Skip to main content

சப்பல் மன்னர்கள்

 

8185429625_3f6d8b2b70_z

மோகனவடிவேல்.

சிவலை. எட்டாம் வகுப்பிலேயே தாடி மீசை வளர ஆரம்பித்துவிட்டது. தினமும் வரும் வழியில் நல்லூரில் இறங்கி, அஷ்டாங்க நமஸ்காரம் செய்து, நெற்றி முழுக்க வீபூதி சந்தனம் பூசியபடியே பாடசாலைக்கு வருவான். அதிகம் பேசமாட்டான். பரீட்சை நாட்களில் நாமெல்லாம் கூடிப்பேசிக்கொண்டிருக்கையில் தனியாக அமர்ந்திருந்து இரண்டாய் மடித்த ஏ4 தாளில் குறிப்புகளை படித்து தனக்குத்தானே சொல்லிக்கொண்டிருப்பான். மிகக்குறுகலான எழுத்திலே  எழுதப்பட்டிருக்கும் கடைசிநேர தயார்படுத்தல் நோட்டுகள் அவை. ஆனால் நோட்ஸ் கொப்பியைவிட அதிகம் அதிலே எழுதப்பட்டிருக்கும்.  கதைக்கமாட்டான். சிரித்தால் பதிலுக்கு சின்னச் சிரிப்பு. “என்ன மச்சான் ரெடியா?” என்று கேட்டாலும் சின்னச் சிரிப்புத்தான். விடாமல் அலுப்படித்தால் “டிஸ்டர்ப் பண்ணாதே, ஒண்டுமே படிக்கேல்ல” என்பான். சொல்லும்போது கன்னம் எல்லாம் கொழுக்கட்டைபோல வீங்கி, வாயைத்திறந்தால் படித்ததெல்லாம் வாந்தி எடுத்துவிடுவானோ என்றமாதிரி நிற்பான். பரீட்சை சமயமும் குட்டை நாய் கவட்டை விசுக் விசுக்கென்று சொறிவதுபோல எதையோ எழுதிக்கொண்டேயிருப்பான். எக்ஸ்ட்ரா பேப்பர் வாங்குவான். டைம் அவுட் சொன்னாப்பிறகும் ஏதோ ஞாபகம் வந்தவனாய் மீண்டுமொருமுறை சொறிவான். அனேகமான வேளைகளில் வாத்தி விடைத்தாளை அவனிடமிருந்து பறித்தே எடுக்கவேண்டியிருக்கும். பரீட்சை முடிந்தபின்னும் அதே விழுங்காத கொழுக்கட்டையோடு அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடுவான்.

வீடுக்குப்போய் மறுநாள் சோதினைக்கு சப்பத்தொடங்குவான்.

மோகனவடிவேல் போன்ற சப்பல் மன்னர்கள் ஒரு வகுப்பில் இருவராவது இருப்பர். அவர்கள் படிக்கின்ற ஸ்டைலே வித்தியாசமாக இருக்கும். பாடப்புத்தகத்தில் அரசு அச்சகத்தால் அச்சடிக்கபட்ட ஆண்டு முதல் “ஐ ஆம் முரு” என்ற நீக்ரோகாரனுக்கு பக்கத்திலே மீன் குழம்புக்கறை பட்டிருந்தால் அதையும் பாடமாக்கும் பிரகிருதிகள். அம்மாவிடம் சமூகக்கல்வி புத்தகத்தைக்குடுத்து கேள்வி கேட்கச்சொல்லி பதில் சொல்லிப்பார்த்து தம்மை பரீட்சைக்கு தயார் செய்பவர்கள். “கோட்டே இராசதானியின் முதல் மன்னன் யார்?” என்று தாய்க்காரி கேட்டால் “பண்டுகாபயன் அனுராதபுரத்தை ...” என்று ஆரம்பிப்பார்கள்.  அவர்களுக்கு படிக்கும் ஓர்டர் முக்கியம். ஆறெட்டு எவ்வளவு என்று கேட்டால் ஆறொன்று ஆறு என்று பாடத்தொடங்குவார்கள். எடுத்த எடுப்பிலேயே நியூட்டனின் மூன்றாம் விதி எது என்று கேட்டால் குழம்பிவிடுவார்கள்.

சப்பல் காய்கள் வகுப்பிலே ஆசிரியரின் ஆஸ்தான மாணவனாக இருப்பதுண்டு. வாத்தி வந்தவுடன் கொப்பி கொடுப்பது, முதல் நாள் என்ன படிப்பித்தது என்று சொல்லுவது, கரும்பலகையை தண்ணிபோட்டு அழிப்பது, பூசைக்கு சீமைக்கிழுவை முறிக்கப்போவது என வகுப்பின் அத்தனை வேலைகளையும் சிரமேற்கொண்டு செய்வார்கள். இவர்களின் கொப்பிகள் பொலித்தீன் உறை போடப்பட்டு, ஸ்டிக்கரில் ச. மோகனவடிவேல், ஆண்டு எட்டு B, விஞ்ஞானம் என்று பக்காவாக எழுதப்பட்டு இருக்கும். உள்ளே தலையங்கங்கள் பச்சை நிறப்பேனாவால் எழுதப்பட்டு கீழே இரண்டு சிவப்புக்கோடுகள் செல்லும். அதிகம் கேள்வி கேட்பவனே சிறந்த மாணவன் என்கின்ற ஐதீகம் இருப்பதால் வகுப்பில் இவர்கள் வகை தொகை இல்லாமல் டவுட் கேட்பார்கள். வாத்தி விளக்கம் கொடுத்தபின்னர் மறக்காமல் தாங்யூ சொல்லிவிட்டு அமர்ந்திருந்து ஏதோ எழுதிக்கொள்வார்கள். ஆறாம் ஏழாம் ஆண்டுகளில் இவர்கள் வகுப்பில் முதல் ஐந்து இடங்களுக்குள் எப்படியும் வந்துவிடுவர். இப்படியே ஓ/எல் வரைக்கும் வண்டியை ஒட்டிவிடுவார்கள்.  எட்டு டி, பத்து ஏ எடுத்த பிரகிருதிகளும் சப்பை மன்னர்களில் உண்டு.

ஆனால் உயர்தரத்தில் சப்பும்போது அவர்களுக்கு கல்லு கடிபடத் தொடங்கிவிடும்.

ஓ/எல் மாதிரியே ஏ/எல் ஐயும் ஓட்டிவிடலாம் என்ற நம்பிக்கையில்தான் நம்மாள் முதல் தவணையை தொடங்குவார். மார்க்சும் நன்றாக வரும். ஆனால் இரண்டாவது தவணை பக்கிள் அடிக்கத்தொடங்கும். கணக்குகள் மிரட்டும். இருந்தாலும் ஒரு சில சப்பல் காய்கள் தன் அக்கா அண்ணாவின் நோட்ஸை பாடமாக்கிக்கொண்டு வகுப்புக்கு வருவார்கள். எங்கள் ஊர் வாத்திமார்களும் ஒரே கணக்கை சங்கிலியன் காலந்தொட்டு கொடுப்பதால், சப்பல் மன்னர்கள் கேள்வி சொல்லி முடிக்குமுன்னமேயே விடை எழுத ஆரம்பித்துவிடுவார்கள்.  வாத்திக்கு எழுந்து கொப்பி காட்டுவார்கள். சில பெட்டைகள் கொப்பியைக்காட்டிவிட்டு திருப்பி வாங்கும்போது பெருமிதச்சிரிப்போடு எங்களையும் நக்கலாகப் பார்க்கும். நீங்களெல்லாம் படிச்சு என்னத்தையடா கிழிக்கப்போறீங்கள்?

ஆனால் மூன்றாம் தவணை ஆரம்பிக்க, சப்பைக்காய்கள் எல்லாம் நாக் அவுட்டுள் புகுந்த தென்னாபிரிக்க அணிபோல ஆகிவிடுவார்கள்.

மூன்றாம் தவணை, உயர்தரத்தில் பாடங்கள் சூடு பிடிக்கத்தொடங்கும் பீரியட். வாத்திமாருக்கும் சிலபஸ் முடிக்கவேண்டுமே என்ற கவலை எட்டிப்பார்க்கும். பாடம் வேகமாகப் பறக்கும். சப்பை மன்னர்கள் அதற்கு ஈடு கொடுக்கமாட்டார்கள். அவர்கள் தலையங்கத்துக்கு புட் ரூலரால் இரண்டு சிவப்புக்கோடு அடிப்பதற்குள் வாத்தி நாலு கணக்கு தாண்டியிருக்கும். மூச்சுத்திணருவார்கள்.  விளங்காது. ஆரம்பத்தில் ஆறுதலாக அவர்கள் டவுட்டுக்கு விளக்கம் கொடுத்துவந்த வாத்தி இப்போது அந்தப்பக்கமே தலைவைத்துப்படுக்காது. வீட்டில் கொப்பியைக்கொடுத்து தாய்க்காரியிடம் கேள்வி கேட்கச்சொன்னால் தாய்க்காரி சீரியஸாக மா அரிக்கப்போய்விடும்.

இது போதாதென்று வகுப்பில் உள்ளவன் மிரட்ட ஆரம்பிப்பான். இதுநாள் வரைக்கும் அட்ரஸ் இல்லாமல் திரிந்தவன் பெயர் எல்லாம் கெட்டிக்காரன் என்று வகுப்பில் அடிபடும். அவனுக்கு கணக்கு சமப்படும். ஆளாளுக்கு விதம் விதமான புத்தகங்களின் பெயர்களை சொல்லி டென்சனாக்குவார்கள். ஒருவன் லோனி என்பான். இன்னொருவன் அறுபதாம் ஆண்டு அப்பர் எடுத்த எக்ஸாம் பேப்பர் என்று சொல்லி கொண்டுவருவான்.  குட்டி மக்கர் படிப்பித்த செக்சன் மணியம் படிப்பிக்கேல்ல என்பார்கள். நாகர் டீப் என்பார்கள். சோதி சிலபஸ் கவர் பண்ணாது என்பார்கள். சிலர் சிலபஸ்  கவர் பண்ணவேண்டுமென்று முன்னைய பட்ச்காரரோடு போய்ப்படிப்பார்கள். கிரேக் சப்பல் குழம்பிவிடுவார். இன்னமும் அதிகமாக வீட்டிலிருந்து குத்துவார். சப்பென்று சப்பி அரை வட்டக்கோல் கணக்கொன்றை செய்துவிட்டு அடுத்த கேள்வியில் கொஞ்சம் பாகையை மாற்றிவிட்டால் அண்ணருக்கு சமன்பாடு ஸ்டக் ஆகிவிடும். வாத்தி சரியில்லை, வீட்டுக்கு எக்ஸ்ட்ரா கிளாஸ் என்ற பெயரில் கம்பஸ் எண்டர் பண்ணியிருக்கும் ஆட்கள் அழைக்கப்படுவார்கள். சப்பலுக்கு அழகான அக்காவோ, தங்கையோ இருந்தால் எக்ஸ்ட்ரா கிளாசுக்கு பீஸ் வாங்காமல் இன்னொரு எக்ஸ்ட்ரா கிளாஸ் போடப்படும். சப்பல் எண்டர் பண்ணுவான் என்று வருங்கால மாமியாருக்கு ஆசை காட்டப்படும்.

சப்புவதன்மூலம் ஒரு கட்டத்துக்குமேலே தாக்குப்பிடிக்கமுடியாது என்று நம்ம சப்பல் சுதாரிக்கும் சமயத்தில் உயர்தரத்தின் மூன்று முயற்சிகளும் வீணாகப்போயிருக்கும்.

&&&&&&&&&&&&&&&

சப்பல் மன்னர்களுக்கு நேர் எதிரான கோஷ்டி ஒன்று இருக்கிறது. ஆபத்தான கோஷ்டி. அவர்கள் இரவிரவாக குத்து குத்தென்று குத்திவிட்டு மறுநாள் காலை ஒன்றுமே படிக்காதவர்கள் போன்று பாவ்லா காட்டுவார்கள். “உனக்கென்ன மச்சான், நீ குத்தியிருப்பாய், எனக்கு காய்ச்சல், சரியாக படிக்க முடியவில்லை” என்று சொல்லி கடுப்பேற்றுவார்கள். கொஞ்சம் சராசரிக்கு மேலான அத்தனை கெட்டிக்காரர்களுக்கும் இந்த பிக்காளிக்குணம் இருக்கிறது. படித்தேன் என்று சொல்லுவதற்கு அப்படி ஒரு பிகு. அதற்கு தெளிவான ஒரு காரணம் இருக்கிறது. தப்பித்தவறி மார்க்ஸ் குறைவாக வந்துவிட்டால், நான் படிக்கவில்லை, அப்பவே சொன்னேனில்லையா என்று தப்பிக்கலாம். நல்ல மார்க்ஸ் வந்துவிட்டால், தான் படிக்காமல் மார்க்ஸ் எடுக்கும் மண்டைக்காய் என்று மற்றவர்களை நினைக்கவைக்கலாம்.

மேற்சொன்ன இரண்டு பிரிவுகளையும் தவிர்த்து மேலுமிரண்டு பிரிவுகள் இருக்கின்றன. கொஞ்சம் நேர்மையான பிரிவுகள். பரீட்சைக்கு முதல்நாள் புத்தகம் திறந்து விடிய விடிய படித்து, காலையில் கண்ணெல்லாம் இரத்தச்சிவப்போடு கொப்பியின் கடைசிக்கட்டை படக் படக்கென்று ஓடும் பிரகிதிகள். அடுத்தபிரிவு கடும் மண்டைக்காய்கள். அலட்டிக்கொள்ளாமல் வந்து, மண்டபத்துக்கு வெளியே மற்றவர்களின் கடைசிநேர டவுட்டுகளை கிளியர் பண்ணிவிட்டு உள்ளே போய் சாவகாசமாக எக்ஸாம் எழுதும் கெட்டிக்காரர்கள். பரீட்சை அன்றைக்கும் வகுப்பென்று நினைத்து பாடசாலைக்கு வரும் பிரிவினர் எப்படியும் இந்தப்பந்திவரையும் வாசிக்கப்போவதில்லையென்பதால் அவர்களை இங்கே விட்டுவிடுவோம்.

&&&&&&&&&&&&&&&

schoolboy

சப்பலோ, சச்சினோ நம்மாட்கள் படிப்பதற்கு பயன்படுத்தும் மெதடுகள் தனிரகம். எங்கள் வீட்டிலேயே ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மார்க்கமாக படிப்பார்கள். அண்ணா ஒரு சமன்பாடு பாடமாக்கினால் ஒரு நாவுக்கரசர் தேவாரம் பாடுவார். அப்போதுதான் சமன்பாடு மறக்காவண்ணம் சிவன் பார்த்துக்கொள்வார் என்பது அவரது நம்பிக்கை.

அக்கா ஏ/எல்லில் பயோ படித்தவர்.  அப்போது எனக்கு பன்னிரண்டு வயது. அக்காவும் நண்பிகளும் இரவிரவாக படிப்பார்கள். விடியக்காலமை ஐந்துமணி வரைக்கும் அது போகும். ஏ. ஆர். ரகுமான் ஜாதி. தூக்கம் வராமலிருக்க சரவச்சட்டிக்குள் தண்ணீர் நிரப்பி அதற்குள் காலை வைத்துக்கொண்டு படிப்பார்கள். சளிப்பிடிக்கும். மேசை லாம்புக்கு ஒரு இரவில் இரண்டு மூன்று தடவைகள் எண்ணெய் நிரப்பப்படும். மண்ணெண்ணெய் ஒவ்வொருத்தரும் ஒவ்வொருநாள் டேர்ன் வைத்து கொண்டுவரவேண்டும். விடியக்காலமை அக்கா தட்டி எழுப்புவா. ஒரு பிளேன்ரியும் தருவார்.

“சுதர்சினி அக்காவோட வீடுவரைக்கும் போயிட்டுவாடா அச்சாப்பிள்ளை”.

பகல் முழுதும் தூங்குவார்கள்.

எங்கள் வீடு யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்துக்கு அருகிலிருந்ததால் வீட்டு ரூம்களில் ரென்ட்டுக்கு இருக்கும் அக்காமார்களும் கலைப்பீட மாணவர்களாகவே இருப்பார்கள். அதிலே ரமணா, சந்திரா என்று இரண்டு அக்காமார். ஒருவர் ரஞ்சகுமார், முருகையன் கவிதைகளை ஆராய்ச்சி செய்தார். மற்றையவர் பளைப்பிராந்திய இடங்களுக்கான காரணப்பெயர்களை ஆராய்ந்தவர். இருவருமே அதிகாலை மூன்று மணிக்கு எழுந்து படிப்பார்கள். மெலிதாக பி. சுசீலா கேட்பார்கள். ஓரிருமுறை நானும் அவர்களோடு சேர்ந்து படிக்கப்போகிறேன் என்று எலார்ம் வைத்து எழுந்து, அவர்கள் ஊற்றித்தரும் பிளேன்ரீயை குடித்துவிட்டு, இலங்கையின் பரப்பளவு 65,610 சதுரமீட்டர்கள் என்பதை பாடமாக்கிவிட்டு மீண்டும் படுத்திருக்கிறேன்.  

&&&&&&&&&&&&&&&

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு.

சந்திரிக்கா-ரத்வத்தை கூட்டணியின் முன்னேறிப்பாய்தல் தாக்குதல் ஜூலையில் இடம்பெறுகிறது. மொத்த வலிகாமம் மேற்குப்பகுதி மக்களும் இடம்பெயர்ந்து யாழ் நகரப்பகுதிகளில் தங்கியிருக்கிறார்கள். அனேகமான வீடுகளில் குறைந்தது ஒரு குடும்பமாவது இடம்பெயர்ந்து தங்கியிருந்தது. ஓகஸ்ட் மாதத்தில் உயர்தரப்பரீட்சை. ஒருமாதம் கூட இல்லை. வீடுகளில் படிப்பதற்கேற்ப சூழல் இல்லை. எங்கே பார்த்தாலும் ஆட்கள். ஆறுபேர் சேர்ந்தால் தாள் ஆட்டம். நான்குபேர் சேர்ந்தால் தாயம் என்று பொழுதுபோக்கிக்கொண்டிருக்கையில் படிப்பது எப்படி? “புக்காரா, எடித்தாரா, போயாச்சே எடுப்பாரா?” நாற்சந்தி மூலைகளில் எல்லாம் சுடச்சுட கொம்போஸ் பண்ணி பாட்டு போட்டுக்கொண்டிருந்தார்கள். படிப்பது எப்படி முடியும்? பரீட்சை நடக்குமா என்பதே கேள்விக்குறியாக இருந்த சமயம் அது. பரீட்சைத்தாள் வந்த கப்பல் தாமதமானதால் பரீட்சைகூட இரண்டுமணிநேரம் கழித்தே அவர்களுக்கு ஆரம்பித்தது.

ஆனாலும் அந்த ஆண்டு உயர்தரத்தில் யாழ்ப்பாணம் முழு இலங்கைக்குமே ஒரு காட்டு காட்டியது.

யாழ் இந்துவிலிருந்து வகுப்பு வகுப்பாக எண்டர் பண்ணினார்கள். ஏராளமான மாணவர்கள் சுப்பர்மெரிட்டில் தேர்ச்சியடைந்திருந்தார்க்கள். அதற்கு அந்த மாணவர்கள் கெட்டிக்காரர்கள் என்பது முக்கிய காரணம். ஆனால் அதோடு வேறு சின்ன சின்ன காரணங்களும் இருக்கின்றன.

Connecting the dots now.

தொண்ணூற்றொன்று முதல் தொண்ணூற்றைந்து வரை யாழ்ப்பாணத்து ஊர்களைப் பொறுத்தவரை போர் நேரடியாக பாதிக்கவில்லை. புலிகளின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம். ஷெல்லடி, பொம்மரடி, அவ்வப்போது முன்னேற்ற முயற்சிகள் இடம்பெற்றாலும் பெரும்பான்மை யாழ்ப்பாணம் இடம்பெயராமல் அங்கேயே இருந்தது. அப்படியே இடம்பெயர்ந்தாலும் இரண்டொரு நாட்கள் இடம்பெயர்வார்களேயொழிய மாசக்கணக்கில் இடம்பெயர்ந்தது குறைவு. பாடசாலை, தனியார் கல்வி நிலையங்கள் எல்லாமே இடையூறு இல்லாமல் இயங்கின. போர், போர்சார்ந்த நடவடிக்கைகள் இருந்தனவேயொழிய சமூக சீரழிவு என்ற சேட்டைக்கே அப்போது இடமில்லை. போதை, கூசிழிவு போன்ற விடயங்கள் பாடசாலை மாணவர்களை அண்டவே அண்டாது. நான்கு வருடங்கள் தொடர்ச்சியாக, கவனக்கலைப்பான்கள் இல்லாமல் அந்த மாணவர்களால் படிக்கமுடிந்தது.

இன்னொரு முக்கியகாரணம் குறைந்தபட்ச வாழ்க்கைமுறை.

அப்போது ஊரிலே கரன்ட் இல்லை. டிவி இல்லை. தொலைபேசி இல்லை. சினிமா என்ற பெயரில் ஸ்ரீதரில் உறங்காத கண்மணிகள் ஒரு வருடமாக ஓடிக்கொண்டிருந்தது. மாணவர்களுக்கு படிப்பதைத்தவிர செய்வதற்கு வேறு வேலைகள் இருக்கவில்லை. மேசை லாம்பில் படித்ததுகூட இன்னொரு முக்கிய காரணம். விளக்கு வெளிச்சம் புத்தகம், மேசையை என்ற ஒரு குறிப்பிட்ட வட்டத்தையே சுற்றியிருக்கும். அப்பாலே எல்லாமே இருட்டாக இருக்கும்? ஏமாலாந்தவே முடியாது. வளையில் எலியை தொடரமுடியாது. கவனம் புத்தகத்திலேயே இருக்கும். குட்டிக்குட்டி காரணங்கள். ஆனாலும் அவை தாக்கத்தை ஏற்படுத்தின. யோசித்துப்பார்க்கையில் யாழ்ப்பாணத்தில் மாணவர் பெறுபேறுகளை மாத்திரமே வைத்துக்கொண்டு Freakonomics பாணியில் ஒரு ஆராய்ச்சிப்புத்தகம் எழுதலாம்போல் இருக்கிறது. சரி, பிழை, முன்முடிபுகளை விலத்திவைத்து காரணங்களை மாத்திரமே ஆய்வு செய்யும் ஒரு முயற்சி. செய்யலாம்.

&&&&&&&&&&&&&&&

தொண்ணூற்றைந்தாம் ஆண்டு கணிதப்பிரிவில் சஞ்சீபன் அண்ணா அகில இலங்கையில் இரண்டாமிடம் வந்தது உதயன் முன்பக்கச்செய்தியானது. அவ்வளவு சச்சரவுக்குள்ளும் அவர் எப்படிப்படித்தார் என்று பாடசாலைகளில் பல பேச்சுகள் உலாவின. அவர் தண்ணி டாங்குக்குள் இருந்து படித்ததாக குணம் வாத்தியார் பின்னாளில் ஒரு வெடியைக்கொழுத்திப்போட்டார்.

அது ஓரளவுக்கு உண்மையாகவும் இருக்கலாம்.

சண்டை, இடம்பெயர்வு காலங்களில் படிப்பதற்கென்று நம்மாட்கள் இப்படி சில ட்ரிக்குகளை வைத்திருக்கிறார்கள். அச்சமயங்களில் பங்கர்கள், பாழடைந்த ஒதுக்குப்புறமாக இருக்கும் வீடுகள், கோழிக்கொட்டில்கள், மரத்தடி எல்லாம் ஸ்டடி ரூமாக மாறிவிடும். வீட்டு சன்ஹூட்டுக்கு மேலே மேசை  போட்டுப் படித்தவர்களும் உண்டு. பழுதைப்போய் பின்பத்தியில் நிற்கும் காருக்குள் இருந்து படிப்பார்கள். ஒரு தனிமையான இடம் வேண்டும். அவ்வளவுதான். ஆக சஞ்சீபன் அண்ணா தண்ணி டாங்கியினுள்ளேயிருந்து படித்தது அவ்வளவு ஆச்சரியமில்லை.  ஆள் நடமாட்டம் இருக்காது.  பேச்சரவம் இராது. படிக்கலாம். ஏறி உட்கார்ந்துவிட்டால், இலகுவில் இறங்கிப்போக முடியாது. இருந்து படிக்கலாம். அலுப்படிக்கும்போது வெளியே எட்டிப்பார்த்தால் சுற்றுவட்டாரத்தில் யார் யார் குளிக்கிறார்கள், உடுப்புத்தோய்க்கிறார்கள், கள்ளக்காதல் முதல் மூலை வீட்டு ஆச்சி வேலிப்பக்கமாக ஒதுங்குவதுவரை எல்லாவற்றையும் லைவ்விலே பார்த்துவிட்டு மீண்டும் கணக்கை தொகையிடலாம்.

வேறென்ன வேணும்? வாழ்ந்திருக்கிறார்கள்.

&&&&&&&&&&&&&&&

வன்னியில் இடம்பெயர்ந்திருந்தபோது படிப்பு மெதடுகள் மொத்தமாக மாறிவிட்டன. ஒருவருடம் பாடசாலையே இல்லை. நாம் தங்கியிருந்த வீடு ஒருமாதிரி பண்ணை வீடு. நாற்பது பேரளவில் தங்கியிருந்தார்கள். அங்கேயே தமிழாசிரியர் சுந்தரம்பிள்ளை ஒரு குட்டி வகுப்பறையை உருவாக்கினார். அங்கே ஒவ்வொருவரும் தமக்கு கீழே வரக்கூடிய வகுப்புக்கு பாடம் எடுப்பார்கள். நான் ஒன்பதாம் வகுப்புக்கு எடுப்பேன். ஒன்பதாம் வகுப்புக்காரன் எட்டாம் வகுப்புக்கு எடுப்பான். அக்கா எனக்கு கணிதம் விஞ்ஞானம் சொல்லித்தருவார். திடீரென்று ஒரு அண்ணா வந்து உனக்கு நான் கணக்கியல் படிப்பிக்கிறேன் என்பார்.

“படிக்கிற பிள்ளைகள்” என்று நம் எல்லோருக்கும் சிறப்பு கவனிப்பு இருக்கும். அதிகாலை பால் கறந்து முதல் டீ நமக்குத்தான். அரிதாகக்கிடைக்கும் முட்டைப்பொரியல் நமக்குத்தான். “படிக்கிறான் வேலை வாங்காதே”, “படிக்கிறான் தண்ணி அள்ளச்சொல்லாதே”, “அவன்ர உடுப்பையும் சேர்த்துத்தோய்”, “படிக்கிற பெடியன் நல்லா சாப்பிடு”, இப்படி நிறைய. நாற்பது பேர் மத்தியில் கைமாறும் ஒரேயொரு சோனி ரேடியோ படிக்கும் சமயத்தில் நம் கொன்றோலுக்குள் வந்துவிடும். எமக்கென்று கன்றுக்குட்டிகள் கட்டப்படும் சிறிய கொட்டிலை படிப்பதற்காக ஒதுக்கித்தந்தார்கள். கரும்பலகை, சோக்கட்டி என்று எங்கிருந்தோ எல்லாம் ஐட்டங்கள் வந்திறங்கின. அதிகாலை மூன்றரை மணிக்கே எழுப்பிவிடுவார்கள். சிமினி துடைத்து, எண்ணை நிரப்பி  மேசை விளக்கை ஜம்மென்று  கையில் தருவார்கள். மற்றக்கையில் டீ. தப்பவே முடியாது. படித்தே ஆகவேண்டும்.  படித்தோம்.

இன்று நான் எப்போது ஊருக்குப்போனாலும் வட்டக்கச்சிக்குப் போகாமல் திரும்புவதில்லை. திருமணம் முடித்ததும் மனைவியோடு சென்ற முதல் வீடும் அவர்களதுதான். அப்படி என்னப்பா அவர்கள் மீது பிரியம்? என்று கேட்பாள்.

“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”

&&&&&&&&&&&&&&&

உயர்தரத்தில் என் நண்பர் குழாமின் படிப்பு இசையாலே பின்னப்பட்டிருந்தது. என் எல்லா நண்பர்களுக்கும் இசை என்றால் பைத்தியம். பிரியா, ரகுமானின் சுப்பர் போலிஸ் பாடல்களையே ஆயிரம்தரம் கேட்பான். பார்த்திக்கு பாண்டு மாஸ்டர். நான் அழகான மஞ்சப்புறா என்பேன். 

$_1

நாங்கள் படிப்பில் அவ்வளவு கெட்டி கிடையாது. ஆனால் பாட்டுக்கேட்பதற்காகவே படித்தோம். ஒன்பதாம் வகுப்பளவிலேயே கதிரையில் உட்கார்ந்திருந்தபடி கால்களால் மிதிக்கக்கூடிய டைனமோ சைக்கிளை சுபாகரன் அண்ணா பரிசாகத்தந்தார். அதுவே பின்னர் நண்பனாகிவிட்டது. டைனமோ சைக்கிளை காலால் மிதித்தபடி, “தானந்தன கும்மிக்கொட்டி” என்றபடியே ஆறாம் வகுப்புப்பாடம் படித்தது நினைவில் இருக்கிறது. சில சமன்பாடுகளை, தேற்றங்களை பாடல்களோடு சேர்த்து பாடமாக்கியிருக்கிறேன். வீட்டிலே ஆரம்பத்தில் சொல்லிப்பார்த்தார்கள். ரேடியோவை பறித்து வைத்தார்கள். படிக்காமல் திரிந்தேன். ஏதோ படித்தால் போதுமென்று திருப்பித்தந்து கைகழுவி விட்டார்கள்.

அறையில் ரேடியோ எந்நேரமும் ஓய்வில்லாமல் பேசிக்கொண்டோ அல்லது பாடிக்கொண்டோ இருக்கும்.

இருபது நிமிடம் கணக்கு. அடுத்த ஐந்து நிமிடம் கொப்பியை மூடிவைத்துவிட்டு சித்ராவுடன் கண்ணாமூச்சியேனடா. மீண்டும் இருபது நிமிடம் கணக்கு. சோலைக்கொல்ல காட்டுக்குள்ள. மீண்டும் கணக்கு. நீ காற்று. பைத்தியம் தொற்றிக்கொண்டது. இறுதிப்பரீட்சை நெருங்க நெருங்க, கரும்பலகையில் முழு நாள் வேலைத்திட்டமே எழுதிவைத்திருந்தேன். எல்லாமே வானொலி நிகழ்ச்சிகளை மையமாக வைத்து போட்ட பிளான்.

    • காலையில் தூத்துக்குடி வானொலி நிலையம் - அசேதன இரசாயனம்.
    • இலங்கை வானோடி சர்வதேச வர்த்தக ஒலிபரப்பு – இலத்திரனியல்.
    • விவிக்பாரதி – வட்டம்.
    • நித்திரை.
    • இலங்கை வானொலி உள்ளூர் சேவை -  சார்பு வேகம்.
    • ஆல் இந்திய ரேடியோ – வெப்பக்கடத்தாறு
    • வெரித்தாஸ் – தொகையீடு
    • திரைத்தென்றல் - பொது இரசாயனம்
    • பிபிசி – சடத்துவத்திருப்பம்
    • சிங்கப்பூர் வானொலி (பனி கொட்டினால்) – வகையீடு.
    • இன்று ஒரு தகவல் - பாஸ்ட் பேப்பர்ஸ்

காலையில் ஒலிபரப்பப்பட்ட அதே “இன்று ஒரு தகவல்” மீண்டும் இரவு பதினொரு மணிக்கு மறு ஒலிபரப்பாகும். சரி பார்த்துக்கொள்வேன். அப்புறம் பாஸ்ட் பேப்பர்ஸ் செய்யத்தொடங்கினால் பதினொன்றரைக்குப் பின்னர் ஆல் இந்திய ரேடியோவில் பழைய பாட்டுப்போகும். “பிருந்தாவனனும் நந்தக்குமாரனும் யாவருக்கும் பொதுச் செல்வமன்றோ” என்று ஏ. எம் ராஜா பாடலில் ஆரம்பிப்பார்கள். ஒரு மணிவாக்கில் “தேசுலாவுதே” என்று அவர்கள் சுதந்திரத்துக்கு முன்னே போகவும் எனக்கு தூக்கம் வரவும் சரியாகவிருக்கும்.

அதெல்லவோ .. ப்ச்ச்.

****************

 

படங்கள்
https://www.flickr.com/photos/balavasakan/
http://www.colorishi.com/2015/02/any-worries.html

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக