காலை எழுந்தபோது மின்னஞ்சலில் ஒரு மகிழ்ச்சிதரும் தகவல் வந்திருந்தது. “வட்டக்கச்சி மத்திய கல்லூரியின் வைரவிழா மலருக்காக க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் அதிகூடிய பெறுபேறுகளைப் பெற்றவர்களது புகைப்படங்கள் தேவைப்படுவதால் வெகுவிரைவில் அவற்றைத் தந்துதவி ஆவண செய்யவும்” லிஸ்டிலே என்னுடைய பெயரும் இருந்தது. நான் ஓ.எல் எடுத்தது தொண்ணூற்றாறாம் ஆண்டு. பரீட்சை இறுதித்தினத்திலிருந்து இன்றைக்கு இருபத்தொரு ஆண்டுகள் கழிந்து எனக்கும் வட்டக்கச்சி மகாவித்தியாலயத்துக்குமிடையில் ஏற்பட்டிருக்கும் முதல் தொடர்பு இது. பதின்மக்காதலிகளில் ஒருத்தி, ‘எப்படி இருக்கிறீங்கள் குமரன்?’ என்று மெசேஜ் அனுப்புவதுபோல. மகா வித்தியாலயத்தில் படித்த காலம் என்பது மிகக்கொஞ்சம்தான். ஆனாலும் அவற்றை மீட்டிப்பார்க்கையில் கால மீளிருவாக்கமும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது. எத்தனைதடவை எழுதினாலும் காரியமில்லை.