Skip to main content

திருட்டு

இணையத்தில் திருட்டு என்பது கிட்டத்தட்ட திருட்டு வீ.ஸீ.டி க்கு இணையானது. படைத்தவனுக்குத்தான் அந்தவலி தெரியும். மற்றவன் கவலையே படுவதில்லை. நம்மில் பலருமே திருடர்கள்தான். லிங்காவில் பழைய ரகுமானை காணவில்லை என்று இணையத்தில் பாட்டை திருடிக்கேட்டுவிட்டு கொமெண்ட் போடுவோம். நகைக்கடையில் திருடிய நெக்லஸ் உனக்குவடிவா இல்லையடி எண்டு மனைவிக்கு சொல்லுவதுக்கு ஒப்பானது அது. இப்போதெல்லாம் பாடல்களை ஐடியூனில் காசு குடுத்து வாங்கலாம். ஆனால் திருட்டுப்புத்தி. பழகிவிட்டது. எம்முடைய கடைக்காரர்களுக்கும் திருடி விற்றே பழகிவிட்டது. தண்ணிமாதிரி கொப்பி, கொண்டுபோங்க என்னும்போது வெட்கமேயில்லாமல் வாங்கிவருவோம்.

பதிவுகள் எழுதும்போது நல்லபுகைப்படங்கள் தேவைப்பட்டால், கஜன் கேதாவிடம் முதலில் கேட்பேன். ஆனால் என் அவசரம் அவர்களுக்கு வேண்டியதில்லை. மறந்துவிடுவார்கள். வேறு வழியில்லாமல் இணையத்தில் திருடிவிடுவேன். நன்றி என்று சொல்லி போட்டாலும் திருட்டு திருட்டுத்தானே. லிங்கை ஷேர் பண்ணினால் வாசிப்பவர்கள் என் தளத்துக்கே வரவேண்டும். ஆனால் கொப்பி பண்ணிப்போட்டால் அது நடக்காது.

முக்கி முக்கி எழுதுவதை எந்தவித சங்கடமே இல்லாமல் முகநூலில் கொப்பி பண்ணுவார்கள். பெயர் குறிப்பிடமாட்டார்கள். சிலர் நல்லதுக்கு செய்வார்கள். சிலர் அறியாமல் செய்வார்கள். ஒரிரு வருடத்துக்கு முன்னர் என் கதையை யாரோ பேக் பெயரில் ஜெயமோகனுக்கு அனுப்பிவிட்டார்கள். சிலர் நானே வேறுபெயரில் அந்த கரி வேலையை செய்ததாக கூட நினைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட வேலையை நான் செய்யமாட்டேன் என்பதை என் நெருங்கிய நண்பர்கள் அறிவார்கள். நான் ஜெயமோகனுக்கு மறுப்பு கடிதம் அனுப்பியதும் அதே பேக் ஐடியில் எனக்கும் மன்னிப்பு கடிதம் அனுப்பினார்கள். முதலில் உங்கள் முகத்தை காட்டுங்கள். நீங்கள்தான் அனுப்பினீர்கள் என்று எல்லோருக்கும் சொல்லுங்கள், மன்னிப்பு அப்புறம் என்றேன். பதில் இல்லை.

வியாழமாற்றம் எழுதினால் அதன் சில பகுதிகளை மாத்திரம் பேஸ்புக்கில் கொப்பி பண்ணி போடுபவர்கள் இருப்பார்கள். லிங்கை ஷேர் பண்ணுங்கள். கொப்பி பண்ணி போடவேண்டாம் என்று கொமெண்டு போட்டால், "நீங்கள்தான் அந்த பதிவை எழுதினீர்கள் என்பதற்கு என்ன ஆதாரம்?" என்பார்கள். ஆபீஸ் ரூமுக்கு வாடா. காட்டுறன்.

யாழ் இணையத்தளத்தில் ஆரம்பத்தில் என் பதிவுகளை இணைத்தேன். பின்னர் என் பதிவுகளை புத்தகமாக்கும் நோக்கில் இணைப்பதை நிறுத்திவிட்டேன். ஆனாலும் வேறு பலர் கொப்பி பண்ணி போடத்தொடங்கினார்கள். போடாதீர்கள் என்றேன். கொப்பிபண்ணக்கூடாது என்று படலையில் குறிப்பிட்டால் கொப்பிபண்ணமாட்டோம் என்றார்கள். செய்தேன். தொடர்ந்தும் நடக்கிறது. என்ன செய்ய? அயர்ச்சியாக இருக்கிறது.

சுடரொளியில் கந்தசாமியும் கலக்சியும் தொடர் ஆரம்பித்தார்கள். ஐந்து பாகங்கள் எழுதிக்கொடுத்தேன். ஒவ்வொரு பாகம் வெளியானதும் பிடிஎப் அனுப்புவார்கள். பின்னர் அனுப்பவில்லை. நானும் எழுதிக்கொடுக்கவில்லை. அவர்களும் கேட்கவேயில்லை. தொடருக்கு என்னானது? கேட்டேன். படலையில் இருந்து தூக்கிப்போட்டுவிட்டோம் என்றார்கள். ஒருத்தன் தொடர் எழுதினால், குறைந்தபட்சம் வெளியான கொப்பியாவது கொடுக்கவேண்டாமா? நானா என் நாவலை வெளியிடக்கேட்டேன். இல்லையே?

மண்ணெண்ணெய் என்ற சிறுகதை எழுதி ஒரு போட்டிக்கு அனுப்பிவைத்தேன் (அதுகூட நண்பர் ஒருவர் கேட்டதுக்கு இணங்க). வாமுகோமு என்ற நடுவர் சொன்னார், அந்தக்கதை எப்போதோ தமிழ்நாட்டில் வெளியானதாம். மண்ணெண்ணெய் என் சொந்த அனுபவம், வேண்டுமானால் என் அக்காவிடம் கேட்டுப்பாருங்கள் என்று வாமுகோமுவிடம் எப்படி சொல்லுவது? போட்டிக்கு சிறுகதையை அனுப்பியது என் மடத்தனம். 

பலர் என்னை அதுக்கு எழுது, இதுக்கு எழுது என்பார்கள். எழுத்துலகில் சும்மாவிருந்தாலே தேடிவந்து அவமானப்படுத்துவார்கள். தேடிப்போக நான் தயாரில்லை. படலை. அதன் வாசகர்கள். இதுவே என் உலகம்.

யசோ அக்காவுடன் பேசும்போது அவர் சொன்னார். கொப்பி பண்ணினாலும் "நன்றி படலை" என்று போடுகிறார்கள்தானே. அதுக்குமேலே என்னவேண்டும்? நான் சொன்னேன்.

ஆச்சியின் தாலிக்கொடியை திருவிழாவில் திருடிவிட்டு "நன்றி அன்னலட்சுமி ஆச்சி" என்று சொல்லி தெருவிலே விக்கலாமா?

அக்கா எதுவுமே பேசவில்லை.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக