Skip to main content

கம்பவாரிதியிடம் இருந்து ஒரு மடல்!

 

kampavaruthy_jeyaraj

திரு ஜே.கே அவர்கட்கு,                                                                                         06.11.2013
அவுஸ்திரேலியா.

அன்புத்  தம்பிக்கு,
நலம் வேண்டிப் பிரார்த்திக்கின்றேன்.
நலமே நாடு சேர்ந்தோம்.
மனம் அங்கும் இங்குமாய்த் தத்தளிக்கின்றது.
அவுஸ்திரேலியா வருகை மகிழ்வு தந்தது.
மண் பிடிக்காவிட்டாலும் மக்கள் பிடித்துப் போயினர்.
கம்பனும் தமிழ்த்தாயும் உறவுகளைப் பெருக்குகின்றனர்.
நீண்டநாள் எதிர்ப்பார்த்த உங்கள் சந்திப்பு,
நிகழ்ந்து நெஞ்சை நெகிழ்வித்தது.
ஆற்றல் கண்டு அதிசயித்தேன்.
பேச்சாள நிலைகடந்து, சிந்தனையாளனாய் என் உளம் புகுந்தீர்கள்.
எழுத்தாற்றல் வியப்பேற்படுத்துகின்றது.
சுஜாதாவின் ஆன்மா நிச்சயம் மகிழும்.
கருத்துக்களை மக்கள் மனதேற்றும் நுட்பம் வாய்த்தது பெரிய பேறு.
விமர்சகளுக்காய் மட்டுமே எழுதும் எங்கள் எழுத்தாளர்கள்,
மக்கள் மனமேறி மகிழ விரும்புவதில்லை.
நீங்கள் நினைந்தால் ஈழத்து எழுத்துலகை எழுச்சியுறச் செய்யலாம்.
இந்திய சஞ்சிகைகளுக்கு நிறைய எழுதுங்கள்.
வெளிநாட்டு எழுத்து அங்கே வரவேற்கப்படும்.
மற்றை இனத்தார் தமது தகுதிகளை,
அன்றாடம் உலகறியச் செய்து உயர்கின்றனர்.
ஈழத் தமிழினத்தார் உலகெலாம் பரவியும்,
தம் ஆற்றல்களை, தமிழுலகிற்குத்தானும் காட்டத் தவறி நிற்கின்றனர்.
ஈழத் தமிழர்தம் ஆற்றல்கள் உலகலாவி விரிய,
உங்களைப் போன்ற இளைஞர்கள்தான் வழி செய்ய வேண்டும்.

* * *
ஆற்றல்மிகுந்த உங்களைப்போன்ற இளைஞர்கள்,
விருட்சமாய் விரிந்து நின்று வித்தாய் எமை இனங்காட்ட,
உளம் விதிர்விதிர்க்கின்றது.
இதுநாள் வரையிலான வாழ்வின் பயன் கண்டு மகிழ்கிறேன்.
புத்தியுள்ள பிள்ளையொன்று “இது இவன் தந்தது” என்று உரைக்கும்போது,
கற்றார் நெஞ்சு களிக்காமல் விடுமா?
நான் துரோணரா? தெரியவில்லை. நீங்கள் ஏகலைவன் என்பதில் ஐயமில்லை.
எனது முயற்சி, தொண்டு, ஆற்றல் அனைத்தும்,
எம் மண்ணில் விழலுக்கிறைத்த நீராயிற்றோ? என ஏங்கி நின்றேன்.
எங்கோ இருந்து இல்லையென்கிறீர்கள்!
மனம் நிம்மதியுறுகிறது.
நீள நினைந்திருப்பேன்!

* * *
உங்கள் கொல்லைப்புறத்து காதலியானதில்,
கொள்ளை மகிழ்ச்சி!
நம் மண்ணின் அறிஞர்கள், விமர்சகர்கள் அனைவராலும்
நிராகரிக்கப்பட்டவன் நான்.
என்னை எனக்கு தெரியும் என்பதால்,
அதுபற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை.
பட்டங்களால் மட்டுமே தம்மை அறிஞர்களாய் உரைத்து நின்ற,
அவர்கள் பற்றி நான் எப்போதும் அக்கறைப்பட்டதில்லை.
இன்று அறிவின் சுயவீரியத்தோடு ஓர் இளைஞன்,
என்னைக் காதலியாய் உரைக்கையில் கனிந்து கரைகிறேன்.
நன்றி!
ஹீரோவும் குட்டியனும் இப்போது எங்கே?

* * *
மாறுபாடு அறிவின் அடையாளம்.
மாறுபடும் இடங்களை மனம்திறந்து பேசுவோம்.
கம்பனைக் கடப்பது கடினம்.
நீங்கள் சொன்னவர்களை எல்லாம் வாசித்திருக்கிறேன்.
அவர்களெல்லாம் கம்பன்முன் புள்ளிகளாய்ப் போவார்கள்.
அறிவு வாசிப்பிலில்லை, யோசிப்பிலிருக்கிறது.
சிந்திக்கச் சிந்திக்க கம்பன் தொடுவானமாய் விரிவான்.
இஃது கம்பன்மேல் காதலால் உரைக்கும் கருத்தன்று.
உள்நுழைந்தால்  உண்மை உணர்வீர்கள்.

* * *
கவிதைத்திறனை இன்னும் வளர்க்க வேண்டும்.
எல்லோர்க்கும் தெரிந்த ஒன்றைப்பற்றி,
எவரும் சிந்திக்காதவகையில் சிந்திக்கப்பழக,
கவித்துவம் தானே வளரும்.
11171_10151967347455791_1285103450_nபின்னர், சொற்களில் அவற்றை ஏற்றலாம்.
முயன்று பார்ப்போமா?

பொருள் – சீப்பு.
பற்கள் இருந்தும் சிரிக்கத்தெரியாத ஜீவன்.
மற்றவர்களை ஒழுங்குபடுத்த,
தான் ஒழுங்காதல் வேண்டுமென்பதை,
உலகுக்கு உரைத்துநிற்கும் உயர்ந்த பிறவி.


இன்னும் சில முயலுங்களேன்.
பத்துக் கற்பனைகள் (கட்டளைகளை அல்ல),
பார்க்க விரும்புகிறேன்.
கவியரங்கில் கலந்த அனைவரும் முயலலாம்.

* * *
தொடர்வோம்.
”இன்பமே ஒருநாளும் துன்பமில்லை”

அன்பன்
இ.ஜெயராஜ்

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

அகில இலங்கை கம்பன் கழக தலைவர் ஸ்ரீபிரஷாந்தன் அண்ணா ஊடாக கம்பவாரிதி திரு இ.ஜெயராஜ் அவர்கள் எனக்கு அனுப்பிவைத்த மடல்.

வேறென்ன எழுத்தாளனுக்கு வேண்டும்?

தொடர்பான பதிவுகள்
கம்பவாரிதி ஜெயராஜ்
பேசாப்போருட்கள் பேசினால் - சூர்ப்பனகை மூக்கு
எப்பவோ முடிந்த காரியம்!
அசோகவனத்தில் கண்ணகி
காடு திறந்து கிடக்கிறது

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

மனோ யோகலிங்கம்

சென்ற வாரம் இங்கே மெல்பேர்னில் மனோ யோகலிங்கம் என்ற 23 வயது இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். 2013ம் ஆண்டு தன்னுடைய பன்னிரண்டாவது வயதிலே மனோ தன் குடும்பத்தாரோடு படகிலே வந்து அவுஸ்திரேலியாவில் அகதியாகத் தஞ்சம் புகுகிறார். அவுஸ்திரேலிய அரசாங்கம் ஓராண்டுக்கும் மேலாக மனோவையும் அவருடைய குடும்பத்தையும் தடுப்பு முகாமில் அடைத்துவைத்து, பின்னர் தற்காலிக விசாவிலே அவர்களை மெல்பேர்னிலே வசிப்பதற்கு அனுமதி கொடுக்கிறது. பதின்மூன்று வயது பதின்மத்துச் சிறுவன் இப்போது உள்ளூர் பாடசாலையில் இணைந்துகொள்கிறான். படிக்கிறான். நண்பர்களைத் தேடிக்கொள்கிறான். இந்த நிலத்திலேயே வளர்ந்து பெரியவனாகிறான். ஆயினும் மனோவினதும் அவரது குடும்பத்தினதும் தஞ்சக்கோரிக்கை வழக்குகள் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. அந்தக்குடும்பத்துக்கான பொது மருத்துவமும் உயர் கல்வி மானியமும் மறுக்கப்படுகிறது. ஒரு தசாப்தம் கடந்து அரசாங்கங்கள் மாறினாலும் காட்சி மாறவில்லை. தவிர நிலைமை இன்னமும் மோசமாகிக்கொண்டே இருந்தது. ஈற்றில் மறுபடியும் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சத்தில் மனோ யோகலிங்கத்தின் இந்தத் தீக்குளிப்புச் சம...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?