Skip to main content

தோழர் நேசமணி



சற்றுமுன்னர்தான் நண்பர் கிருஷ்ணமூர்த்தியுடன் தொடர்புகொண்டு பேசினேன். தோழர் நேசமணி அபாயக்கட்டத்தைத் தாண்டிவிட்டதாகவும் மிகுந்த உற்சாக மனநிலையுடன் இருப்பதாகவும் கூறினார். தோழரோடு பேசப்போகிறீர்களா என்றும் கேட்டார். ஏதோ ஒன்று தடுத்தது. பின்னர் பார்க்கலாம் என்று சொல்லிவிட்டேன்.

நேற்றுத் தகவல் அறிந்தமுதல் எனக்குத் தோழர் நேசமணியின் ஞாபகமாகவே இருந்தது. பிரான்சில் இருக்கும் எம்முடைய இயக்கத்தோழரோடு அழைப்பெடுத்துப் பேசியபோது கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. இருவரும் தோழர் நேசமணியோடு பழகித்திரிந்த, கதைகள் பல பறைந்த அந்தக் காலத்தை நினைவு கூர்ந்தோம். காலமும் தூரமும் நம் உறவுகளை பிரித்தே வைத்திருந்தாலும் அனிச்சைகளால் நாங்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருந்திருக்கிறோம் என்று தோன்றுகிறது.

எண்பத்தாறில் நாங்கள் அண்ணா நகரில் குடியிருந்தசமயத்தில்தான் தோழர் நேசமணியுடனான பழக்கம் ஆரம்பித்தது என்று நினைக்கிறேன். அப்போது நாங்கள் மேல் மாடியிலே தங்கியிருந்தோம். லெனின் வழியிலான மார்க்சியத்தில் நாங்கள் அதிக நம்பிக்கை கொண்டிருந்த காலம் அது. ஏராளமான தமிழக தோழர்களும் அவ்வப்போது எங்கள் மாடிக்கு வந்து இணை முரணியல் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். இந்தச்சமயம்தான் கீழ்வீட்டில் குடியிருந்த அபிராமிக்குத் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டது. திருமணத்துக்காக வீட்டினை செப்பனிடும் பணியைக் கொன்றாக்ட் எடுத்துச் செய்யவந்தவர்தான் தோழர் நேசமணி.

வீட்டில் வேலை ஆரம்பித்து சில நாள்களிலேயே தோழரோடு எமக்கு நெருங்கிய நட்பு ஆகிவிட்டிருந்தது. நேசமணி ஒரு தேர்ந்த வாசகர். மார்க்ஸிய இலக்கியங்கள் மாத்திரமல்லாது பெரியார், ஆடம் ஸ்மித், அயன் ராண்ட் என்று அவர் அத்தனைபேரையும் வாசித்து உள்வாங்கியிருந்தார். அரசு இயந்திரத்தின் அதிகாரத்தை தனிநபராக எதிர்ப்பதன் அடையாளமாக அவர் தனது சர்க்கார் உத்தியோகத்தை உதறித்தள்ளியிருந்தார். முதலாளித்துவத்தின்மீதான எதிர்ப்பைப் பதிவுசெய்யும் முகமாக தனியார் வேலைகளையும் அவர் நிராகரித்தார். மதம், அரசியல் என்று சாத்தியமான அத்தனை அதிகாரப்புள்ளிகளின்மீதும் தோழர் தன் எதிர்ப்பைத் தனிநபராகவே பதிவு செய்தார். இடையில் ‘திராவிடத் தேசியத்தில் நவீன மார்க்ஸியம்’ என்று ஒரு புத்தகத்தை வெளியிட்டார். வயிற்றுக்கு ஈயவேண்டும் என்பதற்காகவே தனது கட்டட கொன்றாக்ட் வேலையையும் அவர் செய்துகொண்டிருந்தார். அப்போதுகூட வேலையில்லாமல் திரிந்த பல இளைஞர்களை அவர் தன்னோடு சேர்த்துக்கொண்டார். அதனால் அவர் போகும் இடங்களிலெல்லாம் பட்ட துன்பங்களை வைத்து ஒரு திரைப்படமே எடுத்துமுடிக்கலாம். இப்படிப்பட்ட தோழர் நேசமணியோடு எமக்கு உடனேயே நட்பு ஏற்பட்டது அவ்வளவு ஆச்சரியமில்லை. அக்காலங்களில் எமக்கு சுருட்டும் விஸ்கியும் வாங்கிக்கொண்டுவந்து கொடுப்பதும் அவரே. இலங்கை வங்கி சுன்னாகக் கிளை கொள்ளையடிப்பு வழக்கில் நாங்கள் அப்போது சிங்களப் பேரினவாத அரசால் தேடப்பட்டுக்கொண்டிருந்தோம். இந்த விடயத்தை நாங்கள் தயங்கியபடி சொன்னபோது தோழர் எம்மை ஆரத் தழுவிக்கொண்டார். பேரினவாத மய்ய அரசுக்கு நாம் வைத்த மிகப்பெரிய ஆணி என்று அவர் எம்மை சிலாகித்தார். நீங்கள் தேவையான ஆணிகளை மாத்திரமே பிடுங்கியிருக்கிறீர்கள் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். தன்னுடைய அப்பிரசிண்டுகளை வைத்து அரசு இயந்திரத்தின் ஒரு நட்டைக்கூடத் தன்னால் திருடமுடியாது என்று கவலைப்பட்டார்.

பின்னர் நான் கீழ்வீட்டு அபிராமையை திருமணத்துக்கு முன்னமேயே இழுத்துக்கொண்டு மலாவிப்பக்கமாகச் சென்று பின்னர் கனடாவில் போய் செட்டிலாகிவிட்டேன். அதன்பின்னர் தோழர் நேசமணியுடன் பெரிதாக தொடர்பேதும் இருக்கவில்லை. இடையில் என்னுடைய ஒரு கவிதைநூலை இந்தியாவில் வெளியிட்டு பிரபலப்படுத்தவேண்டும் என்று ஒருமுறை தொலைபேசியில் அழைத்துக் கேட்டபோது நேசமணி மிகக்கோபத்துடன் என்னைத் திட்டினார். நீ பிடுங்குவது எல்லாமே தேவையில்லாத ஆணிகள்தான் என்றார். இலக்கியத்தின் அகத்தேடலை கம்யூனிஸ்டுகள் புரிந்துகொள்வதேயில்லை என்று அன்றைக்கு நான் அபிராமியிடம் சொல்லிக் கவலைப்பட்டேன்.

தோழர் நேசமணி நலம்பெறுவது இன்றைய காலத்தின் ஒரு கட்டாயமாகும். அவர் மீண்டு வந்து மதமும் முதலாளித்துவமும் கோலோச்சும் இன்றைய அகன்ற பாரதத்தை தனது வலிமையான கோசங்களால் முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

Get well soon comrade.


Comments

Post a Comment

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?