Skip to main content

கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

நாளைக்கு விடுமுறை.
34 செல்சியஸ் வெக்கை.
வெறிச்சோடிய கார் பார்க்குகள்.
வழமைக்கு மாறான கலகலப்பு.
புதியவர்கள் கூட
நத்தாருக்கு என்ன ப்ளான்?
ஷாப்பிங் முடிஞ்சுதா?
விசாரித்தார்கள்.
ரயிலில் ஒரு சிறுமி
லிண்டொர் தந்தாள்.
ஹாப்பி கிரிஸ்மஸ் என்றேன்.
மெரி கிரிஸ்மஸ் மேட் என்றாள்.
பார்ப்பதை மறைத்து குளிர் கண்ணாடிகள்.
பருவங்கள் காட்டும் உள்ளாடைகள்.
இராமன்கள் கூட இராவணராய்.
சில இராவணர் காமுற்றனர்.
பலர் நாணி நிலம் கிளைந்திட்டனர்.
எங்குமே கலகலப்பு.
எட்டு மணிக்கு வேலை வந்து
அரை மணித்தியாலம் சள்ளடித்து
பத்து மணிக்கு பியர் குடித்து
பதினொன்றுக்கு கட்டி கொஞ்சி
ஹாய் சொல்லி
மதியத்துக்கு வீடு செல்ல
அனைவருமே தயாரானோம்.
உங்கள் வீட்டில் கிறிஸ்மசுக்கு மரம் வச்சாச்சா?
என்றவளிடம்
பொங்கலுக்கு மட்டும் தான் பானை வைப்போம்
என்றேன்.
எங்களுக்கு அதுவே மங்கள விழா.
பானைக்கு மஞ்சள் இலையும்
மாட்டு சாணி, கல்லடுப்பும்
வெடியும் வாங்கும் உற்சாகம்
கிறிஸ்மஸில் வருது இல்ல.
பறவைகள் உயரபறந்தாலும்
வானம் அவைக்கு சொந்தமில்லை.
கூழக்கடாக்களுக்கு
நெடுந்தீவு சொந்தமில்லை.
ஆனாலும் சிறகு விரித்து,
பனை வடலியில் கிடப்பதை
பாதுகாப்பாய் உணர்கிறேன்.
கடல் கரையில் கிடக்கும் மீன்
கண்ணில் நீரை வார்க்குது.
பனி கொட்டி மூடின பயம்
உள் நெஞ்சில் உறைந்து கிடக்கு.
ஊரிலே இன்னும் பனி கொட்டுதா?
பதில் வேண்டாம்.
அங்கே கொட்டுது என்ற எண்ணம்
எனக்கு வெம்மையை தருது.
கிறிஸ்மஸ் வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.

அணையா விளக்கு - நிகழ்வு அறிவித்தல்

துயர் மிகுந்த இந்த அணையா விளக்குப் போராட்டத்தில் ‘ உஷ்… இது கடவுள்கள் துயிலும் தேசம் ’ கதை வாசிக்கப்படுகிறது. இருக்கும் கொஞ்ச நஞ்ச அறங்களும் நீர்த்துப்போன சம கால உலக ஒழுங்குகளுக்கிடையில் இம்மக்களின் உறுதியும் ஒற்றுமையும்தான் சிறு நம்பிக்கையையேனும் கொடுக்கிறது. நிகழ்வு அறிவித்தல் _______________ அன்புக்குரியவர்களே! அணையா விளக்கு போராட்டத்தின் மாலை நிகழ்வாக 5.30 மணிக்கு ஜே.கே அவர்களின் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தி தொடர்பான, “உஷ்.. இது கடவுள்கள் துயிலும் தேசம்” என்ற கதை வாசிப்பு இடம்பெறும்.