வசந்த காலத்தின் நடைப்பொழுதுகள் எப்போதும் உவகை கொடுக்கக்கூடியவை. அதுவும் மனைவியோடு நடக்கும்போது நகைக்குப் பஞ்சமிருப்பதில்லை. மற்றவர்கள் எப்படியோ தெரியாது, ஆனால் ஆண் பறவைகளைப்போலப் பெண் துணைக்கு ஆடியும் பாடியும் நகாசுகள் என பல வித்தைகள் காட்டியும் கவனத்தை ஈர்க்கும் முயற்சி பத்தாண்டுகளாக இன்னமும் தொடர்கிறது. அவள்தான் எல்லாவற்றையும் வெறும் இறக்கைச் சிலிர்ப்போடு சலிப்பாகக் கடந்துபோய்விடுகிறாள். ஆற்றங்கரையோடே நடைபாதை அமைந்திருக்கிறது. கூடற் பருவம் முகிழ்ந்து குஞ்சுகள் சகிதம் வாத்துக்கூட்டங்கள் பல வலம் வந்துகொண்டிருந்தன. கூட்டத்துக்கு ஒரு இருபது குஞ்சுகளும் தாயும் தகப்பனும் இருக்கும். அப்போதுதான் நடை பழகும் குஞ்சுகள். சிலது நீந்தக்கற்றுக்கொள்கின்றன. சில குஞ்சுகள் சொல்வழி கேளாமல் அங்கிங்கே எடுபட்டுப்போனால் தாயோ தகப்பனோ ஓடிச்சென்று மீண்டும் அவற்றைக் கூட்டத்தினுள் துரத்திவிடுகின்றன. சிலது தம் பெற்றோரைப்போலவே கரையோரச் சகதிக்குள் தலையை உள்ளே நுழைத்து பிட்டத்தை உயர்த்திப்பிடித்து என்னவோ செய்கின்றன. கேட்டால் தாங்களும் மீன் பிடிக்கிறார்களாம்.