Skip to main content

“சின்ன குயிலின் சோகம்!”


220px-Kschithraஅலுவலகம் முடிந்து ரயில் நிலையம் நோக்கி நடந்துகொண்டு இருக்கிறேன். ஐபாடில் சதிலீலாவதி படத்தின் “மாருகோ மாருகோ” பாடல். கமலின் கமகம்களை கேட்டபோது மெல்லிய புன்னகை என்னையறியாமல் வந்தது. நடந்து கொண்டிருந்த இடம் மெல்பேர்ன் நகரத்து யாரா(Yarra) நதியின் குறுக்கு பாலம். பாலத்தின் விளிம்பு தடுப்பில் உட்கார்ந்திருந்த வெள்ளை புறாக்களை ஒரு குட்டிப்பொண்ணு துரத்தி விளையாடிக்கொண்டு இருந்தது. அவள் தாய், தன் பருமனான உடலை தூக்கிக்கொண்டு, “Careful honey .. careful” என்று பொண்ணை அதட்டிக்கொண்டு பின்னாலேயே ஓட, அந்த சுட்டியோ சட்டை செய்யாமல் குறுக்கும் நெடுக்குமாய் ஓடியது. தாயும் சளைக்கவில்லை!

“பொன்மேனி உருகுதே” என்ற இடம் வருகிறது. சித்ராவின் ஆலாப்பு. பாடல் முழுதும் ஒருவித கோவைகுசும்பு  குழைந்த குரலில் பாடியவர் சட்டென சாஸ்திரிய சாயலுக்கு மாறி சித்ரா தான் பாடுகிறேன் என்று கோடி காட்டுகிறார். இந்த சறுக்கலை எப்படி இளையராஜா அனுமதித்தார்? என்று நினைத்துக்கொண்டே இருக்கும் போது, அந்த தாயின் கையில் பொண்ணு அகப்பட திடுக்கிட்டேன். அந்த இடத்தில் சித்ராவும் அவர் மகள் நந்தனாவும் ஓடி விளையாடுவது போல கற்பனை வர, தாங்க முடியாமல் ஐபாடை நிறுத்திவிட்டு அந்த சின்ன பொண்ணையே வெறித்து பார்த்துக்கொண்டு நின்றேன். ஒரு தாய்க்கு இதை விட வலி வேண்டாம்.



உலகம் தான் மாறுமே
உறவுகள் வாழுமே
கடலை விடவும் ஆழம்
என் தன் கண்ணீர் துளிகளே




நந்தனா பிறந்த போது நானும் அக்காவும் பேசிக்கொண்டது ஞாபகம் வருகிறது. தவமிருந்து பெற்றபிள்ளை. சித்ரா எங்கு போனாலும் பொண்ணை கூட்டிக்கொண்டே போவார். அப்போதெல்லாம் நந்தனாவை குறிப்பிடாமல் எந்த ஒரு சித்ராவின் பேட்டியும் இருக்காது. அத்தனை பாசம்.  இந்த அழகு நிலவே பாடலில் கூட அந்த தாயின் ஏக்கம் நிறைந்து வழியும். இதைக்கேட்டு கண்கலங்காமலும் இருக்க முடியுமா? இதற்கு மேலும் அந்த குழந்தையையும் தாயையும் பார்க்க தைரியமின்றி பாடலையும் மாற்றிவிட்டு நானும் இடம் மாறுகிறேன்..

என்ன பாடல் அடுத்தது என்று ஸ்கிப் ஆகி ஸ்கிப் ஆகி எதிலும் மனம் லயிக்காமல் இந்த பாட்டில் வந்து நின்றது. முதலில் வந்தது யேசுதாஸ் பாடல் தான், ஸ்கிப் ஆகி சித்ராவின் பாட்டுக்கு தாவினேன்.

தென்றல் என் வாசல் தீண்டவே இல்லை கண்ணில் வெந்நீரை வார்ப்பேன்
கண்களும்ம் ஓய்தது ஜீவனும் தேய்ந்தது
ஜீவ தீபங்கள் ஓயும் நேரம் நீயும் நெய்யாக வந்தாய்
இந்த கண்ணீரில் சோகம் இல்லை இந்த ஆனந்தம் தந்தாய்


 
 
இந்த பாடலை எல்லாம் சித்ரா அடுத்த சில வருஷங்களுக்கு கேட்காமல் இருப்பது அவருக்கு நல்லது. எங்களாலேயே கேட்க தாளவில்லை. அந்த சின்ன வயதிலேயே இத்தனை கனமான பாடல் பாடி இருக்கிறார். பாடறியேன் பாடிவிடலாம். நானொரு சிந்து தான் கடினம். அதை போல தான் இதுவும்.  அத்தனை உணர்ச்சிகள் கொட்டி கிடக்கிறதே.
இந்த பொன்மானை பார்த்துக்கொண்டே ..
சென்று நான் சேர வெண்டும்
மீண்டும் ஜென்மங்கள் மாறும்போது,
நீ என் மகளாக வேண்டும்.
பாச ராகங்கள் பாட வேண்டும்..
 
இந்த ஜென்மத்திலேயே அந்த சந்தர்ப்பம் வாய்த்ததே! ஆனால் கை நழுவிவிட்டது. கடவுள் சிலவேளை உண்மையிலேயே இருக்கிறானோ? என்ற நம்பிக்கை துளிர்விடும் போதெல்லாம் இல்லவே இல்லை என்று அடித்துக்கூற இப்படி பல சம்பவங்கள் நடைபெறும். அட அப்படியே இருந்தாலும் அவனால் ஒன்றுமே புடுங்க முடியாது என்று அவனே நிரூபிக்கும் தருணங்கள் இவை. ஆனாலும் எமக்கு வேறு வழியில்லை.  மீண்டும் மீண்டும் ஏதும் செய்வான் என்று நம்பிக்கொண்டு பூச்சொரிய வேண்டியது தான். இது தெரிந்து தான் பூக்கள் எல்லாம் ஒரே நாளிலே அழுகி விடுகின்றனவோ தெரியவில்லை!
 
அப்படியே சமகாலத்து பொம்முக்குட்டி அம்மாவுக்கு படம் ஞாபகம் வந்தது. இந்த பாடல் ..

இந்த ராஜா இருக்கிறாரே. சிலவேளை ஏன் தமிழனாக பிறந்தோம்? என்று நொந்து போக வைப்பார். அப்படி பிறந்து இருக்காவிடில் இந்த மாதிரி பாடலை எல்லாம் கேட்டிருக்கவேண்டி வந்திருக்காது. நானும் எம்பாட்டுக்கு நானுண்டு என் வேலையுண்டு என்று இருந்திருப்பேன். இராட்சசன் இப்படி பாடல்களை எல்லாம் போட்டு நம் தூக்கத்தை தொலைப்பார்.  சரணத்தில் வரும் மெட்டு. ஐயோ .. இந்த கொலைக்கெல்லாம் சட்டத்தில் தண்டனை இல்லையா?

நல்லோர்கள் உன்னைப் பாராட்ட வேண்டும்
நலமாக நூறாண்டு நீ வாழவேண்டும்
காவியம் பேசும் பூ முகம் பார்த்தால்
ஓவியம் கூட நாணுமே

பிறகு அந்த பொண்ணை கொன்றுவிட்டு ஒரு காட்சி. அந்த தாய் படும் அவஸ்தை. அதற்கு ராஜாவின் ஈவிரக்கமற்ற இசையை கேளுங்கள்..

 
 
 
 
என்னடா இது, இனி பாடலே வேண்டாம் என்று முடிவெடுத்த போது அடுத்த பாடல் மாறியது. இன்றைக்கு எனக்கு சந்திராஷ்டமி தான் போல..
 
தேவேந்திரனின் “வேதம் புதிது” பாடல். இது கொஞ்சம் வித்தியாசமான பாடல். படம் பார்த்தவருக்கு இந்த பாடல் அடி மனதை ஒரு அருட்டு அருட்டும். பாடும் பெண், பிரிந்த காதலன் இன்று வருகிறான் என்று பாடும் பாடல். சித்ரா பாடும் போது காதலனின் முடிவு தெரிந்து பாடுவதால், பாட்டில் ஒரு மெல்லிய சோகம் புலப்படும். தேவேந்திரன் ஒரு தேர்ந்த இசையமைப்பாளர், தெரிந்தே அந்த சரணத்து இசையை மீட்டி இருக்கிறார்! சரணத்தில் மேல்ஸ்த்தாயி எட்டும் போது ஒரு ஏக்கம் பயம் எல்லாமே வெளிப்படும். தேவனே என்று சொல்லும் இடத்தில் சின்ன அயர்ச்சி கூட குரலில் வெளிப்படும். தெரிந்தே செய்யும் ஜாலங்கள் இவை.  பாடலின் இசை கோர்ப்பு,  முதலாவது interlude இசையில், கிட்டார் வயலின் கோர்த்த பின் ஒரு அரை வினாடி நிசப்தம், பின் புல்லாங்குழல் தபெலாவுடன் ஆரம்பிக்கும். அது ராஜா செய்யும் ஜாலம் இல்லையா? தேவேந்திரன் நிச்சயம் ராஜாவின் அதி தீவிர ரசிகனாக இருக்க வேண்டும்!
 
அடுத்து என்ன பாடல் என்ற போது எனக்கு இப்போது மனதிலே பல ஞாபகங்கள். மனம் தானாகவே “எங்கே எனது கவிதைக்கு” தாவியது. சிலவேளை எம் சோகத்தை மற்றவர் சோகத்தில் கண்டு கொண்டாடுவோம் இல்லையா? சோகத்தை எல்லாம் கொண்டாடுவதா? இல்லை அனுஷ்டிப்பதா?
 
ரகுமானும், சித்ராவும் வைரமுத்துவும் கொண்டாடுகிறார்கள். இந்த பாடலை முதலில் வேறு ஒருவர் தான் பாடுவதாக இருந்ததாம்(மூலம்: அப்துல் ஹமீது), ஆனால் பாட்டில் அந்த உணர்வு கொண்டு வர முடியாததால் சித்ராவையே பாட வைத்தார்களாம். அவர் தான் first choice ஆக இருந்திருக்க வேண்டியது. ஆனால் நான் நினைக்கிறேன் ஏற்கனவே “கண்ணாமூச்சி ஏனடா” தனி மற்றும் டூயட் பாடல்களை கொடுத்துவிட்டதால் ரகுமான் முதலில் தயங்கி இருக்கலாம். ஆனால் வேறு யாரால் இந்த வலியை உணர்ந்து பாட முடியும்? அப்போது ஸ்ரேயா கோஷலும் இல்லை! ரகுமானும் சித்ராவும் வைரமுத்துவும் எத்தனை முறை காதலில் தோல்வி அடைந்திருந்தால் இத்தகைய பாடல்களை தந்திருக்க முடியும்? எனக்கென்றால் இப்படி பாடல்கள் தர முடியுமென்றால் மீண்டும் மீண்டும் காதலில் தோல்வி அடைவதில் தப்பு இல்லை. ஏன் .. கேட்டு ரசிக்க கூட!
மாலை அந்திகளில் மனதின் சந்துகளில்
தொலைந்த முகத்தை மனம் தேடுதே
வெயில் தாரொழுகும் நகர வீதிகளில்
மையல் கொண்டு மலர் வாடுதே
மேகம் சிந்தும் இரு துளியின் இடைவெளியில்
துருவித் துருவி உனைத் தேடுதே
வரிகளை கேட்டுகொண்டு எழில்மிகு மெல்போர்ன் நகரத்தில் நடப்பதற்கு தனி வைராக்கியம் வேண்டும்!
 

இன்னும் ஒரே ஒரு பாடல் ப்ளீஸ் .. இனி ஒரு பதிவில் சித்ராவின் இத்தகைய பாடல்கள் பகிர்வேனோ தெரியாது!! அண்மையில் வந்த பாடல். படம் வெள்ளித்திரை.
உணர்ச்சிகளை கொட்ட பதிவில் இனி இடம் இல்லை. மனதிலும் பலம் இல்லை. அதனால் வரிகளோடு முடித்து கொள்கிறேன்!

இமைகளிலே கனவுகளை விதைத்தேனே
இரகசியமாய் நீர் ஊற்றி வளர்த்தேன்
இங்கு வெறும் காற்றிலே நான் விரல் நீட்டினேன்
உன் கையோடு கை சேரத்தான்
உன் உயிரையும் இல்லை என் நிழலும் இல்லை
இனி என் காதல் தொலைதூரம் தான்

எழுதி முடித்தவுடன், ஆரம்பத்து மாருகோ மாருகோ பாடலை அகற்றலாமா என்று தோன்றியது. ஒட்டவில்லை என்பதற்காக உண்மை பொய்யாகாது என்பதால், அப்படியே விட்டு விடுகிறேன்!
மீண்டும் அடுத்த வாரம் இன்னுமொரு இசை அனுபவத்துடன் ….


















Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக