Skip to main content

ஆச்சி பயணம் போகிறாள்!

3.4

ஆச்சிக்கு அறுபத்தொன்பது வயசு. யாழ்ப்பாணத்திலே பிறந்து வெளியுலகம் தெரியாமல் இத்தனை ஆண்டுகள் கழித்துவிட்டாள்.  பஸ்ஸை வசு என்று சொல்லும் தலைமுறை அவளது. “அந்த காலத்தில பத்து சதத்தோட வெளிக்கிட்டால் குடும்பத்துக்கு தேவையான எல்லாம் வாங்கலாம், இப்ப பத்து ரூபாய் கொண்டு போனாலும் காணாது” என்று 1969ம் ஆண்டு விலைவாசியை நொந்துகொள்கிறாள். சுருட்டு குடிப்பாள். முற்போக்குவாதியும் கூட. அவ்வப்போது அரசியல் கடிகள் விடுவாள். முசுப்பாத்தியான ஆச்சி. அவளின் வாழ்நாள் ஆசை இன்றைக்கு தான் நிறைவேறப்போகிறது. ஆச்சியின் கடைக்குட்டி சிவராசா ஒருவழியாக அவளை கதிர்காமம் கூட்டிப்போக சம்மதித்துவிட, முதன்முதலாக கோச்சி ஏறி,
ஆச்சி பயணம் போகிறாள்.
பயணத்துக்கு இரண்டு கதாபாத்திரங்கள் போதாதே. அதுவும் ஒரு இளம்பெண், காதல் இருந்தால் தானே பயணம் குளிச்சியாக இருக்கும். பேராதனைப்பல்கலைக்கழகத்தில் படிக்கும் ஆச்சியின் தம்பி மகள் செல்வி இவர்களோடு இணைகிறாள். சிவராசாவும் பேராதனையில் படித்தவன் தான். செல்விக்கு சிவராசன் மச்சான் முறை. திருமணம் முற்றாகியிருக்கிறது. இவ்வளவும் போதும் கதிர்காமம் மட்டும் கதை நகர்த்த. கோண்டாவில் “றெயில் டேசனில்” இருந்து கதை நகர்கிறது. ஆச்சியின் அலப்பறைக்களோடு.
“ஈழத்து நகைச்சுவை வரலாற்றில் இந்த நூல் ஒரு திருப்புமுனை” என்று இதை எழுதிய செங்கை ஆழியான் சொல்லிக்கொள்கிறார். அப்படியா? நகைச்சுவைகள் எல்லாம் லொள்ளுசபா வகை கடி ஜோக்குகள். சாம்பிளுக்கு இரண்டு.
“மாத்தையா மொனவத பொண்ட”
“போண்டாவாமே, சுசியம் இருந்தா தரச்சொல்லு”
இது யாழ்தேவி ரயில் கண்டீன் வெய்ட்டருக்கு ஆச்சி சொல்லும் பதில். “எப்பா” என்று சிங்களத்தில் சொன்னால் “அப்பாவோ.. எங்கை பிள்ளை” என்பாள். இப்படி சிங்கள வசனங்களுக்கு நாவல் பூரா ஆச்சி கவுண்டர் குடுத்துக்கொண்டே இருக்கும். சிவராசா செல்வி இருவரும் ஆச்சி கவனிக்காத போது செய்யும் சில்மிஷங்களும் குறைவில்லை. நுள்ளுவார்கள். கிள்ளுவார்கள். ஆச்சி அரவம் கேட்டு என்னெவென்று கேட்டால் சமாளிப்பார்கள். குகைக்குள்ளால் ரயில் போய் வெளிவரும் போது செல்வி அவனைப்பார்த்து “காவாலி” என்பாள். இப்படி பல நடக்கும். சண்டையும் பிடிப்பார்கள். சிவராசா தான் ஒரு “விண்ணன்” என்று காட்டிக்கொள்வான். செல்வி எது சொன்னாலும் மட்டந்தட்டுவான். அவள் ஆங்கிலேயரை உயர்வாக பேசினால் சிவராசா இல்லை என்று ரஷ்யாவையும் சீனாவையும் உயர்வாக பேசுவான். இப்படி ஒரு காதலர் ஜோடி அனேகமான செங்கை ஆழியான் கதைகளில் வந்தே தீரும். வருகிறது.

பார்க்கபோனால் இது ஒரு பயண நாவல். யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிக்கு போய்,  பல்கலைக்கழக சூழல், பேராதனை பூங்கா, தலதா மாளிகை காட்டிவிட்டு, அப்புறம் பஸ் பயணத்தில் கதிர்காமம் போகும் நாவல். போகிற போக்கில் அந்த காலத்து வாழ்க்கை, கொஞ்சம் அரசியல் இவை தான் இந்த நாவல். இதில் தேவையில்லாமல் நகைச்சுவை வலிந்து திணிக்கப்பட்டிருக்கிறது. செங்கை ஆழியானிடம் எப்போதுமே இயல்பான நகைச்சுவை இருக்கும். அவரின் வயோதிப பாத்திரங்கள் மிகவும் ஆளுமை மிக்கதாக இருக்கும். இதிலே மிஸ்ஸிங். இலங்கை வானொலி நாடகங்கள், தெனாலி கமல் ரக நகைச்சுவை இது. நாடகத்துக்கு ஒகே. நவீனத்துக்கு ஒட்டவில்லை.  மணிரத்தினத்துக்கு ஒரு கடல் போல செங்கை ஆழியானுக்கு “ஆச்சி பயணம் போகிறாள்”.

இதற்கு அணிந்துரை எழுதிய செம்பியன்செல்வன், “உயர்ந்த நகைச்சுவையானது மனித குலத்தின் ஆத்ம பரிசீலனையாகும், அதை இந்த நாவல் செய்கிறது” என்கிறார். ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

அறுபதுகளிலேயே இப்படி நகைச்சுவை எழுதியிருக்கிறார்களே. அப்போது இப்படி எல்லாம் எழுதவும் முடியுமா? என்று யாராவது கேட்டால், பதிலுக்கு புதுமைப்பித்தனை துணைக்கு அழைக்கவேண்டும்.  “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” சிறுகதை. சில பகுதிகளை சும்மா சாம்பிளுக்கு தருகிறேன்.
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் வீட்டுக்கு வருகிறார். வரம் கொடுக்க தயாராகும் கடவுளிடம் கந்தசாமிப்பிள்ளை சொல்லுகிறார். “ஒய் கடவுளே, இந்தா பிடி வரத்தை என்கிற வித்தை எல்லாம் எங்கிட்ட செல்லாது. நீர் வரத்தை கொடுத்து விட்டு உம்பாட்டுக்கு போவீர்; இன்னொரு தெய்வம் வரும். தலையை கொடு என்று கேட்கும். உம்மிடம் வரத்தை வாங்கிக்கொண்டு பிறகு தலைக்கு ஆபத்தை தேடிக்கொள்ளும் ஏமாந்த சோணகிரி நான் அல்ல!”
கடவுள் கந்தசாமிப்பிள்ளையின் குழந்தைக்கு லட்டு வாங்கிக்கொடுக்கிறார். குழந்தை அதை எடுத்து சாப்பிட்டவாறே கடவுளுக்கும் நீட்டுகிறது. “இதைத்தின்னு பாரு, இனிச்சுக்கெடக்கு” என்கிறது. வாங்கிச்சாப்பிட்ட கடவுள், குழந்தையின் மனதை குளிர்விக்கவெண்ணி “பாப்பா உதுந்தது எனக்கு, முழுசு உனக்கு” என்பார். குழந்தை முழு லட்டை கையில் வைத்துவாறே யோசித்துவிட்டு சொல்லும்.
“தாத்தா முழுசு வாய்க்குள்ளே கொள்ளாதே, உதுத்தா உனக்கென்னு சொல்லுதீயே, அப்ப எனக்கு இல்லையா?”
புதுமைப்பித்தன் “கடவுளும் கந்தசாமிப்பிள்ளையும்” எழுதியது 1943ம் ஆண்டு!

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக