Skip to main content

என் கொல்லைப்புறத்து காதலிகள் : மணிரத்னம்





ஆரம்பம் ஒரு சின்ன ஒளிப்புள்ளியில் இருந்து ஆரம்பிக்கிறது. பின்னணி இசையின் எலெக்ட்ரிக் பேஸ் கிட்டார் பிட்ச் திகிலூட்டுகிறது. அப்புறம் சேசிங். ஐந்து நிமிடத்தில் காஷ்மீரிய போராளி வாசிம்கான் சுற்றி வளைக்கப்படுகிறான். கட். அடுத்த காட்சி சுந்தரபாண்டியபுரத்தில். சின்ன சின்ன ஆசை பாடல். 

அன்றுதான் ரோஜாவின் தமக்கையை பொண்ணு பார்க்க ரிஷி வருகிறான். அவர்கள் வரும் காரை ஒளிந்து நின்று பார்ப்பதற்காக ரோஜாவும் அவள் நண்பியான ஒரு சிறுமியும் ஆடுகளை காருக்கு குறுக்கே விடுகிறார்கள். கார் மேலே செல்லமுடியவில்லை. நிற்கிறது. இந்த இடத்தில் அவன் ஸ்டைலாக காரைவிட்டு இறங்குகிறான். ரிஷி. சிகரட் பிடிக்கிறான். இன்னொரு கதவைத்திறந்து அவன் தாய் இறங்குகிறாள். அம்மாவும் பிள்ளையும் ஆங்கிலத்தில் பேசிக்கொள்கிறார்கள். 

கிராமத்துக்குள் நுழைகிறார்கள். கிராமத்து பெரிசுகள் மாப்பிள்ளையிடம் சம்பளம் விசாரிக்க, நகரத்தில் வளர்ந்தவன் சொல்லவே மாட்டான். சின்ன சின்னதாய் நகர கிராமிய கலாச்சாரங்களின் வேறுபாடுகளை நூலிழையாய் வெளியில் தெரியும். செண்பகத்தை பெண் பார்க்கும் படலத்தில் ரிஷி தனியே சந்திக்கிறான். அவள் பேசுகிறாள் இல்லை. 

“ஏதாவது சொல்லு, ஸ்ரீதேவின்னு சொல்லு, இல்ல கொல்லங்குடி கருப்பாயினு சொல்லு, ஜஸ்ட் சே சம்திங்”
“எனக்கு.. எனக்கிந்த கல்யாணத்தில இஷ்டமில்ல”
“வாட்? கம் எகைன்?” 
செண்பகம் தன் மாமன் மகனை விரும்புவதாக குண்டை தூக்கிப்போட, வேறு வழியில்லாமல் ரிஷி ரோஜாவை திருமணம் செய்ய போவதாக சொல்ல, டிபிக்கல் திருமண சச்சரவுகள் முடிந்து அவரவர் ஜோடியைச் சேர்ந்து, ரோஜா ரிஷியுடன் சென்னை வருகிறாள். அப்புறம் நடைபெறும் ஒரு பத்து இருபது நிமிட காட்சிகள்தான் படத்தில் உயிர் நாடி. ரிஷி ரோஜாவுக்கிடையிலான கியூட்டான ஊடல். அந்த காதலை ரிஷியின் அம்மா மற்றும் மேலதிகாரி மூலம் மணிரத்னம் டிரைவ் பண்ணுவார். ஒரு சீனில் ரிஷி தவறுதலாக ரோஜாவை இழுக்கும் பொது அவள் ஜாக்கட் கிழிந்து விட, நாமெல்லாம் ஆயுசுக்கும் மறக்காத ரோஜா வசனம்உருவானது. 

“சாரி” 
“இங்க பார், தெரியாம நடந்திச்சு, சாரி” 
“எஸ் . ஓ ஆர் ஆர் வை கோபப்படுறியா? அதான் சாரி சொல்லிட்டனே. மறந்திடேன்.” 

ரோஜா ஒன்றுமே பேசாமல் கோபத்தோடு நிற்பாள். 

“நான் ஒன்னும் மோசமானவன் இல்ல. கொஞ்சம் நல்லவன் தான்.” 

ம்ஹூம். சிலமனே இல்லை. 

“இங்க பாரு. பார்த்தா பாவமா இல்ல?” 

இந்த காட்சியை பார்த்துகொண்டிருப்பவருக்கும் காதல் வரும். ரகுமான் வேறு எங்கள் அவஸ்தை புரியாமல் “உன் கண்ணில் நீர் வழிந்தால்” என்ற பாரதி பாடலின் பொதுவான மெட்டை புல்லாங்குழலில் இசைக்க, முடித்தால் ரோஜா போல ஒரு ஸ்மார்டான கிராமத்து பொண்ணை தான் முடிப்பது என்று தீர்மானம் போட்டு இருபது வருஷங்கள் ஆகிறது... “மூக்கு புடைப்பாக இருந்தாதான் இப்படியெல்லாம் யோசிக்கத்தோணும்”.. “அம்மா .. என்ர முதுகு”. பின்னர் ரோஜா தன் தவறை உணர்ந்து மீண்டும் ரிஷியிடம் வந்து அதே வசனங்களை சொல்லும் இடம் நச். முதன் முதலில் காதல் ரோஜாவின் இசை அறிமுகமாகும் இடம். 

என்னா படம்டா இது? ரோஜா. 

“பூ கொடியின் புன்னகை” பாடல். காட்சியில் நடிக்கும் இருவரும் நிஜமாகவே காதல் வயப்படுகிறார்கள். “நீ ஒருமுறை திருப்பிக்கொண்டால், என் உயிருக்கு உறுதியில்லை” என்ற வரிகள் வரும் வேளையில் கௌதமியும் மோகன்லாலும் தன்னிலை மறப்பார்கள். காட்சி குழம்பிவிட, இயக்குனர் கட் கட் என்பார். கிராமபோன் அடிக்கடி அபஸ்வரமாக நிறுத்தப்படும். மீண்டும் ரீடேக். மீண்டும் உணர்ச்சி வசப்படல். மீண்டும் கிராமபோன் கீச்சிடும். நிஜத்தில் காதல் திரையில் காட்சிப்பிழை. அப்படி என்றால் திரையில் காதல் நிஜத்தில் காட்சிப் பிழையாகிறது. கவிதை. அதை கமராவில் கொண்டுவருவார் நம்மட ஆள். படம் இருவர். 

காதலர்கள் களவாக ஒரு ரெஸ்டோரண்டில் கோப்பி குடிக்க வருகிறார்கள். காதலியின் அப்பாவும் அங்கே வருகிறார். அவள் பயந்துபோகிறாள். அவன் ஒரு மான்லி ஹீரோ. துடுதுடுப்பானவன். இங்கிருந்தே அவளின் தகப்பனை அழைக்கிறான். “Mr சந்திரமௌலி, உங்களை தான்” என்று அவன் சத்தமாக கத்த, அவள் மேசைக்கு கீழே பதுங்குவாள். கியூட்டாக இருக்கும். படம் மௌனராகம். 

இடம் விபச்சாரவிடுதி. அவன் உள்ளே நுழைந்து சாவகாசமாக ஷேர்ட்டை கழட்டிப்போட்டுவிட்டு அவளைப்பார்க்கிறான். அவள் கண்களில் கொஞ்சம் பயம். நிறைய குழந்தைத்தனம். 

“நாளைக்கு கணக்கு பரீட்சை, சீக்கிரமா விட்டீங்கன்னா கணக்கு போட்டு பழகிக்குவேன்” 

அவள் சொன்னதை கேட்கும்போது அவனைப்போலவே எமக்கும் நெஞ்சு கனக்கும். இப்படி ஒரு நாயகி தமிழ் சினிமாவில் அறிமுகமாவதே எமக்கு புதுசு. படம் நாயகன். 

ஒரு பாலைவனத்து இரவுக்குளிர். பக்கம் பக்கமாக அந்த ஆணும் பெண்ணும். இருவருக்குள்ளும் ஏராளம் ஆசைகள். இருவேறு கனவுகள். ஆனால் ஈர்ப்பு என்று ஒன்று இருக்கிறதே. அது விலக விலக நெருங்கிவரும். அவன் அவள் மூக்கு வரை நெருங்கிவிட்டான். கேட்கிறான். 

“உலகத்திலேயே உனக்கு பிடிக்காதது என்ன?”
“நீ இவ்வளவு கிட்ட வர்ரது, உன் சிரிப்பு, உன் அதிக பிரசங்கித்தனம், உனக்குள்ள இருக்கிற அந்த சந்தோஷம், அது பிடிக்கல”
“ஆக்சுவலா உனக்கு என்னைப் பார்த்தா பொறாமை”
“ஆமா” 
இந்த வரிகளில்தான் எத்தனை உண்மைகள். அந்த பெண்ணுக்குள் புதைந்திருக்கும் ஆழ்மனது உணர்வை வெளியே கொண்டுவரும் காட்சி. படம் உயிரே. 

காந்தியவாதியான பத்திரிகையாளரும் அம்பானியும் சந்தித்து பேசும் இடம். 

“நீ கண்ட இடத்திலையும் உன்னோட காசை இரைச்சி விட்டிருக்கே இல்ல” 
“நானாஜி .. ஓலகத்தில எல்லா விதமான ஆளுங்களும் இருக்கிறாங்க .. ஒவ்வொருத்தனுக்கும் ஒவ்வொரு விலை கொடுக்க வேண்டி இருக்கு.. அதால ரெண்டு டைப் செருப்போட நான் சுத்திக்கிட்டிருக்கேன். ஒன்று தங்கத்தில, மற்றது வெள்ளியில, யாருக்கு எது தேவையோ அதால அவங்களை அடிச்சிட்டு முன்னேறிக்கொண்டே இருப்பேன்” 
“எனக்கு என்ன மாதிரி செருப்பு வச்சிருக்கே?” 
“உங்களுக்கெல்லாம் காந்தி!” 
“அப்ப நீ என்னையும் செருப்பால அடிப்பே இல்ல” 

இது அம்பானி வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் குரு. 

மணிரத்னம். இந்தப்பெயரை கேட்டாலே கும்மிருட்டுக்குள்ளால் இருந்து ஒரு ஒளிக்கீற்று தென்படும் காட்சி கண்களுக்குள் வரும். அது அவருடைய படங்களை பார்த்த தாக்கத்தால் மட்டுமல்ல. தமிழ் சினிமாவின் விடிவுக்கு முயற்சித்த ஒளிக்கீற்றும் அவரே என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். சினிமாவை கமராவால் கதை சொல்லும் ஒளி வடிவமாக்கிய மாபெரும் இயக்குனர். 

1997ம் ஆண்டு பொங்கல், வவுனியாவில் உள்ள ஒரு அகதிமுகாமில் இருக்கிறோம். அம்மாள் நோய், முட்கம்பிவேலிக்குள் வாசம், வாரத்தில் சில நாட்கள் அதுவும் பகல் சில மணி நேரங்கள் வெளியே சென்று வர இராணுவத்தின் அனுமதி கிடைக்கும். அன்று நண்பர் ஒருவர் வந்து அழைத்துச்சென்றார். என்ன செய்ய போகிறாய்? கோயிலுக்கு போவோமா? என்று அவர் கேட்டபோது நான் சொன்னது, “இருவர்” பார்க்கவேண்டும் என்று. அந்தப்படம் அவ்வளவு பிடிக்கும். அதில் ஒரு காட்சி வரும். 

சட்டசபை தொகுதி தேர்தல் நிலவரங்களை, கனிமொழிக்கு பாடம் சொல்லிக்கொடுத்தபடியே ராஜாத்தியுடன் கருணாநிதி பேசும்காட்சி. தமிழும் அரசியலும் கலக்கும் இடம். எம்ஜீஆரின் வளர்ச்சியை கண்டு பயந்து போய் இருக்கும் சமயம் ராஜாத்தியும் கருணாநிதியும் பேசும் இந்த காட்சியும் ஒரு தனி அழகு. 

“உங்க இடத்த அவர் பிடிச்சுருவாரோ என்று ஒரு பயம்”
“ஆனந்தனா? கட்சி என்ன ஆறது?”
“இதில நாம கட்சிக்கு நல்லது கேட்டது என்னு பாக்கலியே? நம்ம நலத்ததானே பாக்கறோம்?”
“ஆ, சுயநலம் தான், எனக்கும் ஆசை இருக்கு, தமிழ்நாடே பார்க்காத சிறந்த முதலமைச்சர் நானாதான் இருக்கணும்னு.. முன்னாடியோ சரி .. பின்னாடியோ சரி.” 

மௌனராகத்தில் அந்த மோகனின் நடிப்பு, யார் அப்படி கொண்டுவர முடியும்? என்ன ஒரு உணர்ச்சிபோராட்டம். அவரின் பக்குவமான ஈகோவுக்கும் ரேவதியின் குழந்தைத்தனமான ஈகோவுக்கும் இடையிலான போராட்டம். சான்சே இல்லை. எதை எடுக்க எதை விட? நாயகனின் அந்த ஒருவித டிலேயிட் டைமிங் வசனங்கள். பின்னாளிலே சிவாஜியோடு கமல் தேவர்மகனில் செய்தபோது, அடடே இது நாயகன் நடிப்பு இல்லையா என்று எண்ணத்தோன்றியது. 

தளபதி. ரஜனி “நடித்த” இறுதிப்படம். அதில் ஒரு கவிதை இருக்கும். மணிரத்னம் எழுதிய கவிதை. ஸ்ரீவித்யாவும் ரஜனியும் கோயிலுக்கு வருகிறார்கள். இருவரும் பிரகாரத்தில் நின்றுகொண்டு சாமியை வணங்குகிறார்கள். அப்போது புகைவண்டிச் சத்தம் கேட்கிறது. அந்தச்சத்தம் இருவருக்குமே மிகவும் பெர்சனலானது. அந்த வண்டியில்தான் மகனை அவள் கைக்குழந்தையாய் இருக்கும்போது பெட்டியில் வைத்து அனுப்பினாள். ஒவ்வொருதடவையும் புகைவண்டிச்சத்தத்தை கேட்கும்போது அவளுக்குள் ஒரு ஏக்கம் குடிகொள்ளும். அவனைக் காண்போமா? அவனுக்கும் அந்த வண்டியில்தானே தாய் தன்னை அனாதையாய் விட்டுப்போனாளே என்கின்ற ஏக்கம். வண்டிச்சத்தம் இன்னமும் பெரிதாக கேட்க, இருவருமே ஏக சமயத்தில் வண்டிச் சத்தம் வந்த திசையில் அனிச்சையாக திரும்புவார்கள். கவிதை. இந்த காட்சியை இன்னமும் கவனமாக பார்த்தால் கவிதைக்கு இன்னொரு அர்த்தமும் வெளிப்படும். 

தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசையை பார்க்கும் தருணத்தில் கமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாய்க்கு முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான். தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்குதான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார். 

ஒரு படம் காட்சிப்படுத்தும்போது இப்படி எல்லாம் சிந்திப்பார்களா? என்றால், ஆம், மணிரத்னம் சிந்திப்பார். அதுவும் 80-90 களில் இருந்த மணிரத்னம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்படியே அவர் யோசிக்காமல்தான் அந்த காட்சியை அமைந்திருந்தாலும் என்ன இப்போ? ஒரு நல்ல இலக்கியம் படைப்பாளனையும் தாண்டி யோசிக்கவைக்கவேண்டும். 

பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான ரொபேர்ட் பிரவுணிங்கிடம் போய் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு அவர் சொன்ன பதில், 

"இதை எழுதும்போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!" 

திருடா திருடா. தமிழில் ஒரு ஸ்டைலிஷ் அக்சன் கொமெடியை இந்தப்படத்தில் தந்து அசத்தினார் மணிரத்னம். படத்தில் “களவாணிப் பசங்களா” என்று ஹீரா சொல்லும் ஒவ்வொரு முறையும் நமக்கும் சிரிப்புவரும். பம்பாய் படத்தை சொல்லவும் வேண்டுமா? உயிரே உயிரே பாட்டில் மனிஷா அந்த பர்காவை விலத்திவிட்டு விடுதலையடையும் ஒரு பாடல் காட்சி போதாது? 

மணிரத்னம் இசையில் செய்த தலைமுறை மாற்றங்கள் ரகுமானை அறிமுகம் செய்தது மாத்திரம் இல்லை.. பகல்நிலவின் “பூ மாலையே, தோள் சேரவா” என்ற பாடலின் மிக்ஸ் தமிழுக்கு புதுசு. அதை இளையராஜா தன்னிச்சையாக உருவாக்கினார் என்று வைத்தால் கூட, பின்னாளில் வந்த “மன்றம் வந்த”, “பனிவிழும் இரவு” போன்ற கொன்டெம்பரரி மெட்டுகள் ராஜாவின் கைவண்ணத்தில் உருவானமைக்கு மணிரத்னம் ஒரு மூலம் என்பதை மறுக்க முடியாது. அக்னிநட்சத்திரத்தில் தபேலா வாத்தியமே கிடையாது என்று நினைக்கிறேன். அந்த நாளில் ராஜா அதை பரிசோதனை செய்தமைக்கு மணிரத்னம் ரசனையும் ஒரு காரணம். ராக்கம்மா கையத்தட்டில் “குனித்த புருவம்” தேவாரம் வருவதும், சுந்தரி கண்ணால் ஒரு சேதியின் சிம்போனி ஸ்டைல் ஒர்கஸ்ராவும் முக்கிய மணிரத்னம் ஆளுமைகள். அவை ராஜாவின் குழந்தைகள்தான், ஆனால் குழந்தை பிறக்க ஆணும் வேண்டும் அல்லவா. பின்னர் ரகுமான் வந்த பிறகு சோதனை முயற்சிகள் இன்னும் அதிகமாகின. ராசாத்தி, சந்தோஷ கண்ணீரே, வெள்ளைப்பூக்கள், தேரேபினா, நெஞ்சமெல்லாம், செப்டெம்பர் மாதம், ஹலோ மிஸ்டர் எதிர்க்கட்சி என்று பரிசோதனை மேல் பரிசோதனை. மணிரத்னமும் பாடல்களும் என்று தனி தொடரே எழுதலாம. 

கிறிஸ்மஸ் விடுமுறைக்கு நேபாளம் சென்று திரும்பும் வழியில் டெல்லியில் சில நாட்கள் தங்கினேன். அப்போது ராஷ்ட்ரபதி பவன், நாடாளுமன்றம் அந்த அகன்ற வீதி எல்லாம் பார்க்கும்போது “மன்றம் வந்த தென்றலுக்கு” காட்சிதான் ஞாபகம் வந்தது. பின்னர் தாஜ்மகால் சென்றபோது மோகன் ரேவதிக்கு காட்டிய தாஜ்மகாலும் “வெண்ணிலா வெண்ணிலா” என்ற இருவர் பாடலும் ஞாபகம் வந்தது. எத்தனை படங்கள் டெல்லியையும் ஆக்ராவையும் சுற்றிச் சுற்றி காட்டினாலும் இவர் காட்டியது போல எவரும் காட்டவில்லை. விண்ணைத்தாண்டி வருவாயில் த்ரிஷா சொல்வது போல, இவர் கண்ணால் பார்க்கும் போது மட்டும் அவை அத்தனை அழகாக தெரிகின்றதோ? நீயொரு காதல் சங்கீதம் பாடலில் கமலும் சரண்யாவும் ஒரு ஓட்டை வீட்டுக்குள் குடித்தனம் பண்ணுவார்கள். மழை பெய்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக கூரை ஒழுக்கில் இருந்து துளி வடிய இவர்கள் ஒதுங்க இடம் தேடுவார்கள். மழை இன்னமும் அதிகரிக்க, வெளியிலிருந்து குடுகுடுவென புறாக்கள் கூட்டம் உள்ளே ஒதுங்குவதற்கு இடம்தேடி நுழையும். கவிதை. மணிரத்னம் ஒளிப்பதிவிலும் காட்சியமைப்பிலும் செய்த புதுமைகள் உணர்வோடு ஒன்றியிருக்கும். இசையை போலவே இந்த துறையிலும் ஒரு தலைமுறை மாற்றத்துக்கு காரணமானவர் அவர். 

மணிரத்னத்தின் அண்மைக்கால படங்கள் மனதுக்குள் கொஞ்சம் சலிப்பை வரவைப்பவை. ராவணனில் ஆரம்பித்த ஒருவித சலிப்புத்தன்மை கடல் படத்தில் உச்சம் பெற்றது. ஒரு கதையை எப்படி தொய்வில்லாமல் இறுதிவரை ஸ்டைலிஷாக நகர்த்துவது என்று இந்த பயலுகளுக்கு சொல்லிக்குடுத்த ஆளு மணிரத்னம். மௌனராகம் கிளைமக்ஸில் ரேவதி வசனம் பேசும் காட்சியாகட்டும். “என் நண்பனை கொண்ணுட்டியேடா” என்று ரஜனி ஆத்திரத்தோடு அழுவதாக இருக்கட்டும். அந்த பாலத்தில் அரவிந்சாமி உருண்டுவரும்போது மதுபாலா ஏங்கிப்போய் பார்ப்பார். “உன் கண்ணில் நீர் வழிந்தால்” பிஜிஎம் மீண்டும் போகும். அலைபாயுதே கிளைமக்ஸ். கன்னத்தில் முத்தமிட்டாலில் இராமனாதபுரம் காட்சிகள். நந்திதாதாஸிடம் கேள்வி கேட்கும் அமுதா. எங்க போயிற்று தலைவரே இதெல்லாம்? கடல் படம் முழுக்க அழுத்தமே இல்லாத காட்சிகள். கதையின் ஓட்டத்துக்கு ஒட்டாத வசனங்கள். சாத்தான் இயேசு என்று ஒருமுறை சொன்னா போதாதா? திருப்பி திருப்பி சொல்லிக்கொண்டு. படம் எடிட் பண்ணிய பிறகு பார்க்கவே இல்லையா? போங்காட்டம் சாரே. 

சுஜாதா இல்லாமல்தானே நாயகன் உருவானது. மணிரத்னம் யானை அல்ல குதிரை என்பது தெரியவேண்டும். அடுத்தபடத்திலேயே தெரியவரும். வரவேண்டும். 

என் வயதுக்காரர் அப்போது ரோஜா மதுபாலா போன்ற பெண்ணையே காதலிக்கவேண்டும் என்று நினைத்தது போல, எனக்கு ஒரு ஐந்து வயது மூத்தவர்கள் மௌன ராகம் ரேவதி போன்ற ஒரு பெண்ணை மணம் முடிக்கவேண்டும் என்று நினைத்தார்கள். இளையவர்கள் அலைபாயுதே ஷாலினி என்றார்கள். இதிலே இருக்கின்ற நடைமுறை இன்டலக்சுவல் சிக்கலை மணிரத்னம் இலாவகமாக எமக்கு மறைத்துவிட்டார். ஒரு குக்கிராமத்து ரோஜாவும் கிரிப்டோகிராபிக் என்ஜினியரும் எப்படி நாளாந்த வாழ்க்கையில் தம்முடைய சிந்தனைகளை பகிர்ந்துகொண்டிருக்க முடியும்? என்ற கேள்விக்கு மணிரத்தினத்திடம் பதில் இல்லை. சொல்லவேண்டிய தேவையும் இல்லை. இது ஒரு கலைதானே. இரண்டு எக்ஸ்ட்ரீம் ஈகோ மனிதர்கள் திருமண வாழ்க்கையை எப்படிச் சமாளிப்பார்கள்? என்று காட்டும் முன்னமேயே மௌனராகம் படத்தின் இரண்டு மணி நேரம் முடிந்துவிட்டது. மணிரத்னம் ஒருவிதமான பன்டசி கதை உலகை படைத்து அதில் எம்மை வாழ வைத்துவிடுவார். அவருக்கே உரித்தான கதை சொல்லும் பாணி, வசனநடை, காட்சியமைப்பு எல்லாம் அந்த ட்ரீம் உலகை உண்மை என்று நம்ப வைத்து விடும். இன்செப்ஷன் படத்தில் வரும் நாயகனின் மனைவி சிந்தித்தது போல. அதுதான் மௌனராகம், அதுதான் ரோஜா, அதுதான் கன்னத்தில் முத்தமிட்டால். உண்மையை ஓரளவுக்கு நெருங்கச் சொல்லியது குருவும் இருவரும். ஆனால் அந்தப்படங்கள் பலரை சென்று அடையவில்லை. 

ஒருமுறை சக்தி டிவியின் “அழைத்து வந்த அறிவிப்பாளர்” நிகழ்ச்சி செய்யும்போது, ராஜேஷ்கண்ணா தொலைபேசியில் அழைத்து “எதிர்காலத்தில் நீங்கள் என்னவாக வர ஆசைப்படுகிறீர்கள்?” என்று கேட்டான். அப்போது நான் இஞ்சினியரிங் இரண்டாம் வருடம். “மணிரத்தினம் போல ஒரு இயக்குனராக வர ஆசைப்படுகிறேன்” என்று சொல்லியிருந்தேன். நிகழ்ச்சியை லைவ்வாக கேட்ட அப்பா டென்ஷனாகிவிட்டார். ஆனால் அந்தவயதில் மணிரத்னம் என்ற பெயர் வெறும் இயக்குனரோடு சம்பந்தப்பட்டதல்ல. அந்தப்பெயர் ஒரு இன்ஸ்பிரேஷன். எதையுமே ரசித்து ரசித்து, தூய்மையாக அழகியலோடு சமரசங்கள் இல்லாமல் செய்யவேண்டுமென்பதை உணரத்திய பல ஆளுமைகளுள் மணிரத்னமும் ஒருவர். அவர் தமிழ் சினிமாவில் இருப்பதால் இன்னமும் எம்மோடு நெருங்கிப்போகிறார். 

“உன்னோடு நான் கொண்ட பந்தம்”
“மண்ணோடு மழை கொண்ட சொந்தம்”
“காய்ந்தாலும் அடி ஈரம் எஞ்சும்”
“கண்ணில் கண்ணில் கண்ணில் இன்பம்”

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" நூலிலிருந்து.

Photo Credits : Wikipedia 

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக