Skip to main content

மழை நாளில் 'என் கொல்லைப்புறத்துக் காதலிகள்'



ஒரு மாதத்துக்கு முன்னர் நண்பன் ஒருவன் தன் வீட்டில் பெய்த மழையைக் காணொளி எடுத்துப் பகிர்ந்திருந்தான். நான் பிறந்து வளர்ந்த ஊரான தின்னவேலியில் பெய்த மழை அது. மல்லிகைப் பந்தல், வாழை, செவ்வரத்தை, நெல்லி, பூங்கன்றுகள், இடையே நாய்க்கூடு எனச் சூழ்ந்திருந்த அந்த மிக அழகான வீட்டு முற்றத்தில் மழை கொட்டிக்கொண்டிருந்தது. தின்னவேலி மழை எப்போதுமே அண்டாவைக் கவிழ்த்துக்கொட்டுவதுபோலத்தான் பெய்யும். நான் அன்று அவனுக்கு இப்படி ஒரு கருத்து இட்டேன்.

வெள்ளம் தேங்கி வீடு கசியாதவரைக்கும் தின்னவேலியின் மழை மிக அழகுதான்.

ஏன் அப்படிச் சொன்னேனோ தெரியாது. ஆனால் இதனைச் சொல்லிய சில வாரங்களிலேயே தீவு முழுதும் மழையும் வெள்ளமும் நிலச்சரிவும் பெருங் கோரத்தாண்டவத்தை ஆடிவிட்டன. மழை நம் வீட்டுக்குள் நுழையாதவரைக்கும்தான் அழகு. அப்புறம் அது ஒரு கொடிய அரக்கியாகிவிடுகிறது. சிரங்கு. முட்டு. கக்கூஸ் அடைப்பு. நுளம்பு. காயாத உடுப்பு. மின் வெட்டு. நிலமெல்லாம் கசிந்து சகதி ஆவது. இவை எல்லாமே சிறு வெள்ளத்துக்கே வந்து சேரக்கூடிய துன்பங்கள். நிலம் சரிந்து மொத்த வீடுமே அமுங்குவதும் குழந்தைகள் உள்ள வாகனங்கள் அடித்துப்போவதும் பெரு வெள்ளத்தின் சொல்லொணாத் துன்பங்கள்.
 
இந்நிலையில்தான் எனக்கு தர்ஷனா என்ற வாசகரிடமிருந்து இந்த மடல் புகைப்படத்துடன் வந்தது.

வீடெல்லாம் தண்ணி.
நிலமெல்லாம் ஊறி,
கவரேஜ் இல்ல.
கரெண்ட் இல்ல.
காட்போட் மட்டை விரித்து
தங்களின் கொல்லைப்புறத்து காதலிகளுடன்
அம்மா பொழுதைப்போக்கினார்.

எனக்கு இதனை எப்படி எதிர்கொள்வது என்று தெரியவில்லை. எனினும் மழை மனிதரை முடக்கிப்போட்டிருக்கும் சூழலில் ஏதோ ஒரு ஆறுதலை வாசிப்பு கொடுக்கிறது என்பது சிறு திருப்தியையே கொடுத்தது. கூடவே, சிறு வயதில் கடும் மழை நாளில் பாடசாலைக்குக் கள்ளம் அடித்து வீட்டிலிருந்து புத்தகங்கள் வாசித்த காலங்கள் வந்து போயின. எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. அது ஒரு நாவலாகத்தான் இருக்கவேண்டும். மட்டக்களப்பில் அறுபதுகளிலோ எழுபதுகளிலோ ஏற்பட்ட பெரு வெள்ளத்தை அடிப்படையாகக்கொண்ட கதை அது. எழுதியவர் பெயரோ, நூலின் பெயரோ ஞாபகமில்லை. வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பலரின் துன்பங்கள் அதிலே பதியப்பட்டிருக்கும். ஒரு காட்சியில் வீட்டுக் கூரையில் சிலர் தவித்திருக்க, படகு ஒன்று வந்து அவர்களைக் காப்பாற்றுகிறது. ஊருக்குள்ளே படகு வரும் அளவுக்கு வெள்ளமா என்று சிறு வயதில் அதனை வாசித்து வியந்திருக்கிறேன்.

மழை நாளில் வீட்டு முன் ஹூட்டுக்குள் போடப்பட்டிருக்கும் பின்னல் கதிரையில் அம்மா உட்கார்ந்து புத்தகம் வாசிக்க, அவருடைய சோட்டி மடி ஊஞ்சலில் நான் அமர்ந்து வாசித்த புத்தகங்கள்தாம் இவை. அப்போது வளர்ப்பு நாய் ஹீரோவும் என்னோடு சூட்டுக்கு அண்டி உட்கார்ந்து தூங்கிக்கொண்டிருக்கும். ரயில் வண்டிகள்போல ஊருகின்ற சிவப்பு, கறுப்பு அட்டைகளை அது கிட்ட வந்தால் தட்டிவிடும். மழை அடங்கும்வரை வீட்டுக் கோழிகளும் அங்கு வந்து ஒதுங்கியிருக்குமாதலால் நிலம் முழுதும் கோழிப்பீயும் கிடக்கும். காலையில் நான் மடித்து விட்டக் காகிதக் கப்பல் கைவிடப்பட்டு, கரை புரண்டு சீமெந்து நிலத்தில் படர்ந்திருக்கும். ஆச்சரியம் என்ன என்றால் அப்போது நான் அந்த அனுபவத்தை உணராது வேறேதோ நூலில் எழுதப்பட்டிருந்த அனுபவத்தை வாசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். ஆனால் இப்போது எப்போதோ நிகழ்ந்த அப்பொழுதை நினைவூட்டி எழுதி மீளுருவாக்கிக்கொண்டிருக்கிறேன். இந்த இப்பொழுதில் வெளியே இள வெயில் சாமரம் வீசிக்கொண்டிருக்கிறது. மரங்களில் காற்று இல்லை. வீட்டில் யாருமேயில்லை. யாவுமே ஒரு stillnessபோல. இதையும் எப்போதாவது ஒரு நாள் நான் எழுதக்கூடும். எழுதுவதாலேயே பல கணங்கள் காலத்துக்கும் தரித்துவிடுகின்றன. புத்தகங்களுக்குள் கடந்த காலங்கள் குறண்டிக்கிடக்கின்றன. வாசிக்கும்போதெல்லாம் அவை தாயிடம் பால் குடிக்க அவிழ்த்துவிடப்பட்ட ஆட்டுக்குட்டிகளைப்போலத் துள்ளித் திரிகின்றன.

அன்றொரு நாள் ஒரே குடும்பத்தின் பாட்டி, மகள், பேத்தி மூவருமே என் எழுத்து பற்றித் தனித்தனியாக என்னோடு உரையாடினார்கள். நான் அனுபவித்திராத, அறிந்திராத பல விடயங்களையும் மனிதர்களையும் உணர்வுகளையும் புத்தகங்கள் என்றென்றைக்கும் எனக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருக்கின்றன. என் எழுத்தினூடாகவும் அவ்வகை அனுபவங்களைத் தலைமுறை வேறுபாடுகளின்றி ஒரு சிலர் பெற்றுக்கொள்கிறார்கள் என்பதை அறியும்போது சின்னதான ஒரு முறு நகை வந்துபோகிறது. அப்போது யாரேனும் அந்நகையைப் பார்த்துவிடுவார்களோ என்ற சங்கடமும் கூடிவர, நகையினின்று எழுந்த சிரிப்பு அடுத்த கணமே மழுங்கியும் போகிறது.

இவை யாவுமே மகோன்னதங்கள்தாம்.

Comments

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

என் கொல்லைப்புறத்துக் காதலிகள் : 6. கக்கூஸ்

                                          நடுச்சாமத்தில கக்கூசுக்கு அவசரமாக வந்துவிட்டால் அது ஒரு மிகப்பெரிய அரசியற் பிரச்சனை. தனியாகப் போகமுடியாது. கூட்டணி வைக்கவேண்டும். செத்துப்போன தாத்தா பின்பத்திக்குள்ளே சுருட்டுப் பிடித்துக்கொண்டு நிப்பார். கிணற்றடியில் பாம்பு பூரான் கிடக்கலாம். ஒரே வழி, பக்கத்தில் நித்திரை கொள்ளும் அம்மாவைத் தட்டி எழுப்புவதுதான். முதல் தட்டிலேயே எழுந்துவிடுவார். “பத்து வயசாயிட்டுது இன்னும் என்னடா பயம்?”