Skip to main content

மழையின் கதை



நியால் வில்லியம்ஸ் எழுதிய “The History of Rain” நாவலை ஒலிப்புத்தகத்தில் கேட்டுக்கொண்டிருக்கிறேன். எப்படி இந்த நாவல் என்னைத் தெரிவு செய்தது? முதல் வரியினூடாகத்தான்.

“We are our stories. We tell them to stay alive or keep alive those who only live now in the telling. In Faha, County Clare, everyone is a long story”

இளவயதிலேயே நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கும் ரூத். தந்தை ஒரு கவிஞர். தாத்தா ஒரு போதகர். தாத்தா இறந்துபோய்விட்டார். தந்தை எங்கென்று தெரியவில்லை. அவரும் இறந்துபோயிருக்கலாம். மேல்மாடி அறை ஒன்று. அங்கே பல ஆண்டுகளுக்கு முன்னர் தகப்பன் அரைகுறையாகத் தானே செய்துகொடுத்த படகுபோன்ற ஒரு கட்டில்தான் ரூத்தின் உலகம். சுற்றிவர புத்தகக் குவியல்கள். மொத்தமாக 3958 புத்தகங்கள். தனிமையில் வாடும் ரூத்துக்குத் தன் தந்தையைத் தேடிக்கண்டறியவேண்டும் என்ற ஆவல் பிறக்கிறது. விளைவு கதைகளினூடாக அவள் தன் தந்தையைக் காண முனைகிறாள்.

“Nobody now living was there. That’s the thing. But a lot of them are in the pages of books. My grandfather is inside the skinny smoke copy of “All quiet on the western front” , in the stern stiff-feeling pages of “The Guns of August”, books my father read to see if he could find his father”

கதைகளினூடாக மனிதர்களைத் தேடுவது என்பது எல்லோரிடமும் இருக்கும் ஒன்றுதான். என் அப்பாவுக்கு நான்கு வயது இருக்கையிலேயே அவரின் அப்பா இறந்துவிட்டார். அப்பாவுக்குத் தன் தந்தை பற்றிய ஞாபகங்கள் பெரிதாக ஏதும் இல்லை. எல்லாமே அவருடைய தாயார் சொன்ன பதிவுகள்தான். இருந்தும் இப்போதும்கூட “தாத்தாவைப்பற்றிச் சொல்லுங்களேன்” என்று கேட்டால் அப்பா மணிக்கணக்கில் சொல்லுவார். தாத்தா எப்படி கொழும்புக் கடை ஒன்றில் வேலை செய்தார் என்றும், எப்படிப் பங்காளிகள் அவரை ஏமாற்றினார்கள் என்றும் விளக்குவார். ஒருநாள் ஒழுங்கை ஒன்றினூடாக நடந்துவருகையில் திடீரென்று நெஞ்சைப் பிடித்துக்கொண்டு சாய்ந்ததுதான். கதை முடிந்துவிட்டது. சிலர் சூனியம் என்கிறார்கள். வீட்டின் கொல்லைப்புறத்தில் நேர்ந்துவிட்ட தேசிக்காய்ப் பாதிகளும் விலங்கு இரத்தமும் கிடந்ததாகக் கூறுகிறார்கள். அப்பா விளக்கும்போது அதிசயமாக இருக்கும். இதில் எவ்வளவு உண்மை, எவ்வளவு பொய் என்பதெல்லாம் இரண்டாம்பட்சம். Nobody now living was there. That’s the thing! எனக்கு என் தாத்தா பற்றிய ஒரு பிம்பம் இங்கே கிடைக்கிறது. அவ்வளவுதான்.

யோசித்துப்பாருங்கள். நாற்பதுகளில் நயினாதீவு. பிரிட்டிஷ் ஆட்சிக்காலம். கொழும்பு வர்த்தகரின் கதை ஒன்று. படகில் பயணம் செய்து, அம்மாள் கோயில் பாலத்தில் இறங்கி, மூன்றாம் வட்டாரத்தில் உள்ள வீட்டுக்குப் போகும்பாதையில் மரணம் நிகழ்கிறது.

அங்கிருந்து பின்னோக்கி தாத்தாவின் நீண்ட கதை ஒன்று விரிகிறதல்லவா?

“In Faha, County Clare, everyone is a long story”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக