ஏழாவது தடவையாக தொலைபேசி மணி அடித்தபோதே தயங்கியபடி எடுத்தேன். அம்மா. “வீட்ட வந்திட்டியா?” என்று கேட்டார். “சாப்பாடு என்ன பிளான்?” என்றார். “நேத்தையான் புட்டு இருக்கு, கறிச்சட்டியும் கிடக்கு. பிரட்டிட்டு முட்டையையும் பொரிச்சா விசயம் முடிஞ்சுது” என்றேன். “சித்தப்பாவிண்ட தமையன் இறந்துபோனார், எடுத்துக் கதைச்சியா?” என்றார். “இல்லை” என்றேன். “அண்ணாவோட கதைச்சியா?”. “இல்லை”. “ஹீட்டர் சரியா வேலை செய்யேல்ல எண்டனி, பேசினியா?”. “இல்லை”. “சரி, நாளைக்குத் தோசைக்குப் போட்டிருக்கு, ரெண்டு பெரும் வந்திடுங்கோ” என்றுவிட்டு கட் பண்ணிவிட்டார். தொலைபேசியைப் பார்த்துக்கொண்டிருந்தேன். ஏழு தடவைகளும் ஏன் தொலைபேசியை எடுக்கவில்லை என்று அம்மா என்னிடம் கேட்கவேயில்லை. சித்தப்பாவோடு ஏன் பேசவில்லை என்றும் திட்டவில்லை. “இவனைத் திருத்தமுடியாது” என்று மனதுக்குள் நினைத்திருக்கலாம்.