Skip to main content

குருபரன்



இனிய நண்பர் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விரிவுரையாளர் பதவியைத் துறந்தார் என்ற செய்தி மிகுந்த மன அலைக்கழிப்பைத் தந்துகொண்டிருக்கிறது.

ஊரில் இவ்வகை நிகழ்வுகள் தினமும் நிகழும் ஒன்றுதான். ஆனால் குருபரனை நெருக்கமாகத் தெரியும் என்பதால் இதன் தாக்கம் அதிகமாக உள்ளது. இதேபோலத்தான் என் இன்னொரு நண்பர் பாலமுருகனுக்கும் நிகழ்ந்தது. மருத்துவரான பாலமுருகன் சில வருடங்கள் வெளிநாட்டில் பணிபுரிந்துவிட்டு மீண்டும் ஊரில்போய் வாழவேண்டும் என்று போன இடத்தில் அரசுத்துறையும் அதிகாரிகளும் ஆண்டுக்கணக்கில் அவருக்கு வேலைக்கான ஒதுக்கீட்டை செய்யாமல் அவரை அலைக்கழித்ததில் பாலா திரும்பவும் வெளிநாட்டுக்கே வந்து இங்குள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிய ஆரம்பித்துவிட்டார். அதிகாரத்துக்குப் படியாமல், நேர்மையான வழியில், நெளிவு சுளிவுகளின்றி வாழ விரும்பும் பலரை இப்படித்தான் அந்தக்கட்டமைப்புகள் பிழிந்து எடுத்துவிடுகின்றன.

குருபரனுக்கு நிகழ்ந்தது அதற்கான சமீபத்திய அடையாளம்.

விரிவுரையாளராகவும் இருந்துகொண்டு சட்டத்தொழிலும் செய்யமுடியாது என்று பல்கலைக்கழகப்பேரவை சில காலத்துக்கு முன்னர் குருபரனுக்கு தடையுத்தரவு பிறப்பித்திருந்தது. அதுவுங்கூட இராணுவத்தின் முறைப்பாட்டின்படி. இராணுவம் ஏன் முறைப்பாடு செய்யவேண்டும்? காரணம் நாவற்குழியில் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு காணாமலாக்கப்பட்ட பன்னிரண்டு இளைஞர்களுக்கான ஆள்கொணர்வு வழக்கை குருபரன் அந்த இளைஞர்களின் பெற்றோர்களின் சார்பில் தாக்கல் செய்தமைதான். இதுவெல்லாம் தெரிந்தும் பல்கலைக்கழகப் பேரவை இராணுவத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு குருபரனுக்கு தடையுத்தரவு விதிக்க, குருபரன் அதை எதிர்த்து வழக்கும்போட, வழக்கு எதிர்பார்த்ததுபோலவே இழுபட்டுக்கொண்டேபோக, வேறு வழியில்லாமல் ஈற்றில் இந்த முடிவை எடுக்கும் நிர்ப்பந்தத்துக்கு குரு உள்ளாகியிருக்கிறார்.

தொழில்சார் கல்வியை தொழிற் துறையில் உயிர்ப்போடு உள்ளவர்கள் கற்பித்தால் சிறப்பாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஒரு மருத்துவப்பணியில் ஈடுபடுபவர் மருத்துவக்கல்வியைக் கற்பிக்கும்போது அதனுடைய வீரியம் அதிகம். ஒரு மென்பொருள் பொறியாளர் மென்பொருள்சார் விரிவுரைகளைச் செய்யும்போது நடைமுறை சிக்கல்களையும் சேர்த்தே கற்பிக்கப்போகிறார். இது இயல்பு. ஆராய்ச்சித்துறைசார் கல்வி என்பது வேறு. ஆனால் தொழிற்றுறைக் கல்விக்கு தொழில்சார் நிபுணர்கள் விரிவுரையாளர்களாக வருவதை தடை செய்யாமல் நாம் வரவேற்று ஊக்குவிக்கவேண்டும். இலங்கையில்கூட எனக்குத் தெரிந்து மொறட்டுவைப்பல்கலைக்கழகம் இவ்வகை தொழில்முறை நிபுணர்களை விரிவுரையாளர்களாக நியமிப்பது உண்டு. விரிவுரையாளர்களாகவும் இருந்துகொண்டு தொழிற் துறையிலும் தொடர்ந்து அவர்கள் இயங்குவார்கள். வெளிநாடுகளில் இது சர்வ சாதாரணம். உண்மையில், இராணுவத்தின் முறைப்பாட்டை பல்கலைக்கழகப் பேரவை வன்மையாகக் கண்டித்து அதன் தலையீட்டை எதிர்த்தே அறிக்கை விட்டிருக்கவேண்டும். ஆனால் இங்கே எல்லாமே தலைகீழாக நடந்திருக்கிறது.

இம்முறை ஊருக்குப் போன சமயம் குருபரனையும் அவர் மனைவி ஆரணியையும் அவர்கள் வீட்டில் ஒரு காலை உணவில் சந்தித்தேன். “அண்ணை நீங்கள் வாறீங்கள் எண்டு என்னைக் குசினிப்பக்கமே அவ விடுறா இல்லை” என்று குரு சிரித்தார். யாரும் விருந்தினர்கள் வந்தால் கிளீனிங் மாத்திரமே அவருக்குக் கொடுக்கப்படுமாம். தான் சமைப்பதற்கு அனுமதி இல்லை என்று சொன்னார். அது ஏன் அப்படி என்பது காலையுணவு தயாரானதும் தெரிந்தது. பசுந்தான இட்லி. குண்டுத்தோசையைப் பிரித்தால் உள்ளே வித்தியாசமாக உருளைக்கிழங்குக் கறி இருந்தது. உன்னதம். எல்லோரும் சாப்பிட்டுக்கொண்டே பேசினோம்.

உரையாடலில் இந்தப்பிரச்சனையும் வந்தது. இந்தச்சிக்கல் அவருக்குப் பெரும் உளைச்சலைக் கொடுத்துக்கொண்டிருந்தது விளங்கியது. “நீங்கள் எண்டால் என்ன செய்வீங்கள்” என்று கேட்டார். என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? இந்த சிஸ்டத்தை முட்டி முட்டி என் மண்டையை உடைக்கும் வலு இல்லாததால்தான் நான் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினேன். உங்களுக்குத் தெரியாத ஒன்றையும் நான் சொல்லிவிடப்போவதில்லை, இயலுமானவரை வழக்கைப் போராடிப்பாருங்கள். தீர்ப்பு சரியாக வராவிடில் பிரக்டீஸ் பக்கமே முழுமையாகப் போய்விடுங்கள். பல்கலைக்கழகத்துக்குள் இருந்தால் ஒரு கல்லைக்கூட உங்களால் நகர்த்தமுடியாது என்றேன். எனினும் உப்புச்சப்பில்லாத தடையுத்தரவு அது என்றே எனக்குத் தோன்றியது. எந்த ஊரில் ஒரு பல்கலைக்கழகம் இப்படியொரு லூசுத்தனமான தடையை விதிக்கும்? எந்த நீதிமன்றம் அதை உறுதிசெய்யும்? ஆனாலும் அழுத்தங்கள் காரணமாக அது நிகழ்ந்தாலும் நிகழலாம் என்று தோன்றியது. பிரச்சனை இயலுமானவரை பொதுவெளியில் சென்சேசனாகாமலிருந்தால் வேலை சுலபாகமுடியலாம் என்று நான் நினைத்தேன். அப்படித்தான் அவரும் மிக நிதானமாக இதனை எதிர்கொண்டிருந்தார். ஆனால் ‘இது எப்பவோ முடிந்த காரியம்’ போலவே செயற்பாடுகள் நிகழ்ந்துகொண்டிருந்தன. முடிவில் நீதிமன்றம் சாதகமான தீர்ப்பைக் கொடுக்கலாம்தான். ஆனால் அதனை அப்படிக்கொடுக்க முடியாமல் வழக்கைத் தாமதப்படுத்திக்கொண்டே இருந்திருக்கிறார்கள்.

இவ்வகை பிரச்சனைகள் ஒருவரின் குடும்பத்தில் கொடுக்கும் உளைச்சல்களை நாம் யோசிப்பதில்லை. தொடர்ந்து போராடு என்று குருவுக்கு அறிவுரை சொல்வது இலகு. ஆனால் தினமும் எத்தனை மண்டைக்குடையல்கள். எத்தனைபேரோடு பேசவேண்டும். என்னைப்போல ஆயிரம்பேர் ஆயிரம் கதைகள் குருவுக்குச் சொல்லியிருக்கக்கூடும். அவர் மனைவியும்கூட ஒருவித விரக்தி மனநிலையிலேயே இருந்தார். அவர்களுக்கு ஒரு கைக்குழந்தைவேறு. அவர்களின் கனவினை யோசித்துப்பாருங்கள். சொந்த ஊரிலே நேர்மையாக வாழ்ந்து தாம் வாழும் சமூகத்தை இயன்ற அளவுக்கு தம்மாலான வழிகளில் மேம்படுத்த முனைகின்றவர்களுக்கு நிகழ்வது என்ன? இப்படிப்பட்ட ஒரு குடும்பத்தைப்போட்டு அந்த அரசும் இராணுவமும் எப்படியெல்லாம் சிப்பிலி ஆட்டுகின்றன? இது குருவுக்கென்றில்லை. எவர் எவரெல்லாம் நேர்மையுடன் பாதிக்கப்பட்ட மக்கள் பக்கம் நின்று அதிகாரத்துக்கு எதிராகக் குரல் கொடுக்கிறார்களோ அவருக்கெல்லாம் இப்படி நிகழ்ந்துகொண்டேயிருக்கின்றன.

குரு இதிலிருந்து மீண்டுவருவார் என்றெல்லாம் எழுதத்தேவையில்லை. உண்மையில் இதிலிருந்து மீண்டு வரவேண்டியது பல்கலைக்கழகமும் அந்த அமைப்பும்தான்.

000


Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக