Skip to main content

மன்னிப்பாயா?

 

mar08

காலையில் ரயில் ஏறியதும் கேட்க ஆரம்பித்த பாடல் இது.  இன்னமும் கேட்டுக்கொண்டே இருக்கும் பாடல்.

"இங்குவந்து பிறந்தபின்னே இருந்த இடம் தெரியும்
நாளை சென்றுவீழும் தேதி சொல்ல இங்கெவரால் முடியும்?
வாழ்க்கை என்னும் பயணம்.
இதை மாற்றிடவா முடியும்?"

தொண்ணூறுகளில் இந்த பாடலை முணுமுணுக்காமல் எவனும் வல்வை வெளியையோ, ஆசைப்பிள்ளை ஏற்றத்தையோ சைக்கிள் மிதித்து கடந்திருக்கமாட்டான். அப்போது எம்மோடு மிக நெருக்கமாக இருந்த பாடலை இப்போது திரும்பவும் கேட்கையில் அந்த எதிர்க் காற்றும், ஆசைப்பிள்ளை ஏற்றத்தின் பளுவும் நம்மை மீண்டும் தாக்குகிறது. தானாகவே விக்கிராமதித்தியனின் வேதாளம் வந்து தோளில் உட்கார்ந்து கொள்ளுகிறது. விலகாமல் கூடவே இருந்து கேள்விகளைக் கேட்டுத் துளைக்கிறது.

குப்புசாமி ஞானமணி. தமிழ்நாடு வேலூரைச்செர்ந்தவர். யார்? எவர்? என்று எனக்கு தெரியாது. "குட்டி” பற்றிய பதிவைப்பார்த்துவிட்டு "அடுத்த தலைமுறைகளுக்காக தம்முயிரை துறந்தவர்களை நினைக்க நினைக்க கண்ணீர் தன்னாலே கலங்கி வழிகிறது" என்று எழுதியிருந்தார். முகம்தெரியாத ஒரு மனுஷிக்காக வடிக்கும் கண்ணீர். அந்தப்பதிவை நான் எழுதி இரண்டரை வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அதற்கு பிறகு எத்தனையோ முறை படலையில் சிரித்திருக்கிறேன், அழுதிருக்கிறேன். கதைகள், கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். நூற்றுக்கணக்கில் எழுதியாயிற்று. இப்போது திடீரென்று இந்த முகம் காணாத மனிதர் நேற்று அதை வாசித்து அழுதிருக்கிறார். அவர் அப்படி அழுது கொண்டிருக்கையில், அதை எழுதிய நானோ இந்தவாரம் எதை எழுதலாம்? என்று யோசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். எழுதும்போது என்னோடு கூட இருந்த உணர்வு ஆழ்மனதுக்கு மீண்டும் திரும்பிப்போய்விட்டது. வாசித்தவருக்கு அதே ஆழ்மன உணர்வு நேற்றைக்கு வெளிப்பட்டிருக்கிறது. இந்த அபத்தம் புரிய கொஞ்சம் சலிப்பும் கூடவே வருகிறது.

ஒருமுறை மாவீரர் தினத்துக்கு நண்பன் ஒருவனோடு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது, எனக்குத் தெரிந்த, முகம் அறிந்த, போரில் மரணித்தவர்களைப்பற்றி சொல்லிக் கொண்டுவந்தேன். அவர்களுக்கும் எனக்குமிடையிலான உறவு பற்றியும் சொன்னேன். நான் சொல்லும்போது அதில் ஒரு சின்னத்தனமான பெருமையும் இருந்தது. "பார்த்தியா இவரை எல்லாம் எனக்கு தெரியும்" என்கின்ற பெருமை. பேசாமல் எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டு வந்தவன், விடைபெறும்போது சாதாரணமாக சொன்னான்.

"எண்ட தம்பியும் இப்பிடித்தான் அடிபாடு ஒண்டில செத்திட்டான். வெளிய தெரிஞ்சா பிரச்சனை எண்டு ஒருத்தருக்கும் சொல்லுறதில்லை "

பளார். 

மாவீரர் தினமன்று திருவுருவப் படங்களுக்கு அஞ்சலி நிகழ்வுகள் நடப்பதுண்டு. ஊரில் அப்போதெல்லாம் பிரமாண்டமாக நடக்கும். எல்லோருடைய படங்களும் எங்கேயோ ஏதோ ஒரு சந்தியிலாவது இருந்திருக்கும். இப்போது வெளிநாடுகளில் சிறிய அளவுகளில். இருபது முப்பது பேரின் படங்களை வைத்து செய்யப்படும் அஞ்சலிகள். கூட்டத்துக்கு வருகின்ற எல்லோரும் ஒவ்வொரு படங்களையும் உற்றுப்பார்த்துக்கொண்டு போவார்கள். அவற்றில் எதையோ  அவர்கள் தேடுவது போல இருக்கும். வேறொன்றுமில்லை. தம் பிள்ளையோ, அண்ணனோ, தம்பியோ, அக்காவோ, தங்கையோ அங்கே படங்களில் இருக்கிறார்களா? என்கின்ற தேடல். அனேகமாக அவர்கள் தேடும் படங்கள் இருக்காது. ஆனாலும் அழுவார்கள். அதற்கு அர்த்தங்கள் ஏராளம். எழுதி விளக்கக்கூடாது. முடியாதது.

நான் அப்படியான சந்தர்ப்பங்களில் யாரைத் தேடுவேன்?

அங்கிருந்த படங்களில் இருக்கும் எல்லோருமே எனக்காக இறந்தவர்களே. இல்லாதவர்களும் எனக்காக இறந்தவர்கள். என் நண்பனின் தம்பியும் எனக்காகத்தான் இறந்திருக்கிறான். பெயர் தெரியாது.  அவசரத்தில் அவனிடம் கேட்கவும் இல்லை. அவன் வீரவேங்கையா? 2ம் லெப்டினன்டா? லெப்டினன்டா? கப்டனா? ஒன்றுமே தெரியாது. ஒருவேளை அதற்கு மேலே என்றால் தெரிந்திருக்கும். இப்படி ஒருவர் இல்லை. இருவர் இல்லை. ஆயிரக்கணக்கில், நமக்காக இறந்தவர்கள்.

என் அப்பாவோடு நான் நிறைய சண்டை பிடிப்பேன். அம்மாவை ஏசியிருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் பதட்டப்படுவதும் நான்தான். மனைவி மீதான பாசமும் அப்படித்தான். சகோதரங்கள், நண்பர்கள் என்று எந்த உறவை எடுத்துக்கொண்டாலும் அவர்கள் மீது அபரிமிதமான பாசம் இருக்கிறது. அவர்களுக்காக என்னவெல்லாமோ செய்யத் தலைப்படுகிறோம். நாம் இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்தபோது எம்மை பாதுகாத்த குடும்பம் எனக்கு இன்றைக்கும் கடவுள் போன்றது. ஊருக்குப்போனால் அவர்கள் வீட்டில் தலைகாட்டாமல் திரும்புவதில்லை.

என் சொந்த அக்கா அண்ணன் எல்லோருமே பிறப்பாலே எனக்கு உறவானவர்கள். மாவீரர்கள் எல்லோருமே இறப்பாலே உறவானவர்கள். இறந்து நம்மோடு கூடப்பிறந்தவர்கள். அவர்கள் மட்டுமல்ல. போரிலே காயப்பட்டு, காணாமல் போய், குடும்பங்களை தொலைத்து, உருக்குலைந்து, சின்னாபின்னப்பட்டு .... இதெல்லாமே நமக்காக செய்தவர்கள். எல்லோருமே நமக்கு உறவுதான். ஒரு பாடல் வரி ஞாபகம் வருகிறது.

யார் என்று அறியாமல் பேர் கூட தெரியாமல்
இவனோடு ஒரு சொந்தம் உருவானதே.

யோசித்துப்பார்க்கிறேன். ஒரு காதலன் காதலிக்கு சொல்லுகின்ற உச்சப்பட்ட வார்த்தை "நான் உனக்காக உயிரைக்கூட கொடுப்பேன்". எப்போவாவது கதைகளிலோ திரைப்படங்களிலோ இதைப்பார்க்கும்போது அபத்தமாக இருக்கும். எவன் இந்தக்காலத்தில் உயிரை எல்லாம் கொடுக்கப்போகிறான்? ஆனால் இவர்கள் எல்லோருமே எமக்காக உயிரைக்கொடுத்தவர்கள். இந்த சொந்தத்தை நாங்கள் இலகுவில் மறந்துவிடுகிறோம். பெற்றதாய்க்கு கூட தன் குழந்தைகளில் யாரோ ஒருவரிடம் அதிக பாசம் இருக்கும். அது இயல்பு. ஆனால் இவர்களிடம் அந்த சிந்தனையே இல்லை. எம்மை வைத்து அரசியல் செய்வார்களா? மறந்துவிடுவார்களா? தம் குடும்பம் என்னாகும்? எந்த யோசனையும் இல்லை. என் பெயர் கூட இவர்களுக்கு தெரியாது. ஆனால் உயிரைக் கொடுத்திருக்கிறார்கள். கோபம் வருகிறது. சேர்ட்டு கொலரைப்பிடித்து உலுக்கிக்கேட்கவேண்டும் போன்றிருக்கிறது. எதற்கு? நான் யார் உங்களுக்கு? எனக்காக ஏன் இப்படிப்போய் இறந்தீர்கள். உங்களை நாங்கள் அவனா? இவனா? என்கின்ற அரசியலுக்குள் அடக்கிவிடுகிறோம். உங்கள் பெயரைச்சொன்னால் சிக்கல் வந்துவிடும் என்று சீண்டாமல் இருக்கிறோம். இந்தக் கையாகாதவனுக்காக ஏன் இறந்தீர்கள்?

இதை எழுதும்போதும் "இவன் ஏன் இதை எழுதுகிறான், இன்றைக்கு மாவீரர் தினம் இல்லையே, இதற்குள் ஏதாவது அரசியல் இருக்குமோ?" என்று யோசிக்கிறோம். நானே யோசிக்கிறேன். சும்மா இருந்துவிட்டு இப்போது மட்டும் என்ன திடீரென்று? என்றால், அதுதான் மனிதமனம். எப்போதோ இறந்த அன்னைக்காக திடீரென்று அழுபவர்களை கண்டிருக்கிறோம். அவர்களிடம் எதுக்கு திடீரென்று அம்மா ஞாபகம்? என்று கேட்கமுடியாது. அது எப்போதும் வரும். சிலவேளைகளில் எதுக்கு வேண்டாத வேலை? என்கின்ற கோழைத்தனத்தை மீறியும் வரும். அதுபோலத்தான் இதுவும். இதற்கெல்லாம் மாவீரர்வாரம் வேண்டியதில்லை. நம் மனத்துக்கு தர்க்கங்கள்  செய்யத்தெரியாது. சில கணங்களுக்காக உணர்ச்சிவசப்படவே முடியும். அது எக்கணத்திலும் நிகழும். நாம் அழும்போது உலகத்தில் இன்னொருவர் சிரித்துக்கொண்டே இருக்கிறார். சிரிக்கும்போது எங்கோ ஒருவீட்டில் ஒப்பாரி கேட்டுக்கொண்டே இருக்கும். இது நியதி. அவர்கள், இவர்கள், தவறு, சரி இதெல்லாமே அரசியல் சார்ந்தது. அது வேறு. அதெல்லாமே ஆராயப்படவேண்டியதுதான். ஆனால் எந்த அரசியல் பகடைக்குள்ளும் இவர்களை நாம் இட்டு துகிலுரிக்கக்கூடாது. அப்படி உரித்தாலும் உரிபடுவது நாமே ஒழிய அவர்கள் அல்ல.

ஆனால் நாங்கள் இவர்களை கொஞ்சம் கொஞ்சமாக  எம்மோடு சேர்த்து இவர்களையும் துகிலுரிக்கவே முயலுகிறோம். இருக்கிறோம். மற்றவனை விட நாமே அதிகமாய் அதை செய்கிறோம். இதை படம் பிடிக்க சனல் 4 தேவையில்லை. தினம் தினம் எங்கள் வீடுகளிலேயே நிகழ்கிறது.

நண்பர் குடும்பம் ஒன்று சென்றவாரம் இலங்கை சுற்றுலா சென்று திரும்பியது. சந்திரமௌலீச்சரம் உட்பட அத்தனை ஈச்சரங்களுக்கும் சென்று வந்தோம் என்று பெருமைப்பட்டுக்கொண்டார். யாழ்ப்பாணத்தில் ஆர்மிக்காரங்கள் கூட நல்லா தமிழ் கதைக்கிறாங்கள் என்றார். ஆனால் அவர் மகனால் தமிழ் பேசமுடியாது. என்ன ஒரு முரண்நகை இது. ஒருபுறம் நமக்காக, தமிழுக்காக உயிரை மாய்த்தவர்கள். இன்னொருபுறம் அவர்கள் யாருக்காக உயிரை மாய்த்தார்களோ அவர்கள் பரம்பரை தமிழை பயிலவில்லை. கொன்றவன் தமிழ் பயில்கிறான். அதுதான் இந்த முரண்நகைகளின் உச்சம். 

எம் நிர்வாணங்களை நிலைக் கண்ணாடி காட்டும்போது நமக்கே அவமானமாக இருக்கிறது. அவமானம் உச்சமாகி குற்ற உணர்ச்சி மேலோங்கினால் சிலர் தம்மைத்தாமே குத்தி இரத்தம் வரவைப்பார்கள். தனிமையை நாடுவார்கள். கோபம் வரும். கழிவிரக்கம் வரும். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு வழி உண்டு. நமக்கு தெரிந்தது இப்படி எழுதுவது. இதெல்லாமே இயலாமையே. "Tuesdays with Morrie" என்ற புத்தகம் வாசிக்கும்போது இந்த இயலாமைக்கான மூலம் ஓரளவுக்கு தெளிவானது. அதிலே மொரி ஒரு கருத்து சொல்லுவார்.

"முதலில் நீ உன்னை மனப்பூர்வமாக மன்னிக்கப் பழகவேண்டும்"

எம்மை நாம் மன்னிக்காவிட்டால் வாழ்க்கை நரகமாகிவிடும். மறப்பது வேறு. மன்னிப்பது வேறு. காலம் பலதை மறக்கடிக்கச்செய்யும். மறந்துபோவதால்தான் நாலு வேளையும் நமக்கு வயிறு செரிக்கிறது. ஆனால் மறப்பதைப் போன்றதொரு துரோகம் வேறொன்றுமில்லை.  மன்னிக்க வேண்டும். நம்மை. ஒருகணம் கண்ணைமூடி நாம் செய்த தவறுகளை மன்னிக்க முயன்றுபாருங்கள். இயலாது. நம்மை நாமே மன்னிப்பதென்பது சாதாரண விடயம் இல்லை. மன்னிப்பதற்கும் மன்னிக்கப்படுவதற்கும் தகுதிவேண்டும். அது மட்டும் முடியுமானால் நாமெல்லோருமே என்றைக்கோ நல்லவராகியிருப்போம். “மன்னிப்பவன் மனுஷன். மன்னிப்பு கேட்கத்தெரிந்தவன் பெரிய மனுஷன்” என்று விருமாண்டியில் ஒரு வசனம் வரும். இங்கே இருவருமே நாமாக இருக்கையில் நாம் எவ்வளவு பெரிய மனிதர்களாக இருக்கவேண்டும்?  அது முடியாமலேயே வாழ்க்கை முழுக்க குற்ற உணர்ச்சிகளோடு சுற்றித்திருந்து தம் வாழ்வையும் சூழவிருப்பவர் வாழ்வையும் துன்புறுத்துபவர்களே இங்கே அதிகம். தன்னை மன்னிக்க முடியாதபோது அது ஏற்படுத்தும் கோபமும் கழிவிரக்கமும் மற்றவர்கள் மீது திரும்புகிறது.

அடுத்த பாடல் வருகிறது.

“எம்மை நினைத்து யாரும் கலங்கக் கூடாது”

மன்னிப்பாயா?

*****************

பாடல் சுட்டிகள்
இங்கு வந்து பிறந்தபின்னே
எம்மை நினைத்து

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக