நம்மில் பலருக்கு ‘புதிய ராகம்’, ‘ஆயிரம் பொய் சொல்லி’ போன்ற படங்கள் வெளிவருவதும் தெரிவதில்லை. திரையரங்குகளை விட்டு அவை ஓடுவதும் தெரிவதில்லை. ஆனால் ஓ ஜனனியை நான் இன்றைக்கும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஏதோ மின்னலை சபேஷ்கூட மறந்திருப்பார். ஆனால் நமக்கு ஞாபகம் இருக்கிறது. இதுபோலப் பல பாடல்கள். வி. எஸ். நரசிம்மனின் ‘செண்பகப் பூவைப் பார்த்து’ என்றொரு பாடல். இப்போதும் கேட்க ஆரம்பித்தால் ரிப்பீட் மோடில் ஓடிக்கொண்டேயிருக்கும் பாடல் அது. ‘நீ பேசும் பூவா பூவனமா' என்று இன்னொரு வைரம். ‘ஒரு முறை சொன்னால் போதுமா’ என்ற அன்பே டயானா திரைப்படத்து முத்து. இவற்றின் இசையமைப்பாளர்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் கிடையாது. திரைப்படங்கள் வெற்றிப்படங்கள் இல்லை. நடிகர்களும் பெரும்பாலும் புதியவர்கள். ஆயினும் இந்தப் பாடல்கள் எங்களை வந்தடைந்து, இத்தனை வருடங்கள் கழிந்தும் காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டுக்கொண்டிருக்கின்றன.
யோசித்துப் பார்க்கையில் இதற்கு முக்கிய காரணம் வானொலிகள் என்றே தோன்றுகிறது. எண்பது, தொண்ணூறுகளில், ஏன் இரண்டாயிரங்களின் ஆரம்பக் காலத்தில்கூட நம்மில் பலரும் வானொலியூடாகவே திரைப்பாடல்களைக் கேட்டுக்கொண்டிருந்திருக்கிறோம். நாம் எந்தப் பாடலை எப்போது கேட்பது என்பதை வானொலிகள்தான் தீர்மானித்தன. இன்னும் சொல்லப்போனால், வானொலி அறிவிப்பாளர்களின் இரசனையைத்தான் நாமும் பின்பற்றவேண்டியிருந்தது. தூத்துக்குடி வானொலி நிலையத்தில் பணியாற்றிய பெண்மணிக்கு இளையராஜாவின் 'அழகான மாடப்புறா’ பிடித்துக்கொண்டால் நாமும் அதைக் கேட்க ஆரம்பிப்போம். ஏ. ஆர். எம் ஜிப்ரிக்கு ‘மானூத்து மந்தையிலே’ பிடித்தால் நமக்கும் அது பிடித்துவிடும். லோஷன் ‘பூவே வாய் பேசும்போது’ என்று ஹரிஸ் ஜெயராஜ் இசைக்கு மயங்கினால் நாமும் மயங்குவோம். அதே சமயம் வானொலிகளுக்கு என்று ஒரு ஒழுங்கு அப்போது இருந்தது. காலை நிகழ்வுகளில் அவர்கள் பொதுவாக அண்மைக்காலத்தில் வெளியான பாடல்களை ஒலிபரப்புவார்கள். மதியத்தில் இடைக்காலப் பாடல்கள். இரவு ஒன்பது மணியானால் ரவூப் இனிமையான மெலடியும் கவிதையுமாக உருகுவார். நள்ளிரவில் சில வானொலிகள் குத்துப்பாடல்களை ஒலிக்கவிடும். சில ஏ. எம் ராஜாவைக் கல்லறையிலிருந்து தட்டியெழுப்பித் துயிலாத பெண் ஒன்று கண்டேன் பாடச்சொல்லும். எது எப்படியோ, ஒரே பாடல்களையே நாள் முழுதும் ஒலிபரப்பாமல் பலதரப்பட்ட பாடல்களை வானொலிகள் நமக்கு அறிமுகப்படுத்திக்கொண்டேயிருந்தன. அவற்றை மறுபடியும் மறுபடியும் ஒலிபரப்பி, நம்மை வலுக்கட்டாயமாகக் கேட்கவைத்து, நம் மண்டைக்குள் ஏற்றிக்கொண்டேயிருந்தன. ஒரு தலைமுறையை ஏக சமயத்தில் ஏம். ராஜாவையும் ஏ. ஆர். ரகுமானையும் ரசிக்கவைத்த பெருமை வானொலிகளையே சாரும்.
ஏ ஆர் ரகுமானின் பாடல்களை மெது அமுது என்பார்கள் அல்லவா? எனக்கு இன்னமும் ஞாபகமிருக்கிறது. ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’ பாடல் முதன்முதலில் வானொலியில் ஒலிபரப்பானபோது எனக்குப் பிடிக்கவேயில்லை. அந்த இசையின் ஆழம் பிடிபடவில்லை. படு ஸ்லோவாக அது இருந்தது. இளையராஜாவின் மெலடிகளின் தாளக்கட்டுக்குப் பழகியிருந்த எனக்கு அந்த நத்தை வேகம் சற்றுப் புதிது. ஆனால் திரைகடலாடிவரும் தமிழ் நாதம் என் பேச்சைக் கேட்கவேயில்லை. மே மாதம் வெளியான சமயத்தில் அந்த வானொலி வாரம் இரு தடவைகளாவது அந்தப் பாடலை ஒலிபரப்பிவிடும். அதைவிட என். எஸ். சிவராஜா, இராஜேஸ்வரி சண்முகம் போன்ற இலங்கை வானொலி ஒலிபரப்பாளர்களும் அதனை விட்டுவைக்கவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அந்தப் பாட்டு நாளடைவில் என்னை ஆட்கொள்ளத் தொடங்கியது. ‘இரவைத் திறந்தால் பகலிருக்கும்’ என்று ஜெயச்சந்திரன் அந்த ‘ம்’மிலே போடும் குட்டி சங்கதிகூட மூளைக்குள் ஏறியது. முப்பது, முப்பத்திரண்டு வருடங்கள் கழிந்து, இன்றைக்கு அந்தப் பாடல் கேட்காமல் ஒரு வாரந்தன்னும் எனக்குக் கழிவதில்லை. மனம் கொஞ்சம் அலைக்கழிய ஆரம்பித்தால் தேடிப்போய்க் கேட்கும் பாடல் அது. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் ரகுமானின் அத்தியாயத்துக்குத் தலைப்பே ‘என் மேல் விழுந்த மழைத்துளியே’தான். இத்தனைக்கும் ‘மே மாதம்’ ஒன்றும் பெரும் வெற்றிப்படம் கிடையாது. அதன் இயக்குநர் பிரபலமானவர் கிடையாது. நடிகர்கள் நமக்கு அதிகம் தெரிந்தவர்கள் இல்லை. ரகுமான் பாட்டு வேறு கேட்ட உடனேயே பிடிக்கவும் மாட்டுது. ஆனால் வானொலிகள் நம்மிடம் ‘இல்லை அப்பன், இது நல்ல பாட்டு, தொடர்ந்து கேளு’ என்று அவற்றை ஊட்டிக்கொண்டேயிருந்தன. If you want a friend, then you need to tame them என்று குட்டி இளவரசன் நாவலில் வரும் வரிகள்போல. வானொலிகள் எமக்கு நல்ல பாடல்களை அறிமுகப்படுத்துவதோடு மட்டுமின்றி அவற்றைத் தொடர்ந்து பழக்கப்படுத்திக்கொண்டேயிருந்தன. இலகுவில் புரிந்துகொள்ளக் கடினமான ‘ஸ்டோபெரிப் பெண்ணே’, ‘கையில் மிதக்கும் கனவா நீ’, ஹரிஹரனுடைய ‘நிலா காய்கிறது’ பாடல்களை எல்லாம் மறுபடியும் மறுபடியும் ஒலிக்கவிட்டு அதன் ஆதார சீவனை நமக்கு அவை புரிய வைத்தன. அதனால் ரகுமானின் பரிசோதனை முயற்சிகள் எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக வெகுசன நேயர்கள் மத்தியிலும் உள்வாங்கிக் கொண்டாடப்பட்டன.
இரண்டாயிரத்துப் பத்தாமாண்டளவில் கொஞ்சம் கொஞ்சமாக வானொலிகள் கேட்கும் பழக்கம் அருகிப்போக, ரகுமான் பாடல்கள் முன்னர்போல இல்லை என்ற சலசலப்பும் சேர்ந்து உருவாக ஆரம்பித்தது.
வானொலிகளின் ஆதிக்கம் குறைந்து, நமக்குப் பிடித்த இசையை நினைத்த நேரத்தில் நாமே கேட்டுக்கொள்ளலாம் என்ற நிலை வந்தவுடன் நாம் என்ன செய்தோம்? எமக்கு அதுவரைக்கும் எந்தப் பாடல்கள் எல்லாம் பிடித்திருந்ததோ அவற்றையெல்லாம் மறுபடியும் மறுபடியும் கேட்க ஆரம்பித்தோம். எண்பதுகளில் வெளிவந்த இரண்டாயிரம் இளையராஜா பாடல்களை பிளேலிஸ்டில் போட்டு ஒவ்வொரு நாளும் அவற்றையே கேட்டு மெய் மறந்தோம். பின்னர் அதுகூடத் தேய்ந்து நூறு பாடல்கள் ஆகிவிடும். என் நண்பர் ஒருவர் ‘இராஜ இராஜ சோழன் நான்’ பாடலை எனக்கு ஒவ்வொரு நாளும் வாட்சப்பில் அனுப்புகிறார். ‘நேற்று அனுப்பிய பாட்டுதானே அண்ணே?’ என்றால், ‘இல்லை தம்பி, இன்று கேட்கையில் வேறாக அது இருக்கிறது’ என்று கவித்துவம் பேசுகிறார். இளையராஜாவின் தீவிர இரசிகர்களிடம் போய் ‘பாக்கிறப்போ பாக்கிறப்போ பச்சைப்புள்ளபோல’ என்ற பாடலைத் தெரியுமா என்று கேளுங்கள். விழிப்பார்கள். ‘எங்கே நீ சென்றாலும் அங்கும் எந்தன் இசை இருக்கும்’ என்று இன்னொரு பாடல். பலருக்குத் தெரிந்தேயிருக்காது. காரணம் என்ன? இங்குள்ள பலரும் புதிதாக வரும் ராஜா, ரகுமான் தொகுப்புகளைத் திரும்பத் திரும்பக் கேட்பதில்லை. பழக்கப்படுத்துவதில்லை. இரண்டு தரம் கேட்டுப்பார்ப்பார்கள். மூன்றாவது தடவை பாட்டு நன்றாக இல்லை என்று மறுபடியும் ‘அஞ்சலி அஞ்சலி’க்கும் ‘ஓ பிரியா பிரியா’வுக்கும் ஓடிவிடுவார்கள்.
அதன் விளைவு, ராஜா, ரகுமான் பாடல்கள் முன்னர்போல இல்லை என்பதே.
இல்லையே, புதுப்பாடல்களையும் நாம் கேட்கிறோமோ என்பவர்கள் மனச்சாட்சியைத் தொட்டு தம்மையே கேள்வி கேட்கவேண்டும். ஒரு புதுப்பாடல் எப்படி அவர்களை இந்நாட்களில் வந்தடைகிறது? காணொளிகளினூடாகத்தான் அனேகமான பாடல்களைப் பலரும் கேட்கிறார்கள். ஒன்று தாளம் போட வைக்கும் நடனக்காட்சி நிறைந்த பாடலாக அது இருக்கவேண்டும். அல்லது பிரபல இயக்குநர், நடிகர்களின் படங்களின் இசை வெளியீட்டில் பாடல்கள் அரங்கேறவேண்டும். இல்லையெனில், விஜய் டிவியிலோ சரிகமபதநியிலோ போட்டியாளர்கள் உருகி அழ வேண்டும். இசை காட்சி வடிவமாகிவிட்டதன் வினை இது. இசையைக் காட்சிகளினூடாகவே நாங்கள் அணுக ஆரம்பித்திருக்கிறோம். முத்தமழை பாட்டினை சின்மயி மேடையில் பாடியிராவிட்டால், மூலத்தில் அவரது குரல் இருந்திருந்தாலுமே அது இந்தளவுக்கு இரசிக்கப்பட்டிருக்காது என்பதுதான் கொஞ்சம் கசப்பான உண்மை. ஒரு பாடல் அதனளவில் அதன் இசையின் உச்ச கணங்களுக்காக இரசிக்கப்படாமல் புறத்தே நிகழ்த்தப்படும் கணங்களினால் நம்மை வந்து சேருகிறது.
இதற்கு ஒரு சிறந்த உதாரணம் ‘ஆஹா காதல் கொஞ்சிக் கொஞ்சிப் பேசுதே’ என்ற பாடல். யுவன் இசை. நந்தினி ஶ்ரீகர் பாடியது. நா. முத்துக்குமாரின் வரிகள். இந்தப் பாடல் தமிழில் இதுவரை வெளியாகிய மிகச் சிறந்த பாடல்களுள் ஒன்று என்பேன். ஆனால் படம் அதிகம் பேசப்படாதது, வசந்தின் திரைப்படங்களில் இசை எப்போதும் நன்றாக இருக்கும் என்ற விசயம் புதிய தலைமுறைக்குத் தெரியவராதது, பிரபலங்கள் நடிக்காதது என்ற பல காரணங்களால் அந்தப் பாட்டு பல ரசிகர்களைச் சென்றடையவேயில்லை. ‘பிரிவோம் சந்திப்போம்’ இசைத்தொகுப்பு வித்யாசாகரின் உச்சத் தொகுப்புகளில் ஒன்று. ஆனால் அரிதாகத்தான் கொண்டாடப்பட்டது. சமீபத்திய உதாரணம் இந்தியன் இரண்டாம் பாகத்திலிருக்கும் ‘நீலோற்பம்’ என்ற பாடல். அனிருத்தினுடைய அற்புத மெலடிகளுள் ஒன்று. இராகங்கள் பற்றிய பரிச்சயம் இல்லாதவருக்குக்கூட அது தேஷ் என்று உடனேயே புரிந்துவிடும். அல்லது துன்பம் நேர்கையில் யாழெடுத்து என்று தம்மை அறியாமல் முணுமுணுப்பார்கள். அந்தப் பாட்டை பாடகர்களும் மிகச்சிறப்பாகவே பாடியிருப்பாளர்கள். ஆனால் இந்தியன் படத்தின் தோல்வி. காட்சி ஊடகத்தில் அது வைரல் ஆகாதது போன்ற காரணங்களால் அனிருத்துக்கே இப்படி ஒரு பாடல் இனிப்போடவேண்டுமா என்ற சந்தேகத்தை சூழல் உருவாக்கிவிட்டது. டிராகன் படத்தில் வழித்துணையே என்றொரு பாடல். ரீதிகௌளையின் இன்னொரு அழகு. லியோ ஜேம்ஸின் இசையில் சித் சிறிராம் பாடியது. படத்தின் வெற்றியால் கொஞ்சம் இது கேட்கப்பட்டிருக்கலாம். ஆனால் தேடிப்போய் பிளேலிஸ்டில் அதனை சேர்க்கும் பொறுமை பலரிடம் இல்லை. இந்தப் பாடல்களை எல்லாம் யாராவது இனி விஜய் டிவியில் பாடி அழுதால்தான் உண்டு.
வானொலிகள் இருந்திருந்தால் இந்தப் பாடல்களை தினம் நம்மைக் கேட்க வைத்திருக்கும். இல்லையே, அப்போதும் ஒலிநாடாக்களிலும் இருவட்டுகளிலும் நாமே நமக்குப் பிடித்த பாடல்களைக் கடையில் வாங்கிக்கேட்டோமே என்று சிலர் நினைக்கலாம். உண்மைதான். அப்போதும் மிக அரிதாகத்தான் நமக்குப் பிடித்த பாடல்களைத் தெரிவு செய்து நாங்கள் கேட்டோம். பெரும்பாலும் மொத்த இருவட்டை வாங்கி அப்படியே பிளே பண்ணுவதுண்டு. சவுண்ட் சிஸ்டம் நம்மிலிருந்து தள்ளி இருந்ததும், பாடல்களை ரிவைண்ட், போர்வேர்ட் செய்வது நேரமெடுக்கும் வேலை என்பதும் இன்னொரு காரணம். அதனால்தான் 'புத்தம் புது பூமி வேண்டும்’ பாடலை விருப்போடு ஆரம்பித்து அங்கிருந்து ‘தீ தீ’, ‘ராசாத்தி’, ‘சந்திரலேகா’, ‘வீரபாண்டிக் கோட்டையிலே’ என்று ஒரு இசைக்கோப்பின் அத்தனை பாடல்களும் நமக்குப் பரிச்சயமாகின. ஆனால் இப்போது தெரிவு நம் செல்பேசியிலேயே இருப்பதால் கணத்தில் பாட்டை ஸ்கிப் பண்ணி, ஸ்கிப் பண்ணி ஈற்றில் எப்படியோ காதல் ரோஜாவை நாம் சென்றடைந்துவிடுகிறோம். ஒரு இளையராஜா ரசிகர் காட்டு மல்லியைக் கேட்க ஆரம்பித்தாலும் பத்தாவது நிமிடமே பொத்தி வச்ச மல்லிக்கு ஸ்கிப் ஆகிவிடுவார். விடுதலையிலிருக்கும் அற்புதமான அருட்பெரும்சோதியை பலர் கேட்காமலேயே கடந்துவிடுகிறோம்.
நமக்குப் பிடித்ததை நாமே வாழ்க்கை முழுதும் தெரிவு செய்துகொண்டிருந்தால் இரசனை தேங்கிவிடும். இசை, இலக்கியம், உணவு என எல்லாவற்றுக்கும் இது பொருந்தும். இதனால்தான் பல வீடுகளில் தினமும் புட்டும், இட்லியும் தோசையும் தொடர்ந்து சமைக்கப்படுகின்றன. புதிய உணவுகளையும் ருசிகளையும் நாக்கு அரிதாகத்தான் தேடுகிறது. காரணம் புட்டும், இட்லியும் தோசையும் அம்மா பழக்கியது. அது நம் தெரிவு இல்லை. இப்போது நமக்குத் தெரிவு செய்யும் சூழல் இருந்தாலும் புது உணவுகளைப் பழக்கப்படுத்தும் பொறுமை நமக்கு இல்லை. விளைவு, அதி அற்புதமான இத்தாலிய, தென் கிழக்காசிய, அரேபிய உணவுப் பொக்கிசங்களை ருசித்து மகிழும் அனுபவத்தையே நாம் இழந்துவிடுகிறோம். இசை ரசனையும் அப்படித்தான் ஆகிவிட்டது. இலக்கிய வாசிப்பில் genreகளை மாற்றாவிட்டாலும் அந்தத் தேக்கம் வந்துவிடும். அரசியலில் இவ்வாறான போக்கு, சமூகங்கள் தத்தமது நம்பிக்கைகளில் புதைந்துபோய்க்கிடக்க வழிசமைத்துவிடும். சொல்லப்போனால் நாம் பழகும் நண்பர்கள்கூட காலத்துக்காலம் மாறிக்கொண்டேயிருக்கவேண்டும். நம் கருத்துக்கு மாற்றுக்கருத்து கொண்டவர்களோடு நாம் பேசிக்கொண்டேயிருக்கவேண்டும். எல்லாவற்றையும் வலிந்து பழக்கப்படுத்துவதின்மூலமே சாத்தியப்படுத்தலாம்.
வானொலிகள் இல்லாத இக்காலத்தில் இசை இரசனைகளை இசையைத் தவிர ஏனைய காரணிகளும் தீர்மானித்துவிடுகின்றன. புதிய பாடல்கள் நமக்கு ஏதோ ஒரு வைரல் கணத்துக்கூடாகத்தான் வந்து சேர்கிறது. ‘ஆவாரம் பூ’ இளையராஜாவின் அற்புதமான இசைத்தொகுப்புகளுள் ஒன்று. ஆனாலும் ‘அடுக்கு மல்லி எடுத்து வந்து தொடுத்து வச்ச மாலை’ பாடலை ஒரு போட்டி நிகழ்ச்சியில் நிகழும் மீகணத்தினூடாகத்தான் பலர் சென்றடைகிறார்கள். அப்போதுகூட அதன் மூலப் பாடகர்களின் அற்புத வடிவத்தைக் கொண்டாடாமல் போட்டியாளர்களின் குரல்களையே கொண்டாடுகிறார்கள். ‘உதயா உதயா’ பாடலை பலர் அறிந்துகொண்டதே சுப்பர் சிங்கரினூடாகத்தான். ‘காடு திறந்து’ பாட்டை இசை அமைத்தது பரத்வாஜ் என்பது பலருக்குத் தெரிந்திருக்காது. ஆனால் நிக்கில் மாத்யூ அதனை விஜய் டிவியில் உணர்ச்சிபூர்வமாகப் பாடியது பலருக்கும் ஞாபகம் இருக்கிறது ஒரு நல்ல இசை இன்று பரவலடைவதற்கு ஒரு வைரல் கணம் அவசியமாகிறது. இதில் சரி, தவறு என்று ஒன்றுமில்லை. It is what it is. நாட்டு நாட்டு பாடல் ஒஸ்கார், கோல்டின் குளோப்வரை சென்றுவிட்டது. ஆனால் அதன் ரசிகர்கள் பலரிடம் அந்தப் பாட்டின் சரணம் எப்படி ஆரம்பிக்கும் என்று சும்மா கேட்டுப்பாருங்கள். அந்தப் பாட்டுக்கு சரணம் இருக்கா என்பார்கள்.
ஒரு வைரல் கணத்தினூடாக நம்மை அணுகும் பாடல்களில் தொங்கிக்கொண்டுகூட சில சமயம் நாம் பெரும் பயணங்களைச் செய்யலாம். ‘தக் லைஃப்’ திரைப்படத்தின் ‘ஜிங்குச்சா’ பாடலின் ‘சிக்கிட்டான் சிக்கிட்டான்’ வரிகள் வைரல் ஆனதை அனைவரும் அறிவோம். அந்த வரிகளுக்கு முன்னே வரும் வரியான ‘அடியே, சிங்காரமாய் சிரிப்பை அடக்கும் கள்ளி. என் குளத்தில் மட்டும் மலரும் இந்த அல்லி’யைக் கேட்டுப்பாருங்கள். அந்த வரிகளின் இசையைக் கேட்கும் ரகுமான் இரசிகர்களுக்குக் காவியத் தலைவனில் வரும் ‘ஏய் சண்டிக் குதிரை’ பாட்டு எப்படியும் ஞாபகத்தில் வந்துபோகும். அங்கிருந்து ‘விசுவநாதன் வேலை வேணும்’ பாட்டு ஞாபகம் வரும். அப்படியே திரும்பினால் ராஜாவின் ‘காலம் காலமாக வாழும் காதலுக்கு’ பாட்டுக்குப் போகலாம். அது கேட்டுக்கொண்டிருக்கையில் ஸ்டோபெரிப் பெண்ணேயின் ‘மூக்குதான் கொஞ்சம் பெரிய சைஸ்’ இசை ஞாபகம் வரும். அங்கிருந்து மறுபடியும் சண்டிக் குதிரைக்குத் தாவி ஜிங்குசாவில் வந்திறங்கினால், ‘சிக்கிட்டான் சிக்கிட்டான் சிக்காத காளை’ என்று வைசாலி சாமந்த் பாடிக்கொண்டிருப்பார். அந்த சம்சாரம் சங்கதியில் மெய் மறந்து யாரடா இது என்று தேடினால், fun fact, அலை பாயுதேயின் திருமணப் பாடலான ‘யாரோ யாரோடி’யிலும் அவர் பாடியிருக்கிறார். அப்புறம் யாரோ யாரோடியைக் கேட்பீர்கள். அங்கிருந்து மீட்டாத ஒரு வீணை. பின்னர் சின்னக் கண்ணன் அழைக்கிறான். ஏன் என்று கேட்காதீர்கள். இரண்டையும் கேளுங்கள். புரியும்.
ஒரு சின்ன வைரல் கணத்தை வைத்து இத்தனை தொடர்புகளை ஏற்படுத்தமுடியுமா? அதுதான் இசை நமக்குச் செய்யும் சாலம். ஆனால் இந்தச் சமூக வலைக்குள் சிக்கிக்கிடந்துகொண்டு, பாடல்களைத் தேடி, ஆராய்ந்து, கேட்டுப் பழக்கப்படுத்தாமல், ரகுமான் இசை தொண்ணூறுகளில் இருந்ததைப்போல இப்போது இல்லை என்று சொல்வது சரியல்ல. அதுவும் தன்னைத் தொடர்ச்சியாகப் புதுப்பித்து, இசையில் பரிசோதனைகளை இன்னமும் நிகழ்த்தி வரும் ஒரு இசை இம்மோர்ட்டல் மனுசனைப்போய் அப்படிச் சொல்வது அநியாயம். உண்மை நிலை என்னவென்றால் ‘என் மேல் விழுந்த மழைத்துளி’ இன்றைய சூழலில் வெளியாகியிருந்தால் காணாமல்போயிருக்கும் சந்தர்ப்பமே அதிகம்.
இல்லை, இன்னமும் தொண்ணூறுகளின் தரத்தில் ரகுமான் பாடல்கள் இல்லை என்று நட்டுப் பிடிப்பவர்களுக்கு ஒரு சின்ன லிஸ்ட் தருகிறேன். கடந்த பதினைந்து வருடங்களில் எதேச்சையாக ஞாபகத்துக்கு வரக்கூடிய ரகுமானின் இசைக்கோப்புகள் இவை.
விண்ணைத்தாண்டி வருவாயா, இராவணன், Rockstar, கடல், மரியான், ராஞ்சானா, கோச்சடையான், Hundred foot journey, காவியத்தலைவன், ஓ காதல் கண்மணி, Tamazha, அச்சம் என்பது மடமையடா, காற்று வெளியிடை, மெர்சல், செக்கச்செவந்த வானம், சர்வம் தாள மயம், 99 songs, Atrangi Re, மலையான் குஞ்சு, இரவின் நிழலில், வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், மாமன்னன், ராயன், Thug Life. மூச்சு முட்டுகிறதா?
Hundred Foot Journey இசைக்கோர்வையில் ‘You Complete Me’ என்ற இசையைக் கேட்டுப்பாருங்கள். மூன்று நிமிடங்கள் தொடர்ச்சியாக வாத்திய இசையில் காதலைச் சொல்லி கடைசியில் ஹம்மிங்கோடு தேரபினா சஜுனா என்று ரகுமான் குரல் ஆரம்பிக்கும். Divine.
இளையராஜாவின் ‘பாக்கறப்போ பாக்கறப்போ பச்சைப்புள்ளபோல’ பாடலைக் கேட்டுப்பாருங்கள். அங்கிருந்து சிறைச்சாலையின் ஆலோலங்கிளித் தோப்புக்கும் போகலாம். பின்னர் மறுபடியும் இங்கே சரணத்துக்கு வந்து சேரலாம். அந்தப் பாடலே ஒரு பயணம். Divine.
காழ் என்ற ஒரு திரைப்படத்தில் ‘எனக்குள் மழையாய்’ என்றொரு பாடல். ‘தீரா தீயாய் நெஞ்சை நீ தாக்கினாய்’ என்ற அதன் சரணத்துக்காகவே நூறு முறை அப்பாடலைக் கேட்கலாம். Divine.
குட்டி இளவரசனில் சொன்னதுதான் மறுபடியும் ஞாபகம் வருகிறது.
நீ சாதாரணமானவந்தான். உன்னைப்போல ஆயிரம் பேர் உண்டு. ஆனால் என்னை நீயும் உன்னை நானும் பழக்கப்படுத்திக்கொண்டோமானால் பின்னர் நாம் ஒன்றும் ஆயிரத்தில் ஒருவர் கிடையாது. அப்போது எனக்கு நீ. உனக்கு நான். காதலைப்போல. நம்மைப்போல வேறு ஒரு இணை இருக்கவே முடியாது.
இசையும் அப்படிப்பட்டதுதான். பழக்கப்படுத்திவிட்டோமேயானால் அவை கொடுக்கும் கணங்கள் நமக்கு மட்டுமே பிரத்தியேகமானதாகிவிடும். ஒவ்வொரு பாடலும் நமக்கானதாகத் தோன்றும். இசையமைப்பாளர்கள் சப்த ஸ்வரங்களைப் பிழிந்து மலைமுகடுகளில் கொட்ட, இசை வற்றாத தீரா நதியாக நம்மை வந்தடைந்துகொண்டேயிருக்கும்.
நம் வேலை, பொறுமையாக அதில் மூழ்கி அதன் குளிர்மைக்கும் வெம்மைக்கும் பழக்கப்படுத்திக்கொள்வதுதான்.
*****
Comments
Post a Comment