Skip to main content

கிடுகுவேலி விசாகன் - அஞ்சலி

இன்று காலை இன்னுமொரு மரணம் எதிரே வந்தது. 

நண்பர் விசாகன் சமூக வலைத்தளங்களினூடு அறிமுகமான ஒரு நண்பர். நேரிலும் சந்தித்திருப்போமே தெரியாது. சந்தித்திருந்தாலும் அடையாளம் கண்டுபிடித்திருக்கமாட்டேன். விசாகன் என்றால் அவருடைய என்றைக்கும் மாறாத, சிரித்த முக, புரபைல் பிக்சரும் கிடுகுவேலியும் அவர் இடும் பதிவுகளும்தான் ஞாபகம் வரும். சின்னமணியின் வில்லிசையையும் கானமூர்த்தி பஞ்சமூர்த்தியையும் யாழ்ப்பாணத்துக் கிரிக்கட்டையும் கம்பன் விழாக்களையும் நானும் அவரும் வெவ்வேறு மண் கும்பிகளில் இருந்து ரசித்திருக்கிறோம். கோயில் திருவிழாக்கடைகளில் நாங்கள் அருகருகே நின்று கச்சானோ, ஜூஸ் பக்கற்றோ வாங்கியுமிருக்கலாம். தூத்துக்குடி வானொலி நிலையத்தில் “நிலாக்காயும் நேரம்” பாடலை அவரவர் வீட்டிலிருந்து கேட்டிருக்கிறோம். நான் வடக்குவீதியில் பார்த்துரசித்த ஹால்ப்சாரியை அவர் தேரடியில் கண்ணுற்றிருக்கலாம். என் கொல்லைப்புறத்துக் காதலிகள் அவருக்கும் கொல்லைப்புறத்துக் காதலிகள். அருண்மொழிவர்மனுக்கும் காதலிகள். பாலாவுக்கும் காதலிகள். சயந்தனுக்கும் அதே. நிலாவை அவரவர் முற்றங்களிலிருந்தும் வியந்து பார்த்திருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிலா. ஒவ்வொரு இரவும் பிறிதொரு நிலா. 

ஊரையும் நாம் வாழ்ந்த வாழ்வையும் அதன் நிறை குறைகளோடு கொண்டாடியவர் விசாகன். தமிழில், அதுவும் ஊர்த்தமிழில் கவனமாக இருப்பார். ஏதோ ஒரு கட்டுரையில் நான் “சிதைக்கவோ” என்று இங்கிதம் கருதி எழுதிவிட்டேன். இல்லை அதைச் “சிரைக்கவோ” என்றே எழுதவேண்டும் என்று இன்பொக்சில் சொல்லி மாற்றவும் வைத்தார். ஒரு கட்டுரையில் வெரித்தாஸ் வானொலியின் ஒலிபரப்பு நேரத்தை மாற்றி எழுதிவிட்டேன். திருத்தினார். இந்தப்பதிவிலும் நிறையத் தவறுகளை விட வேண்டும்போல் உள்ளது. அவருடைய திருத்தங்களால் என்னுடைய இன்பொக்ஸ் நிரம்பி வழியட்டும்.

இந்த அஞ்சலி நிஜமாகவே வேலிகளைத் தொலைத்த ஒரு படலையின் கதைதான். விசாகன் கிடுகுவேலி இணையத்தளத்தில் நம் வாழ்வின் சின்னச் சின்ன அன்புகளை வரலாறாக எழுதியவர். நிறையச் சாத்தியங்களைச் சுமந்துதிரிந்த எழுத்தாளர். இப்போது அந்த இணையத்தளத்துக்குள் நுழையமுடியவில்லை. கிடுகுவேலி முடங்கிக்கிடப்பது வருத்தத்தையும் கூடவே அச்சத்தையுமே ஏற்படுத்துகிறது. 

காலையில் செய்தி அறிந்ததிலிருந்து விசாகனுடைய டைம்லைனில் அலைந்துகொண்டிருந்தேன். ஐந்து வருடங்களுக்கு முன்னர் அவர் எழுதிய ஸ்டேடஸ் ஒன்று இப்போது ஏற்படுத்துகின்ற முரண்நகையை எதிர்கொள்ளமுடியவில்லை.

“யாராவது உயிரோடு இருக்கிறீங்களா என்பது இன்று கேலியாகப் பார்க்கப்பட்டாலும் அதன் பின்னால் இருக்கும் வலி மிகக் கொடுமையானது.”

அதற்கு நண்பர் ஒருவர் போட்டிருக்கும் கொமெண்ட் கொடுக்கும் வலி இன்னமும் கொடூரமானது.

“உயிரோடு இருக்கிறீங்களா?”

விசாகனுக்கு அஞ்சலிகள்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக