Skip to main content

இலையான்!

 

Housefly_-_Project_Gutenberg_eText_18050


“உணவு சங்கிலி என்பது சுற்றாடலில் உள்ள ..”

அரியலிங்கம் மாஸ்டர் ஒரு வலதுகைக்காரர். இடதுகை கரும்பலகையில் விறுவிறுவென்று எழுதிக்கொண்டிருக்கும்போதே, வலது கை லோங்க்ஸ் பொக்கெட்டில் வறு வறுவென்று சொறிந்துகொண்டிருக்கும். ரிவிரச ஒபரேஷன் முடிந்த ‘கையுடன்’ கழுத்தடியில் ஜெயசிக்குறு ஒபரேஷன் ஆரம்பிக்கும். நீங்கள் மைதானம் பக்கம் உள்ள மிடில் ஸ்கூல் கழிப்பறைக்கு ஒதுங்கினால், கிழக்கேயிருந்து சரியாக நான்காவது அறையின் உள் கூரையில் “சொறியலிங்கம் ஒரு சொறி…” என்று கரித்துண்டால் எழுதப்பட்டு, மிகுதிப்பகுதி, மாஸ்டரின் யாரோ ஒரு ஆஸ்தான மாணவனால் அழிக்கப்பட்டு இருப்பதை கவனிக்கலாம். பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்…

“சேர்”

என்று யாரோ கூப்பிட, மாஸ்டர் திரும்பி பார்க்காமலேயே சொன்னார்.

“ஐஞ்சு நிமிஷம் தான் .. டக்கென்று போயிட்டு வரோணும் .. அங்கனக்க இழுபட்டு கொண்டு திரிஞ்சாய் எண்டால் இழுத்துப்போட்டு அறுப்பன்”

சொல்லிக்கொண்டே தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

“உயிரினங்களுக்கு இடையிலான உணவுத்தொடர்பை விளக்குகிறது..”

“சேர்…”

இம்முறை கொஞ்சம் அழுத்தமாகவே கூப்பிட, மாஸ்டர் திரும்பிப்பார்த்தார். மூன்றாவது வரிசையில் இருந்த மயூரன் தான்; மயூரன் வகுப்பில் பெரும் கெட்டிக்காரன் கிடையாது. முதலாம் தவணை என்றால் தட்டுத்தடுமாறி பத்தாம் பிள்ளைக்குள் வந்துவிடுவான். இரண்டாம் மூன்றாம் தவணைகள் கொஞ்சம் டைப்படித்து பன்னிரெண்டு பதினைந்து என்றாகிவிடும். அழுத்தக்காரன். அப்பா வைத்தி, கல்வியங்காட்டு சந்தையில் தேங்காய் கடை வைத்திருக்கிறார். ஞாயிற்றுகிழமையானால் இவனும் போய் கடையில் உட்கார்ந்துவிடுவான். கணக்கு பாடம் கொஞ்சம் செய்வான். அதிலும் சிட்டை கணக்கு ஒருநாளும் பிழைக்காது.

சோக் கட்டியை மேசையில் போட்டுவிட்டு மயூரனிடம் நெருங்கினார் மாஸ்டர்.

“என்ன பிரச்சனை?”

“சேர் வந்து .. நேத்து மந்திரி பரீட்சை பேப்பர் திருத்தி தந்தனிங்களல்லோ”

“அதுக்கென்ன?”

மாஸ்டரின் இரண்டு கைகளும் இப்போது இரண்டு பொக்கெட்டுகளிலும் நுழைந்திருந்தது. ஆனையிறவிலிருந்தும் மாங்குளத்திலிருந்தும் இருமுனைகளை திறந்துகொண்டு ஸ்ரீலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.

“அதில இலையானுக்கு எத்தனை கால்கள்? எண்ட கேள்விக்கு நான் ஆறு எண்டு போட்டிருக்கிறன். நீங்க பிழை போட்டிருக்கிறீங்க”

“எந்த ஊரிலையடா இலையானுக்கு ஆறு கால்? அதுக்கு சரியான ஆன்சர் எட்டு தான்… பேசாம கிட”

“இல்ல சேர் .. எனக்கு வடிவா தெரியும் .. இலையானுக்கு ஆறு கால் தான்”

மாஸ்டருக்கு சரக்கென்று கோபம் வந்தது.

“நீ எனக்கு படிப்பிக்கப்போறியோ? அதெல்லாம் எட்டு கால் தான் .. வேணுமெண்டா லைப்ரரில போய் பார்”

“இல்ல சேர் .. அடிச்சு சொல்லுறன் .. ஆறு தான்”

மயூரன் தொடர்ந்து அழும்பு பிடிக்க, மாஸ்டருக்கு இப்போது கோபம் தலைக்கேறி, கட கடவென்று மேசைக்கு போனார். அங்கே இருந்த கிளுவை தடியை எடுத்து வந்து,

“கையை நீட்டு .. எங்க இப்ப சொல்லு .. இலையானுக்கு எத்தனை கால்”

“…. அம்மானை … ஆறு சேர்”

“படீர்” என்று மயூரனின் கையில் அடி விழுந்தது. “அம்மா” என்று கத்திக்கொண்டே சடக்கென்று கையை உதறினான் மயூரன், கண்கள் இலேசாக கலங்கிவிட்டது அவனுக்கு.

“எங்க பார்ப்பம் .. இப்ப எத்தினை கால் எண்டு .. “

“இல்ல … சேர் .. வீட்டில ..”

“சுளீர்” என்று இம்முறை சுருதி மாறியது. கிளுவை நுனி இலேசாக வெடித்து வழுக்கல் சிதறி பக்கத்து கதிரை சஞ்சீவன் முகத்தில் தெறித்தது. மயூரன் இன்னமும் உதறிக்கொண்டே கதறினான்.

“செல்லம் .. இப்ப சொல்லுங்கோ இலையானுக்கு எத்தினை கால்கள்?”

“… ட்டு சேர்..”

“வடிவா கேக்கேல்ல, வகுப்பில எல்லோருக்கும் கேக்கோணும்; எங்க கத்தி சொல்லு பார்ப்போம்.. ஆ இலையானுக்கு”

4-more“…இலையானுக்கு மொத்தமாக  … எட்டு ..கால்கள் சேர்”

மயூரன் அழுதுகொண்டே சொன்னான். 

“தேங்காய் லோட் ஏத்திறதுகள் எல்லாம் கேள்வி கேட்க வெளிக்கிட்டிதுகள்… இவையளுக்கு அடி உதவிறது போல அண்ணன் தம்பி உதவாங்கள்”

சொல்லிக்கொண்டே அரியலிங்கம் மாஸ்டர் கரும்பலகைக்கு போனார்.

“சூழலில் ஒரு இனத்திலிருந்து இன்னொன்றுக்கு உணவும் சக்தியும் கடத்திச்செல்லபடுவதை”..

ஜெயசிக்குறு ஒப்ரேஷனில் இராணுவம் மீண்டும் முன்னேற ஆரம்பித்திருந்தது.

-------------------------------------

 

“என்ன சேர், என்ர பெடியனுக்கு நேற்று அடிச்சுப்போட்டியலாம்?”

அடுத்தநாள் வகுப்பில் வைத்தி திடும் என்று இப்படி வந்து நிற்பார் என்று அரியலிங்கம் மாஸ்டர் கனவிலும் நினைத்திருக்கமாட்டார். பாடசாலை வருவதற்காக வைத்தி கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது. மேலுக்கு நீலக்கலரில் மார்டின் சேர்ட், இரண்டு பட்டன்கள் போடாமல் கிடக்க, கழுத்தில் தொங்கிய செயின், தேங்காய் ஏன் எண்பது ரூபாய்? என்பதற்கு விளக்கம் கொடுத்தது. மாஸ்டருக்கும் வைத்தியின் கடையில் தனக்கிருக்கும் அக்கவுண்ட் ஞாபகம் வர,

“என்ன வைத்தி இதுக்கு போய் இவ்வளவு தூரம் வந்தியா? இவன் பெடியன் ஒரு கேள்வி பிழையா சொல்லி..”

“இலையானுக்கு மெய்யாலுமே எத்தினை கால் சேர்?”

“இதென்ன கதை .. பூச்சிக்கு எல்லாம் எட்டு கால் தான் .. இலையான் எண்டா என்ன ..நுளம்பு எண்டா என்ன? எல்லாத்துக்கும் ஒண்டு தான்”

மாஸ்டருக்கு இப்போது தான் முதன்முதலாக டவுட் வந்தாப்போல இருந்தது. மாஸ்டர் புங்குடுதீவில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் ஸ்கந்தாவரோதயாவில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து பார்த்தார். கல்லு நகரவில்லை. மூன்றாம் தடவையில் ஏஎல் மூன்று பாடம் ஒருவழியாக பாஸ் பண்ணி, ஓரெட்டர் சுப்ரமணியம் கொடுத்த சிபாரிசு கடிதத்தால் சைன்ஸ் மாஸ்டர் ஆனவர்.

“டேய் தம்பி .. அந்த இலையானை எடுத்து காட்டுடா”

வைத்தி மயூரனுக்கு சொல்ல, மயூரன் தன் பொக்கெட்டில் இருந்த நெருப்புபெட்டியை எடுத்து கவனமாக திறந்தான். உள்ளே ஒரு இலையான்; ஓரளவுக்கு பெரிய இலையான். அடிபட்டு செத்துப்போய் கிடந்தது.

“சேர் வடிவா பாருங்கோ .. அடிச்ச அடில ஒரு கால் உடைஞ்சு தொங்குது. ஆனாலும் ஆறுகால் தான்”

மயூரன் சொல்ல சொல்ல, மாஸ்டருக்கு சாதுவாக வியர்க்க ஆரம்பித்தது. கையை பொக்கட்டில் இருந்து வெளியே எடுத்தார். இந்த இருபத்தி ஐந்து வருட எக்ஸ்பீரியன்ஸில் ஒரு இலையான் கூட இந்த காட்டு காட்டியதில்லை. இன்றைக்கு செத்த இலையான் ஒன்று மாஸ்டருக்கு தண்ணி காட்டுகிறது.

“இல்ல .. இது வந்து .. நீங்க அடிச்ச அடில மற்ற ரெண்டு காலும் அடிச்ச இடத்திலேயே உடைஞ்சு ஒட்டியிருக்கும்..அதோட இந்த இலையான் உண்மையிலேயே இலையான் வகை இல்லை .. இது ஒரு பூச்சி வகை .. தென்னை மரத்தில ….”

மாஸ்டர் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே மயூரன் தன் பையிலிருந்து ஒரு ஷொப்பிங் பாக்கை இப்போது வெளியே எடுத்தான். பாக்கின் உள்ளே இருபது முப்பது இலையான்கள். குற்றியுரும் குலையுயிருமாய் ஊர்ந்துகொண்டிருந்தது. சின்னதும் பெரிதுமாய்;

“நேற்று பின்னேரம் முழுக்க இவனுக்கு இதான் வேலை சேர். டியூஷனுக்கும் போக இல்லை. ஒரு அடி மட்டத்தை எடுத்து கண்ட இலையான் எல்லாத்தையும் அடி அடி என்று அடிச்சு, பத்தாம தேங்காய் கடைக்கும் வந்திட்டான். சந்தையடியிலையும் விசாரிச்சம் சேர் .. ஆறு கால் தானாம்..”

மாஸ்டர் தான் சுற்றி வளைக்கப்பட்டிருப்பதை உணர்ந்தார். இனி தப்ப முடியாது. “இலையானுக்கு நிஜமாகவே ஆறுகால் தான் போல. ஐயோ, இவன் வைத்தி கொம்ப்ளைன் பண்ணினால் பிரின்சி நாயாய் குலைக்குமே” என்று யோசிக்க மாஸ்டருக்கு கொஞ்சம் நடுக்கமும் தொடங்கியது.

“இல்லை வைத்தி அது மார்க்கிங் ஸ்கீம்ல அப்பிடித்தான் இருக்கு. இலையான் எண்டுறது டிப்டேரா எண்ட விஞ்ஞான குடும்பத்தை சேர்ந்த பூச்சி .. எட்டு கால் தான் இருக்கோணும். எதுக்கும் நான் மற்ற சயன்ஸ் டீச்சர்மாரோடையும் கதைச்சிட்டு செய்யுறன். உண்மையிலேயே இலையானுக்கு ஆறுகால் தான் என்றால் கோட்டக்கல்வித்திணைக்களத்துக்கு அனுப்பி எடுக்கோணும். சிலபஸும் மாத்தோணும். நீ யோசியாத .. நான் சரியா திருத்தி கொடுக்கிறன்”

மாஸ்டர் டிப்டேரா, கோட்டக்கல்வி, சிலபஸ் என்று வைத்திக்கு புரியாத பாஷையில் விளக்கம் கொடுத்து சமாளித்தார்.

“என்னத்த சீலம்பா டிப்பரோ, அறுந்த இலையானுக்கு எத்தினை கால் எண்டு கூட தெரியாத படிப்பு… ”

புலம்பிக்கொண்டே வைத்தி புறப்பட, மாஸ்டர் வகுப்பறையை திரும்பிக்கூட பார்க்காமல் நேரே கரும்பலகைக்கு போனார்.

“கதையை விட்டிட்டு எழுதுங்கடா… விலங்குகளில் தாவர உண்ணி, விலங்கு உண்ணி, அனைத்தும் உண்ணி என்று ..”

ஜெயசிக்குறு நடவடிக்கை மீள ஆரம்பிக்க தொடங்கியது. மெதுவாகவும் பலமாகவும்.  வறு..வறு…வறு….

“படீர்”

“என்னடா அங்க சத்தம்?”

..

“சரியான இலையான் சேர்”

 

------------------------------------------------------------------ முற்றும் --------------------------------------------------------------------

நன்றி:

மூலக்கதை : கேதா

படங்கள் : இணையம்

Comments

  1. //ஆனையிறவிலிருந்தும் மாங்குளத்திலிருந்தும் இருமுனைகளை திறந்துகொண்டு ஸ்ரீலங்கா இராணுவம் ஜெயசிக்குறு நடவடிக்கையை ஆரம்பித்திருந்தது.//

    அருமையான உவமானம். விஞ்ஞானம் எவ்வளவோ வளர்ந்தும் இன்னும் இலங்கையின் பாடத்திட்டத்தில் பல இடங்கள் அப்டேட் செய்யப்படாமலே தான் இருக்கின்றன.

    அண்மையில் ஒரு இந்தியச் சிறுமி காந்தி எப்போது தேசத்தந்தையானார் என்று கேள்வி கேட்டு நடந்த சம்பவத்தை இக்கதை வாசிக்கும்போது ஞாபகப்படுத்துகிறது.

    ReplyDelete
  2. உவமையா, உவமானமா? தமிழ்ல கொஞ்சம் வீக்கு.

    ReplyDelete
  3. துவக்கமும் அருமை முடிவும் அருமை.!

    ReplyDelete
  4. சொல்லி வேலை இல்லை கதை சுப்பர். வலது கைக்காரர், "இடது கை எழுதிக்கொண்டிருக்க வலது கை சொறிஞ்சு கொண்டிருக்கும்" என்ன அழகு. வாத்தி எப்பிடிப்பட்டவன் எண்டத இந்த ஒரு வரி சொல்லீட்டுது. இந்த ஜெயசிக்குறு ரிவிரச மேட்டர் சுப்பர். இன்னும் எண்கள் ஊர் வகுப்பறைகளில் மயூரன்கள் இருக்கிறார்கள், அவர்களின் ஆறுகளை எட்டாக மாற்றும் அரியலிங்கங்களும் இருக்கிறார்கள். அநேகமான மயூரன்கள் அடிவாங்கி எட்டென்று ஏற்றுக்கொண்டுவிடுகிறார்கள். டொமினிக் ஜீவா ஒரு நேர்காணலில் தன் அனுபவத்தை சொன்னபோது, அவருக்கும் வகுப்பில இதே மாதிரி அனுபவம் ஏற்பட்டதாக சொன்னார். அந்த சம்பவம் நடந்தநாள் ஜீவாவின் கடைசி பள்ளி நாளாக இருந்திருக்கிறது. அந்த பள்ளி இடைவிலகல் டொமினிக் ஜீவா எனும் எழுத்தாளனை உருவாக்கியது.

    இந்தக்கதை ஒரு கல்லை அல்ல, சில மலைகளை நகர்த்திவைத்திருக்கிறது. நான் பகிர்ந்த ஒரு புள்ளியை நீங்கள் பெரும் கோலமாக்கி இருக்கிறீங்கள். கதையின் ஒவ்வொரு வரியும் அழகு, நுட்பம், நேர்த்தி சேர்த்து எழுதப்பட்டிருக்கிறது. வாசித்தபின் கதைக்குள் தொலைந்து போய், சில நிமிடங்கள் புரியாத ஒரு மௌனத்தில் மூழ்கி, மெல்ல வெளிவரும் உணர்வு மிகச்சில சிறுகதைகளே தந்திருக்கின்றன. இந்தக்கதை இன்னும் பல ஆண்டுகளுக்குப்பின்னும் இருக்கும் என்றே தோன்றுகிறது.

    ReplyDelete
  5. இந்த மாதிரி மயூரன், அரியலிங்கம் , எங்கட கல்வித்திட்டம் எல்லாம் வச்சு நூறு குட்டி குட்டி கதைகள் எழுதலாம். கதை 'சிக் ' எண்டு கச்சிதமா இருக்கு.
    வாசிக்கும்போது ஞாபகம் வந்த ஒரு சம்பவம். நான் மொறட்டுவையில final year படிக்கேக்க நடந்தது.

    பெங்களூர்ல இருந்து Prof .சந்திரசேகர் எண்டு ஒரு scientist , steel சம்பந்தமா ஒரு அருமையான presentation குடுத்தார். 45 நிமிஷம் presentation முடிஞ்சவுடன எங்களையெல்லாம் பார்த்து வழக்கம் போல எதாவது கேள்வி இருந்தா கேட்கவும், 'I am happy to answer ' என்றார். முன்னால இருத்த lecturers ரெண்டு மூண்டு கேள்வி கேட்டினமே தவிர எங்கட பக்கம் இறுதி பெரிசா சத்தம் இல்ல. வெறும் சலசலப்பு மட்டும் தான். Prof .Dias , திரும்பி ஆராவது ஏதாவது கேள்வி கேக்கினமா எண்டு பாத்துக்கொண்டே இருந்தார். எனக்கு கூட ரெண்டு கேள்வி தொண்டைக்குள்ள சிக்கிக்கொண்டு நிண்டது, ஆனா வாய் திறக்க பயம்.

    சந்திரசேகர் விடுறதா இல்ல. திடீரெண்டு கரண்ட் கட்டாகி auditorium முழுக்க இருட்டு. பக்கத்தில இருக்கிற ஆள் முகமெல்லாம் மங்கலா தான் தெரிஞ்சது. தொடர்ந்து இருபது நிமிஷம் சந்திரசேகர் எங்கட கேள்வி மழையில நனைஞ்சு நாங்களும் பதில் மழையில நனைஞ்சு (நானும் கேள்வி கேட்டனான்) - அவர் போகமுதல் , 'had I known this , I would have asked you to switch off the lights earlier " எண்டு சொல்லி சிரிச்சிட்டு போனார்.

    ReplyDelete
  6. பழைய நினைவுகளை மீட்டுப் பார்க்க வைத்த கதை. அனேகமாக எல்லோருக்கும் இருக்கும் இந்த பசுமை நினைவுகள். ஆனாலும் பாவம் மாஸ்டர் ....... இப்பிடி எல்லாம் எழுதுவாங்கள் எண்டு தெரிஞ்சு இருந்தால் வெத்திலை கடை வச்சு இலையான் எண்ணியிருப்பார் அப்பவே.....

    Dhanni.... Super!!!

    ReplyDelete
  7. Dhanni யா? ஆரிது?

    ReplyDelete
  8. அருமையான கதை அண்ணை. கதை சொல்லும் விதத்தில், யாழ் இந்து வகுப்பறைக்கே போய் வந்த மாதிரி ஒரு உணர்வு.

    ReplyDelete
  9. நன்றி ஹாலிவுட் ரசிகன் ...

    //உவமையா, உவமானமா? தமிழ்ல கொஞ்சம் வீக்கு.//
    நமக்கு புரிஞ்சுதுல்ல .. அதான் முக்கியம்!

    ReplyDelete
  10. நன்றி வரலாற்று சுவடுகள்.

    ReplyDelete
  11. நன்றி கேதா .. வசிஷ்டர் வாயால மகரிஷியா? :)

    ReplyDelete
  12. வாங்க தன்யா! .. நன்றி!

    //கதை 'சிக் ' எண்டு கச்சிதமா இருக்கு//
    ஓகே ஓகே .. புரியுது ... இனி கதையெல்லாம் நச்சென்று எழுத ட்ரை பண்ணுறன் :)

    //'had I known this , I would have asked you to switch off the lights earlier " எண்டு சொல்லி சிரிச்சிட்டு போனார். //

    இதுக்கென்று ஸ்பெஷலா நாங்க ஒரு டிரிக் வச்சிருக்கிறோம் .. எஸ்கேப் ஆக ஏலாது எண்டு தெரிஞ்சா ஆரம்பத்திலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்ல என்ற மாதிரி .. எல்லாருக்கும் முன்னமேயே ஒரு மொக்கை கேள்வியை கேட்டு நாங்களும் ரவுடி என்று அமுங்கிடுவோம் ... மற்றபடி .. நாங்கெல்லாம் கரண்டு போய் .. அணுகுண்டே வெடிச்சாலும் .. கேள்வி கேட்கமாட்டோமே..

    ReplyDelete
  13. வாங்க பெயரில்லா!
    //இப்பிடி எல்லாம் எழுதுவாங்கள் எண்டு தெரிஞ்சு இருந்தால் வெத்திலை கடை வச்சு இலையான் எண்ணியிருப்பார்//
    சொறியலிங்கம் கடைல எவன் வெத்திலை வாங்குவான்?

    //Dhanni.... Super!!! //
    ட்ரான்ஸ்லேட் பண்ணினா தண்ணி! .. May I call upon Ms Dhanya on stage please!

    ReplyDelete
  14. நன்றி கோபி .. பாடசாலைக்கு பாடசாலை இராணுவ நடவடிக்கை இருந்திருக்கு அப்ப!

    ReplyDelete
  15. //பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்//

    //“சுளீர்” என்று இம்முறை சுருதி மாறியது. //

    //கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது. மேலுக்கு நீலக்கலரில் மார்டின் சேர்ட், //

    //இந்த இருபத்தி ஐந்து வருட எக்ஸ்பீரியன்ஸில் ஒரு இலையான் கூட இந்த காட்டு காட்டியதில்லை. இன்றைக்கு செத்த இலையான் ஒன்று மாஸ்டருக்கு தண்ணி காட்டுகிறது.//

    //மாஸ்டர் டிப்டேரா, கோட்டக்கல்வி, சிலபஸ் என்று வைத்திக்கு புரியாத பாஷையில் விளக்கம் கொடுத்து சமாளித்தார்.//

    ச்சே..இப்படிதான் கதை எழுதணுமா?மயிலா alert....

    கதை கரு ஒன்றும் புதிதானதோ, கேள்விபடாததோ இல்லை....அந்த கருப்பு கலர் வரிகளை நீக்கினாலும் கதையின் கரு அங்கேயே அப்படியேதான் நிற்கும்...ஆனால் அங்குதான் அந்த வரிகளில்தான் நீங்கள் நிற்கிறீர்கள்...

    இரண்டு முறை வாசித்தேன்... இம்முறை புரிதலை தேடி அல்ல...இரசனையின் விழைவாய்.. just to traverse thru ur narration again and again...

    ReplyDelete
  16. The last line (the end) is a good story teller's way of ending. Brilliant!!

    Without that kind of ending, anyone can write a narration like this. But only few can end like this.

    Only criticism I can say is that it is a bit more scratchy. The scratching bit could have been a bit more subtle. Again that is me, and others may find it as a good attribute.

    (From Scarborough, ONT)

    ReplyDelete
  17. நன்றி மயிலன் ... கொஞ்சம் ஓவரா புகழ்ந்தாலும் ... கேட்க ஓகே!!!

    ReplyDelete
  18. Thanks Sakthi Anna!

    The scratchy part may sound too much ..yeah ... I joined that with rivirasa/jeyasikuru .. and every time its mentioned, something will follow .. and it would eventually turn nasty for person who does(this case ariyalingham)... But I admit it could be an overdose too. This metaphor may not be really required for this story .. but it was just a try.

    Thanks for the feedback Anna.

    ReplyDelete
  19. // பக்கத்திலேயே முருகானந்தம் மிஸ்ஸின்… //
    செம்ம!!

    //ஞாயிற்றுகிழமையானால் இவனும் போய் கடையில் உட்கார்ந்துவிடுவான். கணக்கு பாடம் கொஞ்சம் செய்வான். அதிலும் சிட்டை கணக்கு ஒருநாளும் பிழைக்காது.// :-)

    //“தேங்காய் லோட் ஏத்திறதுகள் எல்லாம் கேள்வி கேட்க வெளிக்கிட்டிதுகள்… //
    இதில நம்மாளுகளின் வேற ஒரு கலர் வருதில்ல!
    :-)

    //பாடசாலை வருவதற்காக வைத்தி கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது//

    //மாஸ்டர் புங்குடுதீவில் எஸ்எஸ்ஸி பாஸ் பண்ணி, டொக்டராகும் ஆசையில் ஸ்கந்தாவரோதயாவில் இங்க்லீஷ் மீடியம் சேர்ந்து//

    ரகளையான வசனங்கள்!
    கலக்கல் பாஸ்! :-)

    ReplyDelete
  20. மச்சி கதை வாசிக்க வாசிக்க என் கண்முன்னாடி எங்கட வகுப்பறையும் நீ சொன்ன புனைவுப்பாத்திரத்தின் " அரியலிங்கம் " உண்மை பாத்திரமான "கடலை .... " சேர்தாண்டா கண் முன்னாடி வந்து நிண்டார்... முடியல அப்படியே சின்ன வயசுக்கு போய் வந்த பீலிங்டா...

    அதுசரி அது என்ன " மெய்யாலுமே" என்ற வார்த்தை பிரயோகம்... இது ஒரு சுயம் இழந்த நிலையை தட்டி எழுப்பி விட்டிட்டு மச்சி.. அந்த வார்த்தை இந்திய சினிமாவில தான்,நம்ம ஊரில உண்மையாவோ எண்டு தானெ கேட்பினம்..

    சூப்பர் மச்சி.. ரசிச்சு ரசிச்சு சுயம் இழந்து பயணித்தேண்டா

    ReplyDelete
    Replies
    1. "மெய்யாலுமே" என்ட வார்த்தையை நாங்கள் தான் (யாழ்ப்பணத்தார்) அதிகம் பயன் படுத்துகின்றோம்.. இதை இந்தியர்கள் பேசி நான் பார்த்ததில்லை...அதே நேரத்தில் இலங்கையின் பிற மாவட்டங்களிலும் இதை நான் அதிகமாக காணவில்லை.. ஏனெனில் நான் "மெய்யாலுமோ"என்டு பழக்க தோஷத்தில் சொல்லிவிட்டு பின்னர் பலருக்கு அதுக்கான அர்த்தத்தை சொல்லும் சந்தர்ப்பங்கள் எனக்கு அமைந்திருக்கின்றன..

      -வாமணன்-

      Delete
  21. நன்றி மச்சி ...

    // " மெய்யாலுமே" என்ற வார்த்தை பிரயோகம்//

    மெய்யாலுமே .. மெய்க்கு போன்ற வார்த்தைகள் எங்கட ஊரில் பிரயோகத்தில இருக்கு... எங்கள் வீட்டிலேயே பாவிப்பிம் .. இப்ப சக்திவேல் அண்ணா வேற கனடாவில இருக்கிறார் .. சும்மா புகையை கிழப்பாத மச்சி!

    ReplyDelete
  22. // " மெய்யாலுமே" என்ற வார்த்தை பிரயோகம்//

    சீச்சீ, நான் கேட்கவில்லயே !

    ReplyDelete
  23. நன்றி கவி அழகன்!

    ReplyDelete
  24. இன்னும் நிறைய மயூரன்கள் வருவார்கள் .
    நல்ல யதார்த்தமான கதை
    //ஜெயசிக்குறு நடவடிக்கை மீள ஆரம்பிக்க தொடங்கியது. மெதுவாகவும் பலமாகவும்.//
    ரொம்ப ஓவர்

    ReplyDelete
  25. கதை அருமை ....
    /பாடசாலை வருவதற்காக வைத்தி கட்டியிருந்த புது சாரம் படக் படக் என்று பொங்கியிருந்தது. உரிக்க முயன்றும் முடியாமல் போன ஸ்டிக்கரில் கிப்ஸ் பிராண்ட் இன்னமும் வெளித்தெரிந்தது// சூப்பர் ...
    மெய்யாலுமே .. என்பது வழக்கத்தில் உள்ளதுதான் ....

    ReplyDelete
  26. நன்றி கீதா ...

    //ரொம்ப ஓவர்//
    நாங்க எப்பவுமே இப்பிடி தான்!

    ReplyDelete
  27. வாங்க ஜனனி ... நன்றி ..

    //மெய்யாலுமே .. என்பது வழக்கத்தில் உள்ளதுதான் ....//
    நெஞ்சில பாலை வார்த்தீங்க ஜனனி!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி இளங்குமரன்

யாழ்ப்பாண மக்களின் வாழ்க்கை போருடனும் துயருடனும் கடந்தது என்று எல்லோரும் அறிந்ததுதான், கதைகளும் ஏராளம். ஆனால் ஜே.கே தனது சொந்த அனுபவங்களின் ஊடே காட்டும் தொண்ணூறுகளின் யாழ் வாழ்க்கை மிக அழகானது, இயல்பானது. இன்னல்கள் கடந்த ஜன்னல் காற்று அந்த வாழ்க்கை. அந்த வாழ்வுணர்வு யாழில் வாழ்ந்தவர்களுக்கு தெரியும்(வாழ்பவன் நான், சற்றுப் பின்னே பிறந்துவிட்டேன், சில அனுபவங்களை இழந்தும் விட்டேன்). • ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு சுளை, ஒவ்வொரு சுளையும் தனிச்சுவை. அவ்வப்போது தூறும் குண்டுமழையில் நனையாமல் பதுங்கும் பங்கர்கள், பங்கருக்குள்ளும் பய(ம்)பக்தியுடன் வைக்கும் பிள்ளையார் படம். அவரின் தம்பி முருகனைக்காண என விழாக்கோலம் பூண்ட நல்லூர் போய், வள்ளி, தெய்வானையையே தேடித் திரியும் உள்ளூர் முருகன்கள். விளையாட்டுப்பொருட்கள், ஜஸ்கிரீம், கச்சான் என கடைக்கண் கடைத்தெருப்பக்கமே இருக்க சுற்றித்திரியும் சின்னன்கள். தெருவெல்லாம் தெய்வம்கொண்ட கோயில்கள், பரீட்சை பயத்தில் அத்தனை கோயில்களுக்கும் போடும் கும்பிடுகள். எந்தப் பக்கம் பந்து போட்டாலும் நேரே மட்டும் அடிக்க கற்றுக்கொடுக்கும் ஒழுங்கை கிரிக்கட்டுகள். பாடசாலைகளுக்கிட