குளித்து முடித்துத் தலையைத் துவட்டியவாறே அருண்மொழி குளியலறையிலிருந்து வெளியே வந்தாள். ஐபோனிடம் மெல்பேர்ன் நேரத்தைக் கேட்டாள். பத்தரை. கூடவே அங்கு வெப்பநிலை எட்டு டிகிரி செல்சியஸ் என்றது. அவளுக்குப் புழுக்கமாக இருந்தது. ‘சனியன் குளித்து ஐஞ்சு நிமிசங்கூட ஆகேல்ல, அதுக்குள்ள அவியுது’ என்று புறுபுறுத்தாள். ஏனோ எட்டு டிகிரி மெல்பேர்ன்மீது எரிச்சலும் கோபமும் வந்தது. குளிர் மனிதர்களைச் சோம்பேறி ஆக்கிவிடுகிறது என்று முணுமுணுத்தாள். பதினொரு மணிக்குப் பார்த்திபன் ஸ்கைப்கோல் எடுப்பதாகச் சொல்லியிருக்கிறான். நேரம் இருந்தது. ஒரு கிரீன்டீ போடலாம் என்று குசினிக்குள் நுழைந்து கேத்திலை ஓன் பண்ணினாள். யார் இந்தப் பார்த்திபன்?