அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கத்தின் 'தமிழ் ஊக்குவிப்புப் போட்டி 2017' இற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. கடந்த நான்கைந்து வருடங்களாக இந்தப்போட்டிகளில் நடுவராகப் பணிபுரிந்துவந்துள்ளேன். நூற்றுக்கணக்கில் மாணவர்கள் கலந்துகொள்ளும் போட்டிகள் இவை. அவுஸ்திரேலியாவின் அத்தனை மாநிலங்களிலும் போட்டிகள் நடைபெறும். மாநில அளவில் வெற்றி பெறுபவர்கள் பின்னர் தேசியமட்டப் போட்டிகளிலும் தோற்றுவார்கள். சீரிய ஒழுங்கோடும் மிக நீண்ட தயார்படுத்தல்களோடும் நடத்தப்படும் போட்டி இது. போட்டித்தினமன்று என் மனம் எப்போதுமே ஒரு கொண்டாட்ட நிலையை அடைவதுண்டு. அந்தச் சூழலை அணு அணுவாக ரசிக்கலாம். அலிஸ் அதிசய உலகத்துக்குள் நுழைந்ததுபோலவே சிறுவர்கள் போட்டி மண்டபத்துக்குள் நுழைவார்கள். பின்னேயே பயங்கரப் பதட்டத்துடன் பெற்றோர்கள். அப்பாமார்கள் அதிகம் அலட்டிக்கொள்வதில்லை. ஆனால் அம்மாக்கள்தான் கடைசிக்கணத்திலும் அக்கம்பக்கம் இருக்கும் யூகலிப்டஸ் மரங்களுக்கடியில் மீண்டுமொருமுறை குழந்தையோடு ஒத்திகை பார்ப்பார்கள். போட்டியென்று வந்துவிட்டால் நம் குழந்தைகளுக்கு இயல்பாகவே ஒரு ஓர்மம் வந்துவிடுகிறது. அம்மாக்