எத்தனை ஏமாற்றங்களை தான் தாங்கிக்கொள்வாள்? நான் என்ன பெண் இல்லையா? இதெல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்றாலும் அது முடியுதில்லை. ஒரு பக்கம் தனிமை துரத்துகிறது. அதிலிருந்து தப்ப காதலை தானே தேடவேண்டி இருக்கிறது. இவ்வளவு தூரம் ஏறியும் ஆயிற்று. இனி இறங்கவும் முடியாது. இறங்கினாலும் அந்த தனிமை. வேண்டாம்.
நீ என்றதும் ஏன் இத்தனை குறுகுறுப்பு? ஒன்றுமில்லை, என்ன தான் இந்த காதல்? அது தெரியவேண்டும். அதை நீ மட்டுமே எனக்கு காட்டமுடியுமடா. என்ன தான் இந்த காதல்? உணரவேண்டும். அதையும் உன்னால் தான் எனக்கு உணர்த்த முடியும். உள்ளுணர்வு சொல்லுகிறது. அதை நம்பலாம். உள்ளுணர்வு ஒன்றும் ஆகாயத்தில் இருந்து வருவதில்லையே. அனுபவங்களில் இருந்து தானே வருகிறது. என் அனுபவங்களை விட வேறு சிறந்த பாடங்கள் எங்கே கிடைக்கப்போகிறது? உன்னை தான் இனி நம்பியிருக்கிறேன். சிக்கென பிடித்தேன் தேவனே. எழுந்தருள ஏன் இந்த தயக்கம்? பார் என்னை. மலை உச்சியில், தன்னந்தனிச்சியாக, ஒளிந்து கொள்ள கூட இங்கே இடமில்லை. என்னது அது. எங்கிருந்தோ வந்து எட்டும் தூரத்தில் திடீரென்று வந்து நிற்கிறாயே. இது நீதானா? என்ன இது கண்ணாமூச்சி ஆட்டம். இது இது தான் அந்த புள்ளியா? கடையில் கண்டுவிட்டேனா. என் காதல் என்னை கண்டுவிட்டதா? இது தான் அதுவா?
சொல்லு சொல்லு சொல்லு…இப்போது பரவுகிறதே? இந்த உணர்வா? நான் பேசுகிறேனே இதுவா? மறைக்காதே சொல்லு. எனக்கு புரிகிறது. புல்லரிக்கிறது பாரு. காதல். பார்த்தியா. நான் தான் ஏறவேயில்லையே. எல்லோரும் முடியாது என்று ஏளனம் செய்தார்களே. மலையை கடக்கமாட்டேன் என்று நினைத்தவர்களை எல்லாம் தவிடு பொடியாக்க, மலையையே குன்றாக்கினாயே என் தேவ? இன்னும் ஏன் தயங்குகிறாய். வாயேன் பேசுவோம். காதலை, திகட்ட திகட்ட பேசுவோம். இந்த காதலை சொல்லித்தா. இதுவரை நான் செய்தது எல்லாமே காதலே இல்லை என்று சொல்லு. மேலும் இது தான் காதல் என்று சொல்லு. சொல்லு. சொல்லு!
80களில் வெளியான இந்த பாடலை மீண்டும் வடிவமைத்திருக்கிறார்கள். மரியா அதற்கு உயிரும் உள்ளமும் கண்ணீரும் சேர்த்திருக்கிறார். முதன்முதலில் அவர் American Idol இல் நான்கு வருடங்களுக்கு முதல் பாடியபோது என்னை வசப்படுத்திய பாட்டு. அன்றே டவுன் லோட் பண்ணி கேட்டு கேட்டு மீண்டும் கேட்டு, ஒவ்வொரு முறை கேட்கும் போதும் புதுசாக ஒரு cry இருக்கும் பாட்டு இது. டிவைன்.
மேஜர் நோட்டில் ஆரம்பிக்கிற பியானோ, திடீரென்று மைனருக்கு போவது, காதல் உணர்வு வந்த பெண் திடீரென்று தன் பழசை நினைத்து அச்சமுறுவதை காட்ட. அது முடிய மெல்லிய சாரீரத்தில் “I want to know what love is” என்று மரியா கிரே பாடி கொஞ்சம் கொஞ்சமாக மலை ஏறும் உணர்வு இருக்கிறதே. அதை தான் தமிழில் எழுத முயன்று தோற்றிருக்கிறேன். இசையும் வரியும் அதை நிஜமான உணர்வோடு பாடும் குரலையும் வெறும் வாரித்தைகளுக்குள் வடிக்கும் வல்லமை என் எழுத்துக்கு இன்னமும் படியவில்லை. ஆனாலும் ஒரு முயற்சி தான்.
பத்த வச்சிட்டியே பரட்டை!
மச்சான் இளையராஜா ப்ரோகிராம் மெல்பேர்னில நடக்குது. டிக்கட் வாங்கிட்டியா?
இல்லை மச்சி, அது ஷுவரா நடக்குமோ தெரியாது. எதுக்கும் முதல்நாள் போய் வாங்குவம்.ஏன் என்ன ப்ரோப்ளம்?
இல்லடா, போன வருஷம் நவம்பர் மாசம் என்று கனடாவில வைக்கவிடாமா தடுத்தாங்களே
அதுக்கென்னடா .. இது மே மாசம் தானே.
அதாண்டா யோசினையா இருக்கு. எவனாவது மே மாசம், சோகமான மாதம், நிகழ்ச்சி வைக்க கூடாது என்று Facebook ஸ்டேடஸ் போட்டு அதை ஒரு பத்து பேர் ஷேர் பண்ணினா கதை கிழிஞ்சுது
டேய் தெரியாம தான் கேட்கிறன். உண்ட நாலு வயசு பெடியனுக்கு பேர்த்டே பெப்ருவரி தானே வந்தது.
ஓம் மச்சி அதுக்கென்ன?
நல்ல காலம் அந்த டைம் ஒருத்தரும் ஸ்டேடஸ் போடேல்ல .. போட்டிருந்தா… சரி விடு!&&&&&&&&&&&&&
தமிழகத்தில் நிகழ்ந்த நமது இளைஞர்களின் பெரும் எழுச்சியான போராட்டத்தைப் செய்திகளில் பார்த்தபோது மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. முன்பெல்லாம் செய்தி சேனல்களில் வயது முதிர்ந்த கிழடுகளை வைத்து பொது பிரச்சினையில் கருத்து விவாதம் செய்வார்கள். ஆனால் முதன்முறையாக "புதிய தலைமுறை" போன்ற செய்தி சேனல்கள் இளைஞர்களை அழைத்து தற்போது தமிழகத்தில் நிகழ்ந்து வரும் ஈழபபோராட்டம் பற்றி விவாதம் செய்கிறார்கள்; மாணவர்களும் முத்தாய்ப்பான கருத்துக்களை பதிவு செய்கிறார்கள்; மிகவும் சந்தோசமாக இருக்கிறது அவர்களின் பேச்சைக் கேட்கும்போது; நவனீதம் பிள்ளை அவர்களைப் பற்றி நானும் மிக சமீபத்தில் தான் தெரிந்து கொண்டேன். நவநீதம் பிள்ளை பற்றிய தங்களின் பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteசந்தோஷமான கொஞ்சம் நிம்மதி கொடுக்கும் விஷயம். இந்த இளைஞர்கள் சரியாக வழிநடத்தப்படவேண்டும் என்ற பயமும் கொஞ்சம் சேர்ந்து கொள்ளுது .
Deleteநவநீதம் பிள்ளை - spoils - தவறாக தமிழ்படுத்தியிருக்கிறீர்கள். கைப்பற்றிய என்ற பொருளில் வர வேண்டும்.
ReplyDeleteமிகவும் நன்றி ... எனக்கு இப்படி ஒரு அர்த்தம் spoils க்கு இருப்பது தெரியாது . சுட்டிக்காட்டியமைக்கு நன்றி . பெயரை சொல்லியிருக்கலாமே தல.
Deleteநன்றாக எழுதுகிறீர்கள். நான் Blogs படிப்பதோடு சரி. கடந்த 7-8 வருடங்களில் ஒரு 10 பின்னூட்டம் இட்டுருந்தாலே அதிகம்.
Deleteரவி
மிகவும் நன்றி ரவி ...
Deleteகதையில் செல்வாவின் எண்ண ஓட்டங்கள் விவரிக்கப்படுகின்றன. அப்படியானால் அவனை வாசகன் சந்தேகிக்கமாட்டான். சொல்லும் வார்த்தையில் பொய் இருக்கலாம். ஆனால் எண்ணங்கள் பொய் சொல்லாது... exactly what I felt!!
ReplyDelete"எண்ணங்கள் பொய் சொல்லும்" படியாகக் கதை எழுதி ராஜேஷ்குமார் என்று ஒருவர் 1000 நாவல் தாண்டி எழுதிக்கொண்டிருக்கிறார். இவரை எல்லாம் சில பேர் crime கதை மன்னன் என்றும் சுஜாதாவை விட நன்றாக எழுதுபவர் என்றும் தலையில் தூக்கி வைத்துக் கொண்டு ஆடுகிறார்களே :(
Deleteநன்றி ... கதையில் எண்ணங்கள் பொய் சொல்லவில்லை . ஆனால் சில சொல்லாமல் மறைக்கப்படுகின்றன . ஆனால் அதுகூட தவறு தான் . நன்றி. பெயரை சொல்லியிருக்கலாமே தல.
Deleteநன்றி பிருந்தாபன் ... ராஜேஷ் குமார் நல்ல கதைகள் எழுதியிருக்கிறார் . அவருடைய விவேக் ரூபலா கதைகள் பல நன்றாக இருக்கும் . ஆனால் தலைவரோடு ஒப்புடுவது கொமெடி தான்!
Delete>> ...ஏன் என்றால் பயம். செம பயம். போனால் கொடி பிடிக்கவேண்டும். படம் பிடிப்பார்கள். கோத்தாவுக்கு போகும். இலங்கை போனால் விமானநிலையத்தில் வைத்து என்னை பிடிப்பார்கள். நாலாம் மாடியில் ஜட்டியோடு ஒரு கதிரையில் கட்டிவைத்து முகத்தில் தண்ணீர் தெளித்து, சேர் சேர் என்று கெஞ்சி, இல்லாத உண்மைகளை சொல்லி, யோசிக்கவே நடுங்குகிறது...
ReplyDeleteஇந்த வரிக்கு மேல் படிக்கவில்லை - comment போடுகிறேன். இப்படி அனைவரது உணர்வுகளையும் சபையில் வைத்து, வாசிப்பவனை "என்னடா இவன், நம் அந்தரங்க எண்ணங்களை எல்லாம் இப்படி பந்தியில் வைக்கிறானே?" என்று உணர வைப்பதுதான் பாலகுமாரன் பாணி. சுஜாதா + பாலகுமாரன் கலந்து செய்த கலவையாகக் கலக்குகிறீர்கள் :) ("என் பாணி என்று சொல்ல மாட்டார்களே" என்று நீங்கள் நினைக்கலாம். அதற்கு கொஞ்சம் வருடங்கள் ஆகும் :)).
பாலகுமாரன் புத்தகங்கள் இரண்டு மூன்று வீட்டில் கிடக்கு. இன்னும் வாசிக்கவில்லை. அவர் எழுத்து நடை இன்னமும் வசப்படுத்தவில்லை என்பது ஆச்சர்யம் கொடுக்குது . ஒருநாள் ஆற அமர வாசிக்கவேண்டும் .
Delete//அவன் பெயர் செல்வா, ஆனால் கொம்பியூட்டரில் பாவித்த பாஸ்வேர்ட் வேறு, ஏன்?//
ReplyDeleteதன்ர பேரை பாஸ் வேர்ட் இல போட்ட ஈசியா கண்டு பிடிக்க மாட்டாங்கள? நானும் தான் ஒரு மிருகத்திண்ட பேரை பாஸ் வேர்ட் இல போட்டிருக்கிறான். அப்ப நான் தீவிரவாதியா?
//தன்ர பேரை பாஸ் வேர்ட் இல போட்ட ஈசியா கண்டு பிடிக்க மாட்டாங்கள?//
Deleteஅல்லது அது பிரதீபனுடைய லொகின் ஆக இருக்கலாம் இல்லையா . தனித்தனியாக துப்புகளை அவதானித்தால் அவை சிலவேளைகளில் துப்பு போல தெரியாது . ஆனால் எல்லாமே கூட சேர , ஓகோ என்று யோசிக்கவைக்கும் என்று நினைத்தேன் . வைக்காதது கதையின் தவறு .
மிருகத்தின் பெயரை பாஸ்வேர்டாக வைத்திருப்பதற்கு தனியாக விளக்கம் கொடுக்கலாம் !!! நானும் கொஞ்சநாள் வச்சிருந்தேன் . பலர் கண்டுபிடிச்சிட்டினம் . இப்ப மனிசண்ட பெயருக்கு மாறீட்டன் :D
நவநீதம்பிள்ளை பற்றிய பதிவுக்கு நன்றி JK
ReplyDeleteநன்றி Dhanya
Delete>“மனதின் எண்ணங்களை விவரமாக தருவதில் தவறில்லை, ஆனால் இந்த “அவன்”, “இவன்” கதைகளில் அது எனக்கு பிடிப்பதில்லை. “இவன் மனதின் ஆழத்தில் என்னவோ பிசைந்தது” என்றால் உனக்கு எப்படி அய்யா தெரியும்? என்று கேட்கத்தோன்றுகிறது. “அவனுக்கு எப்பொழுதுமே விரை கொஞ்சம் பெரிசு” என்று வாசிக்கையில் “அவ்வளவு அன்யோன்யம் எப்படி ஏற்பட்டது?” என்று கேட்கத் தோன்றுகிறது”
ReplyDeleteஇது கொஞ்சம் இடிக்குது. அப்போது கதைசொல்லி எப்பவும் "நான்" என்றுதான் இருக்கவேண்டும். அத்தோடு அவன் இவன் என்பதற்குப் பேர் போட்டாலும் இதே கொமென்ற். மொத்தத்தில் கதை வேறு விதமாக எழுதமுடியாது. பிறகு புதுமைப்பித்தனையே நிராகரிக்க நேரிடும்.
எப்போதும் கதைசொல்லி கதைக்குள் இருக்கவேண்டுமா? கதைசொல்லி மூன்றாம் நபராக எல்லாம் தெரிந்த ஒராள் மாதிரித்தான் நிறையக் கதைகளில். "பொன்னம்மா தண்ணீரை முகத்தில் இறைத்து முகம் கழுவினாள், குளிர் தண்ணீர் முகத்தில் பட்டதும் சில்லென்று உணார்ந்தாள்..."
என்றால் எப்படி உனக்குப் பொன்னம்மாவின் உணர்வு தெரிந்தது எனக் கேட்க வெளிக்கிட்டால், எழுத் முடியாது பொஸ்.
அண்ணே மொத்தமா எழுதக்கூடாது என்றில்லை . ஆனா உறுத்தாம எழுதோணும் எண்டு நினைக்கிறன். அதுவும் இந்த கதைல அந்த தவறு ஒரு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கு. மைண்ட்ல இந்த விஷயத்தை வச்சிருக்கிறது பெட்டர்.
Deleteஎனக்கென்னவோ ப்படி விபரிப்பது தேவையில்லை போல் உள்ளது. விபரித்தபின் "சப்' என்று இருக்கிறது.
ReplyDelete>உடனே திறக்காமல், தப்பி ஓடுவதை பற்றி ஏன் ஒரு கம்பஸ் மாணவன் சிந்திக்கவேண்டும்?”.
இலங்கை மாதிரி ஒரு நாட்டில் -போலீசிடம் இம்சைப்பட்ட எவனுக்கும் ஓடவேண்டும் போல் ஒரு உந்துதல் வரும் . ஓடினால் என்ன நடக்கும் என்று தெரிவதால் ஓடுவதில்லை. எனவே இந்தப் துப்பால் அவன் 'மகா பேர்வழி' என்று ஊகிக்க முடியாது.
>குடிப்பழக்கம் இல்லாத செல்வாவுக்கு புகைப்பழக்கம் இருக்க சான்ஸ் இல்லை
இல்லை. இப்படி நிறையப் பேரைச் சந்தித்துள்ளேன். சிகரட் ஒன்லி.
>சிங்களம் தெரியாது என்பவனுக்கு போலீஸ் சிங்களத்தில் யாரோடோ பேசுவது புரிகிறது.
இதுவும் மேலோட்டமானது. என்னைக் கேட்டால் சிங்களம் கொஞ்சம்தான் தெரியும் என்று சொல்லுவேன். ஆனால் யாராவது பேசுவது புரியும். (என்னால சரளமாக பேச முடியாது)
>_லத்தீன் அமெரிக்க வாசகர்கள், கேரளா என்றால் இந்நேரம் இந்த கதையை கொண்டாடியிருப்பார்கள் என்று சும்மா டகால்டி விடமுடியாது
நீங்கள் என்ன சொன்னாலும் வேப்பந்தோப்பை ஸ்பானிஷ் இல் மொழிபெயர்க்கும் எண்ணத்தை விடுவதாக இல்லை.
-------------
Too difficult to type in Tamil using google transliteration or cloud -literation or whatever. So continuing in English .IMHO, you do not have to analyse like a school project. Leave it to the reader. BTW, this really is a good piece of writing (without this analysis). Again if the end is made different, this will be a classic. (However in someone else view, this is already is)
We do not have to say 'why he did not hang the pastic thingy in the garbage hole BEFORE." etc etc If someone asks the answer shall be "what can I do? Selva did it that way!!. "
அண்ணே .. என்னோட அதிக பிரசிங்கிதனம் . கொடுக்கிற துப்புகள் மேலோட்டமாக பார்த்தால் இயல்பாக தொன்றோணு ம். லொஜிக்கலா இருக்கோணும் . செல்வா கார்ட்ஸ் விளையாட்டில பெயர் மாத்தி சொல்லுறது கூட லொஜிக்கல் தான். வீட்டில இல்லாதவன் பெயர் சொன்னா சிக்கல் என்று நினைத்திருக்கலாம் தானே!
Deleteஆனா எல்லாத்தையும் அடுத்தடுத்து வாசிக்கேக்க இதில ஏதோ சிக்கல் இருக்கே என்று தொன்றோணும் . இப்பிடி எல்லாம் ஓவரா யோசிச்சன் பொஸ். ஆனா குட்டி குட்டி மாட்டர் யோசிச்சதில கதை நகர்த்தலில இருந்த ஓட்டையை கவனிக்காம விட்டிடன்.
//you do not have to analyse like a school project. Leave it to the reader.//
சிலவேளைகளில இந்த லீட் கொடுக்காட்டி ஒன்றுமே போய் சேராது என்று யோசிச்சன் . டொக் டொக் கதைக்கு விளக்கம் கொடுக்க இல்ல. இன்றைக்கு இந்த சிறுகதை உத்தியும் சேர்த்து ஒரு விளக்கம் குடுக்கலாம் என்று பாஸ். வேதவியாசர் என்று தலைப்பு கொடுத்தது அதுக்கு தான் :D
// If someone asks the answer shall be//
Actually there is a logical answer, but I wouldn't tell it. Like you said, let the reader to figure it out.
ஒரே ஒரு இடத்தில எனக்கு இடறினது - ரெஜினோல்ட் கிளிநொச்சி எண்டு தேவையில்லாம அழுத்தி சொன்னது
Deleteகலைஞர் கருணாநிதி பற்றி நீங்கள் எழுதினது நிதர்சனம். முந்தி நான் வாசிச்சு சிரிக்கிற விஷயம் இப்ப போர் அடிக்க தொடங்கீட்டு. வயசு அனுபவம் எல்லாம் தாண்டி அவரை நண்டு சிண்டு எல்லாம் போட்டு தாக்கிறது டூ மச்.
ReplyDeleteசேம் ப்ளட் . கடுப்பாயிட்டோம் பாஸ் !
Delete//ஆதரவு தெரிவிக்க ஒரு தார்மீக தகுதி வேண்டுமில்லையா? எனக்கு அது இஞ்சி கூட கிடையாது.// It applies to me also 100%. //அவர்களுக்கு இது தான் தண்ணீர் என்று குளத்தை கொஞ்சம் சுவாரசியமாக, அலுப்படிக்காமல் காட்டலாம்.// Exactly! When I first read your blog, I felt that and I started follow your writings. //எல்லோரையும் நக்கல் அடித்து நக்கல் அடித்து யாருமே இல்லாத அநாதைகள் ஆகவேண்டாமே. ஆகியிருக்கிறேன். அதனால் தான் சொல்கிறேன்.//PLEASE CONVEY THIS MESSAGE TO AS MUCH PEOPLE (ESPECIALLY TO TAMILS) AS YOU CAN. I feel for some reason we (Tamils) won't easily appreciate others.
ReplyDeleteThanks Mohan, yeah, its really irritating some people just sitting at their office desks and bulling everybody else in the world.
Deleteஉங்களிடம் பிடித்ததே உங்களின் வெளிப்படையான எழுத்துக்கள் தான்.ஆளாளுக்கு சமூகக் காவலனாகவும் விடுதலை விரும்பியாகவும் முகப்புத்தகத்தில் தம்மை காட்டிக் கொள்ள விழைகிறார்கள் என்பது பெரும்பாலும் உண்மையே ஆனாலும் மனதில் இருக்கும் ஆத்திரத்தை கொட்டித்தீர்க்க ஸ்ரேரஸ் போடும் ஒருவகையொரும் உண்டு என்பதை மறக்கக்கூடாது.
ReplyDeleteசில மாதங்களாக படலை வாசிப்பவன் நான்.ணெல்வா கதையும் ஏதோ நடந்த சம்பவத்தை சுவாரசியமாய் எழுதியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன்.இப்படியெல்லாம் யோசிக்கவில்லை
நன்றி தினேஷ் ...
Delete//ஆத்திரத்தை கொட்டித்தீர்க்க ஸ்ரேரஸ் போடும் ஒருவகையொரும் உண்டு//
வேண்டாம் என்று சொல்லவில்லை .. ஆனால் ஆத்திரத்தை யார் மேலே காட்டுகிறோம் என்றதில இருக்கு இல்லையா. என் பிள்ளை செய்த தவருக்கு பக்கத்துவீட்டு பெடியனை போட்டு கும்மலாமா?
So Sarcastic Month of February.
ReplyDeleteBy the way I am going to use your history teachers technique in Redbridge Tamil School, UK today. It is snowing today so it is doubtful that children will turnup...
Yes, your first section: Nobody is perfect.
Yes, I also thout Selva is narrator and the new guy is the suspect.
siva59s@yahoo.com
Thank you .. let me know the reactions :) . Hope students will enjoy.
Deleteநீங்கள் எழுதிய திரில்லரில் உள்ள ஒரு முக்கிய விடயம் எம்மை அதனை ஒரு திரில்லராக நினைக்க விடாமல் செய்து விட்டது.
ReplyDeleteதமிழ் பேசும் மாணவர்கள் இவ்வாறான சோதனைகளிற்கு முகம் கொடுப்பது நாளாந்தம் நடைபெற்று வந்த ஒரு விடயம் தான்.
எனவே எந்தக் காலத்திலாவது கொழும்பில் தங்கியிருந்த பலரும் இதனைத்தமது அனுபவமாகவே நினைப்பார்கள். அத்தோடு நீங்களும் முன்னாள் மொரட்டுவ மாணவரா – சரிதான் – ஏதோ அனுபவப் பகிர்வு போலும் என்றுதான் நினைக்கத் தோன்றியது. அத்துடன் அறையிருந்த கோலமும் அதைப்போலத்தான் இருந்தது.
“…கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு …” என்ற பகுதி கொஞ்சம் பொருந்தாத மாதிரி இருந்தது. ஆனால் மிகுதிப்பகுதி அந்தத்திசையில் எம்மைச் செல்லவிடவில்லை.
தொடக்கத்தில் இப்படி ஏதாவது எழுதியிருந்தால் எமக்கு திரில்லர் மூட் வந்திருக்கும்.
படார் படார் படார் என்று வாசல் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது.
திக்கென்றது. ‘யாராக இருக்கும்? ஒருவேளை பொலிஸ்காரர்களோ?’
கைநிறைய சோப் நுரை. நன்றாக அலம்பி, துவாயால் துடைத்துவிட்டு போக எத்தனித்தவன் நின்றான். இப்போது ஒண்டுக்கடிக்க வேண்டும். கக்கூஸ் பவுலில் அவசர அவசரமாக ஒண்டுக்கடித்துவிட்டு ஃப்ளஷ் பண்ணாமலே வாயிலை நோக்கி போகும்போது மீண்டும் படார் படார். இம்முறை அவசரம் தெரிந்தது.
நான் ஒன்றும் எழுத்தாளன் அல்ல. இப்படி எல்லாம் வெளிப்படையாக எழுதிவிட்டால் பிறகு அது எப்படித் திரில்லர் ஆகும் என்றெல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது.
அந்த செட்டப் செய்யாமல் விட்டது தவறு தான். இனி ஒருமுறை திரில்லர் எழுதும்போது இந்த விஷயங்களை கவனிக்கவேண்டும். டிசைனில் ஏற்பட்ட கோளாறு இது :)
Delete//அத்தோடு நீங்களும் முன்னாள் மொரட்டுவ மாணவரா//
நான் யார் என்பதோ, என் அனுபவம் இதுவாக இருக்குமோ என்ற எண்ணமோ வாசிக்கும்போது வரக்கூடாது. வியாழமாற்றம் உட்பட எதுவுமோ முழுக்க முழுக்க உண்மையாகவும் எழுதுவதில்லை. பொய்யாகவும் எழுதுவதில்லை. உதாரணத்துக்கு நான் எந்தக்காலத்திலும் நண்பர்களோடு ஒரு வீட்டில் இருந்தவன் அல்லன் :)
சொல்ல மறந்த இன்னொரு விடயம்: கதையில் இங்கே ஒரு தவறு நடந்திருக்கலாம் என்கிற பக்கம் சரிவர வெளிப்படவில்லை. முழு தேடுதலும் முடியும் வரை பொலிஸ் இங்கே "எதையோ" தேடி ("யாரையோ" அல்ல) வந்திருக்கிறது என்பது புலப்படவேயில்லை.
Deleteஉண்மை பிரிதிவி .. அதை தான் இந்த பதிவிலே அலசியிருக்கிறேன்.
Delete"டேய் தெரியாம தான் கேட்கிறன். உண்ட நாலு வயசு பெடியனுக்கு பேர்த்டே பெப்ருவரி தானே வந்தது."
ReplyDeleteI think there is a wrong calculation. The boy should have been born in Feb'10 and therefore his age should be 3 (If I am not mistaken what reason you are trying to imply!)
yes .. error in calculation :D .. Thanks for pointing it out (If both of us are not mistaken on what readon I was trying to imply!)
Delete