Skip to main content

Posts

‘வெள்ளி’ நாவல் பற்றி ராஜா கருப்பையா

பள்ளி நாட்களில் தமிழ் செய்யுள் பாடத்தில் எந்த குறுந்தொகை பாடல் படித்தோம் என்பது நினைவில் இல்லை. வருடங்கள் பல கடந்த பின்பு 2011ம் ஆண்டில் திரு. சுஜாதா அவர்களின் ‘401 காதல் கவிதைகள், குறுந்தொகை ஓர் எளிய அறிமுகம்’ எனும் உயிர்மை பதிப்பக வெளியீடாக வந்த புத்தகம் வாசிக்க கிடைத்தது. திரு. சுஜாதா அவர்களின் ஆகச் சுவையான முன்னுரை குறுந்தொகை பாடல்களின் அறிமுகத்தை மட்டுமின்றி அவற்றை வாசிக்கும் ஆவலையும் தூண்டியிருந்தது. பாடல் புரியாவிட்டாலும்,பொருள் விளக்கம் அப்பாடல்களை வாசிக்க செய்கின்றது. திரு. சுஜாதா அவர்கள் தன்னுடைய முன்னுரையில் தமிழ் தாத்தா உ.வே.சா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றியை உரித்தாக்குகிறார். ஏனெனில் அவர் பதிப்பித்த உரை இல்லாவிட்டால் நாம் குறுந்தொகையை இழந்திருப்போம் என்கிறார். பின்னர் 2021 ஆண்டில் திரு ஜெயமோகன் அவர்களின் ‘சங்கச்சித்திரங்கள்’ விகடனில் தொடராகவும்,பின் தமிழினி பதிப்பக வெளியீடாக புத்தகமாகவும் வாசிக்கக் கிடைத்தது. அப்புத்தகத்தில் ஜெயமோகன் அவர்கள் தன்னுடைய முன்னுரையில் ‘கவிதை அடிப்படையில் வாழ்வுடன் தொடர்புள்ளது,வாழ்வை விரிவு படுத்துவது,வாழ்வை வைத்துத்தான் கவிதையை வாசிக்க வேண்டும

தீண்டாய் மெய் தீண்டாய் : மயிலான்

“புஞ்சிரி தஞ்சி கொஞ்சிக்கோ. முந்திரி முத்தொளி சிந்திக்கோ, மொஞ்சனி வர்ண சுந்தரி வாவே. தாங்குனக்க தகதிமியாடும் தங்க நிலாவே. தங்க கொலுசல்லே குருகும் குயிலல்லே மாறன மயிலல்லே” ‘நெஞ்சினிலே நெஞ்சினிலே’ பாடலிலிருக்கும் மலையாள வரிகள் அவை. தமிழாக்கும்போது அவ்வரிகள் இப்படி அமைகின்றன. “அழகிய நிறங்கள் நிறைந்த சுந்தரியே. தாங்கு தக்கென தகதிமி ஆடும் தங்க நிலாவே. உன் தலைவனோடு நீ, புன்னகை சிந்திக் கொஞ்சி விளையாடு. உன் திராட்சை இரசமூட்டும் முத்துப்பற்களால் சிரித்து அவனைச் சிதறவிடு. நீ, தங்கக் கொலுசல்லவா? கூவும் குயிலல்லவா? உன் மாறனின் மயிலல்லவா?” இரசித்துக் கேட்டுக்கொண்டிருக்கையில் அந்த இறுதி வரி மாத்திரம் சற்றே நெருடியது. பெண்ணை எப்படி அவளுடைய மாறனுடைய மயில் என்று ஒப்பிடலாம்? பெண் மயில் அத்தனை அழகல்லவே? தன் தோகையை விரித்து ஆடல் செய்வது ஆண் மயில்தானே? ஒரு ஆணுக்குத்தானே மயிலை உவமைப்படுத்தவேண்டும்? எப்போதிருந்து பெண்ணை ஒரு ஆணின் அழகுக்கு ஒப்பிட ஆரம்பித்தார்கள்? பப்புவா நியூகினியிலிருக்கும் அடர்ந்த காட்டிடை வாழுகின்ற குருவி அது. ஒருவிதமான சாம்பல் வண்ணத்துச் சிறகுகளைக் கொண்ட பறவை. சாதாரணமாகப் பார்த்தால் அது

பர்தா : உடைவழி அதிகாரம்

மாஜிதா எழுதிய பர்தா நாவலின் ஆரம்ப அத்தியாயத்திலிருக்கும் வரிகள் இவை. “ஆண்களாகிய நீங்கள்தான் புர்கா அணிவதைத் தீர்மானித்தீர்கள். ஆண்களாகிய நீங்கள்தான் யுத்தங்களின் ஆயுதங்களாகவும் இருக்கிறீர்கள். இப்போது புர்காவைக் கழற்றுமாறும் நீங்களே கூறுகிறீர்கள். உங்களுடைய பயங்கரவாதம், தீவிரவாதம் எல்லாவற்றையும் ஏன் பெண்களாகிய எங்களது உடலில் கொண்டுபோய் நிறுத்தியிருக்கிறீர்கள்?” இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அமைந்திருக்கும் மாவடியூர் கிராமத்தைச் சேர்ந்த சுரையா என்கின்ற பெண்ணின் வாழ்க்கைதான் இந்நாவல். சிறுமியான சுரையா வளர்ந்து, பெரியவளாகி, மணம் முடித்து, குழந்தைகள் பெற்றுக்கொண்ட பின்னருங்கூட, உடை ஒரு கலாசாரமாக, அரசியலாக, அதிகாரமாக எப்படித் தொடர்ச்சியாக அவளது வாழ்வில் திணிக்கப்பட்டுக்கொண்டே வருகிறது என்பதை மிகத் தீவிரமாகவும் கருத்தியல் நேர்த்தியுடனும் சொல்லுகின்ற நாவல் பர்தா. மாவடியூரில் பெருநாள் கொண்டாட்டம். அதற்காக மிரியாகமவுக்கு பணிமாற்றம் கிடைத்துப் போயிருந்த ஹயாத்து லெப்பையின் குடும்பம் ஊர் திரும்புகிறது. பெருநாளுக்கென்று ஹயாத்து லெப்பையின் மனைவியான பீவி கிளியோப்பற்றா சேலை அணிந்திருக்கிறார். கண்ணாடி

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட

நாராய் நாராய்

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் அரங்கேறிய இரண்டாவது சங்க இலக்கியப்பாடல். பிரிவுத்துயர் இல்லாத சங்க இலக்கியப் புனைவுக்கு இடமேது? வெள்ளி நாவலின் முக்கிய கட்டமொன்றில் பிரிவுத்துயருக்கான அத்தியாயமொன்று சாத்தியமானது. குறுந்தொகையில் ஏராளம் பிரிவுத்துயர் பாடல்கள் உண்டு. ஆனாலும் கடைச்சங்கப் பாடலான ‘நாராய் நாராய்’ வெள்ளியின் மனநிலைக்கு மிகவும் பொருந்திப்போனதாய் எனக்குத் தோன்றியது. இதை எழுதியது யாரென்று தெரியாததால் பாடலில் வருகின்ற சத்திமுத்த வாவியின் நிமித்தம் எழுதியவர் சத்திமுத்தப் புலவர் என அழைக்கப்படுகிறார். ஜீவிகாவும் ஸம்ரக்‌ஷணாவும் கேதாவும் இப்பாடலை எடுத்து அரங்கேற்றியதும், இயலும் இசையும் நாட்டியமும் மூன்று வகை படிமங்களை எடுத்தாண்டதும் மிக மன மகிழ்வைக் கொடுத்தது. கருத்துருவாக்கமும் நடன அமைப்பும் - ஜீவிகா விவேகானந்தன் இசையமைப்பும் பாட்டும் - ஸம்ரக்‌ஷணா பொருளும் நயப்பும் - கேதா காணொளியாக்கம் - வசந்த் நாராய் நாராய் செங்கால் நாராய் பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன பவளக் கூர்வாய் செங்கால் நாராய் நீயுநின் பெடையும் தென்றிசைக் குமரியாடி வடதிசைக்கேகுவீராயின் எம்மூர்ச் சத்திமுத்த வாவியுள் தங்கி நனைச

நிலத்திலும் பெரிதே

வெள்ளி நாவல் அறிமுக நிகழ்வில் இடம்பெற்ற முத்தமிழ் அரங்கில் மேடையேறிய மூன்றாவதும் இறுதியுமான சங்கப்பாடல். இதைப்பற்றி நான் எழுதியே ஆகவேண்டும். குறுந்தொகையில் இடம்பெறும் இந்தக் குறிஞ்சித் திணைப் பாடலின் காட்சி இப்படி விரிகிறது. தலைவியைத் தேடி வந்திருக்கும் தலைவன் அவள் முன்னே தோன்றாது விளையாட்டுக்காக வேலியின் அப்புறமாக ஒளிந்திருக்கிறான். இதனைத் தோழி கண்டுவிட்டாள். தோழிக்குத் தலைவன்மீது கொஞ்சம் கோபம். என்னடா இவன், எப்போது பார்த்தாலும் இவளே கதியென்று அலைகிறானே, ஆனால் தலைவியைக் கைப்பிடித்து மணம் செய்து கூடி வாழவேண்டுமே என்ற சிந்தையே இவனுக்கு இல்லையே என்று அவள் பொருமுகிறாள். அதனால் அவனுக்குக் கேட்கும்வகையில் தலைவியிடம் தலைவனைப்பற்றிப் பழி சொல்கிறாள். ஆனால் அதைக்கேட்ட தலைவி வெகுண்டெழுந்துவிட்டாள். ‘என்ன பேச்சு பேசுகிறாய், நம் நட்பு எத்தனை உயர்ந்தது தெரியுமா?’ என்று தோழிக்குத் தலைவி விளிப்பாள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னர் தேவகுலத்தார் பாடிய பாடல் இது. நிலத்தினும் பெரிதே, வானினு முயர்ந்தன்று நீரினு மாரள வின்றே சாரற் கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தே னிழைக்கு நாடனொடு நட்பே. இப்

தமிழர் திருநாள் கொண்டாட்டம்

கடந்த சனியன்று விக்டோரிய மாநிலத்தில் தமிழ் அமைப்புகள் கூட்டுச்சேர்ந்து நடத்திய தமிழர் திருநாள் கொண்டாட்டம் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது. பெருந்திருவிழாபோல வடிவமைக்கப்பட்ட அந்நாளில் வெளியரங்குகள், உள்ளரங்குகள் என பல தளங்களில் நிகழ்வுகள் இடம்பெற்றன. அரங்குகள் என்று பன்மையில் சொல்வதன் காரணம், வெளியரங்குகளிலேயே விளையாட்டுகளுக்கான மைதானம் ஒன்று, அங்காடிகளுக்கான ஒழுங்குகள், பொதுமேடை எனப் பலவும் இருந்தன. உள்ளரங்குகளிலும் இரண்டு மண்டபங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கான திட்டமிடலே பிரமிக்கவைத்தது.