Skip to main content

"என் கொல்லைப்புறத்துக் காதலிகள்" பற்றி பாத்திமா நலீம்

அன்பின் ஜேகே,

முதன் முதலாக ஒரு நாவலுக்கு விமர்சனம் எழுதுகிறேன். நேரம் ஒதுக்கி கட்டாயம் எழுத வேண்டும் என்ற வாஞ்சையோடு எழுதுகிறேன். உங்கள் கொல்லைப்புறத்துக் காதலிகள் மீது எனக்கு அதீத காதல். எழுதிய உங்களை விடவும் சில பக்கங்களையும் சில பந்திகளையும் அதிகம் வாசித்திருப்பேன் என்றே நினைக்கிறேன். இலகு தமிழும் பேச்சு நடையும் அலட்டிக்கொள்ளாத ஆங்கிலமும் கலந்து கட்டி விளாசித்தள்ளி இருக்கிறீர்கள். சிம்பிளாய் உங்களின்ட பாஷையில் சொன்னால் கௌரியின் இன்னிங்க்ஸ் போல. எங்களின்ட பாஷையில் சொன்னால் ஜயசூரிய போல. காதலிகளின் கிராமத்து மணமும், அழகான ஓவியங்களும் எக்ஸ்ட்ரா அழகு. கொஞ்ச நாட்களாகவே வேலைச் சுமைக்குள்ளும் இறக்கி வைக்க மனம் வராது போனது இந்தக் காதலிகளை.


" குட்டியன்" எனக்கு மிகவும் பிடித்துப் போன காதலி. நானே குட்டியனை வளர்த்த feeling. வாசிக்க வாசிக்க நான் வளர்த்த குட்டியனை யாரோ சூறையாடிப்போன துயரம். 109 ஆம் பக்கத்துடன் புத்தகத்தை மூடி வைத்து விட்டு நானும் அழுதேன் ஓ என்று. இப்போதும் கண் கலங்குகிறது. தொண்டையில் எச்சில் அடைக்கிறது.

பங்கர் - கேள்வி ஞானம் மட்டுமே நமக்குண்டு. அதனாலோ என்னவோ பங்கரின் விபரிப்பையும் பங்கர் வெட்டுவதன் அனுபவப் பகிர்வையும், அதனுள் குடியேறும் இன்ன பிற விடயங்களையும் சொல்லப்பட்ட விதத்தை மிகவும் ரசித்தேன். பொம்மரின் பயங்கரத்தையும், பாம்புக்கடி சாவுகளையும் போகிற போக்கிலேயே சொல்லி இருப்பது யோசிக்க வைத்தது. அன்னலட்சுமிக் கிழவி மிகவும் சுவாரஸ்யம். முதலில் சிரிப்பை வரவழைத்தாலும் மீண்டும் வாசிக்கையில் ஏனோ சிங்கப்பூரின் Anton Casey சம்பவம் ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது.

மனத்தால் நினைந்து தொழுது கொண்டால் முடிந்து விடுகிறது எமது கடவுள் வணக்கம். இத்தனை பூக்களா? இத்தனை சாமிப்படங்களா? அதில் முன்னுரிமை வேறா? எனக்கு வாசிக்க வாசிக்க பெரிய thrill. சாமித்தட்டில் பூ வைக்கும் முன்னுரிமையில் வரிசையாய் வந்து முடிகையில் "கன்னத்தை காட்டினால் ? இயேசுவுக்கு வெறும் நித்திய கல்யாணி இலையே மிஞ்சும். புத்தருக்கு அதுவும் இல்லை. கச்சாமி. அருமை. ஒரு பழைய பகிடியும் ஞாபகம் வருகிறது. கிருஷ்ணரை எக்ஸாம் ஹாலில் கொப்பி அடித்தாராம் ஜீசெஸ். ரிசல்ட் வந்ததாம். ஜீசெஸ் பாஸ். ஏனெண்டா Jesus never fails. அப்போ கிருஷ்ணர்? கோவிந்தா கோவிந்தா! அதே நக்கல். சின்னச் சின்ன வரிகளில் எழுத்துக்கள் பளிச்சிடுகின்றன. அத்தனை விலாவாரியாய் விளக்கம் சொல்லி தொப்பி வாங்கிய பிள்ளையாருக்கு மஞ்சள் கோன் பூ சூட்டினாலும் கூட, ஒரு மெல்லிய பெரியார் பாதிப்பு ஆங்காங்கே தெரியத்தான் செய்கிறது. கடவுள் இருப்பதால் நன்மையே அதிகம் என்பதால் அவர் இருந்து விட்டுப் போகட்டுமே? என்ன குறைந்து விட்டது? அழகிய வரிகள். PK படம் பாத்தனீங்களே? ஒருக்கா பாருங்கோ.

சுஜாதாவின் நாவல்கள் ஏனோ படித்ததே இல்லை. உங்கள் எழுத்தின் பாதிப்பால் என் இனிய இயந்திராவோடு சுஜாதாவுடனான பயணத்தை ஆரம்பிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன். பார்ப்போம்.

கம்பவாரிதி.. பிடித்தது கடைசிப் பக்கம். நீண்ட காலமாய் நாம் வியந்து போற்றுபவர்கள் ஒரு நாள் நம்மை போற்றும் போது வரும் உணர்வு... அடடா... "சில்லிட்டது" என்பதை விடவும் வேறு வார்தைகளால் உணர்த்தி இருக்கவே முடியாது JK. அத்தனை உணர்வு பூர்வமாய் உணர்ந்தேன். வாழ்த்துக்கள்.

அரோகரா! திருவிழா நாட்களும், நல்லூர் கோயிலும், அதற்குள்ளே பொருண்மிய காட்சியும் பூங்காவனத் திருவிழாவும் எனக்கு புதிய தகவல்கள். எமக்கு சாத்வீகம் தரும் இடத்தை கேமரா பிளாஷ்களால் இருட்டடிக்க வேண்டாமே. " நச்" வசனம். கரிசனையையும் விசனத்தையும் ஒன்றாக வெளிப்படுத்துகின்றது. கண்டி பெரஹர பார்க்க தெருவோரம் தவம் கிடந்த நமக்கு ஏன் கோவில் திருவிழா பார்க்க இதுவரை தோணவே இல்லை என்ற கேள்வி எழுகிறது. அனுபவித்துதான் இருக்கிறான் பாவிப் பயல் என்று சிறு பொறாமை கூட எட்டிப் பார்க்கிறது.

"யாழ்ப்பாணத்துக் கிரிக்கெட் "ஆடிய திறமை சாலிகளுக்கு சமர்ப்பணம் ஆகட்டும். தவறிப்போன வாய்ப்புக்களின் வலிகளையேனும் தங்கள் வரிகள் வருடிப் போகட்டும்.

( யாரும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் இதை வாசிக்க வேண்டாம். அடுத்த பந்திக்குப் போய் விடுங்கள்) 

என்னை மிகவும் பாதித்தது " கக்கூஸ்." ஆரம்பத்தில் எல்லாம் நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒவ்வொரு யன்னல் ஓட்டையில் இருக்கும் விஷயங்கள் தொடங்கி தூங்கும் ஹீரோ தெரிவது வரை.. அதில் இன்னுமொன்று சேர்த்துக் கொள்ளலாம். உட்கார்ந்து இருக்கும் வரை வாளியில் உள்ள நீரை விரல்களால் சுற்றிச் சுற்றி சுழல் வரைவது. அந்த அனுபவங்கள் டைல்ஸ் பதித்து ஈரம் படாமல் rug போட்ட கக்கூஸ்களில் இல்லைதான்.


1996.october. சத்தியமாய் சொல்கிறேன். வாசித்து முடித்த பின் என்ன செய்வது என்றே விளங்கவில்லை. அழுகை என்பதை விடவும் கோபமும் வெறுப்பும் இன்னும் இன்னும் வார்த்தைகளில் புரிய வைக்க முடியாத உணர்வும்... எப்படி முடிந்தது இத்தனை கீழ்த்தரமாய் யோசிக்க? செயற்பட? அந்த கண்றாவியை அனுபவித்த மக்களை நினைக்க நினைக்க..அரசியலும் வரலாறும் பேசும் எழுத்துக்களில் கூட இத்தனை ஆழத்தை அசிங்கத்தை நான் உணர்ந்ததில்லை. "அந்த வியாதிகளை விட அது கொடுத்த அவமானத்தின் நாற்றம் இருபது வருடங்கள் கழித்தும் அடங்கவில்லை. "எப்படி அடங்கும்?

"அன்புள்ள ஆங்கில இலக்கியா"வின் சண்முகநாதன் மிஸ் கறார் பேர்வழி என்றாலும் cho chweet.. " Don't be stupid, you have literature in you" எத்தனை வைரியத்தையும் நம்பிக்கையையும் விதைத்த வார்த்தைகள் என்பதை கதையின் ஒவ்வொரு கவிதைகளிலும் அதன் ஒப்பீட்டிலும் உணரக் கூடியதாய் இருந்தது. வாசித்தால் நிச்சயம் பெருமைப்படுவார். அவாவ கண்டு பிடிக்க யாரும் உதவி செய்ய மாட்டீங்களே?

இசையின் மீதான காதல் ஏகன் அநேகனிலும், என் மேல் விழுந்த மழைத் துளியிலும், இருவரிலும் பொங்கிப் பெருகுவதை சுலபமாய் காணக் கூடியதாய் இருந்தது. சில பாடல்களை கேட்கும் போது அதனுடன் தொடர்பான சில சம்பவங்களை மனசு நினைத்துக் கொள்ளும். இசைப்பக்கங்கள் அத்தனையும் அப்படித்தான். இசையும் அழகு. செலக்ட் பண்ணிய பாடல் வரிகளும் அழகு. நினைவுத் தூறல்களும் கூட. " யாரக்கா இது மியூசிக்? .... வெள்ளைக்காரனா ? " சத்தியமான சந்தேகம். நமக்கு ஒரு சங்கதியும் தெரியாது. சாஸ்திரியமும் தெரியாது. இசை கேட்டால் அப்படியே லயித்துப் போய் விட மட்டுமே தெரியும். ஆகையினால் "இருவரை " விட்டு விடுகிறேன்.

" விறகு" என்ற மேலோட்டமான விஷயத்தையும் தாண்டி அது சார்ந்த வாழ்க்கையில் இருக்கும் சுவாரசியம் அப்போது வாழ்ந்தவர்களுக்கு மட்டுமே விளங்கும் என்பது நூற்றுக்கு நூறு உண்மை. ஒரு கட்டத்தில் .......கொத்தி முடிஞ்ச கையோட விறகுக்கான தேடல் கோழிக் கூட்டில் போய் முடிந்தது என்பதன் முடிவில் " கடைசியில் நாங்களும் அந்த இடத்தில் இருந்து கொத்தி அகற்றப்பட்டோம்." என்ற வரிகள் போகிற போக்கில் மனதை பிய்த்துக் கொண்டு போனது. எவ்வளவு வேதனையான இடம்பெயர்வை இத்தனை சுருக்கமாக வெளிப்படுத்த முடியுமா?

மாஸ்டரின் கதைகள் வாய்விட்டு சிரித்தேன். பக்கா பெடியன்கள் chapter. கூசிழிவு முதலான பல தமிழ் படுத்தல்கள், எப்படி கண்டு பிடித்தார்கள்? ரூம் போட்டு யோசிச்சிருப்பாயின்களோ? அம்மாமார் அக்காமாரிடம் நல்ல பிள்ளையாய் இன்று வரை நாடகமாடும் பசங்களை ஜீன்ஸ் பீத்தல் ரகசியம் சொல்லி மாட்டி விட்டிருக்க வேண்டாம். மாஸ்டரை தெரியாதென்றவங்கள் JK யையும் தெரியாதென்டு சொல்லப் போறாங்கள். கவனம்.

பெண்களையே வகைப்படுத்தி நக்கல் பண்ணி கேட்டுக் கேட்டு வெறுத்துப் போயிருக்கையில் ஆண்களுக்குள்ளுமா என ஆச்சர்யப் பட வைத்தது " கொட்டில்". சாட்சாத் கொட்டில்களை அப்படியே கண் முன் நிறுத்தியது. ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் வார்த்தைப் பிரயோகங்கள் அருமை. "ஷேர்ட் பின்னாலே அடிப்பக்கம் சோழ மன்னனின் ஓலைச்சுவடி போல சுருண்டு போய்க் கிடக்கும்". என்னதொரு கற்பனை வளம். Be blessed.

"சூப்பர் ஸ்டார்" ஏதும் மிச்சம் இருக்குதே சொல்றதுக்கு... தலைவரின் ரசிகர்கள் எல்லோருமே சிங்கப்பாதைப் பிரியர்கள்தான். ரசிகர்கள் பலவிதம். எல்லா ரசிகர்களுக்கும் JK போல காதலை புத்தகமாக்கி வெளியிட தெரியாது. ஒவ்வொரு அடிமட்ட வெறி பிடித்த ரசிகர்களுக்கும் பூ மாரி பொழிவதும் வெடி கொழுத்துவதும் very basic தேவைப்பாடு. சந்தோசம். அவர்களின் அன்பின் வெளிப்பாடு. ( எனக்கு இதில் உடன்பாடு இல்லை என்பது வேறு விஷயம்) நாம் வளர்ந்த சூழலையும் எமது கலாசாரத்தையும் பண்பாட்டையும் வைத்துக் கொண்டு அவர்களை " லூசுகள்" என எப்படி திட்ட முடியும்? எனக்கென்னவோ இவர்களுக்கும் வருடங்கள் பல கடந்தும் யாழ்ப்பாண வீட்டின் கிணற்றடியில் அடிடாஸ் சப்பாத்து. டிஎஸ்எல்ஆர் கமெரா. ரே-பான் சன் கிளாசஸ் அணிந்து சிலு சிலு வென குளிரடிக்குது அடிக்குது பாட ட்ரை பண்ணிய JKக்கும் பெரிதாய் வித்தியாசம் ஒன்றும் இல்லை. "மணிரத்தினம் " இயக்குனர் என்பதையும் தாண்டி ஒரு இன்ஸ்பிரேஷன் ஆனதும் இந்த காதலினால்தான். காதலின் தீவிரம். அவ்வளவுதான்.

மகாபாரதம் இராமாயணம் எல்லாம் ஏ லெவல் படித்த காலங்களோடு முடிந்து போயிருந்தது. அதன் பின்னர் வாசிப்பு வேறு துறைகளை நோக்கியதாய் விரியவாரம்பிக்க அப்படியே நின்று போன இலக்கியத் தேடலை கிளறி விட்டிருக்கிறது மகாபாரதமும் கம்பவாரிதியும். அதிலும் கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடக்கும் கொடை பற்றிய நீதிக்கதை. Simply superb.

பூந்தளிர் அமரர் சித்திரக் கதைகள் படித்த புராதன கட்டிடத்தின் அருமை உணராதவர்கள் எல்லாம் " அப்பாடா... 400 வருசத்து பழசா" வடிவேலு வகையறா. விட்டுவிடுங்கள்.

"குட்டி" மனதை உலுக்கிய சோகம். தமது வாரிசுகளை இயக்கத்துக்குத் தாரை வார்த்த அத்தனை உள்ளங்களையும் ஏன் வாசிக்கும் எம்மையும் கூட கதறி அழ வைக்கும் வலிய படைப்பு. வாசித்து முடித்த பின்னும் கூட "குட்டி கத்திக் கொண்டே பின்னாலே ஓடி வருகிறாள்."

"மணியாள்" கண்களை கசக்கிப் பிழியாமல் நெஞ்சைத் தொட்ட காதல் கதை. சண்டிக்கட்டு கட்டிக் கொண்டு முதல் ஆளாய் பங்கருக்குள் நுழைந்து மைன்ஸ் கிளியர் பண்ணிய காதல். அடித்தும் படித்தும் அரவணைத்தும் ஆளாக்கிய காதல். " "நீயும் வாச்சியானை?" கேட்கும் போது தலை கோதி விடும் சுகம். தீப ஒளியும் சங்கர்லாலும் தாய் மடியும் தாட்டாங் கட்டிலும் கோயில் மணியோசையும் கடலோசையும்... Beautiful writing JK. மணியாளை பார்க்க வேண்டும் போல். ஒரு அழகான குருவி பொம்மை அல்லாட்டா ஒரு புத்தகம் வாங்கி பரிசு குடுக்க வேணும் போல். முன் பின் தெரியாமலேயே மணியாளில் இத்தனை காதல் கொள்ள வைத்த JK யின் எழுத்துக்கள்... ஒரு புத்தகம்அடிச்சிட்டீங்கள் jK. மணியாளுக்கு சொல்லுங்கோ.. உங்கட முதல் பிரசவம் சுகப் பிரசவம் எண்டு.

வாசித்து முடிக்க தோன்றியது எனக்கும் மணியாளைப் போலவே.

" அடச்சிக்.... முடிந்து விட்டதே" .

-- பாத்திமா ஹசானா நலீம்

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக