Skip to main content

Posts

மறை சாட்சி - சிறுகதை

தேவாலயத்தினுள்ளே மரியதாஸ் நுழையும்போது திருப்பலி ஆரம்பித்துவிட்டிருந்தது. அனைவரும் அமைதியாக அமர்ந்திருந்து இறைவாக்கினைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். மரியதாஸ் ஓசை ஏதும் எழுப்பாமல் பின்னாலே ஒரு ஓரமாகப் போய் நின்றுகொண்டான். அவன் அப்படித் தயக்கத்தோடு நிற்பதைக் கவனித்த கடைசி வாங்கிலில் உட்காந்திருந்த பெண்மணி ஒருவர், அருகில் வந்தமருமாறு அவனுக்கு நகர்ந்து இடங்கொடுக்க, மரியதாஸ் அவரைப்பார்த்து சங்கடமாகப் புன்னகைத்தபடி மெதுவாக அங்கு சென்று உட்கார்ந்தான்.

தாயகம் கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டியில் வெற்றிக்கிண்ணம்

கரப்பந்தாட்டத்தின் ‘over game’ வடிவம் தொழில்முறை விளையாட்டில் கொஞ்சம் கொஞ்சமாக வழக்கு ஒழிந்து வந்தாலும் ஊர் மக்களிடையே அது மிகப்பிரபலமானது. நான் முதன்முதலாக இதனை விளையாடியது அத்தியடியில்தான். தொண்ணூறுகளில் அத்தியடிலிருந்த பிரியா வீட்டுக்குப் பின் வளவில் ஒரு பெருங்கூட்டமே அந்நாள்களில் கரப்பந்து விளையாட மாலை நேரங்களில் கூடிவிடும். பகல் முழுதும் வேலை செய்தவர்கள் எல்லோரும் வீட்டுக்குப் போய் ஒரு டீ குடித்துவிட்டு ஐந்து மணிக்குள்ளே திடலுக்கு வந்துவிடுவார்கள். அப்படி வருபவர்கள் பலரும் கரப்பந்தில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். அவர்கள் பந்தை உருட்டி, உருட்டி அடிக்கும் இலாவகத்தைப் பார்ப்பதே சுவாரசியமாக இருக்கும். விளையாட்டில் சுதி ஏறினால் தூஷணங்களும் பறக்கும். என்னைப்போன்ற பதின்மத்தவர்கள்தாம் அதிகம் வாங்கிக்கட்டுவார்கள். பந்துக்குப் பாயாவிட்டால், பந்து பறிக்க அடித்தால், மற்றவர் பந்துக்குப் பாய்ந்தால், ஏன் அவர்கள் பிழை விட்டால்கூட நமக்கே ஏச்சு விழும்.

புலம்பெயர் எரிபொருள் கியூ

இன்று வீட்டிலிருந்துதான் வேலை. அடுத்த அரை மணி நேரத்தில் ஆரம்பிக்க இருக்கும் அலுவலகக் கூட்டத்துக்கான தயார்ப்படுத்தல்களைச் செய்துகொண்டிருந்தேன். புதிய திட்ட வரைபு ஒன்று அது. நான்தான் அதனை அறிமுகம் செய்து உரையாடவேண்டும். நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பிரதானத் தொழில்நுட்ப இயக்குநர், சைபர் பாதுகாப்பு நிபுணர் எனப் பல முடிவெடுக்கும் புள்ளிகள் பங்கெடுக்கும் கூட்டம் அது. காலையில் குடித்த கோப்பி வயிற்றைக் கலக்கிக்கொண்டிருந்தது.

முரண் நயத்தல்

உங்களை இங்கே எதிர்பார்க்கவில்லை. நேற்றைய நிகழ்வில் மொத்தமாக மூன்று பேர் இந்தக் கூற்றை என்னிடம் சொன்னார்கள். அது கம்பன் கழகம் நடத்திய ஞானவேள்வி எனும் நிகழ்வு. ஆண்டுதோறும் இந்த நிகழ்வை குமாரதாசன் அண்ணா மெய்யும் மடியும் வருந்த மேடையேற்றிக்கொண்டிருக்கிறார். நானும் ஒவ்வொரு வருடமும் தவறாமல் இந்நிகழ்வுக்குச் செல்லும் வழக்கத்தை வைத்திருக்கிறேன். ஒவ்வொரு வருடமும் யாரேனும் சிலர் அதிசயமாக இப்படி ஒரு கேள்வியை என்னிடம் கேட்பதுண்டு. இத்தனைக்கும் கேட்டவர்கள் அத்தனை பேரும் ஓரளவுக்கு எனக்கு நெருக்கமானவர்களும்கூட. ஆனாலும் என்னைக் கண்டவுடன் சிறு திகைப்பு அவர்களது கண்களில் ஒளிர்ந்து மறையும். ஆச்சரியம் விளையும். வாய் அறியாது சொற்களை உதிர்த்துவிடும்.

எழுத்துப் பட்டறை - புகைப்படங்கள்

நேற்றைய எழுத்துப் பட்டறை இனிதே நிகழ்ந்தேறியது.   ஹெமிங்வேயின் Hills like white elephants சிறு கதையோடு ஆரம்பித்தோம். பின்னர் இளவேனில் சஞ்சிகையில் வெளியான சாந்தி சிவகுமார் எழுதிய ஒரு சேலையின் பயணம் என்ற சிறுகதை எப்படி அதன் ஆரம்ப பொறியிலிருந்து இப்போதுள்ள வடிவத்தை வந்தடைந்தது என்று உரையாடினோம். இடையிடையே நவீன இலக்கியத்தில் பலரும் பயன்படுத்தும் நுட்பங்கள், புனைவுகளை அணுகுவதற்கான சில ஆரம்ப உத்திகள் என்று பலதையும் விவாதித்தோம். பங்குபெற்றவர்களும் எழுத்து, வாசிப்புடன் பரிச்சயமானவர்கள் என்பதால் கேள்விகளும் ஆழமாக அமைந்திருந்தன. மொத்தத்தில் நம் ஞாயிறு காலையின் மூன்று மணி நேரம் இனிதாகவும் பயனுள்ளதாகவும் அமைந்தது. இவ்வாறான இலக்கியம் சார்ந்த கூட்டு முயற்சிகளை சிறிய அளவில் முன்னெடுக்கவேண்டும் என்ற ஆவல் பல ஆண்டுகளாகவே இருந்தது. இந்நாள்களில் மெல்பேர்ன் வாசகர் வட்டத்தினூடும் இளவேனில் சஞ்சிகையினூடும் அவற்றைச் சாத்தியப்படுத்தக்கூடியதாக இருப்பது பெரு மகிழ்ச்சி.   இந்த அரங்கினை நம் வாசகர் வட்டத்தின் சார்பாக முன்றில் அமைப்பின்வழி சாந்தி அக்காதான் ஒழுங்கமைத்தார். எப்படியானதொரு அரங்கைத் தாம் எதிர்பார...

சுந்தரம்பிள்ளை அங்கிள்

சற்று முன்னர்தான் அம்மா அழைப்பெடுத்து சுந்தரம்பிள்ளைஅங்கிள் காலமான செய்தியைச் சொன்னார். எனக்கு உடனடியாக எதுவுமே தோன்றவில்லை. கொஞ்ச நேரம் டிவி பார்த்தேன். ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்துத் தட்டினேன். செல்பேசியில் சில காணொளிகள் பார்த்தேன். ம்ஹூம். உடலும் உள்ளமும் கூட்டாகப் பிரிந்து கடந்த காலத்துக்கு ஓடிப்போனதில் நிகழ்காலம் மரத்துப்போயிருந்தது. இதைக்கூட எழுதக்கூடாதென்றுதான் புத்தி சொல்கிறது. மனம் தன் போக்கில் எழுதிக்கொண்டிருக்கிறது. நான் தடுக்கப்போவதில்லை.

"இல 20, சூரியா வீதி, நீர்கொழும்பு" – முருகபூபதியின் வீடு

சில வாரங்களுக்கு முன்னர் லெ. முருகபூபதியின் நூல் ஒன்றை வாசித்துக்கொண்டிருக்கையில் ஒரு வரியில் கடந்துபோன அவருடைய பிரிட்டிஷ் கால ‘பொலீஸ் தாத்தா’ பாத்திரம் உடனேயே மனதுள் பதிந்தது. பின்னர் அந்த இழையைப் பிடித்து அவருடைய ஏனைய பல புத்தகங்களைத் தேடி தேடி வாசித்தபோது, கொஞ்சம் கொஞ்சமாக, பொழுது புலர்வதுபோல இக்கட்டுரை அதன் பாட்டுக்குத் தன்னைத்தானே எழுத ஆரம்பித்தது.