Skip to main content

டைனோசர் முட்டை



பத்து பதினைந்து வருடங்களுக்கு முன்னர் அனிதா நாயரின் 'லேடிஸ் கூப்' நாவலை வாசித்திருந்தேன். அந்தக் கதையில் மார்கரட் போல்ராஜ் என்றொரு பெண் பாத்திரம் வரும். அவருக்கு, வீட்டில் கொடுமை செய்யும், சுயநலக்கார, பெண்கள் மீது பலவீனம் கொண்ட, ஸ்மார்ட் லுக்கிங் உள்ள ஒரு கணவன். மார்கரட் தன் கணவனை எப்படி வழிக்குக் கொண்டுவந்து அவனை ஒன்றுமேயற்றவனாக்குகிறார் என்பதுதான் அந்தக் கதை. நாவலில் ஒரேயொரு அத்தியாயம் மட்டுமே வருகின்ற மார்கரெட் பல ஆண்டுகளாக நெஞ்சைக் குடைந்துகொண்டே இருந்தார். அந்தப் புள்ளி பல வருடங்களாக உப்புத்தண்ணிக்க போட்ட நெல்லிக்காய் மாதிரி ஊறிக்கொண்டே கிடந்தது. பல தடவைகள் என் வாசக வட்ட நண்பர்களோடு மார்கரட் பற்றிப் பேசியிருக்கிறேன். நிறைய நாள் ஜீவியோடு இதுபற்றி உரையாடியிருக்கிறேன். அந்தப் புள்ளியை எடுத்து விளையாடவேண்டும் என்றும் ஒரு ஆசை இருந்தது. தன்னைவிட சுப்பீரியராக இருக்கக்கூடிய ஒரு துணையை எப்படி அணு அணுவாக மழுங்கடிப்பது என்கின்ற புள்ளி. ஆனால் அதற்குச் சரியான கதை ஒன்று அமையவில்லை.

திடீரென்று ஒருநாள் அந்த மார்கரட் ஆணாகியிருந்தால் எப்படியிருந்திருக்கும் என்று தோன்றியது. எழுத ஆரம்பித்தேன். அதன் பின்னர் நிகழ்ந்தது எல்லாமே உன்மத்தம். பாத்திரங்களை உருவாக்கிப் பரமபதம் விளையாடுவது என்பது எழுத்து மட்டுமே கொடுக்கக்கூடிய அனுபவம். வாசிப்புக்கூட இன்னொருவர் விளையாடும் விளையாட்டைப் பார்த்து அனுபவிப்பதுபோலத்தான். ஆனால் நாங்களே எழுதும்போது நிலைமையே வேறு. ஒரு பாத்திரத்தை உருவாக்கி அதற்கென சில குணங்குறிகளை நெறிப்படுத்திவிட்டால் பின்னர் கதையில் அவை என்ன செய்யும் என்பதை எழுதுபவர்கூட சமயங்களில் தீர்மானிக்கமுடியாது. தம் குணத்துக்கேற்ப அவை கதையை நகர்த்த ஆரம்பித்துவிடும். அப்போது அவற்றுக்குப் பின்னாலே சென்று விடுப்புப் பார்க்கும் உற்சாகம்தான் எழுதுபவரிடம் இருக்கும். இந்தக் கதையில் அது எனக்குக் கிடைத்தது.
 
இது ஒரு நெடுங் கதை. அதை எழுதிய அனுபவத்தையும் உவகையையும் பகிரவேண்டும்போல இருந்தது. அவ்வளவுதான். சந்தர்ப்பம் கிடைத்தால் வாசித்துப்பாருங்கள்.
 
கதையின் பெயர் 'டைனோசர் முட்டை'.
 
அகழ் இதழில் வெளிவந்திருக்கிறது. ஒரு சின்ன டிரெய்லர்
 

//நான் அவசரப்பட்டுத் திருமணம் முடிக்காமல் இருந்திருக்கலாம் என்றும் சமயங்களில் தோன்றுவதுண்டு. ஒரு டொக்டருக்கு இன்னமும் அழகான இளவயதுப்பெண் கிடைக்காமலா போயிருக்கும்? நான் என் கனிஷ்ட மருத்துவர்களுக்கு அடிக்கடி சொல்லும் அறிவுரையும் அதுதான். அவசரப்பட்டுக் காதலித்துவிடாதீர்கள். உங்கள் வகுப்பு நண்பி, தாதி, சக மருத்துவர் என எவரையும் ஏறெடுத்தும் பார்க்காதீர்கள். அத்தனைத் தமிழர்களும் சீதனத்துடன் அழகான பெண்களை வளர்த்துவைத்து எம்மைப்போன்ற வைத்தியர்களிடம் கொடுக்கக் காத்துக்கிடக்கிறார்கள். பெண்ணையும் கொடுத்து காசையும் கொடுக்கும் அதிசயமெல்லாம் பிரபஞ்சத்தில் வேறு எங்குமே நிகழாத ஒன்று. ஏன் அவசரப்படுவான்? பூதத்துக்குத் தீவனம் கொண்டுபோன பீமன்போல ஒவ்வொரு சீதனம் நிரம்பிய வண்டில்களில் ஒவ்வொரு அழகி உட்கார்ந்திருக்கிறாள். தெரிவு செய்து உண்பது மாத்திரம் உங்கள் வேலை. தீவனம் முடிய முடிய சமைத்துப்போடக்கூடியவள் என்றால் இன்னமும் திறம்.//



Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக