Skip to main content

காளான் பஜ்ஜி



ஆர்த்திகனின் ‘ARN’ காளான் கடை உலகெங்கும் உள்ள ஈழத்தமிழர் மத்தியிலும் மிகவும் பிரபலம். என் அம்மாகூட பல தடவைகள் இந்தக்கடையைப்பற்றிய காணொலியை யூடியூபில் பார்த்துவிட்டுச் சிலாகித்ததுண்டு. இம்முறை ஊருக்குச் சென்றபோது ஆர்த்திகனோடும் அவரது குடும்பத்தினரோடும் நெருங்கிப் பழகக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தது. கூடவே அவர்களது காளான் உணவுடனும்.

பலாலி றோட்டில், பரமேஸ்வராச்சந்திக்கும் தபால்பெட்டிச்சந்திக்கும் இடையே வீதியோரமாக இவர்களின் பெட்டிக்கடை அமைந்துள்ளது. கடையில் நின்று வியாபாரம் செய்வது ஆர்த்திகனின் தம்பியான குமரன். ஆர்த்திகனும் அவ்வப்போது அதில் இணைந்துகொள்வதுண்டு. பின்னேரங்களில் காளான் பஜ்ஜியும் சூப்பும் கட்லட்டும் விற்பார்கள். தவிரக் காளான் பிரைட் ரைஸ், காளான் டெவில் போன்றவையும் ஓர்டருக்கு விநியோகம் செய்தார்கள். யாழில் நின்ற ஒன்றரை மாதங்களில் ஐந்தாறு முறையாவது அந்த பஜ்ஜியும் சூப்பும் சாப்பிட்டிருப்போம். நாங்கள் நின்ற காலம் வேறு ஒரே அடை மழையா, பெட்டிக்கடை முன்னே நின்று மொறு மொறு பஜ்ஜியும் ஆவி பறக்கும் கார சூப்பும் உட்கொள்ளும் அனுபவமே பரவசமாக இருந்தது.



யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான சுப்பர் மார்க்கட்டுகளுக்கு காளான் விநியோகம் செய்வதும் இவர்கள்தான். வீட்டிலேயே பெரும் காளான் பண்ணை ஒன்றை உருவாக்கியிருக்கிறார்கள். தவிர வேறும் பலரோடும் ஒப்பந்தம்போட்டு பயிற்சி கொடுத்து அவரவர் வீடுகளில் சிறு தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கிறார்கள். ஆர்த்திகனுடைய வீட்டுக்கும் சென்று அவருடைய காளான் பண்ணையைப் பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. காளான் உற்பத்தியின் ஒவ்வொரு படிமுறைகளையும் மிக நேர்த்தியாக அவர் விளக்கியபடியே சுற்றிக்காட்ட ஆச்சரியமே விரிந்தது. அன்று இரவு உணவாக வீட்டில் நின்ற நாட்டுச் சேவல் ஒன்று சட்டிக்குள் பறந்து, அற்புதமான கோழிக்கறியாக கோப்பைக்குள் விழுந்ததைக் கண்டு மென்று உண்டு தீர்த்த பாக்கியமும் எனக்குக் கிடைத்தது.
ஆர்த்திகனிடமிருந்து நிறைய விடயங்களைக் கற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது. அவர் தனது தொழில் முயற்சிகள் பற்றியும் எப்படியெல்லாம் தேங்கிவிடாமல் தொடர்ந்து முன்னோக்கி இதனை அபிவிருத்தி செய்யவேண்டும், எந்த வேகத்தில் செய்தல்வேண்டும் என்றெல்லாம் விவரிக்கும்போது கேட்டுக்கொண்டேயிருக்கலாம். இத்தனைக்கும் ஆளுக்கு வயசு இருபத்தாறுதான். யாழ் பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவப் பட்டப்படிப்பை முடித்து அண்மையில்தான் அவருடைய பட்டமளிப்பு விழாவும் நிகழ்ந்தது. ஆனாலும் அதற்குள் தனியாக ஒரு சிறு தொழிலை ஆரம்பித்து, படித்த படிப்பையும் பயன்பாட்டில் கொண்டுவந்து, சளைக்காமல் இயங்கிக்கொண்டிருக்கும் இந்த இளைஞர் கொண்டாடப்படவேண்டியவர் என்று தோன்றியது.


ஒரு தொழில் முயற்சி வெற்றிகரமாக நடைபெறும்போது அதனைப் பார்த்துப் பெருமிதமும் உவகையும் அடைவது இயல்புதான். ஆனால் அதன் பின்னர் இருக்கின்ற கடின உழைப்பையும் நிச்சயமற்றதன்மையையும் பதட்டத்தையும் அருகிலேயே நின்று அவதானிக்கக்கூடிய சந்தர்ப்பமும் எனக்குக் கிடைத்தது. நாங்கள் அங்கு நின்ற காலத்தில் திடீரென்று ஒரு வாரத்துக்கு எங்கு தேடியும் எரிவாயு சிலிண்டர்களை வாங்கமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இங்கே பெட்டிக்கடைக்கென வைத்திருந்த ஒரு சிலிண்டர் தீர்ந்து இரண்டாவது சிலிண்டர் அரைவாசியில் நிற்கிறது. ஆர்த்திகனும் குமரனும் அலையோ அலையென்று அலைகிறார்கள். ம்ஹூம். ஒரு நாள் கிளிநொச்சியில் எங்கோ கொடுக்கிறார்கள் என்று ஓடிப்போய் வெறுங்கையோடு ஆர்த்திகன் திரும்பி வந்தார். சிலிண்டர்கள் வருகின்றன. ஆனால் இறக்கிய மறுகணமே காணாமற்போய்விடுகின்றன. பெரு நிறுவனங்களும் நட்சத்திர விடுதிகளும் முதலாளிகளும் சிலிண்டர்கள் வந்த கையோடு எடுத்துப்போய்விடுகிறார்கள். ஆனால் சிறு தொழில் செய்வோரின் நிலைமைதான் படுமோசம். கூடவே எங்கள் வீட்டிலும் சிலிண்டர் தீர்ந்துவிட மின் அடுப்பு ஒன்றை ஓடிப்போய் வாங்கிவந்தோம். மின்சாரம் தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
ஒரு நாள் ஆர்த்திகனின் தொலைபேசி அழைப்பு வந்தது.
‘உடனே சிலிண்டர்களைத் தூக்கியோண்டு ஓடிவாங்கோ, சந்தியில் ஒரு லோடு வந்து நிக்குது’
அப்போது வீட்டில் இரண்டு மூன்று மோட்டர்சைக்கிள்கள் நின்றிருக்கும். ஆளாளுக்கு ஒரு வெற்று சிலிண்டரைத் தூக்கி மோட்டர்சைக்கிளில் ஏற்றிக்கொண்டு பறந்தோம். அந்நாட்களில் மண்ணெண்ணெய் கொடுக்கிறார்கள் என்றவுடன் கலனை எடுத்துக்கொண்டு சைக்கிளில் பறந்த ஞாபகம்தான் வந்தது. ம்ஹூம். ஏமாற்றம்தான். இப்படி இரண்டு மூன்று தடவைகள் நிகழ்ந்தன. ஒருநாள் இயலாக்கட்டத்தில் பத்து கிலோ சிறிய சிலிண்டர்தான் கிடைத்தது என்று அதனை எங்கிருந்தோ அறா நட்டத்தில் ஆர்த்திகன் வாங்கி வந்தார். கடையை மூட முடியாது அல்லவா. இந்த அமளி நிகழ்ந்து ஓரிரு வாரங்களில் திடீரென்று எரிவாயு சிலிண்டர்கள் தாராளமாக வர ஆரம்பித்தன.
இப்போது சிலிண்டர் விலை இரட்டிப்பாகிவிட்டது. பற்றாக்குறைவேறு. ஏனைய உற்பத்திப்பொருட்களும் விலையேறிவிட்டன. இப்படியான சிக்கல்களுக்கு மத்தியில்தான் ஆர்த்திகன் போன்றோர் தொழில் செய்கிறார்கள். அந்த அற்புதமான பஜ்ஜிக்கும் சூப்புக்கும் பெட்டிக்கடை கொடுக்கும் இனிமையான அனுபவத்துக்கும் பின்னாலே இத்தனை துன்பங்கள் இருக்கின்றன என்பதை இப்போது நினைத்துப்பார்க்கையில் அவற்றின் சுவை இன்னமும் அதிகமானாற்போல.


இனிய நண்பர் ஆர்த்திகனும் அவருடைய குடும்பத்தினரும் எத்தகு இடர் வந்தாலும் தொடர்ந்து தம்முடைய தொழிற்பயணத்தில் வெற்றி நடை போட அன்புடன் வாழ்த்துகிறேன்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக