கோள்மூட்டி இன்னமும் ரீ… என்று ஒரே சுருதியில் வானத்தில் சுற்றிக்கொண்டு இருந்தது. வெறும் மண்ணெண்ணெய் கானோடு வீடு திரும்பிய நமசிவாயத்தை வாசல்படியில் மறித்தபடியே மருமகள் நின்றாள். “ என்ன அதுக்குள்ள எண்ணை முடிஞ்சுதா ?” “ இல்ல கோமளா … சரியான கியூ .. நாச்சிமார் கோயிலடி வரைக்கும் போய் நிக்குது ” ” அதுக்கு ?” நமசிவாயம் தயங்கினார். ” .. மினக்கட்டு ஒரு லீட்டர் எண்ணைக்கு போய் ரெண்டு கட்டை கியூவில நிண்டு காயோணுமா ? எண்டு வந்திட்டன். ” ” ஏன் இங்க வந்தீங்கள்? .. அப்பிடியே எங்கேயும் போய் துலைஞ்சிருக்கலாமே ” குத்தினாள். அவருக்கு இது புதுதில்லை. குரலெழுப்பாமல் பதில் சொன்னார். “ இல்ல பிள்ள .. கொஞ்ச நேரம் நிண்டு பார்த்தன் .. வெயில் தாங்கேலாம போட்டுது .. தலைய சுத்திச்சுது.... ” “ ஏன் கியூல நிக்கிற மத்தவனுக்கு சுத்தாதா ? வேலை வெட்டி இல்லாம சும்மா தானே கிடக்கிறீங்கள் .. அதில போய் நிண்டு வாங்கினா குறைஞ்சா போயிடும் ? வேளாவேளைக்கு அள்ளிக்கொட்டி தின்ன மட்டும் தெரியுது .. கறுமம் ஒரு லீட்டர் மண்ணெண்ணெய் வாங்க தெரியேல்ல ”