Skip to main content

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்




காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது. 

“வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்”

லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.

சிவிக் சென்டரில் விக்கிமாமாவின் வீட்டிலிருந்து மகாவித்தியாலயம் கூப்பிடு தூரத்தில்தான். நான் பதினொராம் வகுப்பில் போய் இணைந்தேன். இடம்பெயர்ந்த மாணவர்கள் அத்தனைபேரும் அங்குவந்து படித்துக்கொண்டிருந்தார்கள். ஆசிரியர்களில் பலர்கூட இடம்பெயர்ந்தவர்கள்தாம். அந்நாட்களில் சீருடை, சப்பாத்து எல்லாம் அணியவேண்டும் என்ற கட்டாயம் இருக்கவில்லை. அநேகமாக பாட்டா. கொஞ்சம் காசுள்ளவர்கள் சோலாப்புரி. ஆண்கள், பெண்கள் எல்லோரும் ஒரே வகுப்பில் படித்தோம். வருகை இடாப்பு என்று ஒன்று பெயருக்கு இருந்தது. ஆனால் தினமும் புதிதாகப் பலமுகங்கள் வந்துசேர, சில நாட்கள் பழகிய முகங்கள் காணாமல்போகும். ஆசிரியர்களும் அப்படித்தான். அடிக்கடி மாறிக்கொண்டிருப்பார்கள்.

வட்டக்கச்சிப் பண்ணையில் கிபிர் அடிக்கும் நாள்கள், ‘ஓயாத அலைகள்’, ‘கிளிநொச்சி இராணுவ நடவடிக்கை’ போன்ற சண்டைக்காலங்களைத் தவிர்த்து ஏனைய நாட்களில் பாடசாலை நடைபெறும். அந்நாட்களில் பாடசாலைக்குப் போவது என்பது மிகுந்த உற்சாகத்தைக்கொடுக்கும் செயற்பாடாக இருந்தது. அடுத்தநாள் பாடசாலை இயங்குமா, இல்லையா என்று தெரியாத நிலையிலும்கூட ஆசிரியர்கள் மிகுந்த சிரத்தை எடுத்துப் படிப்பித்தார்கள். யுத்தச் செய்திகளும், உலர் உணவு அட்டை, நிவாரணம் பற்றியக் கதைகளும், கொட்டில் போடுதல், கிடுகுவிலை, பொருள்தட்டுப்பாடு பற்றிய செய்திகளுமே நாள்களை ஆக்கிரமித்து வைத்திருந்த காலங்களில் கற்பதும் கற்பிப்பதும் அனைவருக்கும் ஒரு வடிகாலாக இருந்திருக்கவேண்டும். எனக்கோ, வகுப்பில் முதன்மை மாணவனாக இருந்ததால் ஆசிரியர்களின் கவனிப்பு தனியாக இருந்தது. கிட்டத்தட்ட முதல்மரியாதை ராதாவைச் சந்திக்கப்போகும் சிவாஜியின் மனநிலை அது. இன்னொருகாரணம் நிஜத்திலும் ஒரு ராதா வகுப்புக்கு வந்துகொண்டிருந்தாள். அந்த ராதாவும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவள். இடம்பெயர்ந்து ஹட்சன்ரோட்டில் சொந்தக்காரர் வீட்டில் வசித்துவந்தாள். யாழ்ப்பாணத்தில் என்னைக் காணும்போதெல்லாம் ராதா முன்வீட்டு ஜிம்மி உறுமுவதுபோல நறு நறு என்பாள். ஆனால் வட்டக்கச்சியிலோ கூழான் பிலாக்காயைக் கண்ட குட்டிநாய்போல இளித்துவைப்பாள். வாழ்க்கையில் முதன்முதலாக ராதா நேரில்வந்து என்னோடு பேசியதும் அந்தப்பாடசாலையில்தான். ஐந்தொகை, இலாபநட்டக்கணக்குவரை இணைந்து படித்திருந்தோம். சிலபஸ் முடிவதற்குள் ஆர்மி கிளிநொச்சி வந்துவிடவும் ராதா ஒலுமடுப்பக்கம் போய்விட்டாள். இப்போது ராதா எங்கிருக்கிறாள் என்று தெரியவில்லை. தெரியவும் வேண்டாம். ராதா என்றால், பெரிய வெள்ளைப்பொட்டு போன்ற முகத்தில் சின்னதாக ஒரு கறுப்புப்பொட்டு, மேலே தீற்றலாய்த் திருநீறு, இரட்டைப்பின்னல், மிக நீட்டாக அயர்ன்பண்ணப்பட்ட பாடசாலைச் சீருடை, சீருடை முடியும் இடத்தில் ஆரம்பிக்கும் வெள்ளை சொக்ஸ். டெனிஸ் சப்பாத்து, லுமாலா லேடிஸ் சைக்கிள், மிக மிக மெதுவாக சைக்கிள் உழக்கியபடி, தூரத்தில் என்னைக்கண்டதுமே சிரிப்போமா விடுவோமா என்று யோசிக்க ஆரம்பித்து, நெருங்கிய பிற்பாடு இரண்டுக்கும் நடுவாய் வெங்கலாந்தித்தனமாக ஒரு சிரிப்பு உதிர்த்து, “எப்பிடிப் படிப்பு போகுது குமரன்?” என்று கேட்கவேண்டும். அது அழகு. மூன்றாவது பிள்ளையின் ஐந்தாவது பேர்த்டே படத்தைப்போட்டு “ஹப்பி பேர்த்டே மை கியூட்டி பாப்பா” என்று மரண மொக்கைபோடுபவளை எல்லாம் ராதா என்று ஏற்றுக்கொள்ளமுடியாது. வேண்டாம்.

மகாவித்தியாலத்துக்கு அருகே மிகப்பெரிய கிளிமூக்கு மாமரம் இருந்தது. கிளிமூக்கன்கள் பழுத்தாலும் சுவை. காய் என்றாலும் சுவை. சும்மாவும் சாப்பிடலாம். உப்போடும் சாப்பிடலாம். உப்போடு மிளகாய்த்தூள் சேர்த்தும் சாப்பிடலாம். உப்பு, மிளகாய்த்தூளோடு, சீனி கரைத்தும் சாப்பிடலாம். அந்த மாங்காய்க்கு அப்படி ஒரு சிறப்பு. பாடசாலை முடிந்ததும் அந்த மாமரத்துக்கு கல்லெறிவதே நம்முடைய முக்கிய வேலையாக இருந்தது. நான் கல்லெறிந்து எந்த மாங்காயும் விழுந்ததாகச் சரித்திரமில்லை. அவ்வளவு ஏன், மாங்காய்க்கு கிட்டவே கல்லுப் போவதில்லை. ஆனால் சில மாணவர்கள் சொல்லி அடித்து மாங்காயை விழுத்துவார்கள். அவர்களுடைய யுக்தி பின்னர்தான் புரிந்தது. அவர்கள் எப்போதுமே ஒரே ஒரு மாங்காயையே குறிவைத்து அடிப்பார்கள். அது விழும்வரைக்கும் வேறு மாங்காய்மீது அவர்கள் கண் போகாது. நான் அப்படியில்லை. ஒரு மாங்காய்க்கு எறிந்துபார்ப்பேன். படவில்லை என்றால் அடுத்த மாங்காய். சமயத்தில் எறியாமலேயே இந்தமாங்காய் நமக்கு விழாது என்று நகர்ந்துபோயிருக்கிறேன். 

ஓ.எல் பரீட்சை எடுக்கும் அந்த ஒருமாதமும் பதட்டமான காலப்பகுதி. பரீட்சைச் சமயம் ஒரு அடிபாடு நடந்தாலும் பரீட்சை தள்ளிவைக்கப்படும் அபாயம் இருந்தது. ஆனாலும் எந்த இடையூறும் இல்லாமல் பரீட்சை நடந்து முடிந்தது. பரீட்சை முடிந்ததும் நாம் மீண்டும் ஓமந்தை, நெலுக்குளம் அகதிமுகாம், கோழிக்கூடு வழியாக யாழ்ப்பாணம் திரும்பிவிட்டோம். என்னுடைய பெறுபேறுகளைப் பின்னர் தபாலில் அனுப்பியிருந்தார்கள். அதிபர் செல்வராஜா கையெழுத்து வைத்திருந்தார். பிசிக்ஸ் குமரன் மாஸ்டரிடம் ரிசல்டைப் போய்ச்சொன்னபோது அவரின் பதில்.

“இப்பெல்லாம் நிண்டவன் இருந்தவன்கூட செவன் டி எடுக்கிறான்.”

இந்த இருபது வருடங்களில் எப்போது யாழ்ப்பாணம் போனாலும் வட்டக்கச்சி போகாமல் திரும்புவதில்லை. வட்டக்கச்சிக்குப் போகும்போது மகாவித்தியாலயத்தை ஒரு சுற்று சுற்றாமல் திரும்புவதில்லை. யார்? என்ன? இவர் படிப்பாரா மாட்டாரா? திறமை இருக்கா? இல்லையா? என எதையுமே விசாரிக்காமல், வடிகட்டாமல், இடம்பெயர்ந்து வந்த மாணவர்களையும் ஆசிரியர்களையும் அள்ளி அரவணைத்து, பரீட்சை எழுதவும் சந்தர்ப்பம் கொடுத்த பாடசாலை. கட்டணமாக ஐந்து சதம்கூட வாங்கவில்லை. 

படித்த பாடசாலையின் புகழையும் பெருமையையும் நான் சட்டைபோல அணிந்துகொள்வதை விரும்புவதில்லை. நாம் பாடசாலைக்குப் புகழ் தேடிக்கொடுக்கவேண்டுமே ஒழிய பாடசாலையின் புகழில் நாம் குளிர்காயக்கூடாது என்பது என்னுடைய எண்ணம். அதனாலேயே நான் படித்த பாடசாலைகளைப்பற்றிப் பெரிதாகக் கூவிப்பாடுவதில்லை.ஆனால் வட்டக்கச்சி மகாவித்தியாலயம் எனக்குச் செய்தது காலத்தினால் செய்த நன்றி. 

அது ஞாலத்தின் மாணப்பெரிது எனக்கு.

நன்றி.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக