இன்றைக்கு மெல்பேர்ன் அநியாயத்துக்குக் குளிர்ந்தது. வழமையாக ஐந்து மணிக்கு அடிக்கும் அலாரம் நடுச்சாமம் மூன்று மணிக்கே அடித்ததுபோல உணர்ந்தேன். குறண்டிக்கொண்டு தூங்கியதில் ஐந்தாவது தடவை ஸ்னூஸ் பண்ணும்போது நேரம் ஆறே கால் ஆகிவிட்டிருந்தது. அரக்கப்பறக்க எழுந்து, கம்பளியைச் சுற்றிக்கட்டிக்கொண்டு தேநீர் ஊற்றலாம் என்று குசினிக்குப்போனால், தேநீர் பைகள் தீர்ந்திருந்தன. மச்சான் ஒருவர் ஊரிலிருந்து வரும்போது கொண்டுவந்திருந்த தேயிலைத்தூள் பக்கற் ஞாபகம் வர, வடியையும் தேடி எடுத்து, ஒருமாதிரித் தட்டித்தடவி தேநீரையும் ஊற்றி முடிக்க நேரம் ஏழு மணி ஆகிவிட்டிருந்தது. கொஞ்சநேரம் எதையாவது வாசிக்கலாம் என்று உட்கார்ந்தால் மனம் ஒருபட்ட நிலையில் இருக்கமாட்டேன் என்று அடம்பிடித்தது. மனைவியும் தமிழ் பள்ளிக்குச் சென்றுவிடுவார். வீட்டில் இருந்தால் வேலைக்காகாது என்று ஒன்பது மணிக்கு அருகிலிருக்கும் கஃபே ஒன்றுக்கு வந்தேன். ஒரு பெரிய கப்புசீனோவை ஓர்டர் கொடுத்துவிட்டு சோஃபா ஒன்றினுள் புதைந்திருந்து கணினியை வெளியில் எடுத்தேன். சிறுகதை ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. முடிக்கவேண்டும். இரண்டு வரிகள் எழுதி முடித்திருக்கமாட்ட