Skip to main content

Posts

Showing posts with the label ஊரோச்சம்

காளான் பஜ்ஜி

ஆர்த்திகனின் ‘ARN’ காளான் கடை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மத்தியிலும் மிகவும் பிரபலம். என் அம்மாகூட பல தடவைகள் இந்தக்கடையைப்பற்றிய காணொலியை யூடியூபில் பார்த்துவிட்டுச் சிலாகித்ததுண்டு. இம்முறை ஊருக்குச் சென்றபோது ஆர்த்திகனோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. கூடவே அவர்களது காளான் உணவுடனும். பலாலி றோட்டில், பரமேஸ்வராச்சந்திக்கும் தபால்பெட்டிச்சந்திக்கும் இடையே வீதியோரமாக இவர்களின் பெட்டிக்கடை அமைந்துள்ளது. கடையில் நின்று வியாபாரம் செய்வது ஆர்த்திகனின் தம்பியான குமரன். ஆர்த்திகனும் அவ்வப்போது அதில் இணைந்துகொள்வதுண்டு. பின்னேரங்களில் காளான் பஜ்ஜியும் சூப்பும் கட்லட்டும் விற்பார்கள். தவிரக் காளான் பிரைட் ரைஸ், காளான் டெவில் போன்றவையும் ஓர்டருக்கு விநியோகம் செய்தார்கள். யாழில் நின்ற ஒன்றரை மாதங்களில் ஐந்தாறு முறையாவது அந்த பஜ்ஜியும் சூப்பும் சாப்பிட்டிருப்போம். நாங்கள் நின்ற காலம் வேறு ஒரே அடை மழையா, பெட்டிக்கடை முன்னே நின்று மொறு மொறு பஜ்ஜியும் ஆவி பறக்கும் கார சூப்பும் உட்கொள்ளும் அனுபவமே பரவசமாக இருந்தது. யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சுப்பர் மார்க்கட்

புனைவின் நூதனக் களியாட்டம்

ஷாமந்தை உங்களில் சிலருக்கு ஞாபகம் இருக்கலாம். ‘என் கொல்லைப்புறத்துக் காதலிகள்’ நூலை வாசித்துவிட்டு அந்தச் சிறுவன் என்னோடு உரையாடிய காணொலியை சிலர் பார்த்திருக்கவும் கூடும்.

ஊரோச்சம் : ரயில் பயணம்

கசுனுக்கு வயிற்றைக் கலக்க ஆரம்பித்திருந்தது. பச்சை அம்பரலங்காயாக இருக்கவேண்டும். அல்லது திருட்டுத்தனமாக குசினித் தட்டிலிருந்து எடுத்துத் தின்ற அச்சாறு வெங்காயமாகவும் இருக்கக்கூடும். அப்போதுதான் அவன் தாய் தொழிற்சாலையில் வேலை முடித்துவந்து, குளித்து, வீட்டு உடுப்புக்கு மாறி எல்லோருக்கும் தேநீர் தயாரிக்கலாம் என்று அடுப்பைப் பற்றவைக்கப் போயிருந்தாள். அதற்கிடையில் போய் அம்மா ‘கக்கா’ என்றால் எப்படியிருக்கும்? “போயிரு. முடிஞ்சோன கூப்பிடு, நான் வாறன்” கசுனுக்கு ஒரு பழக்கம். கக்கா இருக்கப்போகும்போதெல்லாம் கூடவே தன்னோடு ஒரு டைனோசரையும் கூட்டிப்போவான். அதற்கு அவன் முத்தா என்று பெயர் வைத்திருந்தான். முத்தா என்றால் பூட்டன். டைனோசர்கள் நம் பூட்டன் காலத்தில் வாழ்ந்தவை என்று தாய் அவனுக்குச் சொல்லியிருந்ததால் வைத்த பெயர். முத்தா ஒரு காலுடைந்த டைனோசர். யாரோ வயதாகிவிட்ட குழந்தை குப்பையில் தூக்கிப் போட்ட டி-ரெக்ஸ் அது. ஆனால் அது ஒரு டி-ரெக்ஸ் என்பதோ, அதற்கு ஒரு கால் உடைந்துபோனதோ கசுனுக்குத் தெரியாது. அவனைப்பொறுத்தவரையில் டைனோசர்களுக்கு முன்னிரு கால்களும் சிறியவை. பின்னாலே ஒருகால் மாத்திரம் இருக்கிறது. மு

ஊரோச்சம் : கட்டுநாயக்கா

பதினொரு மணிக்கே விமானம் தரையிறங்கிவிட்டது. சிங்கப்பூர், மெல்பேர்ன் விமானநிலையங்களில் பெரிதாக எவரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. ஆனால் கட்டுநாயக்காவில் அணிந்திருந்தார்கள். அது கொரணா கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்திருந்த காலம். எல்லா மாஸ்குகளும் வாயை மட்டுமே மூடியிருந்தன. அதுவும் சரிதான் என்று தோன்றியது. தொற்று வந்து சளி பிடித்து மூக்கை அடைத்தால் வாயால்தானே மூச்சு விடவேண்டும்?

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 2

அன்றைக்கு சிவராத்திரி தினம். மத்தியானம் இரத்தமாக வெட்டிய ஆட்டிறைச்சிக்கறி செமிப்பதாக இல்லை. இரவுக்கு மிச்சச்சட்டியைவேறு பிரட்டவேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் வண்டி இன்னமும் பொம்மிக்கொண்டு நின்றது. இரண்டு பனங்கிழங்குகளை சீவி உள்ளே போட்டுப்பார்த்தேன். வயிறு மேலும் இறுகியதுதான் மிச்சம். ‘நாச்சிமார் கோவிலடிவரைக்கும் நடந்திட்டு வருவமா’ என்று அக்கா ஐடியா கொடுத்தார். சரியென்று நாங்கள் நடக்க ஆரம்பித்தோம். அப்போது நேரம் இரவு எட்டுமணி.

ஊரோச்சம் : கட்டாக்காலி நாய்கள் : 1

யாழ்ப்பாணம் முழுதும் கட்டாக்காலி நாய்களால் நிறைந்திருந்தது. முன்னரானால் ஒழுங்கை முகப்புகளிலும் கோயில் முன்றல்களிலும் சந்தைகளிலும் சாப்பாட்டு ஓட்டல்களுக்குப் பின்னாலிருக்கும் வெறுங்காணிகளிலுமே கட்டாக்காலி நாய்கள் திரிவதுண்டு. என்னதான் கட்டாக்காலிகள் என்று சொன்னாலும் அவற்றுக்கும் ‘கண்ணன் லொட்ஜ் நாயள்’, நந்தாவில் அம்மன் நாயள்’, ‘நல்லூரடி நாயள்’, ‘மூத்திர ஒழுங்கை நாயள்’, பணிக்கரடி நாயள் என்று பல முத்திரைப் பெயர்கள் இருந்தன. அந்தக் கட்டாக்காலிகள் போட்ட குட்டிகள்தான் எங்கள் வீடுகளிலெல்லாம் வளர்ப்பு நாய்களாகவும் இருந்தன. கட்டாக்காலிகளின் எண்ணிக்கை அதிகமானாலோ அல்லது அவற்றின் தொல்லை கூடிவிட்டாலோ நகரசபை நாய்பிடிகாரர் வந்து அவற்றைப்பிடித்துக்கொண்டு போய்விடுவார்கள். பல நாய்களைத் தெருவிலேயே வைத்து இயக்கங்களும் இந்திய இலங்கை ஆர்மிகளும் மாறி மாறிச் சுட்டுப்போட்ட சம்பவங்களும் இடம்பெற்றிருக்கின்றன. சுடும்போது அவர்கள் வளர்ப்புநாயா கட்டாக்காலியா என்று பேதம் பார்க்கமாட்டார்கள். எது எப்படியோ, இன்னோரன்ன காரணங்களால் அந்நாட்களில் கட்டாக்காலிகளின் எண்ணிக்கை எப்போதுமே ஒருவித கட்டுக்குள்ளேயே இருந்தது என்க.

ஊரோச்சம் : நயினாதீவின் மாஸ்டர் செஃப்

எனக்கும் மனைவிக்குமிடையில் சாப்பாட்டு விசயத்தில் அடிக்கடி சண்டை வரும். நாங்கள் ஒரு தீவுக் குடும்பம் என்பதால் கடலில் நீந்துகின்ற, கடற்கரையில் ஊருகின்ற எதையுமே ருசித்துச் சாப்பிடுவோம். ஒவ்வொரு ஜந்துவையும் எப்படிச் சமைக்கவேண்டுமென்பதை வேதங்கள்போல எங்கள் முன்னவர்கள் செவிவழியாக தம் அடுத்த சந்ததிகளுக்கு அருளிச்செய்திருக்கிறார்கள். நிலவுக் காலத்தில் நண்டு வலிச்சலாக இருக்கும். சின்னத்திரளி பதினொருமணிக்குமேலே நாறிவிடும். களங்கண்டி விளமீனைப் பொரித்துப் புட்டோடு சாப்பிடவெண்டும். ஒட்டி என்றால் தடித்த குழம்பும் சொதியும். கணவாயை ஏழு சிரட்டையில் அவிய விடவேண்டும். மட்டி எப்படி சமைப்பது. ஒடியற்கூழுக்கு என்னென்ன போடுவது, நெத்தலியில் சொதி. சூடையில் பொரியல். முரள். கிளாக்கன். சீலா, கும்பளா, அறக்குளா முதற்கொண்டு முள்ளு மீனான கொய்யையையும் பச்சைத்தண்ணியான கட்டாவையும்கூட எப்படி சமைக்கவேண்டுமென எத்தனை எத்தனை ரெசிப்பிகள். எந்தெந்த நோய்க்கு எந்தெந்த மீன்கள். எந்தெந்தக் காலத்தில் எந்தெந்த கறிகள் என எல்லாமே என் அம்மாவுக்கு அத்துப்படி. அபிமன்யுவுக்கு கருவிலேயே சக்கரவியூகம் சொல்லிக்கொடுக்கப்பட்டதுபோல ந

ஊரோச்சம் : சிமாகாவின் கனிந்த இரவுகள்

அன்றிரவு ஏழு மணிக்கு வசாவிளானில் செம்முகம் ஆற்றுகைக்குழுவினரின் அரங்கு ஒன்று நடக்கப்போவதாக அக்கா சொல்லியிருந்தார். அதனாலேயே நிருபாவின் புத்தக நிகழ்விலிருந்து வெள்ளனவே கழன்று, வீடு திரும்பி ஆறரைக்கே தயாராக இருந்தேன். நேரம் ஏழு, ஏழரை மணி ஆகிவிட்டது. ஆனால் அக்கா மட்டும் வெளிக்கிடும் சிலமனே இல்லை.  “என்னக்கா லேட்டாப் போய் என்னெய்யிறது” “பொறு ஏழு மணி எண்டா இவங்கள் ஒன்பது மணிக்குத்தான் தொடங்குவாங்கள்”

அரைச்சுக் குழைச்சுத் தடவ

அரைப்பு “அடி அரைச்சு அரைச்சுக் குழைச்சு குழைச்சுத் தடவத் தடவ மணக்குஞ் சந்தனமே...!” மகராசன்; தொண்ணூறுகளில் வெளியான ஒரு மரணவதைத் திரைப்படம். கமல் நட்புக்காக நடித்திருப்பார்.  அதில் வெளிவந்த சங்க இலக்கியப் பாடல்தான் இந்த "அரைச்சு அரைச்சு".  பாடலின் வரிகள் படான் என்றாலும் (உ.தா சின்ன சேலம் மாம்பழமே, மச்சான் தட்டுற மத்தளமே), வழமைபோல ராஜாவின் இசை நுணுக்கமானது. “சந்தனமே..”யில் விழும் சங்கதியை ரசிக்காதவர்கள் இருக்கமாட்டார்கள். இதற்கு மேல் டீடெயிலாக எழுத இதுவொன்றும் இசைப்பதிவு கிடையாது. நிற்க. “அரைச்சு அரைச்சு” பாடல், வெளிவந்த காலத்தில் பயங்கரப் பேமஸ். யாழ்ப்பாணத்தில் சரிந்து கிடந்திருந்த நியூமார்க்கட் வழியாக நடந்து செல்கையில் குறைந்தது இரண்டு புடவைக்கடை, ஒரு தேத்தண்ணிக்கடையிலாவது இதனைக் கேட்கமுடியும். இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகும் பட்சத்தில் வேம்படிச் சந்தியிலிருந்து கஸ்தூரியார் ரோட்டுக்குச் சைக்கிள் மிதிப்பதற்குள் முழுப்பாடலையும் கேட்டு ரசிக்கலாம். எல்லாக்கடைகளிலும் ஒரே வானொலி. ஒரே பாடல். பயணவழி முழுதும் தொடர்ச்சியாகப் பாடல் அறுபடாமல் ஒலித்துக்கொண்டேயிருக்கும

ஊரோச்சம் : சோ.ப

யாழ்ப்பாணம். திருநெல்வேலிச்சந்தியிலிருந்து கிழக்கே ஆடியபாதம் வீதியால் ஒரு அரைக்கட்டை சென்றதும் இடதுபக்கம் வருவது கலாசாலை வீதி. அந்தவீதியால் உள்ளே ஒன்றிரண்டு கட்டைகள் வளைந்து வளைந்து சென்றால் முத்துத்தம்பி மகா வித்தியாலயம் வரும். அதற்கு இரண்டு வீடுகள் முன்னே இருக்கிறது சைவ வித்தியா விருத்திச் சங்கம். இறங்கி உள்ளேபோய்க் கேட்கிறேன். “சோ.ப சேர் இருக்கிறாரா?” “ஊற்றுக்கண்” என்று ஒரு கவிதை இருக்கிறது. நம்மூர்ப்பொங்கல் பற்றியது. நினைவு தெரிந்த நாள்முதலே கொண்டாட்டம் என்றால் அது நமக்குப்பொங்கலையன்றி வேறில்லை. பொங்கல் என்றதும் புக்கைக்கு அடுத்ததாகக் கூடவே ஞாபகத்துக்கு வருவது சீனன்வெடி. “பொடியள் வெடி சுடத் தொடங்கிவிடுவார்கள் வெடிகளில் எத்தனை வகை!” என்று ஆரம்பித்து ஒவ்வொரு வெடியாகக் கவிதை வரிசைப்படுத்தும். நூறு வெடிகளைக்கொண்ட ஆனைமார்க் வட்டப்பெட்டி. மான்மார்க் வெடி. இருபது வெடிகளைக்கொண்ட புத்தகவெடி. சின்னச் சின்ன கொச்சி வெடிகள். கந்தகத்தை நிரப்பி அடிக்கும் கோடாலி வெடி. ஈர்க்கு வானம். இப்படி வரிசையாக வெடிகள் விளக்கப்படும். “எத்தனை கோடி இன்பம்” என்று வெடி வெடிப்பதைக் கவிதை விளிக்கும். வெடி

ஊரோச்சம் : வட்டக்கச்சி 2

  முற்றத்தில் மூன்று பரப்பு நிலத்துக்கு நிழல் பரப்பி நிற்கும் ஒரு மிகப்பிரமாண்டமான மாமரம். அதிலே இரண்டு ஊஞ்சல்கள். மரத்தடியில் “ட” வடிவ பங்கர். ஒன்றிரண்டு கதிரைகள். கயிற்றுக்கட்டில். பேப்பர் படிக்கும் இரண்டு முதியவர்கள்.  மணல் அளையும் சிறுவர்கள்.  ஒருபுறம் செவ்வரத்தைகள். ஜாம்பழ மரம். தூர்ந்த மணற்கிணறு ஒன்று. ஒரு வைக்கோல் கும்பி.  தனியாய் தரித்து நிற்கும் டிரக்டர் பெட்டி. மாட்டுவண்டில். வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த இரண்டு காளை மாடுகள். குறுக்கும் நெடுக்குமாக கேறிக்கொண்டிருக்கும் கோழிக்கூட்டம். பிறவுன் கலரில் ராமு. வீடு சிறியது. ஒரு படுக்கையறை. ஒரு குட்டி ஹோல். UNHCR தறப்பாள்போட்டு பெரிதாக்கப்பட்ட திண்ணை. தனியாகக் குசினிக்கு புகைக்கூண்டோடு ஒரு சின்னக் கொட்டில். அவ்வளவும்தான் வீடு.   சிவிக் சென்டர் என்பது அறுபதுகளில் படித்த வாலிபர் திட்டத்தில் இளைஞர்களுக்கு வீடும் காணியும் கொடுத்து உருவாக்கப்பட்ட ஒரு சிறிய கிராமம். படித்த இளைஞர்களை கிராமங்களுக்கு வரவழைத்து விவசாயத்தில் ஈடுபடுத்தும் நோக்கத்தில் ஏற்படுத்தப்பட்டது. சிவிக்சென்டரின் குடும்பங்கள் அத்தனையுமே விவசாயம் செய்பவை. எல்லோருமே இரு ப

ஊரோச்சம் : வட்டக்கச்சி 1

நன்றாக இருட்டி விட்டிருந்தது. படகிலே ஒரு நாற்பது ஐம்பது பேர் இருந்திருப்போம். எல்லோரும் கடல் தண்ணீர் தெறிக்காவண்ணம் துவாயையோ சாரத்தையோ சுற்றிக்கொண்டு அமர்ந்திருந்தோம். ஒரு சிலர் ஒல்லிக்கோம்பைகளை இடுப்பில் கட்டியிருந்தனர். சிலர் இடுப்பில் தேங்காய் மட்டைகள். சந்நிதியானுக்கும் அம்மாளுக்கும் அவசர நேர்த்திகள் வைக்கப்பட்டுக்கொண்டிருந்தன. குழந்தைகள் அழ ஆரம்பித்திருந்தன. சிறுவர்கள் பாணும் வாழைப்பழமும் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். பெரியவர்கள் எவருமே பேசவில்லை.   அக்காவும் நானும் அம்மாவின் கைகளை இறுக்கப்பற்றியிருந்தோம். அல்லது அம்மாதான் எங்கள் கைகளை பற்றியிருந்தாரா என்று தெரியவில்லை. எம்மிடம் பேசுவதற்கு எதுவுமே இருக்கவில்லை. வாயைத் திறக்கும்போதெல்லாம் தாடைகள் தம்பாட்டுக்கு அடித்துக்கொண்டன. பயத்தாலும் மார்கழி கடல்காற்றின் குளிராலும் உடல் நடுங்கியது.   படகின் ஓரமாக கட்டப்பட்டிருந்த டயர்களில் பட்டுத்தெறிக்கும் கடலலைகளின் சத்தம்மட்டும் அவ்வப்போது உப்புத்தண்ணியோடு காதுகளில் விழுந்துகொண்டிருந்தது. எம் படகுக்குப்பின்னே இரண்டு படகுகள் கட்டி இழுக்கப்பட்டு வந்தன. ஒரு படகு முழுதும் சைக்கிள்களும் சில ம

ஊரோச்சம் 3 : பஸ்

  காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம்.  வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன்.  ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது . சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர். சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.   துப்ப

ஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி

  தீபாவளிக்கு மிச்ச எந்தக் கொண்டாட்டங்களையும் விட ஒரு சிறப்பு இருக்கிறது.  எங்கள் ஊரில் மச்சம் சாப்பிடுவதற்கு அனுமதிக்கப்படும் ஒரே பண்டிகை அதுதான். தீபாவளி என்றாலே வேறு கதையே இல்லை, எங்கள் வீட்டில் ஆட்டிறைச்சி வாங்கியே தீரவேண்டும்.  அதுவும் கோண்டாவில் ஆட்டிறைச்சி. "உடுப்பு ஒண்டும் வேண்டாம், காசைத்தாங்கோ, கோண்டாவிலில பங்கொண்டு எடுப்பம்" என்று தீபாவளி புது உடுப்பை தியாகம் செய்யுமளவுக்கு கோண்டாவில் ஆட்டிறைச்சி மீதான காதல் அதிகம். தீபாவளி வருகிறதென்றாலே வாயில் பொரியல் துண்டு கடிபட்டு, மல்லி மிளகாய்க்காரத்தோடு சுரக்கும் அந்த இறைச்சிக்குழம்பு நாக்கில் புரளத்தோடங்கிவிடும். அப்படியொரு ஐட்டம் அது. ஆட்டிறைச்சிக்கறி என்பது வெறும் சுப்பனோ குப்பனோ கிடையாது.

ஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்

  “அம்மா பத்து வரியத்துக்கு பிறகு வந்திருக்கிறன்” “சரி ரெண்டு நாள் இருந்திட்டுப் போ!” -- யாழ்ப்பாண இராத்திரிகள் . யாழ்ப்பாண பயணம் அன்றோடு முடிகிறது. நேரம் ஆறரை. ஒன்பதரைக்கு பதுளைக்கு பஸ். கடந்த மூன்று கிழமைகள் யாழ்ப்பாண அனுபவங்களை அசை போட்டபடி அப்போதுதான் இரண்டு உடுப்பை மடித்து பாக்கிற்குள் வைக்க ஆரம்பித்திருந்தேன். இந்த மூன்று கிழமைகளில் செய்யவேண்டும் என்று நினைத்தவற்றை ஓரளவுக்கு செய்தாயிற்று. போகவேண்டிய இடங்கள், சந்திக்கவேண்டிய நபர்கள் என்று போனில் குறித்து வைத்திருந்த லிஸ்ட் எல்லாம் டிக்காகி விட்டது. ஆனாலும் எதையோ ஒன்றை மிஸ் பண்ணியது போன்ற உணர்வு. யாரையோ சந்திக்காமலேயே போகிறோம் என்றது உள்மனது. குட்டி போட்ட பூனையாட்டம் அறையை சுற்றி சுற்றி வருகிறேன். திடீரென்று பொறி தட்டியது… எப்படி அவரை மறந்தேன்? செங்கை ஆழியான்.

சப்பல் மன்னர்கள்

  மோகனவடிவேல். சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே  எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும்.  கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா?” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட் சொன்னாப்பிறகு