Skip to main content

அப்பித் கொட்டியாதமாய்


ரசங்கவை நான் கடைசியாகக் கொழும்பில்தான் பார்த்ததாக ஞாபகம். இருபது வருடங்களுக்கு முன்னர். அவன் இலண்டன் செல்லப்போவதாகச் சொன்னதும் அலுவலகத்தில் எல்லோரும் அவனுக்குப் பிரியாவிடை விருந்து ஒன்று கொடுத்தோம். பணம் சேகரித்து சில பரிசுகளும் வாங்கி வழங்கினோம். அதன் பிறகு நானும் இலண்டனுக்குப் புலம் பெயர்ந்திருந்தாலும் இருவருக்குமிடையே தொடர்புகள் ஏதும் இருக்கவில்லை. இரண்டாயிரத்து ஒன்பதில் என்னை அவன் தீவிரவாதத்துக்குத் துணை போவதாகக் குற்றம் சாட்டியிருந்தான். நான் பதிலுக்கு அவனையும் ஒரு அரச தீவிரவாதி என்றேன். ஒடுக்கப்பட்ட கூட்டத்திலிருந்து உருவாகும் தீவிரவாதியைவிட அதிகாரத்திலிருக்கும் தீவிரவாதியே ஆபத்தானவர் என்று நான் பதில் சொல்லியிருந்தேன். இருவருக்கும் சண்டை. அவன் என்னை நட்பு விலக்கினானா அல்லது நான் அவனை நட்பு விலக்கினானா என்று தெரியவில்லை. அவன் என் பெயரைக் கொடுத்திருப்பானோ என்ற பயத்தில் அடுத்த ஐந்து வருடங்கள் நான் ஊர்ப்பக்கம் தலைவைத்துப் படுக்கவில்லை. ஆனாலும் லின்க்ட் இன்னில் அவனின் நடவடிக்கைகளை அடிக்கடி கவனிப்பேன். ராஜபக்ச சகோதரர்களின் தீவிர ஆதரவாளன் அவன். நாட்டின்மீது அதீத பற்றும் கொண்டவன். ஒருமுறை சுப்பர் மார்க்கட் கார்ப்பார்க்கில் புலிக்கொடி ஸ்டிக்கர் ஒட்டியிருந்த கார் ஒன்றின் பெயிண்டை கல்லால் கீறி நாசமாக்கியதை பெருமையாக இன்ஸ்டகிராமில் பகிர்ந்துமிருந்தான்.

நேற்றைய தினம் ரசங்க எனக்கு பேஸ்புக்கில் நட்பு அழைப்பு விடுத்திருந்தான். மெசஞ்சரில் ‘ஹாய்’ சொன்னேன். ‘எப்படி இருக்கிறாய் மசான்?' என்றேன்.
“நாட்டின் நிலைமைகளைக் கவனிக்கிறாயா?”, என்றான்.
“கவனிக்கிறேன். பொரிஸ் ஜோன்சன் என்ற அரை விசரனிடம் நாமெல்லோரும் சிக்கிவிட்டோம்” என்றேன்.
“அட நான் இங்கிலாந்தைப் பற்றிப் பேசவில்லை. இலங்கையைப் பற்றிக் கேட்கிறேன்”
“ம்ம்ம் நிலைமை மோசமாகத்தான் இருக்கிறது, போராட்டம் வன்முறையில் முடிந்ததைக் கவனித்தேன்”
“மெய்தான், போராடிய மக்களை வேறு தீவிரவாதிகள் என்று ஒரு இராணுவ அதிகாரி சொல்லிவிட்டான்”
“அப்படியா?”
“இப்படித்தானே முன்னரும் போராடிய தமிழர்களையும் முஸ்லிம்களையும் தீவிரவாதிகள் என்று சொல்லியிருப்பார்கள். அதை மடத்தனமாக நானும் நம்பிவிட்டேன் மசான்”
எனக்குத் தூக்கிவாரிப்போட்டது.
“என்னடா சொல்கிறாய்? எங்காவது மனுசன் நடாமல் தானாகவே வளர்ந்த அரச மரத்தடியில் உட்கார்ந்து விட்டாயா?”
“பகடி விடாதே, அதென்ன பார்த்தீனியமா தானா வளர்வதற்கு? இதே அரச ஊடகத்துறைதானே முன்னரும் இருந்தது? இதே அரசாங்கம்தானே. தீவிரவாதிகள் என்பதற்கான வரைவிலக்கணம் அவர்களுடையதுதானே?”
அவன் கொஞ்சம் லொஜிக்காகப் பேசுகிறான் என்று புரிந்தது.
“இப்போதாவது உனக்கு விளங்கியதே … சந்தோசம். இப்போது என்னிடம் என்ன எதிர்பார்க்கிறாய்?”
“ஒன்றுமில்லை … நாமெல்லாம் கூட்டாக ஒன்றிணைந்து எங்கள் நாட்டை மீட்க போராடவேண்டும்”
“ஓகே….” என்று இழுத்தேன்.
“தெரியும், நீ என்னை சந்தேகமாகத்தான் பார்ப்பாய். என்னை நீ நம்ப வேண்டும் என்று நான் எதிர்பாக்கவில்லை. நம்பவும் வேண்டாம். ஆனால் நாங்கள் ஒன்றாகப் போராடுவோம்”
“எதுக்காக?”
“இந்த நாட்டின் தேசியப் பிரச்சனைகளைத் தீர்க்கவேண்டும் என்று”
“தேசியப் பிரச்சனைகளா? பொருளாதார பிரச்சனையைச் சொல்கிறாயா?”
“இல்லை … யோசித்துப்பார்த்தேன். நாங்கள் அடிப்படையிலேயே மாற வேண்டும். நாட்டின் இனங்களுக்கு என்று தனித்தனி இயல்புகள் இருக்கும்போது வெறும் ஒற்றையாட்சியையும் ஒற்றை மதத்தையும் கட்டிப்பிடித்துப் பிரயோசனம் இல்லை. இங்கே அதிகாரங்கள் பரவலாக்கம் செய்யவேண்டும். பல மேலை நாடுகளைப்போல. சமஷ்டிதான் ஒரே வழி. வடக்கு கிழக்கு, தென் கிழக்கு, மலையகம் என எந்த அளவுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யமுடியுமோ அந்த அளவுக்கு. அவரவர் மொழி, கலாசாரம், பொருளாதாரத்தை அவரவரே கட்டியமைக்கட்டும். முடியாதபோது அருகிலிருக்கும் மாநிலங்களோடோ, மத்திய அரசோடோ ஒன்றிணைந்துகொள்ளட்டும். அதுதானே முக்கியம்? முழு நாட்டின் அதிகாரமும் ஒரு குடும்பத்திடமும் எங்கள் ஆமத்துறுக்களிடமும் இருந்தது போதும். அதனாற்றான் நாடு குட்டிச்சுவர் ஆகிவிட்டது”
“என்னடா சொல்கிறாய்?”
“யோசித்துப்பார். சனநாயகம் தழைத்தோங்கும் நாடுகளின் அரசியலைக் கவனி. அங்கே அதிகாரங்கள் பரவலாக்கப்பட்டிருக்கின்றன. அங்கே அரசியல் கட்சிகளுக்கு மத, இன அடையாளங்கள் இல்லை. இடது, வலது, தீவிர வலது, தீவிர இடது என்ற கொள்கை சார்ந்த கட்சிகளே இங்கிருக்கின்றன. அவர்கள் பேசுவதும் கொள்கைகள் சார்ந்த விசயங்கள்தான். அத்தோடு சுயாதீன காவல்துறை, சுயாதீன ஊடகம், சுயாதீன நீதிக்கட்டமைப்பு, சுயாதீன கஜானா, அவ்வப்போது இந்த அமைப்புகள் தளம்பினாலும் அவற்றின் அடிப்படை மாறாமல்தான் இருக்கிறது? என்ன சொல்கிறாய்?”
“என்ன சொல்வதா? நான் என்னைக் கிள்ளிப்பார்த்துக்கொண்டேன் அவ்வளவுதான்”
“நான் மாறிவிட்டேன் மசான். நீயும் கிளம்பு. நாங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம். எங்கிருந்து ஆரம்பிக்கவேண்டும் என்று சொல்லு. தமிழ் முஸ்லிம் மக்கள்மீது காலம் காலமாக ஏவப்பட்ட கொடுமைகளை நாம் சத்தமாகக் கூவிச்சொல்வோம். மக்கள் ஏமாற்றப்பட்டதை வரிசைப்படுத்துவோம். நாற்பதினாயிரம் மக்களை நாம் கொன்றோம் என்றாயல்லவா? அந்த இன அழிப்பையும் யுத்தக் குற்றத்தையும் விசாரணை செய்யவேண்டும் என்று சூழுரைப்போம். குறை நினைக்காதே. புலிகள் செய்த கொடுமைகளையும் பேசத்தான் வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட மக்களின் உறவினர்களின் போராட்டத்தையும் சேர்ந்து முன்னெடுப்போம். இராணுவம் அபகரித்த காணிகளை மக்களிடமே மீளக்கொடுக்குமாறு குரல் கொடுப்போம். திடீரென்று முளைக்கும் அரச மரங்களையும் அவை காய்த்துக்கொட்டும் புத்தர் சிலைகளையும் அகற்றச் சொல்லுவோம். முஸ்லிம்களை எதிரிகளாக எண்ணி அவர்களை சொந்த இடத்திலிருந்து புலிகள் துரத்தியதையும் அதனை கண்டும் காணாமல் விட்ட தமிழர்களையும் கண்டிப்போம். அம்மக்களை நம் அரசியல் இலாபங்களுக்காகப் பயன்படுத்திவிட்டு பின்னர் அவர்களையே ஒடுக்கி தீவிரவாதப் பட்டம் சூட்டி ஆட்சிக்கு வந்த அவலத்தையும் சொல்லி நிற்போம். அம்மக்களுக்கு என்ன வேண்டும் என்பதை அவர்களே தீர்மானிக்க இடம் கொடுப்போம். மலையக மக்களின் பிரச்சனைகளையும் அவ்வாறே தீர்க்கவேண்டும். நாங்கள் ஆரடா எல்லோருடைய பிரச்சனைகளையும் முன்முடிவு செய்து தீர்ப்பதற்கு? அதையதை அவர்களே செய்தல் வேண்டும். இவற்றுக்கெல்லாம் நீங்கள் குரல் கொடுத்தபோது நாங்கள் அமைதியாக இருந்தது தவறுதான். இப்போது முழு நாடுமே இதற்காகக் கூடிக் குரல் கொடுப்போம்”
“அப்புறம்?”
“அப்புறமென்ன, இந்த அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பி, தகுதியானவர்களை ஆளவைத்து நாட்டின் அரசியல் பொருளாதார சிக்கல்களைக் களைந்துவிடுவோம். என்ன சொல்கிறாய்? வருகிறாயா?”
“வருவதென்ன…. வந்து குரல் கிழியக்கத்தவும் தயார். என்ன ஒன்று நீ கடைசியாகச் சொன்னது நிகழ்ந்து முடிந்தவுடன் முந்தைய பந்திகளை அப்படியே அழித்துவிடுவாயோ என்று சந்தேகமாக இருக்கிறது”
“நீ சந்தேகப்படுவதிலும் உண்மை உண்டுதான் நண்பா. காலம் காலமாக நாம் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றில் பறந்துபோனதை அறிவோம். ஆனால் இம்முறை எம்மை நம்பு. நீ முதலில் இலங்கைக் கொடியை அந்த புரபைலில் போடு. நம்பிக்கைதானே வாழ்க்கை. மாலை ஆர்ப்பாட்டத்துக்கும் வா. குளிரும். ஜாக்கட் கொண்டுவா.”
“ஓகே ராசா… நான் ஆர்ப்பாட்டத்துக்கு நகர மையத்துக்கு வருகிறேன். எனக்கொரு இலங்கைக்கொடி கொண்டுவருவாயா?”
“என்ன மயிருக்கு இலங்கைக்கொடி உனக்கு? நீ புலிக்கொடி இருந்தால் கொண்டுவா. வெளியில் பயத்தில் சொல்லாவிடினும் உனக்கு அக்கொடியில் அதீத பற்று இருக்கிறதல்லவா?”
“இல்லை ராசா, அதனைக் கண்டால் பல குரூப்புகளுக்கு இங்கு அலர்ஜி. புலிகள் மக்களைக் கொடுமைப்படுத்தினார்கள், நடுவுநிலைமை புலி எதிர்ப்பு என்று ஆரம்பித்துவிடுவார்கள். அக்கொடி அரை நூற்றாண்டின் ஒடுக்குமுறைக்கு எதிராக திரண்ட ஒரு இனத்தின் அடையாளக் கொடி என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அந்தக் கொடியைப் பிடிப்பதாலேயே தமிழர் தரப்பு நிகழ்த்திய கொடுமைகளை நான் ஏற்றுக்கொள்கிறோம் என்கின்ற அர்த்தமில்லை என்றாலும் நம்பமாட்டார்கள். நம் எளிமையான உரையாடலை தீவிரமாக ஆய்ந்து எதிர்வினை செய்வார்கள். தீவிரவாதிகளை ஆதரிக்கிறோம் என்று சொல்லி உள்ளே போட்டுவிடுவார்கள். ஊருக்குத் திரும்பமுடியாது நண்பா.”
“அதையும் பார்த்துவிடுவோம். சிங்கக்கொடி பிடிப்பதைவிட புலிக்கொடி பிடிப்பது அத்தனை மோசமில்லை மசான். ஒன்று செய்யலாம். நீங்கள் எல்லோரும் சிங்கக்கொடியைப் பிடியுங்கள். நாங்கள் சிங்களவர்கள் புலிக்கொடியை ஏந்துகிறோம். அப்புறம் என்ன செய்வார்கள்? எம்மையும் புலிகள் என்று சொல்வார்களா? சொல்லட்டுமே... அப்பித் கொட்டியாதமாய். பண்ணுறதை பண்ணுங்கடா.”
"வேண்டாமடா டேய். இதெல்லாம் ஓவராத் தெரியேல்லையா?"
"நீ சும்மா இரு. பொட்டக் இன்ன"
சொல்லியபடியே மூதேசி தனது புரபைலில் இருந்த சிங்கக்கொடியை அகற்றிவிட்டு புலிக்கொடியை மாற்றிவிட்டது. பின்னர் அடுத்த நிமிடம் இரண்டு கொடிகளையும் சேர்த்துப்போட்டுக்கொண்டது.
“யார் பெத்த பிள்ளையோ?”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக