Skip to main content

ஊரோச்சம் 3 : பஸ்

 

jaffna-to-mannar-013-640x427

காலை பத்து மணி. யாழ்ப்பாணம் பொதுப்பேரூந்து நிலையம்.  வவுனியா பஸ் புறப்படுவதற்கு இன்னமும் அரை மணிநேரம் இருந்தது. கூட்டம் இல்லை. உள்ளே ஏறி சீட் பிடித்துவைத்துவிட்டு பராக்குப்பார்க்கலாமென வெளியே இறங்கினேன். 

ஒரே சத்தமாகவிருந்தது. எந்தநேரமும் பேரூந்துகள் புழுதியைக் கிளப்பியவாறு வந்துபோய்க்கொண்டிருந்தன. நிலையத்தில் அவ்வப்போது இடம்பெறும் தமிழ் அறிவிப்புகளை வாகன ஹோர்ன்கள் அடக்கிக்கொண்டிருந்தன. பின் வீதியில் மினிபஸ்காரர்கள் குரல்வளை கிழிய கத்திக்கொண்டிருந்தார்கள். நிறைய மோட்டார் சைக்கிள்கள். லொறிகள். அவ்வப்போது கார்கள். ஒரு பி.எம்.டபிள்யூகூட ஹோர்ன் அடித்துக்கொண்டே சென்றது. சைக்கிள்களை காண்பது அரிதாக இருந்தது. தூரத்தே விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்று பாடிக்கொண்டிருந்தார். காந்தி சிலைக்கு மேல் நின்ற காகமும் விடாமல் கரைந்துகொண்டிருந்தது. எங்கு பார்த்தாலும் யாரேனும் எவரோடேனும் பேசிக்கொண்டேயிருந்தனர். யாருமே அருகில் இல்லை என்றால் போனோடு சாய்ந்தனர். சத்தம் எல்லாவிடமும் வியாபித்திருந்தது. பஸ்ஸுக்கு காத்திருப்பவர்கூட பஸ் ஸ்டாண்ட் குந்திலே படுத்து குறட்டைச்சத்தம் எழுப்பிக்கொண்டிருந்த்தார்.  

துப்பினார்கள். ஆச்சி ஒருவர் வெற்றிலை துப்பியவாறே பஸ்ஸிலிருந்து இறங்கினார். அனேகமாக அனைவருமே பஸ்ஸினுள் ஏறுவதற்கு முன்னர் ஒரு துப்பு துப்பினர். டிரைவர் துப்பினார். நடத்துனர் துப்பினார். ஓட்டோக்காரர் துப்பினார். மோட்டர்சைக்கிளை நிறுத்துபவர் ஹெல்மெட்டை கழட்டியதும் துப்பினார். பொலிஸ்காரர் துப்பினார். சைக்கிளில் செல்பவர் துப்பினார். சப்பாட்டுக்கடைக்குள் போகமுன்னர் துப்பினார்கள்.  வெளியே வரும்போதும் துப்பினார்கள். பஸ்சுக்குள்ளால் தலையை வெளியே நீட்டி துப்பினார்கள். துப்பிய எச்சில் காற்றில் பறந்து பின் இருக்கையில் இருப்பவரின் முகத்தில் தெறித்தது. அவரும் மூஞ்சியை லேஞ்சியால் துடைத்துவிட்டு தானும் ஒரு துப்பு துப்பினார். சிலர் காறித் தூ என்றனர். சிலர் தலை குனிந்து மெதுவாக  உமித்துவிட்டனர். சிலர் பல்லுக்குள் சிக்கியதை து என்று வேகமாக துப்பி வெளியேற்றினர். சிலர் துப்பும்போது வீணி வடிந்து குழந்தைகளாகினர். சிலர் துப்பும்போது சுற்றுப்புறமெல்லாம் குற்றாலம் பறந்தது. எச்சில் கறை எல்லாவிடத்திலும் காணக்கிடைக்கிறது. பஸ் யன்னலின் முழங்கை வைத்தால் எச்சில் ஒட்டுகிறது. செருப்பைத் திருப்பிப்பார்த்தால் ஒட்டிக்கிடக்கிறது. கட்டடங்களின் கரையோரம் கிடக்கிறது. ரோட்டுக்கரையோரங்களில் கிடக்கிறது. கண்ணிவெடி அகற்றுவதுபோல கட்டம் போட்டு தேடினால் ஒரு மீட்டர் சதுரப்பரப்பில் மூன்று நான்கு எச்சில் துப்பல்கள் கசிந்தபடி கிடக்கும். 

துப்புவது என்பது இன்று நேற்று நடப்பதில்லை. நான் அறிந்து யாழ்ப்பாணம் எதன்மேலேயோ, யார்மேலேயோ எப்போதுமே துப்பிக்கொண்டே இருந்திருக்கிறது. எதற்கெடுத்தாலும் துப்புவது. எதுவுமில்லையென்றாலும் துப்புவது. ஊருக்குள் நுழைந்ததும் எங்காவது காறித்துப்பாவிட்டால் எமக்கு பத்தியப்படாது.  முற்றத்தில் கக்கூசில் மரத்தடியில் கோயிலடியில் தவறணையில் என்று ஒரு இடத்தையும் விட்டு வைத்ததில்லை. பொதுக்கிணற்றினுள் துப்புபவரைக்கூட கண்டிருக்கிறேன். ஒருவர் ஏதேனும் அரியண்டப்பட்டால் முதல் செய்யும்வேலை துப்புவது. ஏதாவது செத்து நாறினால், அழுகிக்கிடந்தால், ஒரு குப்பை கிடந்தால், கிடங்கு கிடந்தால், மண் கும்பி கிடந்தால், கழிவு வாய்க்கால் கிடந்தால், பாகுபலி போஸ்டர் ஒட்டியிருந்தால், லொறி நின்றால், பிடிக்காதவர் முன்னே வந்தால், பிடிக்காதவர் ஞாபகத்துக்கு வந்தால், கியூவிலே நின்றால், காதலி சொன்ன டைமுக்கு வராவிட்டால், போன் வராவிட்டால், மனைவியோடு சண்டையிட்டால் என்று எதற்கெடுத்தாலும் துப்புவது நம்முடைய இயல்பாகிவிட்டது. பாதையோரம் துப்பிக்கொண்டுவருபவனை மறித்து நிறுத்தி, நீ வாழ்க்கையில் கடைசியாக எப்போது துப்பினாய் என்று கேட்டுப்பாருங்கள். திரு திருவென முழிப்பான். அவனுக்கு ஞாபகம் இருக்காது. காரணம் துப்புதல் என்பது அவனுக்கு அனிச்சைச்செயல்.  இதனை மாற்ற முயல்வது முடியாத காரியம் என்றே தோன்றுகிறது. வேண்டுமானால் கண்ட இடத்திலே துப்பாதே, இந்தா இங்கே துப்பு என்று குப்பைத்தொட்டிகளில் கூடவே ஒரு சட்டி மண்ணையும் சேர்த்து வைக்கலாம். அதற்கு முதலில் எல்லாவிடமும் குப்பைத்தொட்டி வைக்கவேண்டும்.

நம் ஊர் துப்பலுக்கும் சத்தத்துக்கும் வெக்கையோடு ஏதோ தொடர்பு இருக்கவேண்டும். மழையின்போது அனைத்துமே அடங்கிவிடுகின்றன. மார்கழியில் ஊர் அதிகம் சத்தமாக போடுவதில்லை. காலை மாலை வேலைகளிலும் இவ்வளவு சத்தமில்லை. வெயில் ஏற ஏறவே சத்தமும் ஏறுகிறது. துப்பலும் கூடுகிறது. நாங்கள் வெக்கைக்கு எச்சிலால் வியர்த்துக்கொள்கிறோம். சத்தத்தினால் விசிறிக்கொள்கிறோம்.  எனக்கென்னவோ நம் எண்ணங்களையும் இந்த வெக்கையே தீர்மானிக்கிறது என்று தோன்றுகிறது. கோபம், எரிச்சல், பொறாமை, ஒருவித நிம்மதியின்மை எல்லாமே வெக்கை கொடுக்கும் சாபங்களாகவிருக்கலாம். வெக்கையின் கசகசப்பு மனிதங்களை ஒட்ட விடுவதில்லை.  கோபத்தின்போதும் சத்தம்போடுகிறோம். சாவின்போதும் ஒப்பாரி வைக்கிறோம். பிரிவின்போது கத்தி ஊரைக்கூட்டுகிறோம். பிரிந்தவர் கூடும்போதும் கத்துகிறோம். இவையெல்லாம் வெக்கை கொடுத்த பண்புகள். பொறாமையில் புழுங்கிச் செத்தான் என்பதும் அந்தவகைதான்.  காழ்ப்புணர்ச்சி என்ற வார்த்தைக்கும் எச்சிலுக்கும் வெக்கைக்கும் நிறைய சம்பந்தம் இருக்கவேண்டும்.

அவிச்சு ஊத்தியது. இதே பஸ் ஸ்டாண்ட் பகுதி ஒருகாலத்தில் பூங்காவாக காட்சியளித்தது என்று சொன்னால் நம்ப மாட்டார்கள்..

தொண்ணூற்றுநான்காம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாண பஸ் டிப்போவை ஸ்டான்லி ரோட்டில், ரயில்நிலையத்தின் பின்புறமாகவிருந்த மரங்கள் அடர்ந்த காணி ஒன்றுக்குள் இயக்கம் மாற்றியிருந்தது. பேரூந்துகள் டவுனுக்குள் வந்துபோகும். ஆனால் தரித்து நிற்காது. இப்போதிருக்கும் டவுன் டிப்போவை பூங்காவாக மாற்றியிருந்தார்கள். இவ்வளவு நெரிசலும் புழுதியும் சத்தமும் பக்கத்திலிருக்கும் வைத்தியசாலைக்கு ஆகாது என்று அந்தப் பூங்காவை வடிவமைத்த மாநகரப் பொறியியலாளர் சொல்லிக்கொள்வார். திட்டம் தீட்டியவுடனேயே மரங்கள் நட்டு, ஒரு தண்ணி வண்டியில் தினமும் நீர் ஊற்றுவார்கள். ஒரு வருடத்துக்குள்ளேயே பூங்கா சிலிர்க்க ஆரம்பித்திருந்தது. யோசித்துப்பாருங்கள். சுற்றிவர அவ்வளவு கடைகள், நெரிசல், சத்தம். நடுவே சோலையான பூங்கா. எவ்வளவு நன்றாகவிருக்கும். தொண்ணூற்றைந்தில் யாழ்ப்பாணம் ஆர்மியின் கையில் வீழ்ந்தபின்னர் மறுபடியும் பஸ் நிலையம் அந்தப் பூங்காவை சுவீகரித்துக்கொண்டது.  கௌரவ டக்ளஸ் தேவானந்தாவின் உபயத்தில் கட்டடங்கள் மீண்டும் எழுந்துவிட்டன. 

ஊர் வழமைபோல எச்சிலால் வியர்த்து சத்தத்தால் விசிற ஆரம்பித்துவிட்டது. 

34289143

வீதியோரக்கடைகளை நோக்கிப்போனேன். அடுக்கப்பட்டிருந்த ஒரேஞ் பழங்கள் புழுதியில் செம்பாட்டானாகியிருந்தன. கடைக்காரப்பெடியன் மூன்று பழங்கள் நூறு ரூபாய் என்றான். பக்கத்திலேயே கச்சான் விற்றுக்கொண்டிருந்தார்கள். ஐம்பது ரூபாவுக்கு கச்சானை வாங்கிக்கொண்டு திரும்பையில் ஒரு பிச்சைக்காரன், அட்டையில் ஒட்டிய மெடிக்கல் ரிப்போர்டை காட்டி பத்து ரூபா கேட்டான். சேர்ட்டை விலக்கினான். உள்ளே இராமன் சீதையை தையல்போட்டு மூடியதுமாதிரி ஒரு நீட்டுத்தழும்பு. காசு இல்லை என்றேன். "பொரு" என்று சிங்களத்தில் சொல்லியபடியே கடந்துபோனான். இன்னொரு சின்னப்பெடியன். பத்து வயது இருக்கும். போட்டிருந்த மஞ்சள் வேட்டி, சால்வைக்கு பொருந்தாமல் பக்பாக் கொழுவியிருந்தான். ஆவரங்காலோ எங்கேயோ ஒரு கோயில் கும்பாபிஷேகத்துக்கு பணம் கேட்டு உண்டியல் குலுக்கினான். குறிகட்டுவான் பஸ்ஸுக்கு காத்திருந்த நடுத்தரவயதுக்காரர் ஒருவர் இருபது ரூபா போட்டார். பக்பாக் சாமி "நூறு ரூபாய்க்குமேல் என்றால் ரிஸீட்டு தருவன்" என்றான். "நீ பள்ளிக்கூடம் போகேல்லையா?" என்று அவர் திருப்பிக்கேட்க, "தவணை விடுதலை" என்று சொல்லிவிட்டு அவன் அடுத்து நின்ற பஸ்ஸுக்குள் ஏறிவிட்டான்.  

தவணை விடுதலை. விடுதலை என்றாலே அது தவணைதான்.

ஆஸ்பத்திரி வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸார் ஹெல்மெட் இல்லாத மண்டைகளை அடிக்கடி வளைத்துப் பிடித்துக்கொண்டிருந்தார்கள். அப்படிப் பிடிபட்ட மண்டை ஒண்டு டை கட்டியிருந்தது. பொலிஸ்காரரைப்பார்த்து "சேர்" என்றது. "அம்மா ஆஸ்பத்திரி பிளீஸ்" என்றது. பொலிஸ்காரரும் "ஹெல்மெட் போடாட்டி நீயும் ஆஸ்பத்திரி" என்று தனக்குத்தெரிந்த தமிழில் அட்வைசினார். துண்டு எழுதினார். ஒரு சேலையும் ஹெல்மெட் இல்லாமல் பின்னாலே பிள்ளையோடு சென்றது. மறிக்கப்படவில்லை.  

பூபாலசிங்கத்தில் உதயனை வாங்கும்வேளையில், புறப்படுவதற்கு தயாராக டிரைவர் ஹோர்ன் அடித்தார். ஓடிவந்து, எச்சிலை எட்டித் துப்பிவிட்டு பஸ்ஸினுள் ஏறி உட்கார்ந்தேன். . 

உதயனை வாசிக்கையில் கூட்டமைப்பின் நடவடிக்கைகள் உற்சாகப்படுத்தின. சரவணபவன் வெள்ளை வேட்டி சட்டையோடு வெயிலுக்கு கறுப்புக்கண்ணாடியும் அணிந்திருந்தார். எப்படியும் ஈழத்தமிழர் பிரச்சனைக்கு ஒரேயடியாக முற்றுப்புள்ளி வைப்பார் என்று தோன்றியது.  மனைவியிடம் பேப்பர் வாசிக்கிறியா என்று நடுப்பக்கத்தை கொடுத்தேன்.

"உதயனா? அவங்கள் சும்மா கூட்டமைப்பையே புழுகுவாங்கள், வலம்புரியை வாங்கினியளில்ல"

பேப்பரை மடியில் வைத்து கச்சான் கோதை உடைத்துப்போட ஆரம்பித்தேன்.  

தொண்ணூறுகளில் யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த காலத்தில் நான் பஸ்ஸிலே பயணம் செய்ததே அரிது. எல்லாத்துக்கும் சைக்கிள்தான். ஸ்கூல் பஸ்ஸிலே பெண்களோடு ஒன்றாக பயணிக்கும் நண்பர்களைப்பார்த்து பொறாமைப்பட்டிருக்கிறேன். வாழ்ந்தாங்கள். பெண் நண்பிகளோடு கதைக்கவும் செய்தாங்கள். பின் சீட்டிலே அமர்ந்துகொண்டு, பெண் நண்பிகள் உள்ளே ஏறும்போதும் இறங்கும்போதும் ஒவ்வொரு கொமெண்ட் அடிப்பார்கள். அங்க லாவண்யங்களை வகுப்பில் புட்டு புட்டு வைப்பார்கள்.  நமக்கு அந்த அதிர்ஷம் அமையவில்லை. பெண்கள் பேரூந்தும் ஆண்கள் பேரூந்தும் போட்டிபோட்டு ஓடுவதும் அந்நாட்களில் சகஜம். பிக் மேட்ச் என்றால் எல்லா பஸ்களிலும் அவரவர் பாடசாலை கொடிகள் பறக்கும். எனக்கு தெரிந்த சிறுவயது பஸ் பயணங்கள் எல்லாம் நயினாதீவுப் பயணங்களே. கல்யாணி என்றொரு பறணை பஸ்ஸும் ஓரிரு தட்டிவானும் அப்போது நயினாதீவு ரூட் ஓடிக்கொண்டிருந்தன. வெங்காய மூட்டைகள், புகையிலைக்கட்டுகள், கருவாடுகளோடு உட்கார்ந்து ஊருக்குப்போய்வந்த அனுபவம். மற்றும்படி யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறும் சந்தர்ப்பம் தொண்ணூறுகளில் அமையவில்லை. அமைந்தபோது சைக்கிளை உருட்டிக்கொண்டு ஊரே கூட்டமாகச் சென்றோம்.

பேரூந்து பயணங்கள் தொடர்கதையானது கொழும்பு சென்றபின்னர்தான். கொழும்பு வாழ்க்கையில் 100, 155, 255 பேரூந்துகள் பரிச்சயமானவை. கொழும்பு சென்ற புதிதில் பேரூந்துகளின் வேகமே ஆச்சரியமாகவிருந்தது. பஸ் டிரைவர்கள் தாம் என்னவோ  ஓட்டோ ஒட்டுவதாக நினைத்துக்கொண்டு இடுக்குகளுக்குள்லெல்லாம் பஸ்ஸை நுழைத்து எடுப்பார்கள். அதிலும் 255 கட்டுப்பெத்த பஸ்ஸிலே புட்போர்டில் தொங்கிக்கொண்டு செல்லும் அந்த ஐந்து நிமிட பயணத்தில் சீவன் போய்வரும். ஒரேயொரு விரலின் பிடிமானத்தில், சறுக்கினால் வீரகேசரியின் நான்காம் பக்கச்செய்தியாகிவிடக்கூடிய ஆபத்தில் அந்தப்பயணம். கட்டணம் மூன்று ரூபாய் ஐம்பது சதம்.

அனேகமான கொழும்பு பஸ்களின் யன்னல் கண்ணாடிகளை இறுக்கிப்பூட்ட முடியாது. மழை பெய்தால் தெப்பலாக நனைந்துவிடுவோம். ஆனாலும் பேரூந்துகளின் யன்னல்கரை ஒரு அற்புதமான போக்கிடம். அப்போது என்னிடம் ஒரு பனசொனிக் வோக்மன் இருந்தது. போட்டுக் கேட்டுக்கொண்டு யன்னலில் ஒரு கையை மடித்துவைத்து பராக்குப்பார்த்தால் சொர்க்கம் தெரியும். என்ன ஒன்று “வசீகரா” ஜெயசிறீயை பஸ்ஸின் சிங்கள பைலாவோடு ரீமிக்ஸ் பண்ணும் பக்குவம் நம்மிடம் இருக்க வேண்டும். யன்னல்கரை அல்லாமல் மற்றக்கரையில் முழுமையாக உட்காருவதற்கு பேரூந்துகளில் இடவசதி போதாது. அரைப்புட்டத்தில்தான் அமரவேண்டும். அதுவும் யன்னல்கரையில் பெண்கள் எவரும் அமர்ந்திருந்தால் முட்டக்கூடாதே என்ற எண்ணத்தில் முழுமையாக அந்தரத்தில் உட்கார்ந்திருப்போம். பஸ் நெரிசலில் இடுபடும்போதும் இதே நிலைதான். முன்னே ஒரு பெண். கொஞ்சம் உடுப்பும் அப்பிடி இப்படி போட்டிருக்கிறாள். பட்டால் வேண்டுமென்றே இடிக்கிறோம் என்று நினைத்துவிடுவாளோ என்ற பயத்தில் டிரைவர் பிரேக் போட்டாலும் கஷ்டப்பட்டு முட்டாமல் சமாளிப்போம். ஆனால் பின்னால் நிற்கும் பெண்ணோ அந்த பிரக்ஞையே இல்லாமல் கும்மென்று ஒரு இடி இடிப்பாள். பசிலன் 2000.

கொழும்புக்கு சென்றிறங்கியவுடனேயே என்னுடைய அங்கிள் சொன்ன முதல் வாசகம், “பின்னால வச்சிருக்கிற பேர்ஸை எடுத்து முன்னால வை”. அன்றையிலிருந்து பேர்ஸ் எப்போதுமே என் கண்காணிப்பில் முன் பொக்கட்டிலேயே இருக்கும். அதுவும் ஐஸி, போலிஸ் ரிப்போர்ட் தனியாக அம்மாளாச்சியோடு ஐ.ஸி கவரினுள் இருக்கும். என்னுடையது கல்கிசை போலிஸ் ரிப்போர்ட். மடிப்பு பிய்ந்து உக்கி பெயரே விளங்காமல் உருமாறியிருக்கும் அந்த துண்டுத்தாளில்தான் நம் உயிரையே ஒப்படைத்து வைத்திருந்தோம்.  ஒவ்வொரு சென்றியை கடப்பதும் ஒவ்வொரு பிரசவம். குறிப்பாக தெகிவளையில் ஒன்று, பின்னர் பம்பலப்பிட்டியவில் ஒன்று. சென்றியை நெருங்கும்போதே வலி ஆரம்பித்துவிடும். மறிக்கப்படாவிட்டால் சுகப்பிரசவம். மறிக்கப்பட்டு விசாரணையில்லாமல் வெறும் ஐ.ஸியை மட்டும் பார்த்துவிட்டு விட்டானென்றால் சிஸேரியனோடு தப்பினோம். பஸ்ஸை அனுப்பிவிட்டு என்னை மட்டும் மறித்துவைத்தாலோ, “நட ஸ்டேஷனுக்கு” என்றாலோ  அபோர்ஷன். அன்றைக்கென்று பொலிஸ் ரிப்போர்டை கொண்டுவர மறந்துபோய், முதல் நிறுத்தத்தில் ஞாபகம்வந்து அதிலேயே இறங்கி வீடு திரும்பினால் பொய்க்குத்து! 

என் கெட்டகாலம், எனக்கு கிடைத்த வேலையும் அலரி மாளிகையின் பின்பக்கமாக அமைந்துவிட்டது. அந்தப்பக்கம் பஸ்ஸிலிருந்து இறங்கி நடக்கும்போதே வயத்தை கலக்கும். நான்வேறு ஒரு லப்டொப் பையோடு போய்வருவதால் நிச்சயம் மறிக்கப்படுவேன். திரும்பவும் “பொலிஸ் ரிப்போர்ட்”, “ஐ.ஸி”, “அலுவலக ஐ.ஸி”, “விஸ்வவித்யாலய”, “சொப்ட்வேர் எஞ்சினியரிங்”, “அற புரோகிராமிங் எக்க” … “கொம்பியூட்டர்த?” “ஔ” என்று உள்ளூற நடுக்கத்தோடே முகத்தை இயல்பாக வைத்து அவன் என்னுடைய பதினாறு வயது பால்குடி போட்டோவையும் இருபத்துநாலு இஞ்சிதிண்டதையும் பொருத்திப்பார்த்து “மேகக ஓயாத?” என்று கேட்கும்போது “மங் தமாயா?”, “மம தமாயா?” என்று குழம்பி ஏதோ ஒன்றை சொல்லிவைத்து மீண்டு வருவதற்குள் போதும்போதும் என்றாகிவிடும். கேவலங்கெட்ட சீவியம். 

அப்போது எந்தநேரமும் எங்கேயும் வெடிக்கலாம். யாரும் கைது செய்யப்படலாம். யாருடைய பின் குதத்தினுள்ளும் தடி ஏற்றப்படலாம். இதிலே கெட்டித்தனம், துணிச்சல் கதைக்கமுடியாது. பஸ்ஸிலே தமிழ்ப்புத்தகம் வைத்து வாசிக்கப்பயம். கடும் பக்திமான்களே நாத்திகர்களாக திருநீறு பூசாமல் அலைந்த காலமது. போன் ரிங் டோனில் இளையராஜாவோ ரகுமானோ போடமுடியாது. போன் அடித்தால் எடுத்து தமிழில் கதைக்கும்போது பக்கத்திலிருப்பவன் சந்தேகமாகவே பார்ப்பான். நடத்துனரிடம் இத்துறு கேட்கலாம். அவன் தராட்டி சண்டைபிடிக்க அதற்குமேலே சிங்களம் தெரியாது. பதினைந்து நிமிடங்களில் மீண்டும் அவன் காசு குடுத்தியா என்று கேட்கும்போது “துன்னாவா”, “கத்தாவா” என்ற குழப்பத்தில் இரண்டு நிமிடங்கள் வேஸ்ட் ஆகும். 

எனக்கு கொழும்பு வாழ்க்கை என்பது நரகத்தின் விளிம்பு. பயத்திலேயே வாழ்நாளை கழித்த காலங்கள் அவை. ஒவ்வொரு நிமிடமும் கொழும்பு “இது உன்நாடு இல்லை, உன் மொழியை நீ சுதந்திரமாக பேசமுடியாது, இங்கே நீ வேண்டப்படாதவன்” என்று மிரட்டிக்கொண்டே இருந்தது. எப்போதடா படிப்பு முடியும், இந்த நாட்டை விட்டு ஓடலாம் என்று எண்ணிய நாட்கள்.  முடிந்த கையோடு, கொஞ்சநாள் வேலை. கிடைத்த முதல் சந்தர்ப்பத்தில் சிங்கபூர் எயார்லைன்ஸ்.

அந்தப்பயம் இன்றும் இருக்கிறது. பம்பலப்பிட்டிச் சந்தியிலோ, பேலியகொட முடக்கிலோ கை தன்னிச்சையாக முன்பொக்கட்டில் ஐ.ஸி கவர் இருக்கிறதா என்று தட்டிப்பார்க்கிறது. பஸ் கொண்டக்டரோடு சிங்களத்தில் பேச இன்னமும் தயக்கம். அன்றைக்கு மட்டக்குளி பஸ்ஸிலே “மல்லி ஒய இத்துறு சல்லி தெக்கக் தென்னோன” என்று பழைய சிங்களத்தை தூசு தட்டினேன். அவன் ஒருமாதிரி பார்த்தபடி ஐந்து ரூபாயை கையில் வைத்தான். “மா.. இத்துறு நா மல்லி” என்று சொல்ல அவன் “கமன்னா” என்றுவிட்டு போய்விட்டான். இப்போது ஒரு ரூபா, ரெண்டு ரூபா எல்லாம்  பெரிதாக வழக்கிலில்லை என்று மனைவிதான் பின்னர் சொன்னாள். அப்போ எதற்கு பஸ் கட்டணம் பதினெட்டு, பதினாறு என்றெல்லாம் அமைகிறது? ஒரு நாளைக்கு ஒரு பயணியிடம் இரண்டு ரூபா மிச்சம் கொடுக்காமல் கொள்ளையடிக்கிறார்கள். ஒரு ரூட்டிலே நூறு பயணிகளிடம் அப்படி அடித்தால் இருநூறு ரூபாயாகிறது. ஒரு நாளைக்கு ஆறு ட்ரிப் என்றால் ஆயிரத்து இருநூறு ரூபாய். இதில் சமயங்களில் நடத்துனர் பன்னிரண்டு ரூபா டிக்கட்டுக்கு பத்துரூபா அறவிடுவதைக் கழித்தாலும் குறைந்தது நாளைக்கு ஆயிரம் ரூபாய், மாதத்துக்கு முப்பதினாயிரம் ரூபாய் மிச்சக்காசிலேயே அடிக்கிறார்கள். அந்நியன் எங்கே?

பஸ் புறப்பட்டது. பாட்டுப்போட்டார்கள். 

சொல்லாமலே யார் பார்த்தது? 
நெஞ்சோடுதான் பூப்பூத்தது.
மழை சுடுகின்றதே
அடி இது காதலா?
வெயில் குளிர்கின்றதே?
அடி அது காதலா?
இந்த மாற்றங்கள்
உன்னாலே உருவானதா?

அதே பாட்டு. நம்மாள் மாறவேயில்லை.

tamil-masala-actress-monika-glamour-photos-9_720_southdreamzநம்மூரின் பஸ் ஓட்டுனர்கள் பலருக்கும் ஒரு காதல் இருந்திருக்கும். அனேகமானவை ஒருதலைக்காதல்கள். அவர்களுடைய தேவயானியோ, கௌசல்யாவோ அந்த பஸ்  லைனில் இருக்கும் பாடசாலை டீச்சராகவோ, கொமுயூனிகேஷனில் வேலை செய்யும் பிள்ளையாகவோ இருப்பார். சிம்பிளா நைலக்ஸ் சேலை கட்டி, தேடினாலும் கண்டுபிடிக்கமுடியாத சின்னன் இடுப்பைக்கூட கொசுவத்தால் சுற்றி மறைத்து, சின்னதாக ஒரு புரோச் குத்தி,  ஒரு நீட்டு ஹாண்ட் பாக், வெள்ளிக்கிழமை என்றால் ஹாண்ட்பாக் நீளத்துக்கு முழுகி ஈரம் சொட்டும் தழைந்த கூந்தல், அரை வட்ட பிளவுஸ் முதுகிலே திட்டுத்திட்டாய் காலை வெயில் வியர்வை, பெயார் அண்ட் லவ்லிக்கு மேலால் எட்டிப்பார்க்கும் பவுடர், கறுத்தப்பொட்டு, பிள்ளையார் கோயில் திருநீற்றுக்கீற்று, ஊன்றிப்பார்த்தால் தெரியுமளவுக்கு சந்தனம் என்று வெண்முரசு நீளத்துக்கு விபரிக்ககூடிய தேவதை ஒருத்தி பஸ் ஸ்டாண்டில் நிற்கும்போது எந்த டிரைவர்தான் பிரேக்டவுன் ஆகமாட்டான்?

நம்மாள் “சொல்லாமலே” லிவிங்ஸ்டன். அவருடைய கொஸ்டியூம் மிக எளிமையானது. தீபாவளி பொங்கலுக்கு முதலாளி எடுத்துத்தரும் மார்ட்டின் சேர்ட், கிப்ஸ் சாறம் உடுத்தியிருப்பார். சேர்ட்டின் மேல் பட்டன் போடமாட்டார். மார்பு முடி சுருண்டிருக்கும். பனியன் எட்டிப்பார்க்கும். சேர்ட் பொக்கட் கறுப்பு பேர்ஸின் கனம் தாங்காமல் தொங்கும். கையில் கஸியோ மணிக்கூடு. சந்தனம் ஊன்றிப்பார்க்காமலேயே தெரியும். சிரித்தால் மேல் பல்லு இடைவெளியில் வெற்றிலை துகள் சிக்கியிருக்கும். காலிலே சொலாப்புரி செருப்பு. ஓட்டும்போது கழட்டி வைக்கப்படும்.  

எப்படி குத்தி முறிந்தாலும் கௌசல்யாவுக்கு லிவிங்ஸ்டனை பிடிப்பதற்கு சான்ஸே இல்லை. ஆனாலும் பிடிக்கும். அழகான பெண்களுக்கு எப்படி அலுக்கோசு ஆண்கள் மீது காதல் வருகிறது என்பது இற்றைவரைக்கும் எந்த அறிவியலாலும் அவிழ்க்கமுடியாத புதிர். உடனே டிரைவர் என்றால் என்ன குறைவா என்று கோஷ்டி கொடி பிடிக்கும். That's not the point. அதே பஸ்ஸிலேயே பின்னாலே வந்து நூலு விடும் டொக்டர் இஞ்சினியர்களை எல்லாம் ஏறெடுக்காமலேயே ஒதுக்கிவிட்டு ஒரு வெத்திலை பாக்கைப் பார்த்து கௌசல்யா சிரிக்குது என்றால் காரணம் இந்த கறுமம் பிடித்த காதல்தான்.  டேஸ்டோத்தரன். ஈஸ்ட்ரோஜன். யூ நேம் இட். ஆனால் இந்த சனியன்கள் யார் யாரை நோக்கும்போது சுரந்துவைக்கும் என்பதை யாராலும் இதுவரைக்கும் கண்டுபிடிக்கமுடியவில்லை. இலக்குவனனும்தானே அதே மிதிலை வீதியால் வந்தான்!

அதே சமயம் இதை வெறும் ஹோர்மன்கள் என்று சொல்லி லிவிங்ஸ்டனுடைய திறமையையும் குறைத்து மதிப்பிட முடியாது. He knows how to crack it! யோசிக்கவே மாட்டார். பஸ்ஸிலே டீச்சர் ஏறும்போதே ஸ்பொண்டானியஸாக பேசுவார்.

"என்ன டீச்சர் நாளைக்கு பவுடர் வாங்கோணும்போல"

அதிகமாகத்தான் பூசிவிட்டோமோ என்று தன்னிச்சையாக டீச்சர் முகத்தை தடவிப்பார்ப்பார்.

"டீச்சருக்கு பெரிசா ஏதோ வேண்டுதல்போல, சந்தனம் நெத்தி முழுக்க கிடக்கு"

டீச்சர் சீட் கிடைக்காட்டி நின்றபடியேனும் ஹாண்ட் பாக்கிலிருந்து கண்ணாடி எடுத்து முகம் பார்த்துக்கொள்வார்.கண்ணாடி பார்த்து பவுடர் சரியாகத்தான் இருக்கிறது, சந்தனம் அப்பவில்லை என்றதும் டீச்சருக்கு இயல்பாக ஒரு கோபம் வரும். இறங்கும்போது திட்டிக்கொண்டே போவார்.

"கண் மண் தெரியாதவனுக்கெல்லாம் எப்பிடி லைசன்ஸ் குடுக்கிறாங்களோ தெரியாது. நீர் முதலில உம்மட கண்ணை நல்ல டொக்டரிட்ட காட்டும். பிறகு பஸ் ஓடலாம்"

இரண்டு நாட்கள் இப்படி ஏறும்போது அவன் கொமெண்ட் சொல்வதும் இறங்கும்போது அவள் கொமெண்ட் சொல்வதாகவும் போகும். மூன்றாம் நாள் இவன் கொமண்ட் கேட்பதற்காக  டீச்சரின் முழு முகமும் காத்திருக்கும். நான்காம் நாள், "என்ன இண்டைக்கு சந்தனம் சரியா இருக்கா?" என்று அவளே ஆரம்பிப்பாள். ஐந்தாம் நாள் "இப்ப ஷேர்ட் மேல்பட்டின் குத்தாம விடுறது பஷனா?" என்று நக்கல் அடிப்பாள். சனி ஞாயிறு ஏன் பள்ளிக்கூடம் இல்லை என்று கவலைப்படுவாள். திங்கள்  காலை பவுடர் போடும்போதும் புரோச் குத்தும்போதும் பிளீட்ஸ் எடுக்கும்போதும் தலை முடியும்போதும் அவன் என்ன சொல்லுவான் என்று மனம் ஒத்திகை பார்க்கும். இறங்கும்போது முதுகைப்பார்ப்பான் என்று பிளவுஸ் முதுகு அரைவட்டத்தில் தங்கச்சியைக்கொண்டு ஸ்பொஞ்சால் பின்க் பவுடர் பூசுவாள். முகம் முழுக்க புன்னகையாய் பிள்ளையார் கோவிலில் சந்தனப்பொட்டு வைப்பாள். சரியான டைமுக்கு வருகின்ற பஸ் லேட்டாவதுபோல தோன்றும். தூரத்தே பஸ்ஸைக் கண்டதும் மீண்டுமொருமுறை ஹாண்ட்பாக் கண்ணாடியில் முகம் சரிபார்த்து, பஸ் நின்றதும் உள்ளே ஏறினால் அவன் சிரித்தபடியே சொல்லுவான்.

"கலக்குறீங்கள் டீச்சர்"

அவன் ஷேர்ட்டின் மேல் பட்டின் பூட்டியிருக்கும்!

கௌசல்யாவோடு ரொமான்சை கொன்டினியூ பண்ண டிரைவரிடம் இருக்கும் ஒரே ஆயுதம் பஸ்ஸினுடைய கஸட் ரேடியோ. டிரைவர் தன் ரசனைக்குண்டான அத்தனை காதல் பாடல்களையும் இரவோடு இரவாக ரெக்கோர்ட் பண்ணிப் போடுவார். சில சாம்பிள்கள்.

அத்திப்பழம் செகப்பா? இந்த அத்த மக செவப்பா?

புறா புறா பெண் புறா.

செவ்வந்திப்பூ எடுத்தேன்.

நெஞ்சுக்குள்ள இன்னாருன்னு

வெண்ணிலவே வெண்ணிலவே வெட்கம் ஏனம்மா.

ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ.

ஏதோ ஒரு பாட்டு.

மீனாப்பொண்ணு மீனாப்பொண்ணு.

ஏலேலங்கிழியே.

சிட்டு சிட்டு குருவிக்கு கூடு எதுக்கு.

ஒருநாளும் உனை மறவாத.

திரும்ப திரும்ப பார்த்து பார்த்து

அனேகமானவை சிற்பி, எஸ்.ஏ.ராஜ்குமார், தேவா இசையமைத்ததாய் இருக்கும். ராஜா அவ்வப்போது "என்னவென்று சொல்வதம்மா?" என்பார். ரகுமான் இதுக்கெல்லாம் வேலைக்காகமாட்டார். நம் ஊர் பேரூந்துகளிலும் அவரால் ஒட்டவும் முடியாது."தீ தீ தித்திக்கும் தீ"  பாட்டையெல்லாம் ஸ்டீரியோ சரவுண்டிங் இல்லாமல் கேட்டால் பெண்குரல் கிணற்றுக்குள்ளிருந்தே ஒலிக்கும். பஸ்ஸிலோ இடப்பக்க பொக்ஸின் வயர் அறுந்து தொங்கும். இதில பாட்டு எங்கே கேட்கப்போகுது. ஆனால் "செவ்வந்திப்பூ எடுத்தேன்" என்று சுசீலா கணீரெண்டு தொடங்கினால் பஸ்ஸின் இரைச்சலே மறைந்துபோய்விடும். இந்த பாடல்களிலிருக்கும் இயல்பான இன்னசன்ஸ் எல்லோரையும் ரசிக்கவைக்கும். எல்லோரும் முணுமுணுப்பர். எஸ்.ஏ.ராஜ்குமாரினதும் சிற்பியினதும் வெற்றி ரமேஷையும் சுதாவையும் கோமதியையும் கரனையும் எஸ்.பி.பி ஹரிஹரன் சித்ராவாக்கியது. 

பாட்டு போய்க்கொண்டிருக்கும்போது ஹெட் மிரராலே அடிக்கடி அண்ணலும் டீச்சரும் நோக்கிக்கொள்வர். "சாமந்திப்பூவே, சமைந்தபூவே, ஜாமத்தில் இருக்கு சங்கதி" என்று எஸ்பிபி பாடும்போது சித்ரா க்ளுக்கென்று வெட்கமாய் சிரிப்பாரே. அப்போது ஹெட் மிரரில் கௌசல்யாவும் வெக்கப்படும். அதுபோதும் டிரைவருக்கு. “ஜாமத்திலிருக்கு சங்கதி” என்று மிச்சப்பாட்டை பாடிக்கொண்டே அக்சிலரேட்டரை நம்மாள் அமத்துவார்.

டெஸ்ட்ரோஜனோடு சேர்ந்து பஸ்சும் பறக்கும்.

யோசித்துப்பார்த்தால் இதொரு சின்ன விசயம். டீச்சரை மடக்க அந்த டிரைவர் ஒன்றும் குத்தி முறிந்திருக்கமாட்டான். இதை அந்த இஞ்சினியர் டொக்டர் வல்லைகளுக்கு செய்யத்தெரியாது. அதே பஸ்ஸிலே கௌசல்யாவுக்கு பின்னாலே ஒரு டொட்டுவும் திரிந்திருக்கும். செமையா பீல் பண்ணியிருக்கும். ஒரு வருஷமா அவளுக்கே தெரியாமல் ஸ்கூலுக்கு கூட்டிக்கொண்டுபோய் கொண்டுவந்திருக்கும். அவள் இத்தினாம் திகதி எந்தச்சேலை கட்டினாள், என்ன பூ, சாண்டில்ஸ் என்று எல்லாமே விரல் நுனியில் அந்த டொட்டு வைத்திருப்பான். ஆனால் டீச்சருக்கு இப்படி ஒரு அறணான் ஊரிலே இருப்பதே தெரிந்திருக்காது. டொட்டுவும் அவளுக்கு பிடிக்குமா, பிடிக்காதா, பேசுவாளா, பேசமாட்டாளா, திட்டுவாளா, திட்டமாட்டாளா, அப்பாவிடம் சொன்னால் என்னாவது, அப்பிடியே அவள் ஓம் சொன்னாலும் அடுத்தது என்ன? படிக்கிற டைம்ல காதல் தேவைதானா? சாதிப்பிரச்சனை வராதா? படிச்சு வேலை கிடைச்சாப்பிறகு கேப்பமா? அதுவரைக்கும் தேவதையை தனிய விடுவாங்களா? ஓடிப்போகவேண்டி வருமோ? லைப் பாழாகிடுமோ? என்று ஆயிரத்தெட்டு குழப்பங்களோடு திரியுமே ஒழிய ஒரு வார்த்தை பேசுமா என்றால் ம்ஹூம். தயக்கம். கடைசியில் பஸ் டிரைவர் கட்டையைப் போடுறான், இனியும் லேட்டானா டிப்போவுல கொண்டுபோய் அடிச்சிடுவான் என்று பயந்து, ஒருவாறு துணிவை வரப்பண்ணி, வை.எம்.சி.ஏயில் ஆங்கில காதல் கவிதை தேடி எடுத்து, வகுப்பில் கெட்டிகார நண்பன் துணையோடு லவ் லெட்டர் எழுதி கிழித்து எழுதி கிழித்து ஏழாவது வேர்சனில் நம்பிக்கை பிறந்து, நாளைக்கு நாளைக்கு என்று அப்பவும் நான்கு நாட்கள் தள்ளிப்போட்டு, சரி லெட்டரைக் கொடுப்போம் என்று டொகடர் தீர்மானிக்கும் கணத்தில்,

அத்தியடி ரோட்டு மதவடியில் சைக்கிளை நிறுத்திவைத்து, டிரைவர் கௌசல்யாவின் உள்ளங்கையில் ரேகை பார்த்துக்கொண்டிருப்பான். 

Screen-Shot-2014-08-05-at-10.26.26

இந்த டிரைவர் டீச்சர் காதல்கள் நீண்டநாட்கள் நின்று பிடிப்பதில்லை. மதவடி ரொமான்ஸின் ஆயுள் மிகக்குறைவு. ஒருநாள் இல்லை ஒருநாள் மாமனோ, மச்சானோ, அண்ணாவின் நண்பனோ கண்டுபிடித்து வீட்டில் போட்டுக்கொடுத்துவிடுவான். அல்லது டீச்சரின் நண்பிகளே போட்டுக்கொடுப்பார்கள். அல்லது ரெஸ்டொஜன் தீர்ந்து ஆரம்ப தொடுகைகளின் பரவசங்கள் அழியத்தொடங்கிவடும். இவனோடு நம்மால் குடும்பம் நடத்தமுடியுமா என்று டீச்சர் யோசிக்கத்தொடங்குவாள். அடிவயிற்றில் பயம் தோன்றி ஒக்சிடோஸின் அதிகமாக சுரந்து, ஒரு சின்ன சண்டையே பிரிவுக்கு போதுமானதாக இருக்கும். அதுவுமில்லை என்றால் அப்பன்காரன் வெப்பன் தூக்குவான். மகளை கட்டுப்படுத்துவது கடினமென்றால் பஸ் முதலாளியிடம் போட்டுக்கொடுத்துவிடுவார். டிரைவருக்கு வேலை போய்விடும். அவன் இரண்டு நாள் டீச்சரைத்தேடி பள்ளிக்கூடப்பக்கம் போய்ப்பார்ப்பான். டீச்சரை கொழும்புக்கோ, வவுனியாவுக்கோ படிக்க அனுப்பியிருப்பார்கள். அல்லது முதன்மைத்தெரிவென்று சொல்லி எவனாவது வெளிநாட்டுக்காரன் கொத்தியிருப்பான். டிரைவர் ஒரு வாரம் தாடி வளர்ப்பான். தாள் ஆட்டத்தின்போது அவள் ஒரு …. என்று கெட்ட தூஷணம் கொட்டுவான். , சிகரட், குடி என்று கொஞ்சநாள் திரிவான். அப்புறம் வயிற்றுப்பாட்டை பார்க்கவேண்டும். மீண்டும் பஸ் முதலாளியிடம் போவான். முதலாளியும் அதே ரூட்டையோ அல்லது ஒரு புது ரூட்டையோ கொடுப்பார். நினைவுகள் துரத்தும். ஆச்சி ஏறினாலும் கௌசல்யா வாசமடிக்கும். ஆனந்தி ஏறினாலும் கௌசல்யா. அன்னம்மாக்கா வெத்திலைப்பையோடு ஏறும்போதும் கௌசல்யா ஹாண்ட்பாக்கோடு ஏறுவது போன்றிருக்கும். ஒவ்வொரு சேலையிலும் டீச்சர். டிரைவர் டீச்சரை உண்மையாகவே காதலித்திருப்பான். அவளோடதான வாழ்க்கையை கனாக்கண்டிருப்பான்.

யோசிக்க யோசிக்க  டிரைவரால் காதல்தோல்வியை தாங்கவே முடியாது. கஸட் மாற்றப்படும். புது லிஸ்ட்.

காதல்ராணி இல்லையே.

எங்கே அந்த வெண்ணிலா.

ஆனந்தம் ஆனந்தம். பாடும்.

ஒரு மணி அடித்தால்.

பாட்டுக்கு யாரடி பல்லவி சொல்வது.

பொன்வானில் மீனுறங்க.

ஊரெல்லாம் உன் பாட்டுத்தான்.

அதுதான் "லா லா லா" மகிமை.

ஆறடிச்சுவருதான்

மலரே தென்றல் பாடும் ராகமிது

டிரைவரின் கண்ணெல்லாம் சோகத்தில் மூழ்கியிருக்க, கௌசல்யாவின் கண்களை வெள்ளரிக்காய் மூடியிருக்கும். கொழும்பு பியூட்டி பார்லரில்.

நாங்கள் பயணம் செய்துகொண்டிருக்கும் பஸ் கனகாம்பிகைக்குளம் தாண்டுகிறது. காதல் ராணி இல்லையே பாடல் ஒலிக்கிறது. ஒருத்தனுக்கு காதல் தோல்வி என்றால் அப்போதெல்லாம் இதுதான் ரெடிமேட் பாடல். இந்த டிரிப்பில் மாத்திரமே இது இரண்டாவது சுற்று ஓடுகிறது. நிச்சயமாக டிரைவருக்கு குறைந்தது ஒரு டீச்சரோ இல்லை கொமுயுனிகேஷனோ இருந்திருக்கவேண்டும்.

“கற்பனையோடு வாழ்ந்துவிட்டேன் பாதி வாழ்க்கையே.

கனவுகளோடு வாழ்ந்திருப்பேன் மீதி வாழ்க்கையே”

முருகண்டியில் பஸ்ஸை நிறுத்தியபோது டிரைவரிடம் பேச்சுக்கொடுத்தேன்.

“அண்ணை எந்தவூர்?”

“இஞ்ச … கிளிநொச்சிதான் ..கனகபுரம்”

நாற்பத்தைந்து வயது மதிக்கலாம். முகத்தையோ முடியையோ அதிகம் கவனிப்பதாய் தெரியவில்லை.  பெயரைக்கேட்டேன். சாந்தன் என்றார். மனைவி, இரண்டு பிள்ளைகள். இரண்டாவது மகள் ஐந்தாம் ஆண்டு ஸ்கோலர்ஷிப் படிக்கிறாளாம்.

“அதேனண்ணை பஸ்ஸிலே எப்பவுமே இப்பிடிப்பாட்டுகள்தான் போடுறனீங்கள்?”

“இல்லத்தம்பி .. இப்பத்த பாட்டுகள் சரியில்லை..”

“அதில்ல அண்ணை .. எழுதுமட்டுவாள்ல இருந்து ஒரே காதல் தோல்வியா இருக்கு”

சிரித்தார். டீச்சரேதான். இருபத்தெட்டு வயதில் சம்பவம் நடந்திருக்கலாம். டீச்சருக்கு அப்போது இருபத்தைந்து என்று வைத்துக்கொண்டாலும் இப்போது நாற்பத்திரண்டு. அவரும் இந்த ஊரிலேயே இருக்கலாம். அல்லது வெளிநாடோ தெரியாது.  எங்கேயாவது எப்போதாவது காணும்போது எஸ்.ஏ.ராஜ்குமார் சோகத்தில் லா.லா பின்னணி போட்டே தீருவார். இப்போது நான் கிளறிவிட்டதால் சாந்தனுக்கு டீச்சர் ஞாபகங்கள் வந்திருக்கும். கைரேகை பார்க்கும்போது எத்தனை பிள்ளைகள் என்றுகூட எண்ணியிருக்கலாம். சிறிது நேரம் பேசாமல் இருந்தவர் மெதுவாகச் சொன்னார்.

“என்னெண்டாலும் சோகப்பாட்டு கேக்கேக்க ஒரு சந்தோசம் இருக்குத் தம்பி!”

சேர்ட்டு மேல் பட்டின் போட்டிருந்தார்.

&&&&&&&&&&&&&&&&&&&&&&&

 

ஊரோச்சம் 1 : செங்கை ஆழியான்

ஊரோச்சம் 2 : ஆட்டிறைச்சி

படங்கள்
lankaweminisu.wordpress.com

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக