Skip to main content

Yarl Geek Challenge – Season 5



கி.பி 1600. 

நெதர்லாந்து நாட்டு மிடில்பேர்க் நகரத்தில் கண்ணாடிக்கடை ஒன்றை நடத்திவருகிறார் லிப்பர்ஷி. பூதக்கண்ணாடி, பார்வைக்குறைப்பாடு உள்ளவர்கள் பயன்படுத்தும் கண்ணாடிவில்லை என்று பல்வேறுவகைக் கண்ணாடிகளும் வில்லைவகைகளும் அவருடைய கடையில் விற்பனைக்குக் கிடைக்கும். லிப்பர்ஷியின் கடையில் அவருக்குத் துணையாக ஒரு உதவியாளரும் வேலைசெய்து வருகிறார். 

ஒருநாள் லிப்பர்ஷியின் உதவியாளர், இரண்டு வில்லைகளை ஓரடி இடைவெளியில் வைத்து அவற்றினூடாக வெகுதொலைவில் இருக்கும் பொருட்களைத் தற்செயலாகப் பார்க்குஞ்சமயத்தில் அந்தச்சம்பவம் இடம்பெறுகிறது. ஆரம்பத்தில் மங்கலாகத் தெரிந்த தூரப்போருட்கள் வில்லைகளுக்கிடையேயான தூரத்தை தொடர்ந்து மாற்றிக்கொண்டிருக்கையில் ஒரு கட்டத்தில் தெளிவாகத் தெரிய ஆரம்பிகின்றன. மிக எட்டத்திலிருந்த தேவாலயம் ஒன்று அருகிலிருப்பதுபோல அவருக்குப் புலப்பட ஆரம்பிக்கிறது. உடனேயே அந்த உதவியாளர் லிப்பர்ஷியிடம் ஓடிச்சென்று தான் கண்டறிந்ததைச் சொல்லியிருக்கிறார். வெகுதொலைவில் இருக்கின்ற பொருளினை, இரண்டு வில்லைகளைக் குறிப்பிட்ட இடைவெளியில் நிறுத்தி, அவற்றினூடு பார்க்கும்போது, அது மிகவும் அண்மித்துத் தெரிகிறது. இதனைக் கண்ணுற்ற லிப்பர்ஷிக்கு அன்றிரவு முழுதும் தூங்கமுடியவில்லை. அடுத்தநாளே மரக்குழாய் ஒன்றினைச் சரிக்கட்டி அதனுள் இரண்டு வில்லைகளை சரியான இடைவெளியில் நிலைநிறுத்திப்பூட்டி எல்லாவிடமும் கொண்டுசென்று தூர இடங்களைப் பார்க்க ஆரம்பிக்கிறார். சாதாரண கண்களுக்குத் தெரியும் எட்டத்துப் பொருட்கள் எல்லாம் அக்குழாயினூடாகப் பார்க்கும்போது மூன்று மடங்கு கிட்டத்தே தெரிந்தன. அடுத்தநாளே லிப்பர்ஷி அக்கண்டுபிடிப்புக்குரிய காப்புரிமையைப் பெற்றுக்கொள்கிறார். காப்புரிமையின் பெயர்,

“For seeing things far away as if they were nearby”.

இந்தக்காப்புரிமை பற்றிய விபரம் விரைவிலேயே ஐரோப்பா எங்கும் பரவ ஆரம்பிக்கிறது. விரைவிலேயே இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவரும் வில்லைகளையும் தூரங்களையும் துல்லியமாக இனங்கண்டு பத்து மடங்கு அண்மித்துக் காட்டக்கூடிய கருவியைக் கண்டறிகிறார். வேறு பலரும் இவ்வேலையில் களமிறங்குகிறார்கள்.

இந்தநிலையில், வில்லைகளைப் பாவித்துத் தொலைகாட்டிகளை உருவாக்கும் இந்த உத்திபற்றி வெனிஸ் நகரத்துக் கலிலியோவும் கேட்டறிகிறார். லிப்பர்ஷியின் ஆரம்ப டிசைனில் பல திருத்தங்களைச் செய்ததன்மூலம் அறுபது மடங்கு அண்மித்துக் காட்டக்கூடிய தொலைகாட்டியைக் கலிலியோ கண்டறிகிறார். அக்காலத்தில் வடிவமைக்கப்பட்ட தொலைகாட்டிகளிலேயே அதிக தொலைவெல்லை கொண்டது கலிலியோவினுடையது.

கலிலியோ ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பின் வினைத்திறனை அதிகரித்ததோடு மாத்திரம் நின்றுவிடவில்லை. அதன் பயன்பாடுகளையும் புதிதாகக் கண்டறிந்தார். தன்னுடைய தொலைகாட்டி சமகாலத்தில் ஐரோப்பாவில் இருக்கும் தொலைகாட்டிகளைவிடப் பலமடங்கு அதிகம் என்று தெரிந்ததும், கலிலியோ அதனையே முன்வைத்துச் சந்தைப்படுத்த ஆரம்பிக்கிறார். உதாரணமாகக் கலிலியோவின் தொலைகாட்டியை வைத்திருக்கும் கப்பல்கள் எதிரிக்கப்பல்களை, அவை இவற்றைப் பார்ப்பதற்கு முன்னமேயே கண்ணுற்றுவிடமுடியும். இதன்மூலம் எதிர்க்கப்பலின் கண்களுக்குள் அகப்படாமல் தப்புவதோ, அல்லது தாக்குதலுக்குத் தயாராவதோ இலகுவாகும். இதனைச் சொல்லிக் காட்டி வெனிஸ் நகரத்தின் தலைவரிடம் தன்னுடைய தொலைகாட்டியை கலிலியோ அதிக விலைக்கு விற்கிறார். 

இது போதாதென்று வணிகர்களிடமும்கூட தொலைகாட்டியை கலிலியோவால் விற்க முடிந்தது. வணிகர்களுக்கு எதற்குத் தொலைகாட்டி என்ற கேள்வி எழுகிறது அல்லவா? கலிலியோவின் தொலைகாட்டியை வைத்திருக்கும் வணிகர்கள், தூரத்தில் வருகின்ற சரக்குக் கப்பல்களை ஏனையவர்களுக்கு முன்னமேயே அறிந்திடமுடியும். அதுவும் ஒன்றிரண்டு நாட்களுக்கு முன்னமேயே. ஆக அவர்கள் மற்றவர்களுக்கு முதலேயே தங்கள் கடைகளில் பொருட்களின் விலையைச் சற்றுக்குறைத்து விற்பதன்மூலம், கப்பல்கள் கரைசேர்ந்தபின்னர் இடம்பெறக்கூடிய விலைச்சரிவு நட்டத்தைச் சமாளிக்கமுடியும். 

இப்படி ஒரு விஞ்ஞானக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியது மாத்திரமல்லாமல் எப்படி அதனை வணிகரீதியாகப் பயன்படுத்தமுடியும் என்பதையும் கலிலியோ அறிந்திருந்தார். செய்துங் காட்டினார். அதே சமயம் தொலைகாட்டியை வானைநோக்கித் திருப்பியதன்மூலம் பிரபஞ்சவியலின் போக்கையே கலிலியோ பின்னாளில் மாற்றிக்காட்டியதும் மத அடிப்படைக் கட்டமைப்புடன் முரண்பட்டதும் நாமெல்லாம் அறிந்தவிடயம்.

ஒரு கண்டுபிடிப்பு என்பது எப்போதுமே புதிதான ஒன்றை உருவாக்குவதாக இருக்கவேண்டியதில்லை. அது ஏலவே இருக்குமொன்றை இனம் காணுதலாகவும் இருக்கலாம். ஏலவே இருக்குமொன்றின் வடிவத்தையோ இயல்பையோ பாவனையையோ சற்று மாற்றுவதாகவும் இருக்கலாம். கண்டுபிடிப்பை நிகழத்துவது என்பது ஒன்று. அதனை முறையாகச் சந்தைப்படுத்துவது என்பது இன்னொன்று. கண்டுபிடித்ததை வைத்துக்கொண்டு மனிதவாழ்வின் போக்கை முன்னகர்த்திச் செல்வது என்பது வேறொன்று. கலிலியோ இந்த மூன்றையும் நிகழ்த்தி, ஒரு விஞ்ஞானியாக, தொழில் முனைஞராக, பிரபஞ்ச அறிவியலின் முன்னோடியாக நினைவுகூறப்படுகிறார்.

கலிலியோ, டெஸ்லா, எடிசன் போன்றவர்கள் நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை நம்மிடையே அரிதாக இடம்பெறும் அதிசயங்கள். அவர்களை விட்டுவிடுவோம். கண்டுபிடிப்புகள் எல்லாம் எப்போதுமே மனிதகுலத்தையே மாற்றியமைப்பதாகவோ, வரலாற்றையே புரட்டிப்போடுவபையாகவே இருக்கவேண்டியது அவசியமானதல்ல. அது மிகக் கடினமானதொன்றாக இருக்கவேண்டிய தேவைகூட இல்லை. மிகச் சாதாரணமான, நாம் அன்றாடம் பார்க்கும், உணரும், சந்திக்கும் விடயங்களிலிருந்தே ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தமுடியும். ஒரு சிறுமாற்றமே பெரும் கண்டுபிடிப்பை நிகழ்த்திக்காட்டக்கூடும். அவை சிறிதாக, ஏதாவது ஒரு தேவையை நிவர்த்தி செய்வதாக, ஒரு சிறு அடியை முன்னோக்கி நகர்த்த உதவுவதாக இருந்தாலே போதுமானது. சமயத்தில் அது வலிந்து யோசித்து நிகழ்த்தப்பட்டதாகவும் இருக்கலாம். பலநேரங்களில் தற்செயலாகவும் அமைந்துவிடுவதுண்டு. எதுவெனினும் அடிப்படையாகத் தேவைப்படுவது ஒரு ஐடியா.

அந்தவகையில் எங்கள் அருகாமையில், எங்கள் மத்தியிலிருந்து உருவான ஒரு கண்டுபிடிப்பைப் பற்றிக் குறிப்பிடுவது பொருத்தமானது. 

இது “Yarl IT Hub” வருடாந்தம் நிகழ்த்திவரும் “Yarl Geek Challenge” போட்டியின் மூன்றாவது பருவத்தின்போது இடம்பெற்றது. 

குறிப்பிட்ட அந்த போட்டியிலே ஆர்வமுள்ள இரண்டு பல்கலைக்கழக இறுதியாண்டு மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள். விவசாயப்பாசனத்திற்குத் தண்ணீரைப் பாய்ச்சுவதற்கு உதவுகின்ற தானியங்கி இலத்திரனியல் இயந்திரம் ஒன்றின் வடிவமைப்பை முன்மொழிகிறார்கள். மண்ணின், வளியின் ஈரப்பதனைக் கண்காணித்து, மழை வீழ்ச்சி, காற்றின் வேகம் போன்றவற்றைக் கணித்து, ஏனைய வானிலை மாற்றங்களைக் கருத்திற்கொண்டு இந்த இயந்திரம் தண்ணீரைத் தேவையான அளவில் தேவையான சமயத்தில் பாய்ச்சக்கூடியது அக்கருவி. அதுதான் ஐடியா.



Drip Irrigation Automation (DIA) என்றழைக்கப்பட்ட இந்த ஐடியா, Yarl Geek Challenge போட்டியின் மூன்றாவது பருவத்தின்போது பலரது கவனத்தையும் ஈர்த்தது. போட்டி முடிவின்பின்னர் Yarl IT Hub அமைப்பின் அனுசரணையுடன் இதனை அந்த மாணவர்கள் சொந்தத் தொழில் முயற்சியாக ஆரம்பித்தார்கள். ஆரம்பித்து சிறிது காலத்திலேயே, விவசாய நீர்ப்பாசனத்துக்கு என்று ஆரம்பித்த அந்த ஐடியாவின் அடிப்படை, ஏனைய பல தேவைகளுக்கும் பயன்படலாம் என்று கண்டறிகிறார்கள். விளைவு, முன்னணி உல்லாச விடுதிகளில் குளிர்பதனப்படுத்தலைக் கண்காணிப்பது முதற்கொண்டு, தேநீர் இயந்திரங்களை மையக்கட்டுப்பாடு மூலம் ஒருங்கிணைப்பதுவரை பல்வேறுவகைத்தேவைகளுக்கு DIA இன் ஆதாரவடிவம் இப்போது பயன்படுத்தப்படுகிறது. இன்று மொரட்டுவைப் பல்கலைக்கழகம் நடத்தும் ஆழ்கடல் சார்ந்த ஆய்வு ஒன்றுக்கும் இத்தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாகத் தெரியவருகிறது. இலங்கை தாண்டி ஏனைய நாடுகளுக்கும் இதனைச் சந்தைப்படுத்தும் சாத்தியங்களும் இப்போது ஆராயப்படுகின்றன.

ஒரு கண்டுபிடிப்பு. அதனை பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தல். வேறு விஞ்ஞான ஆய்வுகளுக்கும் அது பிரயோசனமாதல் என்கின்ற அத்தனை முக்கிய புள்ளிகளையும் “DIA” என்ற இக்கண்டுபிடிப்பு தன்னளவில் நிகழ்த்தியே காட்டியிருக்கிறது. #திருப்தி. #நம்பிக்கை. 

DIA (www.senzmate.com), Busseat (www.busseat.lk) என்று இன்றைக்குப் பல தொழில்முயற்சி நிறுவனங்கள் “Yarl IT Hub” இனுடைய இந்த “Yarl Geek Challenge” போட்டி ஊடாகப் பரிணமித்து வந்திருக்கின்றன. ஐடியா அவரவருடையது. அதனை வடிவமைத்ததும் அவர்களே. ஆனால் ஒரு ஐடியாவை சந்தைப்பொருளாக மாற்றுவதற்கான ஆலோசனைமுதல், அவற்றைக் காட்சிப்படுத்துவதற்கான தளத்தைக் கொடுத்தது, முதலீட்டாளர்களை அவற்றோடு இணைத்துவிட்டது, பயனாளர்களையும் ஒருங்கிணைத்தது, எல்லாவற்றுக்கும் மேலாக நாமும் ஒன்றைக் கண்டுபிடித்து சந்தைப்படுத்தி தொழில் முயற்சியாளர் ஆகலாம், அதில் வெற்றியும் பெறலாம் என்ற நம்பிக்கையையும் சாத்தியத்தையும் கொடுத்தது என்று பல்வேறு வழிகளில் இளையவர்களை ஊக்கப்படுத்தியதில் “Yarl IT Hub” க்கும் அதன் “Yarl Geek Challenge” க்கும் நிறையவே பங்குண்டு. தொழில் முயற்சி என்பதைத்தாண்டி, பல்வேறு தகவல் தொழில்நுட்பம்சார் நிபுணர்கள் கூடுமிடத்தில் இவ்வாறான அனுபவங்களையும் அறிவினையும் தொடர்புகளையும் பெற்றுக்கொள்வதே மிகவும் பயனுள்ளவிடயம் அல்லவா?

அந்த “Yarl Geek Challenge” இன் ஐந்தாவது பருவம் இப்போது ஆரம்பிக்க இருக்கிறது.



இம்முறையும் “Yarl Geek Challenge” போட்டி, முதலீட்டாளர்கள், கணினி நிறுவனங்கள், நிபுணர்கள், ஆலோசகர்கள், ஆர்வலர்கள் என்று எல்லோரையும் ஒன்றிணைக்கும் நிகழ்வாக இடம்பெற இருக்கிறது. இலங்கை நிறுவனங்கள் மாத்திரமன்றி சில வெளிநாட்டு நிறுவனங்களும்கூட இம்முறை இதில் பங்கெடுக்கின்றன. GIZ (www.giz.de) என்கின்ற ஜேர்மனிய நிறுவனம் Jay Cousins (jaycousins.wordpress.com) போன்ற தொழில் விருத்தியாளர்களை அனுப்புவதாக உறுதியளித்திருக்கிறது.

நீங்கள் இந்தப்போட்டியில் இணையவிரும்பினால், உங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு அணியை ஆரம்பித்து, பல்வேறு ஐடியாக்களைக் கலந்தாலோசித்து, ஒரு ஐடியாவை இறுதிசெய்து மெருகூட்டுங்கள். ஏலவே அதற்கொத்த ஒரு ஐடியா வேறெங்கேனும் உருவாக்கப்பட்டிருந்தால், அதிலிருந்து உங்களது எத்தனை வித்தியாசமானது, தனித்துவமானது என்று கண்டறிந்து, அதனை மேலும் சீர்திருத்துங்கள். பின்னர் அதன் மென்பொருளையும் வன்பொருள் ஏதேனும் இருந்தால் அதனையும் சந்தைப்படுத்துவதற்கு ஏதுவான ஆகக்குறைந்த சாத்தியமுள்ள பொருளாக (Minimum Marketable Product) மாற்றியமையுங்கள். பின்னர் மீள்பார்வை செய்யுங்கள். திருத்துங்கள். மீள்பார்வை செய்யுங்கள். திருத்துங்கள்.... செய்நேர்த்தி என்பதற்கு முடிவே இல்லை. இறுதிநாள்வரை அது தொடர்ந்துகொண்டே இருக்கட்டும்.

அதற்கிடையில், 

வரும் செப்டம்பர் முப்பதாம் திகதி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான இறுதிநாள் என்பதால் அதற்குள் உங்கள் அணியைப் பதிவு செய்யுங்கள். தாமாதிக்கவேண்டாம். 

The best way to accomplish something is to start it!

Yarl Geek Challenge - பருவம் ஐந்தின் விபரங்கள் மற்றும் விதிமுறைகள் அனைத்தும் www.yarlithub.org/ygc/ எனும் இணையத்தள முகவரியில் அறிந்துகொள்ள முடியும். மேலும் ஆர்வமுள்ளோர் www.yarlithub.org/ygc/timeline.html எனும் முகவரியில் போட்டிக்கான விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள முடியும். போட்டியில் பங்குபெற விரும்புவோர், எதிர்வரும் செப்டம்பர் 30ஆம் திகதிக்கு முன் தங்கள் விண்ணப்பங்களை event@yarlithub.org எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.



உசாத்துணைகள்
The Big Bang – Simon Singh
www.scienceclarified.com/scitech/Telescopes/The-First-Telescope.html

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக