Skip to main content

அயல்






நேற்று வீடு கூட்டிக்கொண்டிருக்கும்போது துணைக்குப் ப்ளே லிஸ்ட் ஒன்றைக் கொஞ்சம் சத்தமாகவே ஒலிக்கவிட்டிருந்தேன். ‘நெஞ்சில் நெஞ்சில் இதோ இதோ’. கூடவே சேர்ந்து பாடியபடி. கூட்டிக் குவித்து குப்பையை அள்ளி வெளியே தொட்டியில் போட்டுவிட்டுத் திரும்பும்போது, பின்கதவை இழுத்துச்சாத்த மறந்துவிட்டேன். அடுத்து ‘திமு திமு தீம் தீம்’ ஒலித்தது. அதன் இதமான தாளத்திற்கேற்ப தும்புத்தடி மெதுவாகவே கூட்டிக்கொண்டிருந்தது. பாட்டு முடியும்போது வாசல் மணி அடித்தது. முதலும் பல தடவைகள் அடித்திருக்கவேண்டும். எனக்கு அப்போதுதான் கேட்டது. போய்த்திறந்தேன். 

பக்கத்துவீட்டு மனிசி. முறைத்துக்கொண்டு நின்றது. இத்தாலிக்காரி. 

இத்தாலியர்கள் பலவிதம். சிசிலி மாதிரியான ஊர்களிலிருந்து வந்த தென் இத்தாலியர்களுக்கு ஒரு வெள்ளந்தியான நட்புக் குணம் உண்டு. அதே சமயம் வடக்கே மிலான் போன்ற ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக் கொஞ்சம் தடித்த குணம். இந்த முடிவுக்கு நான் வருவதற்குப் பெரிதும் சிரமப்படவேண்டியிருக்கவில்லை. இப்படியான, மனிதர்களைப்பற்றிய பொதுமைப்படுத்தல்கள் எனக்குச் சிறுவயதிலிருந்தே மிக இலகுவாகக் கைவரும். காரைநகர்க்காரர் என்றால் கசவாரம். வடமராச்சி ஒரு திமிர் பிடித்த சனம். ரவுண்காரர் படலை திறக்க மாட்டினம். தீவாருக்குப் பழக்கவழக்கம் துண்டறக் கிடையாது. மட்டக்களப்பு நல்ல மாப்பிள்ளைகளை மடக்கிவிடும். இப்படிப் போய்க்கொண்டே இருக்கலாம். எல்லாமே பொதுமைப்படுத்தல்கள்தான். யாரோ என்றோ அவரவர் அனுபவத்தில் கண்ட ஓரிரு மனிதர்களை வைத்துச் செய்த பொதுமைப்படுத்தல்கள். நாமும் அந்தந்த ஊர் மனிதர்களைக் காணுகையில் அவர்களின் குணவியல்புகள் அவரவர் லிஸ்டோடு பொருந்திவந்துவிடடால் 'அட அவர்கள் அப்படியேதான்' என்று தீர்க்கமாக முடிவெடுத்துவிடுகிறோம். பொருந்திவராத சமயங்களில் எங்களது மனது இந்தப்பொதுமைப்படுத்தல்களை ரீகலீபரேட் பண்ணவேண்டும் என்றெல்லாம் அக்கறைப்படுவதில்லை. அதனால் எப்போதுமே பொதுமைப்படுத்தல்கள் மீள உறுதிப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்குமே ஒழியத் திருத்தப்படுவதில்லை. இத்தாலிக்காரர் விடயத்திலும் என் நிலைப்பாடு அப்படித்தான்.    என்னுடைய சாம்பிளிங் டேட்டா மிகவும் சிம்பிளானது. ஒன்று, எனக்கு சிசிலியைப் பூர்வீகமாகக்கொண்ட ஒரு இத்தாலிய நண்பி உண்டு. அவள் மிக நல்லமாதிரி. இனிமையான சுபாவம் கொண்டவள். மற்றது, எங்கள் பக்கத்துவீட்டு மிலான்காரி. திமிர்பிடித்த மனிசி. இது போதுமே. அலுவலகத்திலும் ஒரு இத்தாலிக்காரன் உண்டு. அவன் நல்லவன்தான். இயல்பாகப் பழகுவான். வீட்டில் ரவியொலி செய்தால் கொண்டுவந்து தருவான். ஆனால் அவன் புளோரன்ஸ்காரன். வட இத்தாலி. நான் முன்னம் சொன்னது இப்போது இடிக்கிறது.  அதற்காகவொன்றும் என் இத்தாலியர்கள் பற்றிய அபிப்பிராயம் மாறிவிடப்போவதில்லை. அதுவும் இந்தப்பொல்லாத மிலான்காரி என் பக்கத்துவீட்டில் வசிக்கும்வரைக்கும்.  

“ஹாய் மா’ம், ஹவ் ஆர் யூ?” என்றேன். 

மனிசிக்கு ஒரு அறுபத்தைந்து வயது இருக்கும். பெருத்த சாரீரம். சொந்தமாக நான்கு வீடுகள். இரண்டு மாதங்களுக்கு ஒருமுறையேனும் அதன்  கணவன் வீட்டைவிட்டுக் கலைபட்டு தூஷணம் கொட்டியபடியே ஓடுபோவான். கார்ச்சில்லுகள் கிரீச்சிடும். இரண்டு நாள்கள் கழித்து மீண்டும் பதுங்கிப் பதுங்கித் திரும்பி வருவான். அவர்களுக்கு ஐந்தாறு பிள்ளைகள். தரித்திரம் பிடித்த இரண்டு பூனைகள். அவை நம் வீட்டு அப்பிள் மரத்தடியில்தான் வந்து கக்கா இருக்கும். ஒரு நாயும் உண்டு. பூனைகள் வளர்க்கும் நாய் அது. வெறும் புலுனிக்குஞ்சுக்குக்கூட அந்த நாய் வெட்கம் இல்லாமல் வால் ஆட்டும். அந்த மனிசியின் இரண்டு பெண் பிள்ளைகளும்கூட அந்த மனிசியைப்போலவே பொல்லாதவை. சாதாரண பார்க்கிங் பிரச்சனைக்கே நடுவிரல் காட்டத்தயங்காததுகள். எந்த நாடாவது எப்போதாவது எங்காவது அணுகுண்டு முடிவெடுத்தால் குண்டுகளுக்கு அந்த இரண்டின் பெயர்களையும் வைக்கலாம்.  இவற்றைத் தவிர அவர்களின் மகன் ஒருத்தன் நாற்பது வயது தாண்டியும் இன்னமும் அம்மா வீட்டிலேயே வாழ்கிறான். உழைப்பு ஏதும் இல்லை. நான் ஒருபோதும் நேரில் கண்டு கதைத்ததில்லை. எனக்கு அவனை நினைக்கும்போதெல்லாம் ‘டு கில் எ மொக்கிங்பேர்ட்’ நாவலின் ‘பூ ராட்லி’தான் ஞாபகத்துக்கு வருவான். தகப்பன் வீட்டில் இல்லாத பொழுதுகளில் அந்த மனிசி சொந்த மகனோடுதான் சண்டை போட்டுக்கொண்டு இருக்கும். அதுவும் சும்மா சாதாரண சண்டை கிடையாது. நாயே பேயே வகை சண்டை அது. 

ஒரு நாள் நான் வீட்டுப் பின் தோட்டத்தில் வல்லாரை ஆய்ந்துகொண்டிருக்கிறேன். 

“மமா … கான் யு கெட் மி த பக்கிங் டொய்லட் டிசியூ?” 

பூ ராட்லி கக்கூசுக்குள் நுழைந்து காரியம் முடிந்தபின்னர்தான் டிசியூ உருளை முடிந்துபோனதைக் கவனித்திருக்கவேண்டும். 

“வட் த பக் வேர் யு திங்கிங் வென் யூ கொட் இன் தேர்?” 

“கான் யு ஜஸ்ட் ஷட் அப் அண்ட் கெட் மி வன்? யூ இடியட் மமா...” 

மனிசி தொடர்ச்சியாகப் பீக்குண்டு அடித்தபடியே டிசியூ வைக்கும் இடத்தைத் தேடிப்போயிருக்கவேண்டும். இத்தாலிய மொழியில்தான் அது கத்திக்கொண்டிருந்தது. எல்லாமே வசை என்று புரிந்தது. பழம்பெரும் நாகரிகம் என்றாலும் ஒரு மொழியில் இத்தனை தூஷணங்கள் இருக்கமுடியுமா என்ன? அங்கிருந்தே அது சத்தமாகக் குரல் கொடுத்தது.  இத்தாலிய மொழியுடன் ஒப்பிடுகையில் அதன் ஆங்கிலம் தேவாரம்போலப் புனிதமாக ஒலித்தது. 

“ஜீசஸ், த பக்கிங் டிசியூ இஸ் பினிஷ்ட்” 

“நவ் வட் த பக் கான் ஐ டூ?” 

“ஜஸ் சிட் தேர் அண்ட் டை, யூ ஸ்டுபிட் சன் ஓப் எ பிட்ச்” 

‘சன் ஓப் எ பிட்ச்’ என்று தன் மகனையே வையும் புத்திசாலித்தனத்தை மெச்சிக்கொண்டேன். ஆய்ந்த வல்லாரையைப் பார்க்க ஓங்காளித்துக்கொண்டு வந்தது. அதை ரபிஷ்ஷில் தட்டிவிட்டு வீட்டுக்குள் வந்துவிட்டேன். ஒரு டிஷூ உருண்டையைக் கொண்டுபோய்க் கொடுக்கலாமா என்று யோசித்தேன். வேண்டாம். அதற்கும் வசவு விழும். ‘வை டோண்ட் யூ வைப் அவர் ஆஸஸ் டூ?’என்று தாயும் மகனும் சேர்ந்து வைவார்கள். விட்டுவிட்டேன்.

இப்போது அந்த மனிசிதான் வீட்டு வாசலில் நிற்கிறது. என் ‘ஹவ் ஆர் யூ’க்குப் பதில் குசலம் கிடைக்கவில்லை. 

“கான் யு டேர்ன் டவுன் த வொலியூம் பிளீஸ்… ஐ டோண்ட் லைக் பூம் பூம் மூசிக் … ஐ ஆம் எ ஹார்ட் பேஷண்ட்” 

அந்த நேரம்பார்த்து கறுமம் பிடித்த ‘நங்காய்’ போய்க்கொண்டிருந்தது. 

“மை அபலொஜிஸ் … ஐ வில்…” 

“டோண்ட் கெட் மி ரோங் .. ஐ லவ் இண்டியன்ஸ்… பட் இட்ஸ் டூ நொய்ஸி” 

இது பொதுவான பல வெள்ளைக்காரர்களின் விழல் கதைகளில் ஒன்று. டொனால்ட் ட்ரம்ப் ‘ஐ லவ் ஹிஸ்பனிக்ஸ்’ என்று சொல்வதுபோல. ‘எனக்கு இந்தியர்கள்மீது எந்தப் பிரச்சனையுமில்லை, ஆனால் அவர்களின் கறி பிடிக்காது, எனக்கு அராபியர்கள் மீது மதிப்பு உண்டு, ஆனால் அவர்களின் உடை செனி நாற்றம் நாறும், ஆப்பிரிக்கர்கள் நல்லவர்கள்தான், ஆனால் திருடர்கள், அகதிகளை நாங்கள் வரவேற்கிறோம், ஆனால் இந்த நாடு நிறைந்துவிட்டது’ இப்படிப் பேசுவதில் அவர்கள் வல்லவர்கள். பிரிட்டிஷார்தான் இந்த நசுக்கிடாமல் கதை கதைப்பதில் மாதாக்கள். ஆனால் இதைப்பார்த்து நம்மோடது சிலதும் அப்படியே பிரதியெடுத்துப் பேசுவதுண்டு. நான்காவது பெக்குக்குப் பிறகு ‘ஐ ஹேட் இண்டியன்ஸ்’ என்பார்கள். ‘நீ இண்டியன் இல்லையா?’ என்றால் ‘நோ ஐ ஆம் எ டமில்’. 

நான் அந்த இத்தாலிக்காரிக்கு எந்த விளக்கமும் கொடுக்க முயலவில்லை. இதில் சண்டை பிடிப்பதற்கு ஒன்றுமில்லை. சத்தம் அதிகமானால் அடுத்ததாக மனிசி பொலீசுக்குப் போகும். வேலையற்ற பொலீசும் வீடு தேடி வந்து சவுண்டைக்குறை என்று சொல்லிவிட்டுப்போகும். நான் இத்தாலியை அனுப்பிவைத்துவிட்டுப் பாட்டை நன்றாகக் குறைத்தேன். அப்போதுதான் பின்கதவு திறந்திருந்ததைக் கவனித்து,  ச்சைக் என்றபடி அதைச் சாத்துவதற்குப்போனேன். 

‘பூ ராட்லி ’கத்திக்கொண்டிருந்தது கேட்டது. 

“தட் வோஸ் எ பக்கிங் மைக்கல் ஜக்சன் சோங்” 

“யு ஷட் யுவர் பக்கிங் மௌத்… இட்ஸ் எ ஸ்டுப்பிட் இண்டியன் சோங்” 

“நோ யூ புல்ஷிட் … இட்ஸ் மைக்கல் ஜக்சன்... ” 

ராட்லி பாட ஆரம்பித்தான். ‘ஹீ ஹி, கோ ஒன் கேர்ல், ஔவ் .. ஹீ’. நான் கதவை அடித்துச் சாத்தினேன். ஸ்பீக்கரை நிறுத்திவிட்டு ஹெட்செட்டை எடுத்து மாட்டியபடி தொடர்ந்து வீட்டைக் கூட்ட ஆரம்பித்தேன். 

“தீயில்லை புகையில்லை, ஒரு வேள்வி செய்கிறாய் விழியிலே” 

அயல் அமைவது வரம். 

000 

கம்பவாரிதி ஜெயராஜ் எப்போதோ ஒரு கோயில் பிரசங்கத்தில் சொன்ன கதை இது. 

அந்தக் காலத்தில் நம் ஊர்களில் கைக்குழந்தைகளை அயலட்டங்கள் சேர்ந்தே வளர்த்துக்கொண்டன. காலையில் குழந்தையைக் கிழக்கு வேலிக்கு மேலாகத் தூக்கிக்கொடுத்தால், மாலையில் பிள்ளை மேற்கு வேலிப்பக்கமாக வீடுவந்து சேருமாம். இடையில் எத்தனை வீடுகளுக்கு அந்தக்குழந்தை கைமாறுகிறது, யாரோடு சேர்ந்து விளையாடுகிறது, எந்த வீட்டில் சாப்பிடுகிறது, இதெதையும்பற்றிக் குழந்தையின் தாய் கவலைப்படவே தேவையில்லை என்பார் அவர். எங்கள் ஊர் அயல்களுக்கிடையேயான அன்னியோன்னியம் அவ்வளவு அபரிமிதமாக இருந்திருக்கிறது. 

எங்கள் யாழ்ப்பாணத்து வீட்டு அயலும் கிட்டத்தட்ட அப்படியானதுதான். மிகச்சிறிய வயதில் நான் ரோசா அக்காவின் வீட்டுக்குக் காலையிலேயே ஓடிவிடுவேன் என்று அம்மா சொல்லுவார். ஓரளவுக்கு அந்த நினைவுகள் இன்றைக்கும் ஞாபகத்தில் உண்டு. ரோசாக்காவின் வீடு கொஞ்சம் பழையது. வடக்குப்புறம் வீட்டோடு சேர்ந்து ஒரு பெரிய திண்ணை இருந்தது. திண்ணைக்குள்ளே வைத்துத்தான் சமையல். அங்கேதான் ஈசிச்செயரில் அவருடைய தாத்தா பேப்பர் வாசிப்பார். அங்குதான் வெங்காய அந்தர்களைக் குவித்து அறுத்துக்கொண்டிருப்பார்கள். அங்கேதான் உடுப்பும் தைப்பார்கள். அங்கேயே தாயமும் விளையாடுவார்கள். ரோசாக்கா அந்தத் திண்ணைப்படியில்வைத்துத்தான் எனக்குச் சோறு தீத்துவதுண்டு. பெட்டி மீன்காரரிடம் வாங்கும் மீனில் குழம்பு வைத்து எனக்கு சோற்றோடு பிசைந்து ஊட்டுவார். தனியாக எனக்கென்று ஒரு மீன் பொரியலும் இருக்கும். ஏழ்மையான குடும்பம்தான். ஆனால் நிறைவான மனம் கொண்டவர்கள். தன்னுடைய சொந்த அண்ணன் பிள்ளைகளைவிட அவர் என்னில் பாசமாக இருந்தார். அப்போது என் அப்பா அனுராதபுரத்தில் வேலை செய்துகொண்டிருக்கவேண்டும். ஒருமுறை அவர் லீவில் வந்திருந்தபோது, நான் அடிக்கடி ரோசாக்கா வீட்டுக்குச் செல்வதைக் கவனித்தவர், ஒரு நாள் கிளுவைத்தடி முறித்து இரண்டு அடி கொடுத்தார். ரோசாக்கா வீட்டிலிருந்து அப்பா துரத்தத் துரத்த கதறிக்கொண்டே பங்குக்கிணற்றைத்தாண்டி எங்கள் வீடு நோக்கி ஓடிய சம்பவம் நினைவில் இருக்கிறது. அதன்பின்னர் அப்பா எப்போது லீவு முடிந்து மீண்டும் அனுராதபுரம் திரும்புவார் என்று அம்மாவிடம் கேட்க ஆரம்பித்தேன். அவர் புறப்பட்டதும் ரோசாக்கா வீட்டுக்குத் திரும்பவும் செல்லத்தொடங்கினேன். ஓரிரு வருடங்களின் பின்னர் ரோசாக்காவுக்கு சுவிசோ, பிரான்சோ தெரியவில்லை, திருமணம் முற்றாகிப் பறந்துவிட்டார். அங்கு  போய்க் கொஞ்சநாளாகக் கடிதம் அனுப்பிக்கொண்டிருந்தார். பின்னர் அவர் வீட்டுக்கு வரும் கடிதங்களில் எம்மைப்பற்றி விசாரித்து எழுதுவதாக வீட்டுக்காரர்கள் சொன்னார்கள். பின்னர் அதுவும் நின்றுவிட்டது. பல வருடங்கள் கழித்து ஒன்று உறைத்தது. ரோசாக்காவுக்கு அம்மாவோ, நானோ ஒருநாளும் பதில் கடிதம் எழுதியதே இல்லை. ஏன் என்று யோசித்துப்பார்த்தேன். ஏரோகிராம் செலவா? பஞ்சியா? இல்லை, மனிதர்களை அணைக்கத்தெரியாத குணமா? 

இராமநாதன் வீதியில் இருந்த எங்கள் ஒழுங்கை புலம்பெயர்ந்த தீவுக்காரர்களால் நிறைந்திருந்தது. எங்கள் வீடு நயினாதீவு. எங்கள் முன்வீடு புங்குடுதீவு. கடைசிவீடு மண்டைத்தீவு. கொஞ்சம் தள்ளி நெடுந்தீவு. மேலும் பல தீவுக்கூட்டங்களும் அங்கே இருந்தன. இவற்றுள் நம் வீடும் முன்வீட்டு வீரசிங்கம் அன்ரியின் குடும்பமும் மிக நெருக்கமானவை. எங்கள் வீட்டின் அத்தனை இரகசியங்களும் அன்ரி வீட்டுக்குத் தெரியும். அவர்கள் வீட்டு விடயங்கள் முழுதும் நமக்குத் தெரியவரும். ஒரு வீட்டில் திருமணமென்றாலோ, பெண்பிள்ளை சாமத்தியப்பட்டாலோ அல்லது இழவு விழுந்தாலோ, பெடியனோ பெட்டையோ இயக்கத்துக்குப்போன செய்தி கிடைத்தாலோ முதலில் போய் நிற்பது அயலாகத்தான் இருக்கும். தம் வீட்டில் சண்டை என்றால் அவரவர் நியாயத்தைச் சொல்லிப் புலம்பி, முறைப்பாடு வைக்க அடுத்த வீட்டுக்குத்தான் வருவார்கள். அம்மா தடியெடுக்கமுதலேயே ‘அன்ரி…’ என்று கத்திக்கொண்டு நான்  ஓடுவது முன்வீட்டுக்குத்தான். எங்கள் வீட்டில் கறி சரியில்லை என்றால் பூனைபோல பம்மிக்கொண்டுபோய் நிற்பதும் அங்குதான். அதேபோல அன்ரியின் மகன் எங்கள் தோட்டத்தில் உள்ள மரவள்ளியைத் தானே பிடுங்கிக்கொண்டுவந்து அம்மாவிடம் கொடுத்துப் பொரித்துத்தருமாறு ஒற்றைக்காலில் நிற்பார். அம்மா வெளியூர்போனால் அத்தனைபேரும் அன்ரிவீட்டில்தான் சாப்பிடுவோம். மாசக்கடைசியில் கையைக் கடித்தால் பக்கத்துவீட்டில்தான் போய் நிற்பார்கள். கடன் வாங்கும்பொருள் எதுவாகவும் இருக்கும். தேங்காய்ப்பாதி, சீனிச்சரை, புளி, மண்ணெண்ணெய், அரிசி முதற்கொண்டு செலவுக்குக் காசுவரை வாங்குவார்கள். அப்புறம் கவனத்துடன் அதைத் திருப்பியும் கொடுப்பார்கள்.  

எண்ணெய் விலை பயங்கரமாக இருக்கும்போது கூடச்சேர்ந்து ஒரே விளக்கில் இரண்டுவீடும் படித்திருக்கிறது. எங்கள் வீட்டில் உதயன் வாங்கினால் அன்ரி வீட்டில் ஈழநாதம் வாங்குவார்கள். பத்துமணிக்குப் பேப்பர்கள் இரண்டு வீடுகளிலும் இடம்மாறும். நான் பாண் வாங்கப்போகையில் அன்ரியும் இரண்டு இறாத்தலுக்குச் சொல்லிவிடுவார். ஐயா மீன் வாங்கப்போகையில் எமக்கும் ஒரு விளமீனோ, பாரையோ கொண்டுவருவார். எங்கள் வீட்டில் டிவி இருந்த காலத்தில் அவர்கள் வந்து ஒளியும் ஒலியும் பார்ப்பார்கள். பின்னாளில் எங்கள் டிவி இடப்பெயர்வில் களவுபோய், அவர்கள் வீட்டில் புது டிவி வந்ததும், அங்குதான் நான் போய் கிரிக்கட் மட்ச் பார்ப்பதுண்டு. எங்கள் ஒழுங்கை கிரிக்கட் டீமின் இரண்டே இரண்டு பிளேயர்களில் ஒருவன் நான் என்றால் அடுத்தவன் முன்வீட்டு லலி. ஒரே பட்ஸ்மன் நான். ஒரே பவுலர் அவன். அவர்கள் தங்கள் தாத்தாவை அப்பா என்பார்கள். தகப்பனை ஐயா என்பார்கள். நாங்களும் அவர்களை அப்படியே அழைப்போம். எங்கள் அம்மா, அப்பாவை எங்களைப்போலவே அவர்களும் மம்மி, டடா என்பார்கள். 

இத்தனைக்கும் இரண்டுவீட்டு ஆண்களும் பொல்லாதவர்கள். என் அப்பருக்கு அயல் அட்டங்களுடன் நாங்கள் பேசிப்பழகுவதே பிடிக்காது. முன்வீட்டு வீரசிங்கத்தாரும் அப்படியே. ஆண்கள் வீடுகளில் இருக்கும்போது அயல்கள் பொதுவாக அடங்கியே கிடக்கும். அது ஏன் ஆண்களுக்கு அப்படி ஒரு குணம் என்று தெரிவதில்லை. அயலட்டங்களுடன் பழகாதே, இளித்துக்கொண்டு திரியாதே, விளையாடுவதென்றால் வீட்டுக்குள்ளேயே இருந்து விளையாடு இப்படி எதையாவது புறுபுறுத்தபடியே இருப்பார்கள். தேவையானபோது அவர்கள் தமக்கிடையே பேசிக்கொள்வதுண்டு. ஆனால் மற்றவர்கள் பேசிப்பழகினால் பிடிக்காது. அயலின் முக்கியத்துவம் வேலைக்குச்சென்றுவரும் நம்மூர் ஆண்களுக்கு விளங்குவதேயில்லை என்று படுகிறது. 

ஆனால் பெண்கள் அப்படியல்ல. என் அம்மாவுக்கும் அன்ரிக்குமான நெருக்கம் அலாதியானது. எங்கள் வீடுகளின் கேற்றடியில் இருந்த இரண்டு தூண்களுக்கு மாத்திரமே அவர்களின் அந்த நெருக்கம் விளங்கும். அம்மாவும் அன்ரியும் ஆளுக்கு ஒரு தூணாக முண்டுகொடுத்துக்கொண்டு உட்காருவார்கள். மாலை ஒரு மூன்றரைக்கு ஆரம்பித்தார்கள் என்றால் இரவு ஆறு, ஆறரை இருட்டும்வரைக்கும் ‘சமா’ தொடரும். அல்லது யார் வீட்டு ஆண்களாவது ஒழுங்கை வாசலில் நுழையும்வரைக்கும். கதைகள் பெரும்பாலும் விடுப்பாகத்தான் இருக்கும். திருமணச் சம்பந்தங்கள். தெரிந்தவர்கள் வீட்டுக் காதல் கதைகள். சீட்டு விடயங்கள். வெளிநாடு போன கதைகள். வெளிநாடுகளிலிருந்து வந்த கடிதங்களில் இருந்த கதைகள். தெரிந்த இயக்கப்பிள்ளைகளின் நிலைமைகள். இப்படிப்பலதும் பேசுவார்கள். அவ்வப்போது அரசியல் சமூக விடயங்களும் வந்துபோகும். அந்தவகை விடயங்களில் கொன்ஸ்பிரஸிக் கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். ‘பிள்ளையார்கோயில் சிவலிங்கத்தை இயக்கம் பங்கருக்க கொண்டுபோய்வச்சு, அஞ்சு லச்சம் வாங்கிட்டுத்தான் வெளிய விட்டதாம்’ என்பது தொடக்கம் ‘விக்டரை ராதாதான் சுட்டவனாம்’, ‘குமரப்பா புலேந்திரனுக்கு பாலேங்கம் சயனைட் கொடுத்தது’வரை பேசுவார்கள். 

அவர்கள் அப்படி பேசிக்கொண்டிருக்கையில், நான் அனேகமாக கேற்றுக் கிறிலில் எட்டி ஏறி, மதிலுக்குத்தாவி, பின்னர் அங்கிருந்து குறுமணல் குவியலில் குதித்து, மணலைச் சலித்து எழுந்து, அதற்கொரு பேச்சு வாங்கிக்கொண்டு, மீண்டும் கேற்றுக் கிறிலில் ஏறி விளையாடிக்கொண்டிருப்பேன். நிதர்சனத்தில் காட்டிய இயக்க ட்றெயினிங் அது. என்னோடு இயக்க ட்றெயினிங்கு அன்ரியின் பிள்ளைகளும் வந்து சேர்ந்துகொள்வார்கள். இப்போது யோசித்தால், நான் என்னவோ அச்சமயம் விளையாடிக்கொண்டிருந்தாலும் என் காதுகள் இரண்டும் இவர்களின் கதைகளைக்குத்தான் டியூன் ஆகியிருந்திருக்கின்றன என்று தோன்றுகிறது. என் அம்மா எதையும் நேர்கோட்டில் உள்ளது உள்ளபடியே மிகை உணர்ச்சிகள் கலக்காமல் பேசுவார். அன்ரி அதற்கு நேர் எதிர். அவர் எது பேசினாலும் அதில் ஒரு வியப்பும் கொண்டாட்ட மனநிலையும் உணர்ச்சிவயமும் கூடியிருக்கும். எடித்தாரா கப்பல் மூழ்கடிக்கப்படட செய்தியை அம்மா ஏதோ டோறா அடிக்கப்படட செய்திபோலச் சொல்லுவார். அன்ரி அதைச் சொல்லும்போது திருகோணமலைத் துறைமுகமே முழுதாக வீழ்ந்துவிடட பீலிங் கிடைக்கும்.  

ஈற்றில், அன்றைக்கு இரவு என்ன சமைக்கலாம் என்று முடிவெடுத்துவிட்டு, இரண்டு கதை சொல்லிகளும் நாரி முறிய எழுந்துநின்று, சோட்டிப் புழுதியைத் தட்டியபடியே வீட்டுக்குள் திரும்புவார்கள். 

000 

மெல்பேர்னில் ஒருநாள் வேலை முடிந்து இரவு திரும்பியபோது என் வீடு மொத்தமாகக் கொள்ளையிடப்பட்டிருந்தது. பின்வேலி பாய்ந்துவந்து, வீட்டின் பக்கக்கதவை உடைத்து உள்ளே நுழைந்து, வீட்டை முற்றுமுழுதாக மேய்ந்துவிட்டிருந்தார்கள். உடனேயே பொலிசுக்கு அழைப்பு எடுத்தேன். 'உள்ளே இன்னமும் திருடர்கள் இருக்கிறார்களா? உனக்கு ஏதும் அச்சுறுத்தலா' என்று கேட்டார்கள். 'இல்லை' என்றேன். 'அப்படியானால் காலையில் பொலிஸ் வரும்' என்றார்கள். எனக்கு அந்த டிசைன் விளங்கவில்லை. சம்பவம் என் வீட்டில் மாத்திரம் நிகழ்ந்ததா அல்லது அயலட்டங்களிலும் நிகழ்ந்ததா என்று தெரியவில்லை. யாரையாவது விசாரிக்கலாம் என்று பக்கத்துவீடுகளின் கதவுகளைத் தட்டினேன். முதலில் இத்தாலிக்காரி. அந்தமனிசி கதவையே  திறக்கவில்லை. மற்றப்பக்கம் மலேசியன். அவன் வீட்டில் இல்லை. எதிர்த்தவீட்டுக்கு அருகே ஒரு பஞ்சாபிக்குடும்பம் இருந்தது. அந்தக்குடும்பத்துக்கு நான் முன்வீட்டில் வசிப்பதே தெரியவில்லை. அவர்கள் வீட்டிலேயே ஒரு இருபதுபேர் வசித்துவந்ததால் அயலட்டங்களை எட்டிப்பார்க்கும் தேவை அவர்களுக்கு இல்லை. ‘வீட்டில் களவு போய்விட்டது’ என்று சொன்னதுக்கு ‘அப்படியா?’ என்றார்கள். வெறுத்துப்போய் முன்வீட்டு கிரீக்காரனின் கதவைத் தட்டினேன். அவன் வீட்டு நாய் படு பயங்கரமாகக் குரைத்தது. கொஞ்சநேரம் கழித்துக் கதவைத் திறந்தான். மேல்சட்டை அணிந்திருக்கவில்லை. அவனுக்கு நான் நிகழ்ந்ததைச் சொன்னேன். அவன் நன்றாகப் பேசுவான். களவு போய்விட்டது என்று சொன்னதும்தான் தாமதம், தான் என்னவெல்லாம் செய்து தன் வீட்டைக் கவனமாகப் பாதுகாப்பதாக அட்வைஸ் பண்ணத்தொடங்கினான். வீட்டு யன்னல்களுக்கெல்லாம் சட்டர் போட்டு, கமரா பூட்டி, வெளியில் போகும்போது டிவியை ஓன் பண்ணிவைத்து என்று அவன் சொன்னது எல்லாமே பழைய டெக்னிக்குகள். ‘நீ வீட்டில் இல்லை என்று ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் நானே உன் வீட்டைக்கண்காணித்திருப்பேனே, அல்லது இந்த அன்ரனீயையாவது ஒரு கண் வைத்திருக்கச்சொல்லியிருப்பேன்’ என்று சொல்லி அன்ரனியைத் தட்டிக்கொடுத்தான். நாய் ‘ங்நூ கூ’ என்று செல்லங்கொஞ்சியது. நானும் கிரீக்குக்கு தாங்சும் நாய்க்கு ‘பாய்’யும் சொல்லிவிட்டுத் திரும்பிவிட்டேன். 

இது நடந்து சரியாக மூன்றே வாரங்களில் கிரீக்காரன் வீட்டில் திருடு போனது. 

அந்த அன்ரனி நாய்க்கு பிஸ்கட்டையோ சொசேஜையோ போட்டுவிட்டு, பின்வாசலை உடைத்து உள்ளே நுழைந்து திருடியிருக்கிறார்கள். விடயம் கேள்விப்பட்டதும் எனக்குச் சந்தோசம் தாளவில்லை. என் வீட்டில் களவுபோனதன் துக்கம் அரைப்படி குறைந்ததுபோல உணர்ந்தேன். கூட இருப்பவருக்கும் நமக்கு வருகின்ற துன்பம் எல்லாம் வந்துசேரும்போது எப்போதுமே ஒரு மனத்திருப்தி வருவதுண்டு. கிரீக்கைத் துக்கம் விசாரிக்கச்சென்றேன். வீடு முழுதும் பொருட்கள் இழுபட்டுக்கிடந்தன. திருடர்கள், ஓன் பண்ணிவிடப்பட்டிருந்த டிவியையும் வயரோடு அள்ளிக்கொண்டு போயிருக்கிறார்கள். அவன்வீட்டு கண்காணிப்புக் கமராவுக்கு என்ன ஆனது என்று எழுந்த கேள்வியைக் கேட்காமல் தவிர்த்தேன். சொல்லிக்கொண்டு விடைபெறும்போது அந்த செலிட்டு நாய் அன்ரனி என்னைப்பார்த்து வாலை ஆட்டியபடியே வழியனுப்பியது. வாசலுக்கு வெளியேயும் என் பின்னே நாக்கைத் தொங்கப்போட்டபடி அது தொடர்ந்துவந்ததை கிரீக்காரன் சந்தேகத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தது முதுகுக்குப்பின்னே தெரிந்தது. 

000 

ஊரிலே, அயலட்ட மனிதர்கள் மாத்திரமின்றி நாய்களும் மிக நெருக்கமாகவே தமக்குள் பழகித்திரிவதுண்டு. எங்கள் வீட்டில் ஜிம்மி இருந்தபோது முன்வீட்டில் ராமு இருந்தது. ஜிம்மி இறந்து வீட்டில் ஹீரோ வந்தபோது அவர்கள் வீட்டுப் புதுநாய் ஜிம்மி ஆனது. ஹீரோவும் ஜிம்மியும் எப்போதும் சேர்ந்தே விளையாடிக்கொண்டிருக்கும். ஒழுங்கை முகப்பில் புழுதியைக் கிளறியபடி கவட்டைச் சொறிந்துகொண்டு படுத்துக்கிடக்கும். யார் வீட்டில் மீன் கழுவினாலும் இரண்டும் வந்து நின்று காகங்களைக் கலைத்துக்கொண்டு நிற்கும். அதிலும் எங்கள் ஹீரோ கொஞ்சம் எடுபட்ட நாய். யார் வீட்டில் பிலாப்பழம் கிடைக்கிறதோ அந்த வீட்டுக்கு அது நன்றி பாராட்டும். ஆனால் அன்ரி வீட்டு ஜிம்மி அப்படியல்ல. மிகவும் பயந்த சுபாவம் கொண்ட நாய் அது. அது ஒழுங்கையால் போகிறவர் வருகிறவர் எல்லோரையும் குரைத்துக் கலைக்கும். இராணுவம் பலாலி ரோட்டில் செல்லும்போதே அது வீட்டுக்குள் ஓடிவந்து நின்று காது கிழியக் குரைக்கும். வீட்டில் ஆள் இல்லாதபோது நன்றாகக் காவல் காக்கும். அன்ரிவீடு என்றில்லை, எங்கள் வீட்டில் ஆள் இல்லாத பொழுதுகளிலும் அது எங்களுக்கும் சேர்த்துக் காவல் காக்கும். ஹீரோவும் ஜிம்மியும் இருந்த காலங்களில் எங்கள் வீடுகளில் களவு நிகழ்ந்ததாகச் சரித்திரமே கிடையாது. எங்கள் வீடுகள் என்றில்லை, அந்த ஒழுங்கையிலேயே களவு நிகழ்ந்து நான் அறிந்ததில்லை. 

நீண்டகாலம் ஊரைவிட்டுப் பிரிந்துபோய் கொழும்பிலோ, வேறு நாடுகளிலோ இருந்துவிட்டு வீட்டுக்குத் திரும்பிச்செல்லும்போது வீட்டு நாய் நம்மை இனம் கண்டுகொள்ளாமல் குரைத்துவைத்தால் முகம் வாடிவிடுகிறது. ஊர் நம்மிடமிருந்து தொலைதூரம் சென்றுவிட்டது என்பதை நாய்கள்தான் நமக்கு அவ்வப்போது உணர்த்துகின்றன. அதேசமயம் அவை நம்மைக்கண்டதும் பறந்துவந்து வாலைச்சுழற்றிக்கொண்டு நின்றால் அப்படி ஒரு சந்தோசம் கிடைக்கும். அதுவும் ஊர் திரும்புகையில் அயல் அட்டத்து நாயும் நம்மை இனம் கண்டு வாலாட்டும்போது கிடைக்கும் நிறைவு ஒரு உன்மத்தம். 

000 

மெல்பேர்னில் நண்பர் ஒருவரின் குழந்தையின் பிறந்தநாள் நிகழ்வுக்கு வீட்டை அலங்கரிக்க உதவிக்குச் சென்றிருந்தேன். அங்கே அவர் ஒரு கடிதம் ஒன்றைப் பல பிரதிகள் எடுத்து என்னிடம்,  அக்கம் பக்கத்து வீடுகளில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டு வரச்சொன்னார். 'எங்கள் வீட்டில் சிறு நிகழ்வு நடக்க இருப்பதால், இன்றிரவு சத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும், தவிர வருபவர்கள் வீதி மருங்குகளில் தமது வாகனங்களைத் தரித்து வைப்பார்கள். தயை கூர்ந்து பொறுத்தருளவேண்டும்' என்று சாராம்சப்பட எழுதப்பட்ட கடிதம். அதை எல்லா வீடுகளிலும் போட்டுவிட்டுப் பின்னர் அந்த ஏரியா பொலிஸ் நிலையத்திலும் தகவலைச் சொல்லிவிட்டு வந்தோம். எனக்கு நம்பவே முடியாமலிருந்தது. வீரசிங்கம் அன்ரிக்கு அப்படி ஒரு கடிதம் எழுதி அவர்கள் வீட்டு தபால்பெட்டியில் போடுவதாகநினைத்துப்பார்த்தேன். சிரிப்புச் சிரிப்பாக வந்தது. முதலில், எங்கள் வீட்டில் ஒரு விசேசம் என்றால் நான்கு நாள்களுக்கு முன்னரான பலகாரச்சூட்டில் ஆரம்பித்து, நிகழ்வு முடிந்து கதிரை அடுக்கிக் கூட்டி அள்ளும்வரை மொத்த அன்ரி வீடும் எங்கள் வீட்டிலேயே நிற்கும். அன்ரி வீடு மட்டுமல்ல. கொஞ்சம் தூரத்தே வசிக்கும் அன்ரியின் சொந்தக்காரர்கள்கூட நிகழ்ச்சிக்கு வருமளவுக்கு எங்களுக்கிடையே நெருக்கம் இருந்தது. இது எங்கள் வீடுகளில் என்றில்லை, ஊரின் எந்த அயல்களுக்குமிடையே இருந்த நெருக்கம். 

இந்த நாட்டில் ஏன் அயல் அத்தனை அன்னியோன்னியமாக இல்லை என்று யோசித்துப்பார்க்கிறேன். முக்கிய காரணம் இன வேறுபாடுகள்தாம். இத்தாலி, இலங்கை, கிரீக், மலேசியா, இந்தியா என்று இணைந்திருக்கும்போது பரஸ்பரம் நெருங்கிய நட்பு ஏற்படுவதற்குக் காலமெடுக்கிறது. அவ்வளவுகாலம் ஒரு குடும்பம் ஒரே வீட்டில் வாழ்வதும் இங்கு அரிது. ஐந்து, பத்து வருடங்களில் இங்கே வீட்டை வாடகைக்குக் கொடுத்துவிட்டோ, அல்லது விற்றுவிட்டோ மனிதர்கள் புதுவீட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். நமக்கிடையே பொதுவாக ஒரு மொழி கிடையாது. ஆங்கிலம் பொது மொழி என்றாலும் மனிதர்கள் தமது வீடுகளில் பொதுவாகத் தாய்மொழியே பேசுகிறார்கள். கூடவே, நெருங்கிய நட்பு அவரவர் இனக்குழுக்களுக்கிடையேயே அதிகமாக இருக்கிறது. ஐந்துநாளும் வேலை, குழந்தைகள் கல்வி. வார இறுதியில் பிள்ளைகளுக்கு மேலும் டியூஷன். சனி மாலையில் நண்பர்கள் வீட்டில் கொண்டாட்டம். இந்த அமைப்பில் அயலவர்களுக்கு எந்த இடமும் கிடைப்பதில்லை என்பதுதான் நிஜம். குழந்தைகள்கூட பாடசாலை அணிகளில் முறையாகப் பயிற்சி எடுத்து விளையாடுவார்கள், அல்லது பெற்றோரின் நண்பர்களின் குழந்தைகளோடு விளையாடுவார்கள். மிக அரிதாகவே பக்கத்துவீட்டுக் குழந்தைகளுடன் இங்கே  அவர்கள் விளையாடுவார்கள். எங்கள் வீட்டுக் கொண்டாட்டத்தில் கிரீக்காரனைக் கூப்பிட்டால் அவன் திருவிழாக்கூட்டத்தில் தொலைந்தவன்மாதிரி முழிக்கவேண்டியிருக்கும். அவன் வீட்டுக்கு நான் போனால் அன்ரனியுடன்தான் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருக்கவேண்டிவரும். இதனாலோ என்னவொ, ஒரு ஹாய், புல்லு வெட்டும்போது பேசும் புட்போல் பற்றிய பேச்சு, மிஞ்சிப்போனால் பொங்கலுக்கு எஞ்சும் வடையைப் பார்சல் பண்ணிக்கொடுப்பதைத் தாண்டி அயல் வீட்டு நட்பு நமக்கு நெருக்கமாவதேயில்லை. 

000 

வீரசிங்கம் அன்ரி குடும்பம் இப்போது சுவிஸ், யூகே, கனடா என்று மூன்று நாடுகளில் சிதறிக்கிடக்கிறது. எங்கள் குடும்பமும் இலங்கை, சிங்கப்பூர், அவுஸ்திரேலியா என்று. எங்களுக்குள் பெரிதாக இப்போது பேச்சுவார்த்தைகளும் இல்லை. பேசக்கூடாது என்றில்லை. ஆனால் தோன்றுவதில்லை. உறவுகளையும் விட அதிகமாகவும் நெருக்கமாகவும் நாங்கள் அயலவர்களுடன் பழகினாலும், ஏனோ தெரியவில்லை, அவர்களுக்கு நாங்கள் உறவினர்களுக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கொடுப்பதில்லை. நமக்கு ஒன்று என்றால் வந்து நிற்பவர்கள், தம் பிள்ளைகளைப்போலவே நம்மையும் வளர்த்தவர்கள். ஆனால் கால ஓட்டத்தில் அவர்கள் நமக்கு யாரோ ஆகிவிடுகிறார்கள். அயலுடனான உறவு அயலைத்தாண்டியும் தொடருவது என்பது மிக அரிதான ஒன்று. 

சில மாதங்களுக்கு முன்னர் வீரசிங்கத்தார் இறந்துபோனதாக அம்மா சேதி சொன்னார். நான் பேப்பர் வாங்கிக்கொண்டு திரும்புகையில் ‘இஞ்ச நில்லு’ என்று என் சைக்கிளை மறித்து அவசர அவசரமாகத் தலைப்புச்செய்தி வாசிக்கும் வீரசிங்கத்தார்தான் உடனே கண்முன்னே வந்தார். வெள்ளை வேட்டி, வெள்ளை சேர்ட்டிலேயே திரிவார். ஒரு பெரிய கரியர் வைத்த லுமாலா சைக்கிளிலேயே ஓடித்திரிவார். என் சைக்கிளுக்குக் காற்றுப்போனால் அவர் சைக்கிளைக் இரவல் கொடுப்பார். யுத்தகாலத்தில் அவர் கொழும்புபோய்த் திரும்புகிறார் என்றால், எள்ளு உருண்டையும் அப்பிள் பழங்களும் கூடவே கொண்டுவந்து கொடுப்பார். சிறுவயதில் அவ்வப்போது என்னைப் பாடசாலைக்கும் கூட்டிக்கொண்டுபோயிருக்கிறார். பயங்கரப் பகிடிக்காரர். தமிழை ஆங்கிலம்போலப் பேசி அசத்துவார். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் அவரும் அவர் குடும்பமும் என் கண்முன்னே வாழ்ந்து பேசிப் பழகியிருக்கிறார்கள். அவர் நோயுற்றிருந்தபோது ஏன் ஒருவார்த்தை என்னால் போன் பண்ணிப் பேசமுடியாமற் போனது? 

‘இப்பவாவது அன்ரியுடன் எடுத்துப் பேசு’ என்று அம்மா அறிவுறுத்தினார். தயக்கத்துடன் அழைப்பெடுத்தேன். 

'ஹலோ'

‘வீரேங்கம்  அன்ரியா? … நான் முன்வீட்டுக் குமரன் கதைக்கிறன்’ 

‘அப்பன் …. நீயாடா … உன்னோட கதைச்சு எவ்வளவு நாளாயிட்டு... எப்பிடிக் குஞ்சு இருக்கிறாய்?’ 

‘ஐயாண்ட விசயம் இப்பத்தான் கேள்விப்பட்ட…’ 

அவ்வளவுதான், அன்ரியின் குரல் தழுதழுக்க ஆரம்பித்தது. அவர் எப்படி மரணமானார் என்று விவரிக்க ஆரம்பித்தார். ஐயாவுடனான ஊர் நினைவுகளைப் பகிர ஆரம்பித்தோம். அவர் பேசப்பேச, எங்கள் கேற்றடித் தூணில் உட்கார்ந்து கதைசொன்ன அன்ரியின் உருவம் மனமெங்கும் வியாபிக்கத்தொடங்கியது. உணர்ச்சி மேலிட அழுதுகொண்டே அன்ரி என்னோடு கதைத்துக்கொண்டிருக்க, சிறுவன்போல நான் எங்கள் வீட்டுக் கேற்றுக் கிறிலில் ஏறி, மதிலுக்குத்தாவி, பின்னர் அங்கிருந்து குறுமணல் குவியலில் குதித்து, மணலைச் சலித்து எழுந்து. 

'யாருறவு? எனக்கிங்கு ஆர் அயலுள்ளார்? 
ஆனந்தம் ஆக்குமென் சோதீ'
- மணிவாசகர்

000

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக