Skip to main content

ஶ்ரீரங்கத்து தேவதைகள்


காலையிலிருந்து “ஶ்ரீரங்கத்து தேவதைகள்” வாசித்துக்கொண்டிருக்கிறேன். முப்பது வருடங்களுக்கு முன்னர் வாசித்த புத்தகம். இப்போது மீண்டும் வாசிக்கையில் கதைகள் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன் என்று தெரிகிறது. ஆனால் அவற்றின் ஆதார விசயங்களை மறக்கவில்லை. இச்சிறுகதைகளின் மூலப் பாத்திரமான ரங்கராஜனின் வயதுதான் அப்போது எனக்கும். கிட்டத்தட்ட அந்தப் பதின்மத்துச் சிறுவனின் குணமும்தான் எனக்கு. எல்லாவற்றிலும் கூர்ந்த அவதானிப்பு இருக்கும். ஆனால் எதனையும்
முன்னின்று செய்வதில்லை. என் கொல்லைப்புறத்துக் காதலிகளில் வருகின்ற பல கதைகளில் வரும் குமரனிடம் ஶ்ரீரங்கத்து தேவதைகளின் ரங்கராஜன் எட்டிப்பார்ப்பது தற்செயல் அல்ல.

கடந்த சில வருடங்களாக தமிழில் வாசித்தவை எல்லாமே மண்டையைக் காயவைக்கும் கதைகளே. ஆங்கிலத்தில் அப்படியல்ல. ஆங்கில இலக்கியத்தில் சமகாலத்தில் மிகவும் கொண்டாடப்படும் கதைகள்கூட எளிமையான வடிவமைப்பையே கொண்டிருப்பவை. மண்டைகாய வைக்கும் கதைகள்வீது விமர்சனம் ஏதும் கிடையாது. கதைக்குத் தேவை. எழுதுகிறார்கள். ஆனால் அதுதான் இலக்கியம் என்றொரு மாயை பொல்லாதது. மனிதர்களுடைய நுண்ணுணர்வுகளை அற்புதமாக விவரிக்கக்கூடிய அலிஸ் மன்றோவின் கதைகள்கூட மிக எளிமையான நடையில்தான் இருப்பதுண்டு. ஶ்ரீரங்கத்து தேவதைகளின் எளிமையும் அதன் ஒருவிதமான சின்னப்பிள்ளைத்தன்மையும் விட்டேற்றிக்குணமும்தான் இன்றைக்கும் அதனை உயிர்ப்பாக வைத்திருக்கிறது என்று நினைக்கிறேன்.
இக் கதைகளில் வருகின்ற “நாம் ஐவர்” சங்கம் பற்றி யோசித்துப்பார்க்கிறேன். நாங்களும் ஒரு நான்கைந்துபேர் இந்த வேலை பார்த்திருக்கிறோம். சுஜாதா சண்முகநாதன் மிஸ்ஸிடம் கிளாஸ் போயிருப்பாரென்றால் அங்கேயே தனியாக ஒரு “குமாரசாமித் தெரு தேவதைகள்” எனப் புத்தகம் போட்டிருப்பார் என்று தோன்றுகிறது. இக்கதைகளில் வருகின்ற பாட்டியும் ரங்கராஜனின் தங்கை வத்சலாவும் அற்புதமான பாத்திரங்கள்.
ஒரு கதையில், கோபாலன் கல்கி இதழுக்குள் அவன் மல்லிகாவுக்கு எழுதிய காதல் கடிதத்தை ஒளித்துவைத்ததை அறியாத ரங்கராஜன் அதனை அப்படியே கொண்டுபோய் மல்லிகாவிடம் கொடுத்துவிட்டான். கடிதத்தை எழுதியது ரங்கராஜன் என்று தவறாக நினைத்து அவள் அவனைத் தந்தையிடம் போட்டுக்கொடுத்துவிட்டாள். தந்தை முறைப்பாடு வைக்க ரங்கராஜனின் பாட்டியிடம் வருகிறார்.
“உங்க பேரன் பண்ணியிருக்கிற காரியத்தைச் சொல்லிவிட்டுப் போகலாம்னு வந்தேன்.”
“என்ன பண்ணிட்டான்? சாதுவாச்சே அவன்?”
“சாதுவா? இத படிங்கோ. லெட்டர் எழுதியிருக்கான். கடுதாசி. என் பொண்ணுக்குக் காதல் கடுதாசி”
“உங்க பொண்ணுன்னா எந்தப்பொண்ணு? மரவை மரவையா வீடு நிறையப் பொண்ணு வெச்சிண்டிருக்கே”
இது சுஜாதா. இப்படி நூறு விசயங்கள் மிக மெலிதான கேலியுமாக ஆழமான அரசியலுமாக நூல் முழுதும் இருக்கிறது. முப்பது வருடங்களுக்கு முன்னர் விளங்காத சில விசயங்கள் இப்போது விளங்குகிறது. அவை எல்லாவற்றையும் தவிர்த்து இப்படியொரு தொகுப்பை இன்று வாசிக்கும்போதும் ரீபிரெஷிங்காக இருக்கிறது. ரீபிரெஷிங்குக்கு ஒரு அழகான தமிழைத் தேடிப்பார்த்தேன். கிடைக்கவில்லை.
சுஜாதாவின்மீதான தமிழ் இலக்கியச் சூழலின் இருட்டடிப்பு கவலைக்கிடமானது. கடந்த முப்பது நாட்கள் சென்னை புத்தகச்சந்தை தன்முனைப்பு ஆரவாரங்களுக்கு நடுவில் சுஜாதா என்ற எழுத்தாளர் சௌகரியமாகக் காணமலாக்கப்பட்டார் என்றே தோன்றுகிறது. அதிலும் நானறிந்து சுஜாதா வாசகராக இருந்த சிலர் இப்போது எழுத்தாளராகி சிறு வெளிச்சம் அடைந்தவுடன் தீடீரென்று சுஜாதாவா, அவள் ஒரு தொடர்கதையில் மிக ஆழமான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார் என்று பேட்டிகொடுக்கும் நிலைக்குப் போய்விட்டார்கள். அப்படியெல்லாம் மிதிக்கத்தேவையில்லை. வாசிப்பின்வழி அவரோடு முரண்படலாம். அவர் எழுதியது பலதை நிராகரிக்கலாம். அதற்காக நகரம் எல்லாம் சிறுகதையே இல்லை என்றால் நரகம்தான் கடைசியில்.
இன்று மெல்பேர்ன் வாசகர் வட்டக்கூட்டத்தில் ஶ்ரீரங்கத்து தேவதைகளை எடுத்துப் பேசுகிறோம். சென்ற முறை செந்தில் ஜெகன்னாதனின் “மழைக்கண்”. ஶ்ரீரங்கத்து தேவதைகளை வாசித்துக்கொண்டிருக்கும்போது சித்திரைத் தெருவுக்குப் பதிலாக பழைய பூங்கா வீதியும் றக்கா ரோட்டும் இங்கிலிஷ் கொன்வெண்ட் அழகிகளும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட் ஆட்டங்களும் என் அம்மா தனக்கென வைத்துக்கொண்ட அறங்களும்தான் ஞாபகம் வருகிறது. சண்முகநாதன் மிஸ் வீட்டு பொமனேரியனை அவருடைய மகள் கூப்பிடும்போது வகுப்பிலிருந்த அத்தனை பெடியளும் இளையராஜா கோரஸ்போல கூட்டுச்சேர்ந்து கூப்பிட்டது ஞாபகம் வருகிறது. றக்கா றோட்டுக் கோகிலவாணிக்கு ஜூட் அண்ணா வயசுப் பெடியள்முதல் எனக்கு இரண்டு வயது இளையவர்கள்வரை வட்டம்போட்டது ஞாபகம் வருகிறது. கோகிலவாணிக்கு ரஞ்சன் கொடுத்த கடிதத்தை அவள் கலட்டிச் சந்தியில் வைத்துக் கிழித்துப்போட்டதும் அந்த சம்பவத்தைக் கொண்டாடும்முகமாக நான் நண்பர்கள் அனைவருக்கும் ஐந்து ரூபாய்க்குக் கச்சான் பக்கெற் வாங்கிக்கொடுத்ததும் ஞாபகம் வருகிறது. இத்தனைக்கும் ராதிகாவுக்கு நான் யார் என்றுகூடத் தெரியாது. ஆனால் ரஞ்சனை அவள் கிழித்துப்போட்டாள். அதுதான் முக்கியம். அந்த ராதிகா ஈற்றில் யாரைத் திருமணம் முடித்தாள் என்றும் இப்போது அவள் நிலை என்ன என்றும் இரண்டு மணிநேரமாக கௌரியோடு பேசிக்கொண்டிருக்கையில் ஜீவியும் மதியும் நம்மை முறைத்துப்பார்த்ததும் ஞாபகம் வருகிறது.
இதை எழுதுகையில் வரிக்கொருதரம் வந்த, அவள் பெயர் கோகிலவாணியா ராதிகாவா என்ற ஞாபகக் குழப்பம் எனக்கு வயது நாற்பத்து மூன்று ஆகிவிட்டது என்கிறது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக