Skip to main content

அம்மா ஒரு கிரிக்கட் பைத்தியம்



இன்று நேற்று இல்லை. எங்கள் வீட்டில் டிவி வந்த காலத்திலிருந்தே அவர் கிரிக்கட்டை ரசித்துப் பார்ப்பது வீட்டில் சகஜமாக நடக்கும் விசயம். என் ஞாபகமறிந்து இந்தியன் ஆர்மிக்காலத்திலிருந்தே எங்கள் வீட்டில் கிரிக்கட் எப்போதும் டிவியில் போகும். அப்போது அவர் கபில்தேவ், கவாஸ்கரின் தீவிர விசிரி. பின்னர் தொண்ணூறூகளில் சச்சின், கங்குலியின் ரசிகையானார். கங்குலி நூறு அடித்தால் போதும், அடுத்தடுத்து ஸ்பின்னருக்கு வெளிய வந்து அடிக்கும் சிக்ஸர்களுக்கு அம்மாவின்
கண்கள் விரிந்து தயாராகிவிடும். அப்போதெல்லாம் கிரிக்கட் நாட்களில் இன்னிங்ஸ் பிரேக்கின்போதுதான் எங்கள் வீட்டில் புட்டு அவிக்கப்பட்டுவிடும். துணைக்கு எப்போதுமே மத்தியானக் கறிதான். பின்னேரம் அவர் டிவிக்கு முன்னர் ஈசிச்செயாரில் உட்கார்ந்துவிட்டால் மட்ச் முடிந்து பிரசெண்டேசனும் நிகழ்ந்தபின்னர்தான் ரிமோட் மற்றவர் கைக்குப் போகும். அப்படி ஒரு வெறி.

ஆச்சரியம் என்னவென்றால் எப்போதுமே அம்மா பெரிதாக நாடகங்கள் எதையும் பார்த்ததில்லை. இப்போதும் டிவியில் பார்ப்பது யூடியுப்தான். அதுவும் வீட்டுத்தோட்டம் பற்றிய வீடியோக்கள். Jaffna Suthan காட்டுகின்ற மாலைதீவும் டுபாயும். இடைக்கிடை லோஷன் சொல்லும் ஈழத்து நிலவரங்கள். இப்படி யூடியுப் பரிந்துரைப்பதை ரசித்துப்பார்ப்பார். ஆனால் ஒன்று மட்டும் மாறவேயில்லை.
அது இந்தக் கிரிக்கட்.
கிரிக்கட் என்றால் யார் விளையாடுகிறார்கள் என்ற கணக்கில்லை. பிக் பாஷ் பார்ப்பார். அவுஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் பார்ப்பார். பெண்களுடைய கிரிக்கட்டையும் இரசிப்பார். டிவியில் எப்போதெல்லாம் கிரிக்கட் போகிறதோ அப்போதெல்லாம் அதைப் பார்ப்பார். சென்றவாரம் அம்மாவுக்குத் தொலைபேசியில் அழைத்தபோது கொஞ்சம் பதட்டமாக இருந்தார். என்ன பிரச்சனை என்று கேட்டபோது “நீ போனை வை. நான் பிறகு அடிக்கிறன். கோலி வந்திட்டான்” என்றார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவுஸ்திரேலியா இந்தியா தொடரை இங்குள்ள இலவச சானல்களில் பார்க்கமுடியாது. காயோ என்று ஒன்றிருக்கிறது. அதற்குக் காசு கட்டவேண்டும். அது வேலை செய்யக்கூடிய டிவி வேண்டும். அம்மா எப்படி இந்த ஆட்டத்தைப் பார்க்கமுடியும்? கேட்டேன்.
“யூ டியுபில போகுது. ஆக்களை பார்த்தா கார்ட்டூன்மாதிரித்தான் தெரியும். ஆனால் ஸ்கோர் போடுவாங்கள். கொமென்ரியும் கேக்கும்”
பிரமிப்பாக இருந்தது. யூடியூபில் சிலர் அனிமேசன் லைவ்வாக கிரிக்கட்டைப் போடுவதுண்டு. அதனைத்தான் இவ்வளவு உற்சாகமாகப் பார்க்கிறார் என்று தெரிந்தது.
“இதுக்குப் பேசாம காயோ வாங்கலாமே?”
“அதெல்லாம் எனக்குத்தெரியுமா? நீதான் வாங்கித்தரோணும். எவ்வளவு காசெண்டாலும் பரவாயில்லை. நான் தாறன்”
ஆஸ்பத்திரியில் சாகக்கிடக்கும் நோயாளியின் குடும்பத்தினர் வைத்தியரிடம் பேசுவதுபோல அம்மாவின் குரல் கெஞ்சியது.
“சரி நான் வாங்கித்தாறன்”
“ஆ… இப்பவே வாறியா, நான் வேண்டுமென்றால் புட்டு அவிச்சு முட்டை பொரிக்கவா? நீ செட் பண்ணுறதுக்குள்ள சமைச்சிடுவன்”
அம்மாவைப் பற்றிய தகவல்களை உடனேயே இலஞ்ச ஊழல் ஒழிப்புத்துறைக்கு அனுப்பிவைக்கவேண்டும்போலத் தோன்றியது.
“அனே … அது அமேசனில வாங்கோணும். இந்த மட்சு மூண்டு நாளில முடிஞ்சிடும். நான் அடுத்த மட்ச் தொடங்கமுதல் வாங்கித்தாறன்”
அம்மாவின் குரல் தொங்கிவிட்டது.
“சரி அப்ப ஆறுதலா வா. நான் மிச்ச மட்ச் பார்க்கோணும்.”
அவ்வளவுதான். புட்டு, முட்டைப்பொரியல் பற்றி எந்தக் கதையுமில்லை. மனிசி கட் பண்ணீட்டுது.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.