தளபதி திரைப்படத்தின் இந்த தாய் மகன் பிரிவுத்துயர் காட்சி எல்லா இணையங்களிலும் மற்றும் Facebook, Twitter தளங்களிலும் தமிழ் ரசிகர்களால் பிரித்து மேயப்பட்டுவிட்டது. தாயும் மகனும் அந்த புகைவண்டி சத்தம் கேட்கும்போது திரும்பி பார்க்கையிலும், அதன் பின்னர் மீண்டும் திரும்பிய பின் ரஜனி காட்டும் முகபாவனையும், தலைவர் இளையராஜாவும் இணைந்து நம்மை உண்டு இல்லை ஆக்கிவிடுவார்கள், நாமெல்லாம் அப்படியே கனத்து போய் அமர்ந்து இருப்போம் .. எந்த சலனமும் இல்லாமல் .. அந்த காட்சியை மீண்டும் பாரத்து இரசியுங்கள்!
But There's One More Thing!!!
இந்த காட்சியின் 0:44 --- 0:51 நேரத்து காட்சியை மீண்டும் பாருங்கள். தாய் மெதுவாக திரும்பி புகைவண்டி செல்லும் திசை பார்க்கும் தருணத்தில் கேமரா மகன் பக்கம் திரும்பும். அங்கே மகன் ஏற்கனவே, அதாவது தாயுக்கும் முன்னமேயே அந்த திசை நோக்கி ஏக்கத்தோடு பார்த்து கொண்டிருப்பான்.
தாய் தன் மகனை பிரிந்து ஏங்கும் தவிப்பை விட, தாயில்லாமல், வளர்ந்து பட்ட வேதனையும் ஏக்கமும் மகனுக்கு அதிகம், பிரிவுத்துயர் தாயை விட அவனுக்கு தான் இன்னும் அதிகம் என்பதை இயக்குனர் அங்கே காட்டியிருப்பார்.
கவிதை.........!
இப்படி எல்லாம் சிந்திப்பார்களா என்றால், ஆம், மணிரத்னம் சிந்திப்பார். அதுவும் 80-90 களில் இருந்த மணிரத்னம் என்றால் கேட்கவே வேண்டாம்! அப்படியே அவர் யோசிக்காமல் தான் அந்த காட்சியை அமைந்திருந்தாலும் தான் என்ன இப்போ?
பிரபல கவிஞரும் வசனகர்த்தாவுமான Robert Browning இடம் அவருடைய கவிதை வரி ஒன்றின் விளக்கத்தை வாசகர் ஒருவர் கேட்டாராம். அதற்கு Browning சொன்ன பதில்,
"இதை எழுதும் போது எனக்கும் கடவுளுக்கும் மட்டுமே இதன் அர்த்தம் தெரிந்திருந்தது. ஆனால் இப்போது ............. Only God Knows!"