Skip to main content

கொட்டக் கொட்ட விழித்திருத்தல்


மழை, தந்தையிடம் ஏச்சு வாங்கிய மகளைப்போல இடைவெளி விட்டு இரவு முழுதும் விம்மிக்கொண்டிருந்தது. 

இப்போதெல்லாம் எலார்ம் அடிக்கமுதலேயே காலையில் எனக்கு நித்திரை கலைந்துவிடுகிறது. இன்றும் அப்படித்தான். ஐந்துமணி எலார்முக்கு நான்கே முக்காலுக்கே எழுந்துவிட்டேன். ஒரு சூடான தேநீரை ஊற்றிக்கொண்டு வரவேற்பறையில் வந்து அமர்ந்தேன். வெளியே அந்தச்சிறுமியின் அழுகை இன்னமும் நின்றபாடில்லை. நேற்று எழுதிமுடித்த சிறுகதையின் பிழைகளைத் திருத்தலாம் என்று அதனைத் திறந்தால், முதல் அடிக்குமேலே வாசிப்பு நகர்வதாக இல்லை. இதே சிறுகதையோடு அணு அணுவாக கடந்த இரண்டு வாரங்களின் காலைப்பொழுதுகளைக் கழித்திருக்கிறேன். ஆனால் எழுதி முடித்ததும் அதற்கு நான் ஒவ்வாமையாகிவிட்டேன். “சந்திரா என்றொருத்தி இருந்தாள்” கதையின் வரிகள்தாம் ஞாபகம் வருகின்றன.
“சொல்லியபின்னர் பருவமெய்திய பறவைகள்போல கதைகள் என்னை விட்டுப் பிரிந்துபோகின்றன. அவை திரும்பி வருவதேயில்லை. அவ்வப்போது கடந்து செல்கையிலும் ஒரு வழிப்போக்கர்போலக்கூட அவை என்னை இனம்கண்டு சிரித்துவைப்பதில்லை. கதைகளை எழுதாமல் இனி நம்மோடேயே கூட வைத்திருக்கலாம் என்று...” 
என் கண் முன்னாலேயே என் கதை, மழையையும் பொருட்படுத்தாமல் விட்டு விலகிப் பறந்துபோய்விட்டது. 

பாலோ கொயேல்லோவின் சாகிர் நாவல் வாசித்து அரைவாசியில் நிற்கிறது. எடுத்து இரண்டு பக்கங்கள் வாசித்தேன். மனம் ஒருநிலைப்படுவதாயில்லை. நாவல்களை எதற்காக வாசிக்கவேண்டும்? என்று தோன்றியது. நாமே பாத்திரங்களை சிருட்டித்து, நாமே முரண்களை நிர்மாணித்து, நாமே அவற்றோடு விளையாடி, உறவாடி, சில்லுப்படும் அனுபவத்தை எழுதும் எழுத்து கொடுக்கும்போது எதற்காக வாசிக்கவேண்டும்? எழுதுவதே மிகச்சிறந்த வாசிப்பு என்று தோன்றுகிறது. மனம் வெளியே இன்னமும் அழுதுகொண்டிருக்கும் சிறுமியின்மீதே கவனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தது. அவளைவிட கோயேல்லோவின் எஸ்தர் ஒன்றும் அவ்வளவு முக்கியம் கிடையாது. மூடிவைத்துவிட்டேன்.

யன்னல் திரையைத் திறந்துவைத்து அழுதுகொண்டுநின்ற அந்தச் சிறுமியையே கவனிக்கலானேன். என்னைக்கண்டதோ என்னவோ விம்மல் இன்னமும் கூடிவிட்டது. இரவிரவாக ஊர் முழுதும் அழுது தீர்த்திருக்கிறாள். வாகனங்கள், மரங்கள், வீட்டுத்தபால்பெட்டி, செருப்புகள், செவ்வரத்தைச் செடி, கள்ளிமரம் என ஒன்றையும் விட்டு வைக்கவில்லை. இவள் அழுகையை எப்படி நிறுத்தலாம் என்று விளங்கவில்லை. எழுதிப்பார்க்கலாம்.

ஒவ்வொரு ஊருக்கும் ஒவ்வொரு மழை. மழையும் மனிதர்களைப்போலத்தான். ஊரொச்சம் வைக்கும் மனிதர்களைப்போல 

சிறுவயதிலிருந்தே மழையைத் தனியாகக் கொட்ட கொட்ட இருந்து விழித்துப்பார்ப்பது பழக்கமாகிவிட்டது. எனக்கு மழையில் நனையப்பிடிக்காது. ஆனால் பார்க்கப்பிடிக்கும். அதுவும் யாரும் பக்கத்தில் இருக்கக்கூடாது. மழை எப்போதுமே நமக்குக் கதைகளைச் சுமந்துகொண்டுவருகின்றது. சமயத்தில் நாம் தொலைத்த, காணாமல்போன கதைகளை அவை மீள எடுத்துவரும். பெயர்களை ஞாபகப்படுத்தும். அதேபோல எம்மையும் அது கதைகளாகச் சுமந்துசென்று யாருக்கோ பொழிந்தும் தள்ளும்.  என் கதைகள் பலவற்றை மழையே எழுதியிருக்கிறது. 

எங்கள் ஊர் வீட்டின் மூலையில் ஒரு பெரிய பாழடைந்த கோழிக்கொட்டில் இருக்கிறது. அதன் செழிப்பானகாலத்தில் அம்பது அறுபது கோழிகள் அதற்குள் அடைபட்டிருந்தன. பிற்காலத்தில் ஒன்றிரண்டு ஊர்க்கோழிகள் மாத்திரம் அவையாகவே உள்ளே ஒதுங்கிக்கொண்டிருந்தன. மற்றும்படி பழைய சைக்கிள், மதில் கட்டவென எப்போதோ வாங்கிக்குவித்த குறுமணல், பழைய கட்டில், கறல் பிடித்த சில கம்பிகள் என்று கொட்டில் நிரம்பியிருக்கும். ஏதோ ஒரு காரணத்தால் பழைய பொருட்களை நாம் எறிந்துவிட மறுக்கிறோம். அவை எப்போதாவது பயன்படும் என்று நம்புகிறோம். 

அந்தக்கொட்டிலுக்குள் அமர்ந்திருந்து, கம்பிவலையினூடாக மழையை ரசிப்பது எனக்குப்பிடிக்கும். பக்கத்திலேயே வீட்டுநாய் ஹீரோ பழைய கழிசான், சோட்டி எல்லாவற்றையும் எங்கிருந்தோ கொண்டுவந்து குவித்துப்போட்டு அதற்குள் குளிருக்குக் குறண்டிப்போய்க்கிடக்கும். என்னைக்கண்டதும் சிவனே என்று வாலை ஒருமுறை ஆட்டிவிட்டு மீண்டும் குறண்டிவிடும். மழை அடித்து ஊற்ற ஆரம்பிக்கும். யாழ்ப்பாணத்து மழையில் ஒரு சீர் இருக்கும். கணவனோடு சண்டை பிடித்து அழும் மனைவிபோல. ஒரே சீராக பொழிந்து, ஓய்ந்ததும் வானம் வெளித்துச் சிரிக்கும்,  கணவனோடு சண்டை பிடித்து அழும் மனைவிபோல.

யாழ்ப்பாணத்து மழைகளைப்போல கொழும்புமழைகளை என்றைக்கும் நான் ரசித்ததில்லை. காரணம் அந்த மழையில் அடிக்கடி நனையவேண்டியிருக்கும். கொழும்புமழை மரணவீட்டு ஒப்பாரிபோல. பேயாட்டம் அடித்து ஊற்றும். யன்னலை இழுத்து மூடினாலும் எப்படியோ மழை உள்ளே ஓடிவந்துவிடும். அந்த ஊரின் பேருந்து யன்னல்களுக்கும் கட்டட யன்னல்களுக்கும் மழை என்றால் அவ்வளவு பிரியம். உள்ளே அனுமதித்துவிடும். மழை பெய்தால் தரை கசியும். கசகசக்கும். அதன் வெள்ளமும் கூளத்தோடு சேர்வதால், எக்காலத்திலும் கொழும்பு மழையை என்னால் ரசிக்கமுடிந்ததில்லை.

சிங்கப்பூரில் மழை அருமைக்குப் பெய்யாது. கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் அங்கே மழைதான். அந்த நாட்டின் குணத்தைப்போல மழையும் வச்சுச்செய்ததைப்போலப் பெய்யும். மாலை மூன்று மணியானால் இருட்டிக்கொண்டுவந்து, தேவைக்கில்லாமல் இடி முழங்கி, மின்னலடித்து, குளத்தைக் கவிழ்த்து ஊற்றியதுபோல கொட்டித்தீர்ந்து, பத்தே நிமிடங்களில் பெய்த தடமில்லாமால் கால்வாய்களுக்குள்ளாள் ஓடி ஒளிந்துவிடும். ஒரு ரசனையோடு அந்த மழை பெய்ததாக நான் அறியேன். அப்படிப்பெய்தாலும் அதை ரசிக்க அந்த ஊரில் மனிதர் இல்லை. வேலை, பிள்ளைக்குப் படிப்பு, மறுபடி வேலை என்று ஓடித்திரிபவர்களுக்கு நின்று நிதானித்து மழையை ரசிக்கவா நேரம் கிடைக்கும்? கிளிசரின்போட்டுக் கதறி அழும் நடிகையைப்போல மழையும் அதன் கடமையைச் செய்துவிட்டுப் பறந்துவிடும்.

மெல்பேர்ன் மழை சற்று விசித்திரமானது. இங்கே மழை நான்கு பருவத்துக்கும் பெய்யும். எப்போது, எந்நேரம் பெய்யும் என்று ஊகிப்பது கடினம். ஆனால் என்றைக்குமே இங்கே மழை அடித்து ஊற்றியது கிடையாது. நான் அறிந்து எல்லா மெல்பேர்ன் மழையும் தந்தையிடம் திட்டு வாங்கிய சிறுமியைப்போலவே அழுதிருக்கிறது. அது அழுகையில் நமக்கு முள்ளந்தண்டு சில்லிடும். அது அழுகையை இலேசில் நிறுத்தவும் மாட்டுது. ஆனால் யாரையும் தொந்தரவு பண்ணாமல் தன்பாட்டுக்கு வீட்டுக்கு வெளியே நின்று அழுது தீர்க்கும். விக்கி விக்கி அது அப்படி அழும்போது பாவமாய் இருக்கும். “யாரடித்து நீ அழுதாய், கண்மணியே கண்ணுறங்கு” என்று மழையைத் தாலாட்டிப் பார்த்தால்தான் என்ன? 

வெளியே விம்மல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து சொட்ட ஆரம்பித்தது. இலையிலிருந்து ஒரு துளி கீழே விழ நேரம் பிடித்தது. இனி அழுகை நின்றுவிடும். அழுகை நின்றாலும் இந்தச் சிறுமி அழுங்கு பிடித்தவள். இலேசில் வெளிக்கப்போவதில்லை. இப்போது மழையின் சத்தம் மிகவும் குறைந்துவிட்டிருந்தது. எழுதுவதை நிறுத்திவிட்டு அலுவகத்துக்குத் தயாராகலாம் என்று எழுந்தேன்.

மழை மீண்டும் விம்ம ஆரம்பித்தது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக