Skip to main content

அங்காடிப் பெண்



இரவு உணவுக்கு நண்பர்கள் வருவதாக இருந்தது.

வீடு படு குப்பையாக இருந்தது. சமையல் சாமான்கள் எல்லாம் தீர்ந்திருந்தது. வாங்கவேண்டும். சமையலறை சின்ங் முழுதும் ஒருவாரத்துப் பாத்திரங்கள் நிறைந்திருந்தன. மினுக்கவேண்டும். வேலைக்கு லீவு போடலாம் என்றால் அன்றைக்கு என்று பார்த்து ஒரு ரிலீஸ் இருந்தது. போயே தீரவேண்டும். அவளும் பிஸி.

காலை ஐந்தரைக்கே அன்றைய நாள் மிரட்ட ஆரம்பித்தது. மிக நீண்ட நாளுக்கான காலை மிக அலுப்புடனேயே விடியும். அன்றும் அப்படித்தான். எல்லாவற்றையும் மறந்துவிட்டு சற்றுநேரம் தூங்கினால் என்ன என்று இருந்தது. முடியவில்லை. தேநீரை ஊற்றி ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்தேன். “மாஸ்டர் அண்ட் மாகரிட்டா” நாவல் அலுப்படித்தது. கடவுள் தத்துவ விசாரங்கள் எல்லாம் இப்போது பயங்கரமாக அலுப்படிக்கின்றன. இருக்கு இல்லை என்ற விவாதங்கள் வெறும் வெற்று. இருக்கு என்றால் இருக்கு. இல்லை என்றால் இல்லை. இரண்டாலும் எந்தப்பயனும் இல்லை என்பதே உண்மை. புத்தக வாசிப்பு மனிதர்களின் இயல்புகளைப் பெரும்பாலும் மாற்றியமைப்பதில்லை. அவை கொடுக்கும் விசுவரூப தருணங்களின் நீளம் மிகக்குறைவு. அதிகம் போனால் சேம் பின்ஞ் சொல்ல வைக்கும். அவ்வளவுதான். நமக்குள் உள்ளதை நமக்கே நினைவுபடுத்தும் வேலையைத்தான் புத்தகங்கள் செய்கின்றன. மற்றும்படி பெரிதாக ஒன்றையும் அவை வெட்டி விழுத்துவதில்லை. அதுவும் கூட்டப்படாத வீட்டில், சமையலுக்குச் சாமான்கள் வாங்கவில்லையே என்ற டென்ஷனில் தத்துவவிசாரங்கள் ஒரு மண்ணுக்கும் பிரயோசனமில்லாதவை. மூடிவைத்துவிட்டேன்.

பாட்டைப் பிளே பண்ணிவிட்டு ஒவ்வொரு பாத்திரமாகக் கழுவ ஆரம்பித்தேன். “நான் பகல் இரவு. நீ கதிர் நிலவு” என்று நீத்தி மோகன் ஆரம்பித்தார். இசை அனிருத். அனிருத் இசை பற்றிப் பெரிதான அபிப்பிராயம் ஏதும் எனக்கு இதுவரை இருந்ததில்லை. ஆனால் இந்தப்பாட்டோடு அவர்மீதான மதிப்பு மிக மிக உயர்ந்துவிட்டது. நூறு வருடங்களுக்குப் பிறகும் அனிருத் இந்தப்பாட்டினூடாக நிலைப்பார் என்று தோன்றுகிறது. டிவைன். "நீ வேண்டுமே" என்று பாடும்போது நெகிழாதவர் ஒருவர்தன்னும் உண்டோ?

ஏழு மணிக்குப் பல்பொருள் அங்காடி திறக்கையில் அவசரமாக உள்ளே நுழைந்தேன். குறித்து வைத்திருந்த சாமான்களை எல்லாம் மடமடவென்று எடுத்துப்போட்டபடி கவுண்டருக்குத் திரும்புகையில் தள்ளுவண்டி நிறைந்திருந்தது. இங்கே பல்பொருள் அங்காடிகளில் தானியங்கிக் கவுண்டர்கள் உண்டு. வாடிக்கையாளர்களே பொருட்களை ஸ்கான் பண்ணி, காசையும் கொடுத்துவிட்டுப் போகலாம். எனக்கு ஒவ்வொன்றாக ஸ்கான் பண்ணிப் பையில் போடப் பஞ்சியாக இருந்தது. தானியங்கியைத் தவிர்த்து சாதாரணக் கவுண்டருக்குப் போனேன்.

“ஹவ் ஆர் யூ டுடே?”

வழமையாக இந்தக்கேள்வி இயந்திரத்தனமானதாக இருக்கும். நானும் “குட் தாங்க்ஸ். யுவர்செல்ப்?” என்று இயந்திரத்தனமாக பதிலளித்துவிட்டு பொருட்களைப் பரப்புவேன். ஆனால் இந்தக்குரலில் ஒரு சிநேகம் இருந்தது. நிமிர்ந்து கவுண்டரில் நின்றவரை வடிவாகப் பார்த்தேன். அறுபது வயது மதிக்கத்தக்கப் பெண்மணி. அவர் சிரிக்கும்போது கண், மூக்கு, நெற்றி, கன்னம், காது என்று எல்லாமே சேர்ந்து சிரித்தது. நானும் சிரித்துவிட்டு “ஹவ் ஆர் யூ?” என்றேன். சிநேகமாக. “இஸின்ட் இட் எ லவ்லி டே?” என்றார். அத்தோடு நிறுத்தவில்லை. “இவ்வளவு பொருட்களை காலையிலேயே வாங்குகிறீர்களே, இன்று வீட்டிலே என்ன சிறப்பு?” என்று கேட்டார்.

“நண்பர்கள் வருகிறார்கள்” என்றேன்.

“ஓ லவ்லி. சிறப்பாக ஏதும் சமைக்கிறீர்களா?”

“சிறப்பாக என்று சொல்ல முடியாது. பாஸ்டா செய்கிறோம். டேசெர்ட்டுக்கு அப்பிள் பை செய்யலாம் என்று ஒரு ஐடியா.”

“அற்புதம். உங்கள் ரெசிப்பியின் ரகசியம் என்ன?”

“ரகசியத்தை எப்படி வெளியே சொல்வது? தவிர எனக்கு பையை சாப்பிட மாத்திரமே தெரியும். மனைவிதான் செய்யவேண்டும்”

நான் பகிடி விட்டதாக நினைக்கவில்லை. ஆனால் அவர் விழுந்து விழுந்து சிரித்தார். கூடவே அந்தவழியால் சென்ற இன்னொரு பணியாளரை அழைத்துச்சொன்னார்.

“நான்ஸி. திஸ் ஜென்டில்மென் பமிலி இஸ் மேக்கிங் அன் அப்பிள் பை டுடே”

எனக்கு இப்போது சங்கடமாகப் போய்விட்டது. இருவரையும் இரவு உணவுக்கு வீட்டுக்கு வரச்சொன்னேன். அவர்களும் வருவதாகச் சொன்னார்கள். “வி வில் பலோ த ஸ்மெல்” யாருக்காக இல்லாவிட்டாலும் அவருக்காகவேனும் அந்த அப்பிள் பை அன்று சரியாக அமையவேண்டும் என்று தோன்றியது. பணம் செலுத்தி பில் வாங்கும்வரையிலும் அவர் பேசிக்கொண்டேயிருந்தார். “ஸீ யூ” சொல்லி விடைபெற்று காரில் வந்து ஏறிய பின்னரும் என் முகத்தில் சிரிப்பு மறையாமலிருந்தது. காது, மூக்கு, கன்னம், நெற்றி எல்லாம் சேர்ந்து சிரிக்கும் சிரிப்பு. அன்று முழுதும் அந்தச்சிரிப்பு என் முகத்திலிருந்து மறையவேயில்லை.

காலை ஏழு மணிக்கு அன்றைய நாளின் அத்தனை டென்சனையும் முகத்தில் தாங்கியபடி வந்தவனை அந்தப்பெண்மணியால் எப்படி மாற்றியமைக்க முடிந்தது? என்னுடைய காலைப்பொழுது எப்படி அவ்வளவு இனிமையாக மாறிப்போனது? அன்று நான் தானியங்கி எந்திரத்தில் சாமான்களை ஸ்கான் பண்ணியிருந்தால் அந்தச் சிரிப்பை இழந்திருப்பேன். அந்த நாளின் கொண்டாட்டத்தையும் தொலைத்திருப்பேன். அன்று மட்டும் எத்தனை மனிதர்களின் காலையை அந்தப்பெண்மணி இனிமையாக்கியிருப்பார்? ச்சைக். அவருடைய பெயரைக்கூட கேட்கவில்லை நான்.

மிகச்சிறந்த இலக்கியங்கள் எல்லாம் இப்படி நம்மைச் சுற்றி நடமாடிக்கொண்டிருக்கையில் வீணாகப் புத்தகங்களுக்குள் ஏன் மூழ்கிக்கிடக்கவேண்டும் என்று தோன்றுகிறது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக