Skip to main content

“Yarl IT HUB” : யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley

 

4413409946_52c21b243fஅப்போது தான் இரண்டாம் உலக மகா யுத்தமும், அதை தொடர்ந்த பனிப்போரும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கி, நாடுகள் வழமைக்கு திரும்பிக்கொண்டு இருந்த காலம். அந்த ஊரில் ஒரு சிறுவன் இருந்தான். பத்து வயது தான். ஒரு முறை பக்கத்து தெருவில் வசிக்கும் ஒரு இலத்திரனியல் என்ஜினியர் வீட்டுக்கு செல்கிறான்.  அவருடைய வீட்டு கராஜில் ஒரு பரிசோதனை செய்கிறார்கள். கார்பன் மைக்ரோபோனை பயன்படுத்தி சத்தத்தை அம்பிளிபை பண்ணும் பரிசோதனை. என்ஜினியர் அந்த சிறுவனையும் துணைக்கு வைத்து வேலையை தொடர்கிறார். சிறுவன் அன்றிரவு அப்பாவுக்கு வந்து நடந்ததை சொல்கிறான். அவர் நம்பவில்லை. எலேக்ட்ரோனிக் அம்பிளிபயர் இல்லாமல் இதை செய்ய முடியாது என்கிறார். சிறுவன் செய்து காட்டுகிறான். அப்பா மகனை பெருமிதமாக பார்க்கிறார்.

 

சிறுவன் வளர்கிறான். பெற்றோருக்கு அவன் ஒரு சாதாரண பிள்ளை இல்லை என்பது தெரியவருகிறது. அவன் திறமைக்கு தோள் கொடுக்கின்றனர். அவன் தன்னுடைய பாடசாலை பிடிக்கவில்லை என்கிறான். மாற்றிக் கொடுக்கிறார்கள். அவன் இஷ்டப்படியே அவனுடைய சின்ன சின்ன ஆராய்ச்சிகளுக்கு இலத்திரனியல் பொருட்களை வாங்கி கொடுத்தனர். இப்போது அந்த பக்கத்து தெரு என்ஜினியர் அவனுக்கு இன்னும் சிக்கலான சவால்களை கொடுக்கிறார். ரேடியோ, டிவி என்று புது புது இலத்திரனியல் கருவிகளை வடிவமைக்கவேண்டும். அவன் இது தன்னால் இயலாது என்று நினைக்கும் போதெல்லாம் அப்பாவும் என்ஜினியரும், இல்லை இல்லை உன்னால் முடியும் என்று முதுகில் தட்டிக்கொடுத்தார்கள். அவன் தான் உண்மையிலேயே ஒரு திறமை சாலி என்ற தன்னம்பிக்கையை அவனுக்கு ஊட்டினார்கள். ஒருவரும் discourage செய்யவில்லை. வேண்டாத வேலை என்று ஏளனமாக பார்க்கவில்லை.

 

அந்த ஊரில் இப்படியான ஆர்வமிகு சிறுவர்களுக்கென பெரியவர்கள் குழுக்களை அமைத்தார்கள். அந்த சிறுவர்கள் செவ்வாய்கிழமைகளில் ஒன்று கூடுவார்கள். ஒரு துறை சார்ந்த நிபுணர் வந்து சின்ன விஷயம் ஒன்றை அவர்களுக்கு சொல்லிக்கொடுப்பார். ஒரு நாள் LED, இன்னொரு நாள் Calculator, இன்னொரு நாள் computer. இந்த சிறுவர்கள் தாங்களும் ஏதாவது ஒரு project செய்யவேண்டும். அந்த சிறுவன் ஒரு இலத்திரனியல் “Frequency Counter” செய்ய தீர்மானித்தான். அதற்கு அவனுக்கு சில கருவிகள் தேவைப்பட்டது. உடனே ஒரு phone call போட்டான். யாருக்கு? அந்த ஊரிலேயே மிகப்பெரிய கம்பனியின் தலைவருக்கு! இந்த பத்து வயது சிறுவன், 3000 தொழிலாளர் வேலை பார்க்கும் நிறுவன தலைவருக்கு தயக்கமே இல்லாமல் call போடுகிறான். அவரும் அவனுக்கு செவி மடுக்கிறார். உடனே அந்த கருவிகள் கிடைக்க வழி செய்கிறார். அத்தோடு விட வில்லை, அவனுக்கு ஒரு சின்ன வேலையையும் தன் நிறுவனத்தில் போட்டு கொடுக்கிறார்.

 

சிறுவன் வளர்கிறான். குட்டி குட்டியாய் இலத்திரனியல் கருவிகள் கண்டு பிடிக்கிறான். அவனை போலவே ஆர்வம கொண்ட இன்னொரு சிறுவனை கண்டு பிடிக்கிறான். இருவரும் சேர்ந்து சின்ன சின்ன இலத்திரனியல் project செய்து சம்பாதிக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள ஆர்வம் மிக்க இளைஞர்கள் கூடும் கூட்டத்தில் தம் கருவிகளை காட்சிப்படுத்தி சிலாகிக்கிறார்கள். மற்ற இளைஞர்களின் வேலைகளையும் பார்த்து புதிது புதிதாய் கற்றுகொள்கிறார்கள். அந்த சிறுவனின் நண்பனுக்கு புது ஐடியா ஒன்று வருகிறது.  அதை செய்ய அந்த ஊரில் இருக்கும் கம்ப்யூட்டர் வியாபாரி உதவுகிறார். பணம் போதவில்லை என்று வீட்டில் உள்ள வாகனத்தை விற்க அப்பா சம்மதிக்கிறார். வீட்டின் கராஜில் பரிசோதனை கூடம். ஆபீஸ். இடம் போதவில்லை என்று இலத்திரனியல் பொருட்கள் எல்லாம் சமையலறைக்குள் வருகிறது. தாயார் ஒன்றுமே சொல்லவில்லை. மகனின் திறமையில் அப்படி ஒரு நம்பிக்கை.

 

அந்த இளைஞன் வளர்கிறான். நிறுவனம் ஒன்று ஆரம்பிக்கிறான். அவன் நிறுவனம் கணணி வன்/மென் பொருட்களில் சாதனை படைக்கிறது. அவனோடு வளர்ந்த சமகால சிறுவர்கள் எல்லாம் பெரிய பெரிய கண்டு பிடிப்புகளை நிகழ்த்துகின்றனர்! அந்த நகரமே தகவல் தொழில்நுட்பத்தின் “மக்கா” தலமாக மிளிர்கிறது. யார் அவன்?

ARE YOU GETTING IT?

jobs_and_wozniak_1975

ஆம் அந்த சிறுவன் தான் ஸ்டீவ் ஜோப்ஸ்.  அவனின் நண்பன் தான் Apple Personal Computer ஐ முதன்முதலில்  வடிவமைத்த Steve Vozniak. அவன் phone பேசிய நிறுவன அதிபர் தான் HP நிறுவனத்தை Packard என்பவருடன் சேர்ந்து உருவாக்கிய Hewlett. அவன் காலத்தின் உருவானவர் தான் அவனின் சமவயது, கணணி யுகத்தின் இன்னொரு பிதாமகன் Bill Gates. இவர்கள் சேர்ந்து கண்டு பிடித்தவை தான், Apple Computers, Macintosh, Windows என்று உலகம் முழுக்க வியாபித்து இன்றைக்கு iPod, iPhone, iPad என்று கணணி உலகை ஆண்டு கொண்டு இருக்கிறது!

 

YARL IT HUB

lamp8இப்போது எங்கள் ஊருக்கு வருவோம். யாழ்ப்பாணம், எம் தேசத்தின் அடையாளம்.  மின்சாரம் இல்லாத காலத்திலும் சின்ன குப்பி விளக்கில் அத்தனை சாதனைகளை செய்த தேசம். சின்ன ஜாம் போத்தலில் முக்கால்வாசி தண்ணீர் விட்டு மீதிக்கு எண்ணெய் விட்டு விளக்கு ஏற்றியதை மறக்க முடியுமா? பெட்ரோலுக்கு தட்டுப்பாடா? கொஞ்சம் ஓடிக்கலோன், இரண்டு அடி சேலைன் குழாய்,  காபரேடரில் சின்ன திருகு தாளம், மண்ணெண்ணெயில் மோட்டார் வாகனங்கள் ஒட்டிய மக்கள் எம்மக்கள். யாழ்ப்பாணம் முழுதும் இப்படியான குட்டி குட்டி விஞ்ஞானிகள் உருவானதை யாரும் மறக்கமுடியாது. அத்தனை சண்டையிலும் தனி ஒரு நபராக Milkwhite தொழில் நிறுவனம் இயங்கியது ஞாபகம் இருக்கிறதா? அட, பனம்பழத்தில் சவர்க்காரம் கண்டு பிடித்த மக்கள் நாங்கள். மாடுகள் கொண்டு செய்த சூடு மிதிக்கும் கருவிகள், விவசாயத்தில் செய்த சாதனை.

 

ஆனால் எங்கள் ஊரில் இருந்து ஒரு பெஞ்சமின் பிராங்க்ளின் உருவாகவில்லை, ஒரு அப்துல் கலாம் உருவாகவில்லை.  நிறைய கணித மேதைகள் உருவாகினார்கள், ஆனால் அந்த திறமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்து சென்றோமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஸ்டீவ் வோஸ்னியாக் ஒரு மிகச்சிறந்த கணணி நிபுணர் தான். Intergrated circuit துறையில் ஆர்வம் மிக்கவர். மிகக் குறைந்த அளவு chipset இல் இலத்திரனியல் கட்டளைகளை அமைப்பதில் வல்லவர். ஆனால் அவர் திறமையை சரியான திசையில் திருப்புவதற்கு, அதை கொண்டு ஒரு AppleII என்ற கணணியை அமைப்பதற்கு ஸ்டீவ் ஜோப்ஸ் என்ற வியாபார சிந்தனைகள் நிறைந்த, ஒரு தூர நோக்காளர் தேவைப்பட்டார். Harvard பல்கலைக்கழகத்தில் விளையாட்டாக செய்த ப்ரோக்ராமை கொஞ்சம் கொஞ்சமாக பல கல்லூரிகளுக்கு பரப்பி, அப்புறம் அதை உலகம் முழுக்க வியாபிக்க வைப்பதற்கு Facebook நிறுவனர் Mark Zuckerberg ஆல் மாத்திரம் முடியாது. அவருக்கு தோள் கொடுக்க பலர் முன் வந்திருக்கவேண்டும். அவர் வேலையில் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும். அப்படியான, அந்த, அடுத்த கட்டத்துக்கு எம்மை, எம் முயற்சிகளை எடுத்த செல்ல எம்மிடம், யாழ்ப்பாண மண்ணிடம் ஒரு ஒருங்கிணைந்த வேலைத்திட்டம் இல்லை. அது ஏன் என்று ஆய்வு செய்தபோது இரண்டு விடயங்கள் பெருத்த சவால்களாக முன்னே வந்து நின்றன.

முதல் சவால், சிக்கலானதும் கூட. அது தான் நமது கட்டமைப்பு. யாழ்ப்பாணத்தில் குடத்துள் விளக்காக ஒளிர்ந்துகொண்டு இருக்கும் திறமைசாலிகளுக்கு, தம் திறமையை தாமே உணர முடியாத அளவுக்கு நம் சமூக அளவுகோல்கள் அமைந்து விட்டன. நமக்கு, நம் பிள்ளைகளுக்கு நாமே அவநம்பிக்கைகளை வளர்த்து விடுகிறோம். ஒரு திறமையான கணித விற்பனர், ஒரு வித்தியாசமான சிந்தனையாளனின் இலட்சியம் என்பது நல்ல ஒரு சம்பளத்தில் வேலையை தேடி வாழ்க்கையின் இருப்புக்கு மோசமில்லாமல் கடந்துவிடுவதாகவே இருக்கிறது. அதனால் தானோ என்னவோ உயர்தர பரீட்சையில் திறமை காட்டும் நாம் அடுத்த பத்து வருடங்களில் காணாமல் போய் விடுகிறோம். நமக்கு நம் திறமையை முதலீடு செய்து, காலம் எல்லாம் நிலைக்கும் ஒரு கண்டுபிடிப்பையோ, நிறுவனத்தையோ ஏற்படுத்த தோன்றுவதில்லை. அப்படியே தோன்றினாலும் அந்த நிறுவனங்கள் உலகம் முழுதும் பரந்த ஒரு Brand Name ஐ ஏற்படுத்த தவறுகின்றன. நல்லதொரு கண்டுபிடிப்பு மனதில் உருவானால், அதை உலகம் பூராகவும் பயன்படுத்தும் ஒன்றாக மாற்றுவதற்கு நிறைய அர்ப்பணிப்பு அவசியம். அதற்குரிய நிர்வாக கட்டமைப்பு வசதிகள் வேண்டும். முதலில் நம்மில் நமக்கு நம்பிக்கை வரவேண்டும். முதன் முதலில் Graphical User Interface என்ற தொழில் நுட்பத்தை வடிவமைத்தது Xerox என்ற photocopy நிறுவனம் தான். ஆனால் அவர்களுக்கு அதை எப்படி உலகம் முழுதும் பாவிக்கும் கணணி தொழில்நுட்பமாக மாற்றவேண்டும் என்று தெரியவில்லை. Steve Jobs இன் கண்ணில் அது பட்டது. அவர் ஆராய்ச்சி கூடம் ஒன்றை அமைத்தார். அல்லும் பகலும் அதை நேர்த்திப்படுத்துவதிலேயே செலவழித்தார். சிலநாட்களில் Bill Gates இன் கண்களும் அதை கண்டு பிரகாசிக்க,  எண்பதுகளில் அந்த இரு இளைஞர்களும் ஆரம்பித்த கணணி முயற்சிகள் இன்றைக்கு உலகையே தன்வசப்படுத்திக்கொண்டு இருக்கிறது. அந்த இருவர் என்று இல்லை. அவர்கள் காலத்தில் பல இளைஞர்கள் அப்படி உருவானார்கள். அந்த இளைஞர்கள் எல்லோருக்கும் இரண்டு பொதுவான விஷயங்கள் இருந்தன. ஒன்று திறமை. இரண்டு அந்த திறமையை ஆராதிக்கும், வேண்டும் என்பதை எல்லாம் கொடுக்கும், அந்த திறமையை மேலும் மேலும் வளர்க்க உதவும் சமூக கட்டமைப்பு, அந்த Silicon Valley.

 

நம்மவருக்கு திறமை மிதமிஞ்சி இருக்கிறது. ஆனால் அதை சரியான திசையில் நெறிப்படுத்தி வளர்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு, ஒரு Sillicon Valley சூழல் எம்மிடம் இல்லை. Yarl IT Hub அந்த கட்டமைப்பை உருவாக்க உறுதி பூண்டிருக்கிறது. இது உருவாக்கும் கட்டமைப்பு, எதிர்காலத்தில் நம் இடத்திலே ஒரு தொழில்நுட்ப நிறுவனம் அமைய வழி சமைக்கும். அதை தொடர்ந்து இன்னொருவர் புதிதாக ஒன்றை உருவாக்குவார். அப்புறம் வேறு ஒருவர் வெளிநாட்டில் இருந்து திரும்பி இங்கு வந்து ஒரு நிறுவனம் அமைப்பார். ஒன்று இரண்டாகும். இரண்டு நான்காகும். நான்கு நாப்பது ஆகும். கூகிளும், ஆப்பிளும் ஆய்வு கூடங்களுக்கு எங்கள் இடத்தில் இடம் தேடும். இந்த கனவை உங்கள் ஒவ்வொருவரும் கண்டிருப்பீர்கள். நம்மோடு இன்று இல்லாதவர்களும் கண்டிருந்தார்கள். அந்த Social Epidemic நிச்சயம் நடக்கும். என்ன, சிலவேளை கொஞ்சம் காலம் பிடிக்கலாம் தான். என் காலத்தில் சிலவேளை அது நடக்காது. ஆனாலும் அது நடந்தே தீரும். என் தாத்தா எங்கள் வீட்டிலே ஒரு பிலாக்க்கன்று நட்ட பொது அவருக்கு வயது எண்பது. அவருக்கு அந்த மரத்து பழம் சாப்பிடுவதில் ஆசை இல்லை. தன் பேரன் பேத்திகள் சாப்பிடவேண்டும் என்று ஒரு அவா. நானும் நீங்களும் அவர் நட்ட மரத்து பிலாப்பழ சுளைகளை ருசி பார்த்தோம் இல்லையா. இப்போது நாங்கள் நடும் நேரம்.  முதல் மரத்தை நாம் நடுகிறோம். பழத்தை பற்றி பிறகு சிந்திக்கலாம். முதலில் மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றுவோம். திக்கொன்றும் திசையோன்றுமாக நடுவதற்கு பதிலாக, இணைந்து நட்டால் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது இலகு. Yarl IT HUB அதை தான் செய்ய முயல்கிறது.

2006-silicon-valley-guide

இரண்டாவது சவால் நம்மை நாமே ஒருங்கிணைப்பது. Silicon Valley எப்படி உருவானது என்று ஒரு கேள்வி இங்கே எழுகிறது. முன்னமேயே குறிப்பிட்ட படி, போரின் போது உலகம் முழுதும் பயணம் செய்து இருந்த அமரிக்க வீரர்கள், ஏனைய ஐரோப்பிய நாட்டவர் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக அறுபதுகளின் ஆரம்பத்தில் அமெரிக்காவுக்கு திரும்புகின்றனர். திரும்பும்போது அவர்கள் வெறுமனே பணத்தையோ ரணத்தையோ சுமந்து வரவில்லை. போரில் கண்ட அனுபவங்களை தாங்கி வந்தார்கள். போர்க்களத்தில் படித்த, புதுமையாக வித்தியாசமாக சிந்திந்து எதிரியை சரிக்கும் உத்தியை சுமந்து வந்தார்கள். அவற்றை தாம் வாழ்ந்த இடங்களில் சரியாக பயன்படுத்தினர். இலத்திரனியல், மராமத்து, மின்சார தொழில்நுட்பம் என்று எதிலும் புதுமையாக சிந்திக்க, சிந்தித்தவர்கள் ஒன்று கூட, அவர்களுக்குள் ஒரு போட்டி ஏற்பட, ஒருவருக்குள் ஒருவர் உதவி செய்ய, அந்த யாரும் எதிர்பாராத social epidemy என்ற சமூக புரட்சி அந்த தேசத்தில் உருவானது. இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டியது, இந்த புரட்சிக்கு பெருந்தொகை பணமோ, கட்டடங்களோ தேவையாய் இருக்கவில்லை. புத்திஜீவிகளும், அங்கீகரிப்பும், அவர்கள் தேவை என்று நிமிரும்போது தோள் கொடுத்த சமூக நிறுவனங்களும் தான் தேவையாய் இருந்தது. சிந்தித்துப்பாருங்கள், இதை எம்மால் உருவாக்க முடியாதா? அகில இலங்கை ரீதியில் அடுத்தடுத்து முதலிடம் வருபவர்களை தூக்கி விட கசக்குமா என்ன? அப்புறம் ஏன் அதை யாழ்ப்பாணத்தில் செய்ய முடியவில்லை.  வாழ்வோடு வந்துகொண்டிருந்த போர் ஒரு முக்கிய காரணம் தான். ஆனால் இப்போது அதை தாண்டிய ஒரு சிக்கல் இருக்கிறது. யாழ்ப்பாணம் என்ற சமூகம் உலகம் முழுதும் பரந்து சிதறிவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாய். ஆனாலும் இந்த இலத்திரன்களும் புரோட்டான்களும் உலகம் முழுவதும் சுற்றினாலும் எங்கள் மனசு எப்போதும் “யாழ்ப்பாணம்” என்ற நியூகிளியஸ் நோக்கி தான் இருக்கிறது என்பதை சொல்லவேண்டியதில்லை. நம் எல்லோருக்கும் ஏதோ செய்யவேண்டும் என்ற ஏக்கம் இருக்கிறது. எப்படி என்பது தெரியவில்லை. இங்கே தான் Yarl IT Hub இன் இணைப்புப்பாலம் உருவாகிறது. யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற கணித விற்பன்னர், பொறியியல் நிபுணர்கள், வியாபார காந்தங்கள், சந்தைப்படுத்தல் நிபுணர்கள், கணக்காளர்கள் மூலை முடுக்கெல்லாம் சாதனைகள் செய்துகொண்டு தான் இருக்கிறார்கள். யாழ்ப்பாணத்தவர்கள் எத்தனை பேர் உலகம் முழுதும் உள்ள பல்கலைக்கழகங்கள் எல்லாவற்றிலும் பெராசிரியர்களாக விரிவுரையாளர்களாக இருக்கிறார்கள் தெரியுமா? எண்ணில் அடங்காது.  கொஞ்சம் யோசித்து பாருங்கள்,  இவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து, யாழ்ப்பாண தளத்தில் இயங்கினால்? தங்கள் துறை சார்ந்த நிபுனத்துவத்தை உதவிகளை வழங்கினால்? யாழ்ப்பாணத்தில் இருந்து ஒரு Herwlett, ஒரு Disney, ஒரு Bill Gates உருவாக உதவினால்? நினைக்கவே சிலிர்க்கிறது இல்லையா? அட நம்மால் முடியுமா? நாங்கள் தான் திக்கொன்று திசையொன்றாக இருக்கிறோமே?

 

ff_hackers2b_fஇங்கே தான் நாங்கள் யூத இனத்தை நினைவு கூருகிறோம். போரின் பின்னரான யூதர்களின் வளர்ச்சி அபரிமிதமானது. அவர்கள் இன்றைக்கு உலகின் மிகப்பெரிய அரசாங்கங்களை ஆட்டிப்படைக்கும் அளவுக்கு ஒரு சமூக கூறாக வளர்ந்துவிட்டனர். ஆனால் யூதர்கள் எல்லோரும் இஸ்ரேலிலா இருக்கிறார்கள்? இல்லையே, அவர்கள் எல்லா கண்டங்களிலும் அந்தந்த சமூகங்களில் பிணைந்து போய்த்தானே இருக்கிறார்கள். ஒரு யூதன் எங்கே இருந்தாலும் தன திறமையை தன இனத்துக்கு பயன்படுத்தாமல் இருக்கமாட்டான். அந்த எண்ணத்தை நாம் நம்மில் உருவாக்க வேண்டும். யாழ் என்ற நாமம் எமது சமூக அடையாளம். அது அந்த பிரதேசத்தை மட்டும் குறிக்கவில்லை. நாம் தமிழர்கள் சார்ந்த கலாச்சாரத்தை குறிக்கிறது. இங்கே பெயர் என்பதை விட எம் சார்ந்த அடையாளமே முக்கியம். அதை நாங்கள் ஏற்படுத்தலாமே. யாழ்ப்பாணத்து Silicon Valley, உலகம் முழுவதும் வெர்ச்சுவல்(virtual) ஆக உருவாகட்டுமே. யாழின் அடையாளத்தில் இருந்து ஒரு கண்டு பிடிப்பு, ஒரே ஒரு கண்டு பிடிப்பு உலகம் முழுதும் பரவினால் கூட, அது நமக்கு தானே பெருமை. எங்கள் இளைஞர்களுக்கு உலகம் முழுதும் பல்கலைக்கழகங்களில் scholarship சந்தர்ப்பம் எடுத்து கொடுத்தால், அவர்கள் அங்கங்கே தங்கள் அடையாளங்களை பரப்ப, யாழ்ப்பாணத்து Silicon Valleyயை உலகமே திரும்பி பார்க்குமே! நாங்கள் ஒரு நேர்முகத்தேர்வுக்கும போகும்போது, யாழ் என்ற அடையாளத்தை பெருமையுடன் சொல்லும் சந்தர்ப்பம் உருவாகட்டுமே! Mountain View, Cupertino போன்ற நகரங்களின் பெயர்கள் எல்லாம் எப்படி எங்களுக்கு தெரியவந்தன? Mountain View வில் ஆரம்பித்து San Francisco , Los Angeles என பல நகரங்களும் பிரபலமாகி இன்றைக்கு கலிபோர்னியா என்ற ஒரு மாநிலம் அமெரிக்காவில் நிமிர்ந்து நிற்கிறது என்றால், எல்லாமே Silicon Valley யில் இருந்து ஆரம்பித்தது தான். Are you getting it? முதலில் யாழ்ப்பாணத்தை நாம் Silicon Valleyயாக மாற்றுவோம். ஏனைய மாற்றங்கள் தன்னாலே நடைபெறும்!

 

IMG_0628

இது முடியுமா? நமக்கு இயலுமா? இது நாள் வரை வாளாவிருந்து விட்டு இப்போது மட்டும் ஏன் இந்த கூச்சல் என்ற அவநம்பிக்கைகளை புரிந்து கொள்ள முடிகிறது. முதலில் ஒரு விஷயம். எல்லாவற்றுக்கும் ஒரு ஆரம்பம் இருக்கவேண்டும். There is always a beginning. அந்த ஆரம்பம் தான் இது. ஏன் இது இத்தனை காலங்கள் செய்யவில்லை? என்று ஒரு கேள்வி. எப்படி அது முடியும்? Survival என்பதே மிகப்பெரிய பிரச்சனையாக இருந்த பொது சாதிப்பது எப்படி? ஆனால் நாம் இப்போது இருக்கும் நிலையில் ஏதாவது சாதித்தால் தான் survive பண்ணவே முடியும்!  நாங்கள் சாதிக்க போகிறோம். சாதிக்கபோகிறவர்களை ஆராதிக்கப்போகிறோம். நீங்களும் இணைகிறீர்கள். இணைந்து  சாதிப்போம்.

 

இந்த பதிவு Yarl IT Hub இன் தூரநோக்கை தெளிவுபடுத்தும் ஒரு ஆக்கம். இதன் அமைப்பு கட்டமைப்பு, குறுகிய கால வேலைத்திட்டங்கள், குழுக்கள், என்னனென்ன செய்ய போகிறோம், இவை எல்லாமே கொஞ்சம் கொஞ்சமாக எழுத போகிறோம். எழுதும்போதே நீங்களும்  இணைந்து கொள்ளுங்கள். உங்களுக்கும் இப்படியான சிந்தனையோட்டம் இருக்கும். சேர்ந்து செய்வதற்கு கலந்து ஆலோசிப்போம். Yarl IT Hub ஒன்றும் Microsoft, Apple, IBM போன்ற வியாபார நிறுவனம் கிடையாது. முன்னமேயே சொன்ன மாதிரி இந்த மாதிரி நிறுவனங்கள் அமைவதற்கு களம் அமைத்து கொடுக்கும் ஒரு Hub. இதன் இலாப நோக்கம் எது என்றால் யாழ்ப்பாணத்தில் ஒரு Silicon Valley அமைப்பதே. அந்த இலாபத்தை அடைவதற்கு உங்களையும் அழைக்கிறோம்.

 

நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி சிவசக்தி! - என்னைச்
சுடர்மிகு மறிவுடன் படைத்து விட்டாய்.
வல்லமை தாராயோ - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே!
சொல்லடி, சிவசக்தி! - நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ!

 

Yarl IT Hub - Our Vision
Yarl IT Hub - Our Values
After all, why Jaffna?

தொடர்புகளுக்கு

http://www.facebook.com/pages/Yarl-It-Hub/218986791503185

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக