Skip to main content

கிசோகர் வாங்கித்தந்த ஐபோன் : அத்தியாயம் 4



தட்ஸ் ரைட். என்ர போன் கொமெடுக்க விழுந்திட்டுது.

பார்க்கவே குமட்டிக்கொண்டு வந்தது. என்னதொரு அறுந்த சீவியம் இண்டைக்கு. ச்சைக். அருமையான ஐபோன் எக்ஸ் போன் அது. ரிலீஸ் ஆன கையோட ஆசை ஆசையா ஓடிப்போய் வாங்கியோண்டு வந்தது. போட்டோ எல்லாம் சும்மா பளீரென்று எடுக்கும். பூவை போக்கஸ் பண்ணினா பின்னால கிடக்கிற இலை, குப்பைத்தொட்டி, வேலி எல்லாம் மறைஞ்சு பூ மட்டும் பிச்சுக்கொண்டு தெரியும். அர்ஜுனன் கிளிக்கழுத்த போக்கஸ் பண்ணினதுபோல. ஒருக்கா வீட்டில வாழையிலைச் சாப்பாடு. நான் தண்ணியைத் தெளிச்சு வழிச்சிட்டு சோத்தைப் போட ரெடி. அப்பப்பார்த்து ஒரு தண்ணித்துளி வாழையிலைத் தண்டுக்குள்ள சிக்கிக் கிடந்துது. உடனே போனை எடுத்தன். துளியை போக்கஸ் பண்ணினன். துளியை குளோசா எடுக்கேக்க அதில எண்ட மூஞ்சி தெரியிறமாதிரி. ஈ லோகத்தில வேற எவனும் அப்படி ஒரு படம் எடுத்திருக்கமாட்டான். நான் என் போனில எடுத்தன். படமெண்டா நெருப்புப் படம்.

உடனே கஜனுக்கு அனுப்பினன்.

‘மச்சான் படம் எப்படி இருக்கு?’

‘பிகில் நாளைக்குத்தாண்டா ரிலீஸ்’

‘டேய் … துளி எப்பிடி இருக்குடா?’

‘அதுவா … என்ன இப்ப கொஞ்சநாளா பிரீயா இருக்கிறாய்போல? உனக்கேன் வேண்டாத வேலை?’

‘ஓமடா நாங்கள் பிரீயா இருக்கிறம். நீங்கள்தான் பயங்கர பிசியா …..’

நான் இன்னும் கிசோகர் அளவுக்குத் தூஷணம் கொட்டப் பழகவில்லை. இவனுக எல்லாருக்குமே பொறாமை. எப்பவுமே மேலே இருக்கிறவன் கீழே இருக்கிறவனைப்பாத்து பொறாமைப்படேக்க எனக்குப் பத்திக்கொண்டு வரும. ஐநூறு லைக் வாங்கிறவன் ஐம்பது லைக் வாங்கிறவனைப்பார்த்துப் பொறாமைப்படும்போது. பத்தாயிரம் உழைக்கிறவன் ஐயாயிரம் உழைக்கிறவனைப்பார்த்து பொறாமைப்படும்போது. சிங்கிளா இருக்கிறவன் குடும்பஸ்தனைப்பார்த்துப் பொறாமைப்படும்போது. கஜனும் அப்படித்தான். அவரிட்ட பத்து டி. எஸ். எல். ஆர் கமரா இருக்கு. பதினைஞ்சு லென்ஸ் இருக்கு. படத்தை பூந்து பூந்து எடுக்க நேரம் இருக்கு. அவர் ஏன் என்னைப்பார்த்துப் பொறாமைப்படோணும்? கடுப்பாகிவிட்டேன். அவனைத் தலை முழுகிவிட்டு, என் துளி போட்டோவை மனிசிக்குக் காட்டினேன். அது பாத்திட்டுச் சொல்லுது.

‘உதுக்கு கஜன் அண்ணா எடுக்கிற படமே பெட்டர்!’

எனிவே, ஏனெண்டு தெரியேல்ல, துளி படத்தை நான் அட்டன்பரோவுக்கு அனுப்பினேன். பதிலில்லை. டிஸ்கவரி, நேஷனல் ஜியூகிராபிக். இல்லை. கிளிநொச்சியில ஒரு புகைப்படப்போட்டி நடந்துது. அனுப்பினன். அங்கேயும் பதிலில்லை. நன்றி, கிடைத்தது என்றுகூட ரிப்ளை பண்ணுறாங்கள் இல்லை. அனுப்பின மெசேஜுக்கு சீன் என்று அவங்கட மூஞ்சிதான் மெசஞ்சரில தெரியுது. வந்து இழுத்தன் எண்டாத் தெரியும் எல்லாருக்கும். பொறாமைதான். ஒத்துக்கறன். ஆனால் என் பொறாமை அறம் சார்ந்தது. இல்லாதவன் இருக்கிறவனைப்பார்த்துப் படும் பொறாமை அது. சரி எவனுக்குமே ரசனையில்லை எண்டு போட்டோவைக்கொண்டுபோய் அப்பரிட்ட காட்டினன்.

‘பிழையில்லை, ஆனா இதைவிட அம்மாண்ட சாம்சங் போன் நல்லா எடுக்குமே’

எனக்குக் கோபம் வந்துவிட்டது.

‘இட்ஸ் நொட் எபவுட் த டிவைஸ் டாட். இட்ஸ் த கொம்பொசிசன்’

நான் எப்போதும் யாரையும் மட்டம் தட்டுவதற்கு ஆங்கிலத்தில்தான் கதைப்பதுண்டு. அது பள்ளிக்கூடத்தில் வாத்திமார் சொல்லித்தந்த பழக்கம். எப்பவாவது எங்களைப் புழுபோல பீல் பண்ண வைக்கோணுமெண்டால் அவங்கள் இங்கிலீஷ்ல கதைப்பாங்கள். இப்ப யோசிச்சா அவங்கள் கதைச்சது முழுக்க அந்த சாப்மன் புக்ல முதல் மூண்டு பக்கத்தில இருந்த ஆம், இஸ், ஆர் மட்டும்தான். ஆனால் வச்சு ஆத்தியிருந்திருக்கிறாங்கள். எங்களுக்கும் அது அப்ப பயங்கர இங்கிலிஷா வெருட்டிச்சு. சரி இப்பப்போய் அவங்களோட இங்கிலீஷ்ல கதைக்கலாம் எண்டால் எல்லாக் கழுதைகளும் தமிழ் வளக்கப்போகிறோம் எண்டு கிளம்பிட்டுதுகள்.

என் போட்டோவின் ஆழத்தை எவருமே அறியாமற்போனதில் எனக்கு கொஞ்சம் சந்தோசமும்தான். உச்சமான கலை என்பது ஆலவிருட்சத்தினுள் ஆழ ஊடுருவியிருக்கும் முன்னோர்கள் கட்டிய உடுப்புக்காயப்போடும் கொடிக்கயிற்றின் முடிச்சு போன்றது என்று எங்கோ நாவலர் அருளிச்சென்றது ஞாபகம் வந்தது. அது யாரும் ரசிக்கப்படாத புகைப்படமாவே முகிலுக்குள் தொலைந்துபோகட்டும்.

பக் டு மை போன்.

இன்னபிற பெருமைகளைக்கொண்ட என் புனிதமான போன் இப்படித்திடீரென்று கக்கூஸ் கொமெடுக்குள் விழுந்துவிடும் என்று எவர்கண்டார்? பார்க்கவே எனக்கு ஓங்காளித்துக்கொண்டிருந்தது. நிலை குப்பற போன் விழுந்ததில் அதன் ஸ்பீக்கர்பகுதி மாத்திரம் நட்டுக்கொண்டு வெளியே தெரிந்தது. அந்தக் கரப்பான்பூச்சிவேறு டைட்டானிக் படத்து டிகார்ப்பிரியோபோல போனில் ஏறித் தொங்கிக்கொண்டு கிடக்குது. எல்லாவிடமும் மஞ்சள் தண்ணி. அந்த இள வயதில், ஆற்றங்கரை மணலில், காலடித்தடம் பதித்த ஒரு கணத்தில், எனக்கு ஒரு காலத்தில் பெண் குழந்தை பிறந்தால் மஞ்சள் நீராட்டு விழா செய்து, சந்திரனுக்கு (நொட் த மாஸ்டர்) அவளை அழைத்துச்செல்லவேண்டும் என்று திடசங்கற்பம் பூண்டிருந்தேன். பின்னாளில் சாமத்தியவீடு செய்து ஷோ காட்டுறதுக்காக எதுக்கு வீணாக பிள்ளை பெத்து வளக்கோணும் எண்ட கேள்வி எழுந்ததில் பிள்ளை பெற்றுக்கொள்ளும் ஐடியாவையே ட்ரொப் பண்ணிவிட்டேன். ஆனால் என் போதாக்காலம், இப்படி அவசர அவசரமா என் குமருக்கு ஒரு மஞ்சள் நீராட்டுவிழா செய்யவேண்டி வருமெண்டு கனவிலயும் நினைத்திருக்கமாட்டேன். முந்தைய நாள் முப்பது டிகிரி வெப்பநிலையோ அல்லது தண்ணியை ஒழுங்காக் குடிக்காமப்போனதோ தெரியேல்ல. கறுமம். மஞ்சள் எண்டா மஞ்சள். மோடி சால்வைபோல காவி மஞ்சள். இனி அந்த போனை எடுத்து எப்படி யூஸ் பண்ணுவது? டின்னருக்கு போக ரெஸ்ட்டோரண்ட் தேட முடியுமா? இல்ல சந்தைக்குப்போய் வாங்கிறதுக்கு சாமான் லிஸ்டுதான் போடமுடியுமா? இது வந்து ஞாபகப்படுத்துமே. போன் வந்தால் காதில் வைத்து பேச முடியாதே. சைக். தொலையட்டும், பிளஷ் பண்ணலாமா என யோசித்தேன். பிளஷ் பண்ணினா உள்ளேபோய் ஸ்டக் ஆகிவிட்டால்? அதுவேற உவத்திரம். வேண்டாம். எப்படியும் என் போனை இப்போது மீட்டுவிடவேண்டும்.

என்ன செய்ய? இனிக் கையால்தான் தூக்கவேண்டும். பட் இந்த அசிங்கத்தை எப்பிடிக் கையால தூக்கிறது? சைக். சைக். உங்களுக்கு வாசிக்கவே அரியண்டமாக இருக்குது. நான் கைவச்சு எடுக்கிறதெண்டால். இதை எப்பிடி வெளிய சொல்லுறது? படிச்ச பள்ளிக்கூட மானம் என்னாவது? மூத்திரத்துக்க விழுந்த போனை ஒரு ஜொனியன் தன் கை தொட்டுத் தூக்கினான் என்றால் வரலாறு எப்படி என்னை மன்னிக்கும்? ஜூட் அண்ணா என்னை பழைய மாணவர் சங்கத்திலிருந்து தூக்கிவிடமாட்டாரா? பிக்பாஸில் பங்கேற்பதை அவ்வளவு பெருமைப்பட்டு பேசுகின்றவர்கள் என்னுடைய இச்செயலை நினைத்து வெட்கப்படுவார்கள் அல்லவா? ‘மூத்திரத்துக்குள் கைவைத்து போனை மீட்ட ஜொனியன்’ என்று எவன் என்னையிட்டுப் பெருமைப்படுவான்? இந்த சமூகம் எதையாவது சாதித்தால் ‘பிரவுட் டு பி எ ஜொனியன், ஜொலிஸ்டார், வேம்படிச்சி’ என்கிறது. ஆனால் யாராவது பிராடு பண்ணினால் உந்த ‘பிரவுட் டு பி எ’ கேசுகள் எல்லாம் கம்முன்னு எஸ்கேப்பாயிடுங்கள். ஏண்டா ஸ்கூல் ஸ்கூல் எண்டு அலையிறியள்? ஐம்பது வருஷத்துக்கு முன்னால அஞ்சே வருசம் படிச்ச பாடசாலையை ஏன்யா இப்பவும் கட்டிப்பிடிச்சுக்கொண்டு அழுகிறியள். அப்பிடி அழுகிறவன்ல அரைவாசிப்பேர் அந்தக்காலத்தில செய்த கொசப்பு வேலைகளை லிஸ்ட் பண்ணினா தெரியுமடி உங்கட வண்டவாளம். For fuck’s sake, have your own identity. Or, perhaps, one doesn’t need an identity at all. Hell with it. இங்கிலிஷ்ல சொன்னாத்தாண்டா இஞ்ச கொஞ்சப்பேருக்கு விளங்கும் எண்டதால சொல்லுறன். சரி. உங்களையும் குத்தம் சொல்லேலாது. ஊரில ஒரு கோயில் விடாமல் எல்லாத்தையும் கும்பாபிசேகம் பண்ணிக் குளிப்பாட்டியாச்சு. இனிக் காசைக்கரியாக்கி ஆட்டம்போட ஒரு வைரவர் கோயில்கூட ஊரில இல்லை. அதால பள்ளிக்கூடத்துக்குள்ள வந்து நடப்புக் காட்டத்தொடங்கிட்டியள். டேய், வித்தியாலயம் எண்டா அர்த்தம் என்ன தெரியுமா? அது வித்தியிண்ட ஆலயம் இல்லையடா. வித்தை கொடுக்கும் ஆலயம். ஆனா துலைவார், ஆலயம் எண்டு சொன்ன உடனேயே லிங்கத்தை கொண்டுவந்து நட்டிட்டியள். டேய் அதுக்குப்பதிலாக ஒரு லிங்கம் கூல்பாரை வச்சாலும் பெடியள் ஐஸ்கிறிம் வாங்கிக் குடிப்பாங்கள். லிங்கத்தில எவ்வளவு காலத்துக்குத்தான் சீனி போடாத தீர்த்தத்தையே உறிஞ்சிக்கொண்டிருக்கிறது?

‘ரோஸ் ரோஸ்’

டிகார்ப்பிரியோதான். இன்னமும் தொங்கிக்கொண்டிருந்தாப்ள.

‘என்ன ஜாக்?’

‘கொஞ்சம் டேஞ்சர் ஸோனுக்குள்ள போயிட்ட நீயி … துலையப்போறாய் … ஆரம்பத்தில சொன்னேனில்லையா? நமக்கென்ன கழுதை வந்துது? இப்ப போன் பிரச்சனைக்கு வா. ’

உண்மைதான். டேய். எல்லாமே யாவும் கற்பனைடா. மெசேஜ் பொழிஞ்சது இனிப் போதும். நம்ம வேலையைப் பார்க்கலாம். இந்தத் தரித்திரம் பிடித்த போனை, போகட்டும் கண்ணனுக்கே என்று விட்டுவிடலாம் என்று எண்ணினேன். என்ன ஒன்று இன்றைய திகதிக்கு ஒரு ஆயிரம் டொலர் வந்துதில்ல. அப்படியெண்டா இலங்கைக்காசில ஒரு லட்சத்து இருபதினாயிரம் ரூபாக்கள். அப்படியெண்டால் பன்னீராயிரம் கிழங்கு ரொட்டிகளை நான் ஒரே நாளில் அபிராமியில் வாங்கி சாப்பிட்டிருக்கலாம். விடமுடியாது. தூற்றுவார் தூற்றற்றும். எல்லாமே எனக்குள்ளிருந்துதானே வந்தது? மஞ்சள் நிறமெண்டால் இப்ப என்ன குறைச்சல்? மஞ்சளும் பச்சையும் நீலமும் என்று எல்லாமே நாங்கள் உண்டு, குடிச்சு பேண்டதன் விளைவுதானே? நாளைக்கு எனக்கு போன் இல்லை எண்டா இந்த சங்கங்களும் பஃலோவர்களுமா வாங்கித்தரப்போகுதுகள்? கேவலம் ஐம்பது ரூபா கந்தசாமியும் கலக்சியையுமே வாங்கி இரண்டாம் நாள் ரிபஃண்ட் பண்ணுகிற வாசகர்கள் உள்ள ஒரு ஏழை எழுத்தாளன் நான். இவன் போய் ஐபோன் எக்ஸை கக்கூசில் கைகழுவலாமா? ஒரு போனை மூத்திரத்துள் வீழ்ந்தது என்று சொல்லித் தள்ளிவைப்பதா? நான் என்ன இராமனளவுக்கு மோசமாகிப்போனேனா?

நோ வே.

போய் ஒரு ஷொப்பிங் பாக்கை எடுத்து கையில் செருகியபடியே கொமெடுக்குள் கைவிட்டு, விழுந்திருந்த போனை எடுத்துக்கொண்டுவந்து பாத்ரூம் சிங்கினுள் போட்டேன். பின்னர் ஒரு டிசீயு எடுத்து கவனத்துடன் கையிலிருந்த ஷொப்பிங் பாக்கை இழுத்து ரபிஷுனுள் தட்டினேன். பின்னர் வந்து போனைப்பார்க்க ஒரு பதார்த்தமாக இருந்தது. என்னத்த சொல்ல. ஊரில சில அக்காமார் குளிக்கிறதுக்கு முன்னால, மூஞ்சி முழுக்க மஞ்சள் தப்பிட்டு கிணத்தடில நிப்பினமே. அப்படி. ஆனால் என்ன, சனியன், கிட்டப்போனா பயங்கர கணவாய் நாத்தம். நிலவுக்காலத்தில பிடிச்ச சல்லிக்கணவாயை சமைச்சுச் சாப்பிட்டா இப்பிடித்தான் அடுத்தநாள் நாறும் எண்டு கொழும்பர் மாமி முந்தி சொல்லுவதுண்டு. என்னெய்யிறது? அம்மாவின் பொரியல் கறி, சாப்பிடேக்க கலாதியாக இருந்தது. கணவாய் பொறியல்கறி வைக்கத்தெரியுமா? நல்லாப் பழப்புளி விட்டு ஏழு தேங்காய்ச் சிறட்டை எரிஞ்சு முடியும்வரைக்கும் அவியவிட்டு … டேய் டேய் டேய்.. சாப்பாட்டு ரெசிப்பி குடுக்கிற இடமாடா இது? இப்ப உடனடியாக இந்த நாத்தப்பிரச்சனையைத் தீரு. கணவாய் நாத்தம் சலவாய் வழியாக ஐபோனை வந்தடையும் என்று யாரறிந்திருக்கமுடியும்? இப்படி நான் போனையே பார்த்தபடி யோசனையில் ஆழ்ந்திருந்தபோது, திடீரெண்டு ஒரு நோட்டிபிகேஷன் மின்னி மறைந்தது.

யெஸ். கிசோகர் பெயரில்தான் நோட்டிபிகேசன். அடப்பாவி. அவன் என் கொமெண்டுக்கு ரிப்ளை பண்ணிவிட்டான்.

திடுக்கென்றது. தம்பி விஜயா, என் தேர்ச்சில்லு மூத்திரச்சகதிக்குள் புதைந்துவிட்டதடா. இப்பப்போய் அம்பை விடுகிறாயே என்று அலறிக்கொண்டே போனைக் கையால் தூக்கினேன். அப்பத்தான் போனையும் கழுவவில்லை. என் கையும் வெறுங்கை என்ற ஞாபகம் வந்தது. ச்சைக் என்று கத்திக்கொண்டு மறந்துபோய் கையை டீசேர்டில் துடைத்துவிட்டேன். சிக் சிக் சிக். டீசேர்டைக் கழட்டி எறிந்துவிட்டு, பைப்பைத்துறந்து போனையும் கையையும் ஹாண்ட் வோஷ் போட்டுக் கழுவ ஆரம்பித்தேன். கழுவக் கழுவ நாத்தம் கூடிக்கொண்டுபோனதே ஒழிய குறைந்தபாடில்லை. மூத்திரவாசம் எப்போதும் எனக்கு ஊரின் வெக்கை படர்ந்த எளிய வேலிப்பொட்டுகளையே ஞாபகப்படுத்துகிறது போன்ற எஸ்.ரா உட்டலாக்கடிகளை விட இந்நேரம் நான் தயாராக இல்லை. இது உண்மையிலேயே சகிக்கமுடியாத நாத்தம். நல்லா டெட்டோலையும் ஊத்திக் கழுவினேன். இப்போது போனில் நாற்றம் குறைந்துவிட்டது. ஆனால் கையில் இன்னமும் கணவாய் நாற்றம் மீதமிருந்தது. அது நேற்றைய இரவு சாப்பிட்டபோது கையில் ஏலவே ஒட்டிக்கொண்ட நாத்தமா, அல்லது போனில் கைவைத்ததால் ஒட்டிக்கொண்டதா என்று ஒரு தீர்மானத்துக்கு வர முடியாமலிருந்தது. இந்த கப்பில் டிங் டிங் டிங் என்று மேலும் பல கொமெண்டுகள் வர ஆரம்பித்திருந்தன. மைந்தன் சிவா, அருண் தர்சன், இந்தூசன் என்று ஒரு லிஸ்ட் ஞாபகத்துக்கு வந்துபோனது. பத்தாக்குறைக்கு சயந்தன் கதிர்வேற தானும் யூத்து எண்டு ஒரு கொமெண்டை பட்டும் படாமலும் போட்டிட்டுப் போகும். சயந்தன் போட்டால் பிறகென்ன? அப்புறம் பிரதீப் குணரத்தினம், வைதேகி என்று அந்த குரூப்பும் வந்து அவன் கொமெண்டுக்குப் பதில் போட்டுவிட்டு ஓடிவிடும். கடவுளே. என்ன தரித்திரத்தையெல்லாம் இதுகள் போட்டுத் துலைக்குதுகளோ. இந்த நேரம் பார்த்து என்ர போன் ஆட்டிவிட்டதே.

விசரில போனை எடுத்து மூஞ்சியைக்காட்டி லொகின்பண்ண வெளிக்கிட்டன். பக்கிங் ஹெல். போனில எந்த அசுமாத்தமும் இல்லை. இட் இஸ் டெட்.

தட்டிப்பார்த்தன். ஊதிப்பார்த்தன். போனை அப்பிடியே கொண்டுபோய் அரிசி வாளிக்க போட்டு காய விட்டன். ரவைக்குள்ள போட்டு வறுத்துப்பார்த்தன். ஹெயார் ட்றையரை போட்டுப்பார்த்தன். ஆத்தாக்குறைக்கு வக்கியூம் கிளீனரைக்கூட போட்டுப்பார்த்தன். ம்கூம். போன் வேலை செய்யவில்லை. லப்டொப்பை வேற ஓஃபீசில விட்டிட்டு வந்ததால இப்ப எப்பிடி பேஸ்புக்குக்குப் போறதெண்டே தெரியேல்லை. என்ன செய்யிறது. கடவுளே? பிளீஸ் ஒரு வழிகாட்டுடா. திரும்ப ஜாக்கிடம் ஓடினேன். ஜாக் இப்போது மஞ்சள் குளத்துக்குள் முழுக்கவே தாண்டுபோயிருந்தது. தவிர பாத்ரூம் தாண்டியும் கணவாய் நாற ஆரம்பித்திருந்ததால் கொமெடை பிளஷ் பண்ணி, வீடு முழுக்க எயார் பிரஷ்னர் அடிச்சன்.

இப்ப போனை என்ன செய்யிறது? திருத்தோணும். இல்லாட்டி புது போன் வாங்கோணும். எப்படியாவது ஓடிப்போய் அந்த அறுந்த கொமெண்டைத் தூக்கிடோணும். கொமெண்டைத் தூக்கினா பின்னால தொங்கிற ரிப்ளைகளும் போயிடும். எப்பிடியும் ஸ்கிரீன்ஷொட் எடுத்து சேவ் பண்ணி வச்சிருப்பாங்கள்தான். அதைப் பிறகு காலில விழுந்து கெஞ்சி சரி செய்துகொள்ளலாம். அவசர அவசரமாக நான் கடைக்கு வெளிக்கிட ஆரம்பித்தேன்.

எட்டு மணிக்கு ஹை பொயிண்டிலிருக்கும் அப்பிள் ஸ்டோரில நிக்கிறன். ஒன்பது மணிக்குத்தான் கடை திறந்தார்கள். முதல் ஆளாக உள்ளே போனேன். ஒரு நரி சிரித்துக்கொண்ட வந்து கை கொடுத்தது. சந்தோசமாக அவன் கையைப்பிடித்துக் குலுக்கினேன். டேய் முத்திரம் பட்ட கையடா. கணவாய் மூத்திரம். ஹவ் ஆர் யு?

அவன் கேட்டான்.

“எப்படி நான் உனக்கு உதவி செய்யலாம்?”

“காலையில் ஸ்விம்மிங் போனபோது மறந்துபோய் போனை பொக்கட்டுக்குள் வைத்தபடியே குதித்துவிட்டேன்”

எந்தத் தடுமாற்றமுமில்லாமல் சொன்னேன். அப்பிள்காரன் நம்பியமாதிரித் தெரியவில்லை. அவன் நாறல்மீனை நாய் பார்ப்பதுபோல என்னை மேலும் கீழுமாகப் பார்த்தான். சரியா அமத்தாத செத்தல்மிளகாய் மூட்டைமாதிரி வண்டிச்சள்ளை பிரிச்சுக்கொண்டு நிக்குது. இந்த எருமை விடிய வெள்ளனை நீச்சலுக்குப்போகுதா? பெயார் எனஃப்.

அவன் சந்தேகமாகக் கேட்டான்.

“ஆர் யு ஷுவர் … நீச்சல் குளம்தானா? போனில அங்கங்கே மஞ்சள் திட்டுகள் தெரிகிறதே”

“யு நோ … வி இண்டியன்ஸ் புட் டியூமெரிக் இன் எவ்ரிதிங்.”

நான் சொன்னது அவனுக்கு விளங்கவில்லை. நான் சொன்னதில் எனக்கே எந்த சவமும் விளங்கவில்லை. அவன் போனை மேலும் கீழுமாகத் துலாவினான்.

“தண்ணி உள்ளே போயிருந்தால் வோரண்டி வொயிட் ஆகிடும் தெரியுமா?”

“வட் டு யு மீன்? வோட்டர் ரிசிஸ்டண்ட் போன் … தண்ணி உள்ள போகாது எண்டீங்களே”

“தண்ணி போகாது என்றுதானே சொன்னோம். ஆனால் போனால் நாங்கள் பொறுப்பு என்று சொன்னோமா?”

“என்னங்கடா டேய் … கதையா விடுறீங்கள்? மய்யம் மாதிரிக் கதைக்கிறீங்கள். நான் கன்சியூமர் அப்பயர்ஸ் வரைக்கும் போவன்”

“இல்லை. இது எங்களது டேர்ம்ஸ் அண்ட் கொண்டிசனில் இருக்கிறது. நீங்கள் சம்மதம் தெரிவித்துத்தான் முதற்தடவை லொகின் பண்ணியிருப்பீர்கள்.”

அவன் ரெடியாகத் தன் கையிலிருந்த ஐபாடில் ஒரு டொக்கியூமெண்டை ஓபின் பண்ணிக் காட்டினான். அதில் தெளிவாகவே இருந்தது. நாசமறுந்தவங்கள். குட்டி குட்டி எழுத்தில கட்டுரையா எழுதி, எங்களை வாசிக்காமலேயே ‘Agree’ என்று கிளிக் பண்ண வைத்து இப்ப அவசரத்துக்குத் தாலி அறுக்கிறாங்கள். தண்ணி போகாதாம். ஆனால் போனால் நாங்கள் பொறுப்பல்லவாம்.

‘Good that you guys are not in condom business’, வெறுப்பாகச் சொன்னேன்.

அந்தக் கழுதை எல்லாவற்றுக்கும் விறைப்பாக நின்றது. டேய். சுப்பர் ஜோக்குடா. இதுவே பேஸ்புக் எண்டா தனியா உருவி கொமெண்டில போட்டு அருமை எண்டிருப்பாங்கள். சிரிடா நாயே சிரி. ம்ஹூம். அவன் இன்னமும் விறைத்துக்கொண்டு நின்றான். நான் இயலாக்குறையாகக் கேட்டேன்.

‘இப்ப என்னதான் செய்வது?’

‘தண்ணீர் உள்ளே போயிருக்கிறதா என்று செக் பண்ணிவிட்டுச் சொல்கிறேன்’

‘அதான் நானே சொல்கிறேனே தண்ணிதான் உள்ளே போனது. ஐ வோஸ் ஸ்விம்மிங். பாக் ஸ்றோக்.’, சைகையில் அடித்துவேறு காட்டினேன். பின்னர்தான் ஞாபகம் வந்தது. நான் செய்து காட்டியது தவக்களைப் பாய்ச்சல்.

‘செக் பண்ணுகிறோம். அதற்குப்பின்னர்தான் திருத்துவதற்கு எவ்வளவு செலவாகும் என்று சொல்லமுடியும்’

போனை எடுத்துக்கொண்டு அவன் உள்ளேபோனான். நான் காத்திருந்தேன். அந்த இடைவெளியில் அங்கிருந்த அப்பிள் கைக்கடிகாரங்களையும், ஐபாடுகளைம் புது ஐபோன்களையும் சோதித்துப்பார்த்தேன். ஐபோனில் எப்படி இசை அமைப்பது என்று அங்கு ஒரு பிரசெண்டேஷன் ஆரம்பித்தது. ஒருவன் அங்கிருந்த ஒரேயொரு சிறுமிக்காக அதனை செய்துகொண்டிருந்தான். சிறுமி பிரிங்கிள்ஸ் சாப்பிட்டபடி அதைக் கேட்டுக்கொண்டிருந்தாள். இடைநடுவில் அவளும் எங்கோ ஓடிவிட பிரசெண்டேசன் செய்தவன் என்னைப்பார்த்து ‘நீ வந்து உட்காரேன்’ என்றான். போய் உட்கார்ந்தேன். கராஞ் பாண்டில் எப்படி இசை அமைப்பது என்று அவன் விளக்க ஆரம்பித்தான். கேட்க நன்றாகவே இருந்தது. போனைத் திருத்தியதும், வார இறுதியில் ‘எங்கிருந்தாழும் வாழ்க’ பாடலை கராஜ் பாண்டில் ரீமிக்ஸ் பண்ணவேண்டும் என்று யோசித்தேன். ராப் போர்சனும் சேர்த்துக்கொள்ளலாம். செமையாக தமிழ் தூஷணங்களை மிக்ஸ் பண்ணி…. ஐயய்யோ ஷிட் ஷிட் ஷிட். போன் திருத்திற அந்தரத்தில கிசோகர் ஸ்டேடசை எப்படி மறந்தேன்? கராஜ் பாண்ட்காரனுக்கு டாட்டா சொல்லிவிட்டு நான் எழுந்து ஓடி அங்கிருந்த டிஸ்பிளே ஐபோனில் பேஸ்புக் லொகின் பண்ணினேன். உள்ளேபோய்ப் பார்த்தால் பதினெட்டு நோட்டிபிசேன்கள். அம்மாளாச்சி. அத்தனை பேரும் வந்திருக்கவேண்டும். கொமெண்டை அழிக்கவென நோட்டிபிகேசனைக் கிளிக் பண்ணி உள்ளே போக முயற்சிசெய்தேன். அது லோட் ஆகிக்கொண்டே இருந்தது. திரும்பத் திரும்ப ரிபிரஷ் பண்ணினேன். ம்ஹூம். மீண்டும் ஒரு அசரீரி என்னைத் தடுத்தாட்கொண்டது.

‘ஹாய் சின்னப்பு’

இம்முறை கடவுள் கிடையாது. அப்பிள்காரன்.

‘ஹாய் என்னாச்சு? ஸ்விம்மிங் பூலுக்குள் விழுந்த போனைத் திருத்த முடியுமா?’, நான் மசிரை விட்டன். பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லியே ஆகவேண்டும்.

‘உங்கள் போனை எங்கள் டெக் சப்போர்ட்காரர் செக் பண்ணினார்’

‘ஓகே, அவர் என்ன சொன்னார்?’

‘அவர் சொல்கிறார். அந்த போனுக்குள் தண்ணியே போகவில்லையாம்’

‘டேய் … நம்புடா நான் நீச்சல் குளத்துக்கதான் விழுந்தனான். அது தண்ணிதான். வேறொண்டுமில்லை. கோட் புரமிஸ்’

‘அப்படியும் இருக்கலாம். ஆனால் தண்ணீர் உள்ளேயே போகவில்லை என்கிறார் அவர்’

‘இப்ப என்ன செய்யிறது? போன் வேலை செய்யுதா இல்லையா?’

‘போனும் வேலை செய்ய இல்லை. தண்ணீர் உள்ளே போகாததால் உங்கள் போனை வோரண்டி கவர் பண்ணுகிறது. அதனால் நாங்கள் உங்களுக்கு ஒரு புது போனைத் தரப்போகிறோம். உங்களுக்கு எங்கள் பழையபோன் கொடுத்த மன உளைச்சலுக்காக மன்னிப்பும் கோருகிறோம்’

என்னடா சொல்லுறீங்கள்? நானே போனைக் கக்கூசுக்க போட்டுப் பழுதாக்கிட்டுக் கொண்டுவாறன். ஆனால் அதை நான் பழுதாக்கேல்ல, பிழை எங்கடதான் எண்டு சொல்லி எனக்கு நீங்கள் எனக்குப் புது போனைத் தாறிங்கள். தவிர உளைச்சலுக்கு மன்னிப்பும் கேக்கிறீங்கள். என்னடா உங்கட டிசைன் இது? எனக்கு அப்பிள்காரனை நினைக்கக் கண்ணே கலங்கிவிட்டது.

‘அப்போ … உண்மையிலேயே புதுபோன்தான் எனக்குத் தரப்போகிறீர்களா? மஞ்சள் திட்டு ஒன்றும் இருக்காதா?’

‘யெஸ். புதுசுதான். அடிசனலா கவரோட’

மூத்திரத்துள் விழுந்த போனுக்குப் பதிலாக பளிச்சென ஒரு புதுபோனா? இது தெரிஞ்சா தமிழன்பூரா இப்ப கக்கூசுக்கு ஓடப்போறானே. நான் இண்டைக்கு நரி மூத்திரத்தைத்தான் மிதிச்சிருக்கோணும். நான் குழைந்து நெளிந்து அவனுக்கு நன்றி சொல்லியபடி, டேர்ம்ஸ் அண்ட் கொண்டிசனை அலட்சியமாக அக்ரீ பண்ணி, கையெழுத்துப்போட்டு புதுபோனை வாங்கிக்கொண்டு கடைக்கு வெளியே வந்தேன்.

வெளியில் வந்து, போனில் சிம்மைப்போட்டு ஓன் பண்ணினால் ஏழெட்டு மிஸ்டு கோல்கள் வந்திருந்தன. நிறைய மெசேஜுகள். கிசோகர் நிச்சயம் என்மேல் தூஷண மழை பொழிந்திருக்கவேண்டும். தனியாக ஸ்டேடஸ் போட்டும் செய்திருக்கலாம். டவுசர் கிழிந்தது. இனி இவ்வுலகில் ஒரு எழுத்தாளராய் வாழ்ந்தென்ன பயன்? சோர்ந்துபோய் அங்கிருந்த சோபா ஒன்றில்போய் உட்கார்ந்தேன். மனமேயில்லாமல் பேஸ்புக்குக்குள் லொகின் பண்ணி கிசோகர் ஸ்டேடசுக்குப் போனேன்.

என்ன ஆச்சரியம்? எதுவுமே அங்கு நிகழ்ந்திருக்கவில்லை.

கிசோகருக்கு என் கொமெண்டைக் கவனிக்கவே நேரமில்லை. அவன் புதிதாக ஒரு சிங்கள டீச்சர் ஒருத்தியை லொள்ளுப்பண்ணி நாற்பத்திரண்டு போஸ்ட் போட்டு மரதன் ஓட்டம் ஓடிக்கொண்டிருந்தான். வழமைபோல அதை விமர்சித்து கவிதை எழுதியவர்கள் சிலர் தூஷணத்தில் துவைத்தெடுக்கப்பட்டு வேலியோரம் காயப்போடப்பட்டிருந்தனர். இந்த அமளியில் என் தீஸிஸ் கொமெண்ட் வந்ததுகூட கிசோகருக்குத் தெரிந்திருக்க ஞாயமில்லை. அப்போ ஏன் ஏராளம் நோட்டிபிகேசன்ஸ் வந்து கிடந்தன என்று போய்ப் பார்த்தேன். ஆரோ ஒரு நாய் வீட்டு மூதேவி அடுத்த மாச வியாழமாற்ற பலன் பதிவுக்கு மூந்நூறு பேரை சேர்த்து டக் பண்ணியதன் விளைவு அது. நானும் அதில் ஒருத்தன். உடனே அவன் பதிவை அன் டக் பண்ணிவிட்டு, அந்தக் கள்ளச் சாத்திரியையும் புளொக் பண்ணிவிட்டு, கிசோகருக்கு நான் போட்ட கொமெண்டையும் அழித்துவிட்டு, ஒரு கப்புசீனோ கோப்பியை வாங்கிவந்து நிம்மதியாக மீண்டும் சோபாவில் உட்கார்ந்தேன். அப்பாடி. வாழ்க்கை எத்தனை ரம்மியமானது. இப்படியே இனி சர்ச்சைகள் ஏதுமின்றி வாழ்ந்து கழித்திடவேண்டும்.

அப்போதுதான் சடக்கென்று ஒரு ஐடியா மனதுள் எழுந்தது.

இந்த மூத்திரத்துக்க போன் விழுந்த கதையையே ஒரு குறுநாவலா எழுதிப்போட்டா என்ன? அங்கிங்கே மானே தேனே போட்டு, சில தூஷணங்களையும் ஊறுகாயாத்தொட்டு, சில விளையாட்டுகளையும் காட்டி … நினைக்கவே பரபரவென மூளை அடித்துக்கொள்ள ஆரம்பித்தது. யெஸ். எழுதிட வேண்டியதுதான். வந்திட்டா மூத்திரத்தையும் எழுத்தையும் ஆறப்போடக்கூடாது. அப்பவே ஒரு நோட்டை ஓன் பண்ணி விறுவிறுவென நான் எழுதலாம் என்று தயாரானேன்.

அப்போது கையில் ஏதோ வந்து விழுந்ததுபோலத் தோன்றியது. ச்சைக். என்னதிது? என்று கையை உதறினேன். ஏதோ சின்னச் சிலந்தி ஒண்டு. ஷொப்பிங்மோல் கூரையிலிருந்து தன் வலைநூலில் பிடித்தபடியே வழுக்கிக்கொண்டு வருகையில் தவறி என் கைகளில் விழுந்திருக்கவேண்டும். நான் உதறிய வேகத்தில் அந்தச் சிலந்தி நிலத்தில் தலைகீழாக விழுந்து கால்களை அடித்துக்கொண்டிருந்தது. ஒரு கணம் யோசித்தேன். தயங்கினேன். ம்ஹூம். ஒரு தீர்மானமாய் முடிவெடுத்தவனாய்,

‘இதுவேறை தரித்திரம், இப்ப இந்தக் கதையையும் எழுத விடாம அட்வைஸ் பண்ணித் தாலி அறுக்கும்’

என்று புறுபுறுத்தபடியே, சப்பாத்து நுனியால் அதனை அங்கேயே தேய்த்துவிட்டு நான் கதையை எழுத ஆரம்பித்தேன்.

“கிசோகர் வாங்கித்தந்த ஐபோன்”

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக