Skip to main content

வாடைக்காற்று

vaadai 7

“நெத்தலி மீன் மட்டும் எழுபது அந்தர் வரை தேறும்” என்றான் செமியோன்.
“இந்த கடலில் நெத்தலியிருப்பது முந்தி தெரியாது” என்று வியந்தார் யூசுப்பு சம்மாட்டியார்.
மரியதாஸ் தோணியை விட்டு கீழே குதித்தான். எல்லோரும் மரியாதையோடு பார்த்தார்கள். அவன் ஏளனமாக எல்லோரையும் ஒருமுறை சுற்றிபார்த்தான். அவனுடைய கண்கள் ஓரிடத்தில் ஒருகணம் நிலைத்தன. ஒருகணப்பொழுது தான்.
நாகம்மா தலையைக் குனிந்துகொண்டாள்.
அந்த இடத்தில் என்னையறியாமலே ஏலே கீச்சான் என்று ரகுமான் பாடதொடங்கினார். காட்சிக்கு எவ்வளவு பொருத்தமான பாடல். வாசிக்க வாசிக்க நெடுந்தீவு இன்னமும் விரிகிறது. மீன் பிடிக்க மன்னாரிலிருந்து வந்து வாடியமைத்திருக்கும் செமியோன், அவன் சம்மாட்டியார், நாகம்மா பிலோமினா, பொன்னுக்கிழவர். விதானை, எந்த நேரமும் குதிரையோடு திரியும் விருத்தாசலம், கிராமத்து வில்லன் சண்முகம், வடதுருவத்தில் இருந்து பருவத்துக்கு வந்து சேர்ந்த கூழைக்கடாக்கள், இவர்களை எல்லாம் ஒன்றுசேர்த்த “வாடைக்காற்று”, நேற்றோடு ஒரு பத்து தடவை வாசித்திருப்பேன். முதல்முறை, தவ்வல் வயதில் 87/88 காலத்தில் வாசித்தது. பிறகு பேச்சுப் போட்டிக்கு முதல்பரிசாக பத்தாம் வகுப்பில் பாடசாலையில் தந்தார்கள். மனப்பாடம் செய்தேன். இடம்பெயர்ந்து போன இடமெலாம் பையில் வைத்திருந்தேன். நாற்பது வருடங்களுக்கு முன்னர் செங்கை ஆழியான் எழுதிய கிளாஸிக், இன்றைக்கும் வாசிக்கும்போது அந்த மண்ணின் வாசத்தை அப்படியே கொண்டுவந்து நிறுத்துகிறது என்றால் … பச்ச் ..அந்த மனுசனை கோயில் கட்டி கும்பிடவேண்டும்.

சோளகக்காற்று முடிந்து வாடைக்காற்று வீச ஆரம்பிக்க, நெடுந்தீவுக்கு வந்து வாடிபோட்டு மீன்பிடிக்கும் செமியோன், மரியதாஸ், இவர்கள் இருவரின் மீனவர் குழுக்களை சுற்றி பின்னப்பட்ட கதை. கூடவே அதையொட்டிய நெடுந்தீவு மக்களின் வாழ்க்கை. பிலோமினா, நல்ல சிவப்பா வெள்ளிக்காரியாட்டம், இன்னொருத்தி நாகம்மா இவர்கள் இருவரது குடும்பங்கள், காதல்கள். நாகம்மாவுக்கு பிழைக்கத்தெரியாத குதிரை மேய்ச்சு திரியும் தாய்மாமன். அவனின் நண்பன் வில்லன். இப்படி போகும் கதையில் சீசனுக்கு சீசன் வேடந்தாங்கல் வரும்பறவைகள் போல நெடுந்தீவுக்கு வந்துசேரும் கூழைக்கடாக்கள். மனிதர்களுக்கிடையே நிகழும் சம்பவங்களை கூழைக்கடாக்களை வைத்து உவமானப்படுத்தும், சில இடங்களில் இரண்டுமே ஒரே புள்ளியில் சந்திக்கும் (தாய்மாமன் கூழைக்கடா ஒன்றை வேட்டையாட நாயாட்டம் அலைவது) கதை சொல்லும்பாணி என்று செங்கை ஆழியான் சத்தம்போடாமல் கலக்கிய நாவல் இது. இந்த நாவலை வாங்கி வாசியுங்கள் என்று நான் சொல்லமுடியாது. அனேகமான ஈழத்து வாசகர்கள் இதை தாண்டாமல் வந்திருக்கமாட்டார்கள். ஒரு நினைவு மீட்டல், அவ்வளவு தான்.

Sengai Aaliyanமுன்னுரையிலே இந்த கதையை பாரதிராஜா ஏறத்தாழ திருடி தன்னுடைய கல்லுக்குள் ஈரத்தில் பயன்படுத்தியிருக்கிறார் என்று செங்கை ஆழியான் மிகவுமே மனம் வருந்தியிருந்தார். பாரதிராஜா நெய்தலை மருதத்துக்கு மாற்றினாலும் பாத்திரங்களும் ஆதாரமான கதையும் ஒன்றே என்று புட்டு புட்டு வைத்திருக்கிறார். ஸ்வெட்டரை கூட கலர் மாத்தாமல் ஈயடிச்சான் கொப்பியாக சுட்டதுமட்டுமல்லாமல் அது “I am Sam” இல்லை என்னுடைய சொந்தக்கதை என்று கூசாமல் பொய்சொல்லும் திரையுலகத்தோடு, சாதாரணமாக பிறவுன் றோட்டில் சாய்வுநாற்காலியில் இருந்து எழுதும் செங்கை ஆழியான் சில்லுப்படமுடியாது. முன்னுரை மட்டும் எழுதலாம். வாடைக்காற்று ஈழத்திலும் திரைப்படமானது. கையில் சிக்கினால் பார்க்கவேண்டும். ஸ்டில்கள் கதி கலக்குகிறது.

imagesபாரதிராஜா என்றவுடன் தான் இன்னொரு ஞாபகம். கீராவின் “கோபல்லபுரத்து மக்கள்” நாவலில் ஒரு காட்சி. ஒரு இளம்பெண் கணவனோடு கோபித்தபடி, கழுத்தில் நகைகளோடு ஒரு குளத்துப்பக்கம் நடந்துகொண்டிருக்கிறாள். அங்கே திருடன். அவளை நீருக்குள்ளேயே அமுக்கி கொலை செய்ய அவளோ அவன் கால் பெருவிரலை கடித்துவிட்டாள். இப்போது விரலை வெட்டினால் தான் காலை விடுவிக்கமுடியும். இதை வாசிக்க வாசிக்க, அட இது கூட ஒரு படத்தில் வந்ததே என்று யோசித்து, “எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும்” வசனமும் ஞாபகத்துக்கு வர, பாரதிராஜா சுட்டதோ அல்லது இன்ஸ்பிரேஷனோ அது தெரியாது. ஆனால் மனுஷன் நல்ல வாசகன் என்று புரிந்தது.

இரண்டாண்டுகளுக்கு முன்னர் யாழ்ப்பாணம் போனபோது செங்கை ஆழியானின் மருமகனோடு பேசிக்கொண்டிருந்தேன். “மாமா இப்ப ஒரு புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்” என்றான். முடித்துவிட்டாரா தெரியவில்லை. கேட்கவேண்டும். அடுத்தமுறை ஊருக்கு போனால் “அவருக்கு முன்னால போய் நிண்டா வாய் டைப் அடிக்குமே” என்ற பயத்தை ஒதுக்கி விட்டு அவர் வீட்டுக்கு விசிட் அடிக்கவேண்டும். சுஜாதாவை தான் சந்திக்கமுடியவில்லை. செங்கை ஆழியானை மிஸ் பண்ணிவிட கூடாது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக