என்ன ரொம்ப நாளாகிவிட்டதா! ஏதோ ஒரு மூட் வந்து மீண்டும் ஒருமுறை “என்றென்றும் ராஜா” நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருந்தேன். “சின்னக்கண்ணன் அழைக்கிறான்” பாடல்.
சூரியனுக்கு டார்ச் அடிக்கப்போவதில்லை. ஆனால் இந்த பாடல் தான் பதிவுக்கு தலைப்பிள்ளை! ராகம் ரீதிகௌலா. பின்னாளில் வரப்போகும் மிகப்பெரிய மெலடி ஹிட்ஸ்க்கு எல்லாம் இன்ஸ்பிரேஷன்! இரண்டு ராஜாக்களும் இணைந்திருக்காவிடில் ரீதிகௌலா இத்தனை பாடல்களை தமிழ்த்திரை இசைக்கு தந்திருக்குமா? சந்தேகம் தான்!
சிங்கப்பூரில் இருக்கும்போது ஒருமுறை எழில் வீட்டுக்கு சென்றிருந்தேன். இரவு எல்லோரும் dinner க்கு food court போகிறோம். பக்கத்தில் தீபன். புதிதாக ஒரு பாடலை முணுமுணுத்துக்கொண்டு இருந்தான். “என்னடா இது பாட்டு, எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கேடா” என்று சொன்னேன். “கண்டுபிடி பார்ப்போம்” என்றான். பிடித்தேன். சிரித்தான்!
கிட்டத்தட்ட ஏக் டு ஏக் காப்பியாக “சின்னக்கண்ணனை” அடித்தால் நான் கூட கண்டுபிடிப்பேன் தானே!!! சேலையில் இருந்தாலும், குட்டை பாவாடை போட்டிருந்தாலும் ஹன்சிகா ஹன்சிகா தானே. நாங்க பாத்திடுவோம்ல!
ஆனாலும் சான்சே இல்லாத பாடல் தான்! அதுவும் அந்த இண்டர்லூட் ப்ளூட் இருக்கிறதே. ஹாட்ஸ் ஆப் ஜேம்ஸ் வசந்தன்! ஓகே ஓகே .. அந்த பொண்ணையும் தான் பிடிச்சிருக்கு!
தீபனும் நானும் சேர்ந்து ஹம் பண்ணிக்கொண்டு வருகிறோம். “கண்கள் இரண்டால்” புதுசு என்பதால் நான் சின்னக்கண்ணனையே திரும்ப திரும்ப அழைக்க தீபன் என் சுருதிக்கு ஏற்ற மாதிரி கட்டி இழுத்தான். இழுத்தான் போதாதென! எனக்கு வேறு பாடல் ஒன்று ஞாபகம் வர தலையை குனிகிறேன்!
“பூவாடை காற்று .. யன்னலை சாத்து”
வரிகள் இயல்பாக வந்து விழுந்தன. “கிட்டத்தட்ட ஒரே நோட்ஸ் தான், ஆனால் ராகம் வேறு” என்று தீபன் சொன்னாலும் எனக்கென்னவோ ஒன்று போலவே இருந்தது. பட் எனக்கு இசையறிவு என்பது சச்சினுக்கு நூறாவது செஞ்சரி போல எட்டவே எட்டாது என்பதால் அவன் பாட்டுக்கு விட்டுவிட்டேன்!
சாப்பாடு இறங்கமாட்டேங்கிறது. வரிக்கு வரி இரண்டு பாடல்களையும் கலக்க முடிகிறது. எங்கேயும் அபஸ்வரமாக இல்லை. வெயிட் மிஸ்டர் சுப்புடு கஜன் அவர்களே! நான் பாடும்போது அபஸ்வரம் தான். ஒத்துக்கிறேன். பட் மைன்ட் வாய்ஸ் என்று ஒன்று எனக்கு இருக்கு இல்லையா! கொஞ்சமே பாடுவோம் பாஸ்! இதுவும் ரீதிகௌலா தான் என்று நான் அடம்பிடிக்கிறேன்.
இல்லை என்கிறான். உனக்கு வேணுமென்றால் வேறொரு ரீதிகௌலா சாம்பிள் சொல்கிறேன். பாடிப்பார் என்கிறான்!
வித்தியாசாகர், ஆகா. ரீதிகௌலா ராகத்தை எப்படிப்போட்டாலும் காது குளிர்கிறது. காதலிக்கு மட்டும் ரீதிகௌலா என்று ஒரு பெயர் இருந்தால்! ச்சே .. நான் ஏன் பதிவு எழுதி மெனக்கெட போகிறேன்?
இப்போது உறுதியாகிவிட்டது! நான்கு பாடல்களும் ஒன்றுதான். தீபனும் கொஞ்சம் கொஞ்சம் ஆலாப் எல்லாம் போட்டு அங்கே ஏறி இங்கே இறங்கி, நிறைய கால்குலேஷனுக்கு பிறகு சொன்னான்.
மச்சி ஒரே ராகம் தான், பட் கொஞ்சம் ராக மாலிகா, சில நோட்ஸ் மாறுது!ஆச்சரியம், எல்லா பாடல்களும் low pitched பாடல்கள். இந்த ராகத்துக்கு low pitch உம் புல்லாங்குழலும் எப்போதும் கூட சேரும் போல!
சரிவிடு, சாய்ஸ்ல விட்டிடலாம், ரகுமான் இந்த பக்கம் வரலியா?
ஏன் இல்ல? “கிளியே ஆலங்கிளியே! குயிலே ஆலங்குயிலே”
அழகான இராட்சசியே?
Bingo!
ராஜாவில் தொடங்கி ராஜாவில் முடிக்காவிட்டால்? ராத்திரி தூக்கம் வராதே!
நடந்து செல்லும் வழி முழுதும் என் நிழலை அனுப்பவா
துணைக்கு வந்த நிழல் அதற்கு குடை எடுத்து பிடிக்கவா
ஒரு கணமும் பல யுகம் என்றே ஆகுது சொல் பைங்கிளி
ஹரிகரன் குரல் குழையும். மஹாலஷ்மி ஐயருக்கு தாளம் தப்பாமல் ராஜாவுக்கு முன்னாலே பாடுவதே பெரியவிஷயம்! பொண்ணு கொஞ்சம் திணறுது!
பூந்தோட்டம். வித்தியாசமான தாளம். பெயர் ஒருமுறை கஜன் சொன்னான். ஞாபகம் இல்லை. ஆனால் இசையில் தொடங்குதம்மா, ஆகாயவெண்ணிலாவே நடை என்று நினைக்கிறேன். Correct me if I am wrong!
தீபன், ஒரு முக்கிய, ஆனால் பெருமளவில் கவனிக்கப்படாத இசையாளுமை! He will definitely go to places. அவன் போட்ட மெட்டுக்கு கூட ஒருமுறை பாட்டெழுதி இருக்கிறேன். அதிலும் கம்பராமாயணம் எல்லாம் போட்டு, ட்ராக் கூட ஒருமுறை ரெக்கார்ட் பண்ணினோம். நான் ஆஸ்திரேலியா வந்ததால் மிஸ் பண்ணும் முக்கிய விஷயம் இந்த இசை தான். ம்ம்ம்ம்!
குறிப்பு : எனக்கும் சங்கீதத்துக்கும் வெகுதூரம். ஆனால் ஒரு ஆர்வக்கோளாறு, ஒருமுறை “என்ன சொல்லி பாடுவதோ” மேடையில் பாட வெளிக்கிட்டு கஜன் பெண்டு நிமிர்த்திவிட்டான்! கஜன், அகிலன், தீபன் போன்ற சங்கீத சங்கராச்சாரியார்களுடன் சகவாசம். இவர்கள் எனக்கு இசையை ஓரளவுக்கு ரசிக்க கற்று தந்து இருக்கிறார்கள்.தொபுக்கடீர் என்று இவர்கள் காலில் விழுந்து நன்றி சொல்லி விடைபெறுகிறேன். நன்றி வணக்கம்!!!