போன கிழமை கிசோகரின் புண்ணியத்தில் எனக்கு புதிதாக ஒரு ஐபோன் கிடைத்தது. அன்றைக்கும் வழமைபோல வெள்ளனவே நித்திரையால எழும்பி சூடா ஒரு தேத்தண்ணி வைக்கலாம் என்று கேத்திலை ஓன் பண்ணினேன். தண்ணீர் கொதிப்பதற்குள் பால்மாவையும் சீனியையும் ஒரு கப்புக்குள் போட்டுட்டு, அடுத்த கப்புக்குள் இரண்டு தேயிலை பக்கற்றைப் போட்டேன். அப்பவும் தண்ணீர் கொதிக்க ஒரு பத்துப்பதினைஞ்சு செக்கன் இருந்துது. அந்தப் பதினைஞ்சு செக்கன்களுக்குள் வாழ்க்கையில் நான் எவ்வளத்தையோ சாதித்திருக்க முடியும். சிங்குக்குள் முந்தைய நாள் பாத்திரங்கள் கழுவாமற் கிடந்தன. ஒன்றை எடுத்துக் கழுவி வைத்திருக்கலாம். குப்பைப்பையைக் கொண்டுபோய் வெளியே தொட்டிக்குள் போட்டிருக்கலாம். கழுவிக் காய வைத்திருந்த பிளேட்டுகளை கப்பேர்டுக்க வைத்திருக்கலாம். பாணுக்கு பட்டர் பூசியிருக்கலாம். வேலைகளா இல்லை. ஆனா எனக்கு அதுக்குள்ள ஒருக்கா பேஸ்புக்குக்குள்ள போயிட்டு வரலாம் என்று ஒரு அறுந்த யோசினை வந்துது. போனேன். அப்ப பிடிச்சுது சனி.