Skip to main content

சின்னான்




“இந்த நாட்டில் இனப்பிரச்சனை என்ற ஒன்றே கிடையாது, தமிழர்களுக்கு இந்த நாட்டில் சகல உரிமைகளும் உண்டு, எண்பத்து மூன்று இனப் படுகொலைபோன்று ஆரம்பக்காலங்களில் நாட்டில் இடம்பெற்ற வன்முறைகள் எல்லாம் அரசாங்கங்களால் நிகழ்த்தப்பட்டது. போர் ஆரம்பித்த பின்னர் நாட்டில் நிகழ்ந்த அத்தனை பிரச்சனைகளுக்கும் காரணம் தீவிரவாதமே. இறுதிப்போரில் இனப் படுகொலையே நிகழவில்லை. இப்போது நாட்டில் தீவிரவாதம் ஒழிந்துவிட்டதால் தமிழரின் பிரச்சனையும் தீர்ந்துவிட்டது. வெள்ளவத்தையில் தமிழ் மக்கள் சகல உரிமைகளோடும் வாழவில்லையா? தேவையில்லாமல் இந்தப் புலம்பெயர் புலிகள்தான் இனவாதத்தைத் தூண்டிக்கொண்டிருக்கிறார்கள்”

இதுதான் ஈழப்பிரச்சனை பற்றிப் பெரும்பான்மை சிங்களவரிடம் கேட்டால் கிடைக்கின்ற பொதுவான பதில். சில தமிழரும் முஸ்லிம்களும்கூட இப்படிப் பேசுவதுண்டு. இவர்கள் தமக்குள் மாத்திரமின்றி பன்னாட்டு அலுவலகங்களில் இடம்பெறும் சாதாரண உரையாடல்களிலும்கூட இப்படியான பதில்களையே கொடுத்துக்கொண்டிருப்பார்கள். மிக மோசமான இன வன்முறையும் படுகொலையும் வெளிப்படையாக இடம்பெற்ற ஒரு நாட்டிலே. அது பற்றிய எந்தப் பிரக்ஞையுமின்றி எப்படிப் பெரும்பான்மை சமூகத்தால் இந்த மனநிலையோடு பேசமுடிகிறது என்ற பல சமயங்களில் நமக்கு வியப்பாக இருக்கும். ரோஹிங்கியா, பாலத்தீன, ஆர்மீனியா, கம்போடியா போன்று எங்கேயோ எப்போதோ நடைபெற்ற ஒடுக்குமுறைச் சம்பவங்கள் பற்றி நமக்குத் தெரியவருகிறது. அவற்றின்மேல் கரிசனம் கொள்ளமுடிகிறது. குரல் கொடுக்கவும் தூண்டுகிறது. ஆனால் தம் நாட்டில் தம் இனத்தால் நிகழ்த்தப்பட்ட கொடுமைகளை எப்படி ஒரு சமூகம் கண்டும் காணாமலிருக்கக்கூடும்?

இதற்கான உளவியலை நாம் பெரிதாக ஆராய்ந்து தேடி அறியவேண்டியதில்லை.

ஈழத்தில், குறிப்பாக யாழ்ப்பாணத்தில் பொதுவாக வெள்ளாளச் சாதியைச் சேர்ந்தவரிடம் ‘ஈழத்தில் சாதிக் கொடுமை இருக்கிறதா?’ என்று கேட்டுப்பாருங்கள். இல்லை என்று பதில் வரும். பெரிதாக நாங்கள் சாதி பார்ப்பதில்லை என்பார்கள். இந்தியா அளவுக்கு நாங்கள் மோசமில்லை என்பார்கள். முன்னர் இருந்தது, புலிகளின் எழுச்சிக்குப்பின்னர் சாதி ஒடுங்கிவிட்டது. அவங்கள் எல்லாம் நல்லா முன்னேறிட்டாங்கள் என்பார்கள். அவையவைக்கு என்று சில பழக்கங்கள் உண்டு, சாதிக்குள்ள சாத்திரம் பார்த்துக் கலியாணம் செய்வம். ஆனா கொடுமை எல்லாம் கிடையாது. அவங்களுக்கு இப்ப எல்லா உரிமையும் குடுத்திருக்கு. அனுபவிக்கிறாங்கள் என்பார்கள். அவர்களின் பதிலைக் கேட்கையில் இன்றைக்கு உண்மையில் வெள்ளாளர்தான் ஓர் ஒடுக்கப்பட்ட சமூகமாக மாறிவிட்டார்கள் என்ற எண்ணம்கூட சமயத்தில் வந்துபோகும்.

அதிகாரக் குழுக்களின் பல மனநிலைகளுள் ஒன்று, அது யாரை அடிமைப்படுத்தி வாழ முயல்கிறதோ அவர்களுடைய தேவைகளையும் பிரச்சனைகளையும் அதுவே முன்முடிவுடன் தன் இருப்புக்குப் பாதகமில்லாமல் தீர்மானித்துக்கொள்வது. சிங்களவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளையும் உரிமைகளையும் முடிவு செய்வதுபோல. மேலைத்தேயக் காலனித்துவம் தானே இன்றைக்கும் ஏனைய நாடுகளின் தலைவிதிகளைத் தீர்மானிப்பதுபோல. அரசியல்வாதிகள் மக்களின் விதியைத் தீர்மானிப்பதுபோல. அதிகாரச் சாதிகளும் இதற்கு விதிவிலக்கு அல்ல. காலத்தின் போக்கில் தம் இருப்புக்குப் பாதகம் நிகழும்போதும் எதிர்ப்புகள் உருவாகும்போதும் அவை மெல்லத் தம்முடைய குரலை மாற்றிக்கொள்வதுண்டு. சமநிலையைப் பேணுகிறோம் என்று சில மேம்போக்கான முயற்சிகளை அவை செய்துகொள்ளும். அதற்கிணையாகப் பிரசாரங்களையும் அது நிகழ்த்தும். அதிகாரமும் பலமும் இருப்பதால் அதன் குரலே அதிகம் எடுபடுவதுமுண்டு.

ஈழத்துச் சமூகத்தில், குறிப்பாக யாழ்ப்பாணச் சமூகத்தில் சாதியமும் இவ்வகையான போலி மாற்றங்களையே காலத்தின் போக்கில் உள்வாங்கி வந்திருக்கிறது. தொடர்ச்சியான போர், புலம்பெயர்வு, உலக மயமாக்கல், திறந்த பொருளாதாரம், இலவசக் கல்வி, அருகே தமிழ் நாட்டில் நிகழும் பகுத்தறிவுப் போராட்டங்கள் எனப் பல புறநிலைக் காரணிகளால் சாதியக் கட்டமைப்பின் வீரியம் முன்னைவிடச் சற்று மாற்றமடைந்திருக்கக்கூடும். அதற்காகச் சாதியின் பெயரால் இன்றும் நிகழுகின்ற நேரடியான, மறைமுகமான கொடுமைகளை நாம் எவ்வகையிலும் கடந்துபோய்விட முடியாது. ஓர் அதிகாரச் சமூகத்தின் மனநிலையிலிருந்து யாராவது அந்தக் கூற்றினைச் செய்யும்போது அதனை மறுதலிப்பது முக்கியமாகிறது. பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகளில் குற்றம் சுமத்தப்பட்டவரின் தரப்பைவிடக் குற்றம் சுமத்துகின்றவரின் தரப்பை அதிகம் கேட்கவேண்டும் என்று சொல்லப்படுவதன் நேர்மையான காரணத்தைத்தான் நாம் இங்கும் பயன்படுத்தவேண்டியிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகங்களின் பக்கம் ஆதாயங்கள், சமரசங்கள் இன்றி நாம் நிற்கும்போது ஒரு சமூகமாக நாம் முழுமையை நோக்கி முன்னேற ஏதுக்கள் அதிகம்.

ஆனால் இந்த நிலையை ஒரு சமூகம் அடைவதற்குத் தொடர்ச்சியான அரசியல், சமூக, இலக்கியச் செயற்பாடுகள் அவசியமாகின்றன. ஒடுக்கப்பட்ட மக்களின் தரப்பைத் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கவேண்டியிருக்கிறது. உலகெங்கும் பெரும்பான்மைச் சமூகமானது வெறும் மந்தைக் கூட்டம்தான். அது பிறர் வழி நடத்தும் பாதையை எந்தப் பிரக்ஞையுமின்றி வழித்தொடரும். அதற்குக் குடிக்கத் தண்ணீரும் புசிக்க உணவும் கலவிக்குத் துணையுமிருந்தாற்போதும். இப்படிப்பட்ட சமூகத்தின் மூளையில் காலம்காலமாகப் புரையோடிப்போயிருக்கும் எண்ணக் கருத்துகளை மாற்றுவதென்றால் இலகுவான காரியமா? இந்தப் பனங்கொட்டைகளைப் பிளக்கும் முயற்சியில் எத்தனை அருவாள்களின் கூர்முனைகள் மழுங்கிப்போயிருக்கும்? ஆனாலும் இதற்கான முயற்சிகள் இடம்பெற்றுக்கொண்டேயிருக்கின்றன. தேசிய அரசியல்முதல் கிராமியச் செயற்பாட்டுத்தளம்வரை பல கூட்டத்தினர் இதனைச் செய்துகொண்டேயிருக்கின்றன. இலக்கியம் இதற்கான மிக ஆதாரமான கோட்பாட்டுத் தளத்தை இவர்களுக்கு அமைத்துக்கொடுக்கிறது. மக்களின் வலிகளை அது ஆவணப்படுத்துகிறது. இந்த மந்தைகளை இருட்டிலும் சரியான திசையில் ஓட்டிக்கொண்டுசெல்லும் மேய்ப்பர்களுக்குத் திசைகாட்டியாக இருக்கிறது. இந்தப்பாதையில் பல தவறுகள், அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதம், சுயநலச் செயற்பாடுகள் எனப் பல இடம்பெறக்கூடும். ஆனால் நிகர விளைவாக நாம் சரியான திசையில் செல்கிறோம் என்பதை அனைவரும் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும்.

சந்திரன் சண்முக எழுதிய ‘சின்னான்’ என்ற நாவல்கூட அதற்கான ஒரு முயற்சிதான்.

நெடுந்தீவில் நிகழும் கதை இது. தன் எட்டு வயதில் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு முப்பது வருடங்கள் சிறையிலிருந்துவிட்டு ஊருக்குத் திரும்பும் சின்னானின் வாழ்க்கைதான் இந்த நாவல். பறை வாசிக்கும் காத்தானின் மகனான சின்னானும் அவருடைய சுற்றத்தினரும் அவர்கள் செய்யும் தொழில் சார்ந்த சாதியின் பெயராலேயே ஒடுக்கப்பட்டு வஞ்சிக்கப்படுகிறார்கள். சிறை வாழ்க்கையிலும் சின்னான் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகிறார். பின்னர் ஒரு கிருத்துவப் பாதிரியாரின் ஆதரவால் சிறையிலேயே சிங்கள மொழியில் கல்வி பயின்று நன்னடத்தையின் பேரின் முப்பது ஆண்டுகள் கழித்து ஊருக்குத் திரும்புகிறார். ஆனால் அப்போதும் கோயில் தர்மகர்த்தாவும் அவனது பரிவாரங்களும் சின்னானை நிம்மதியாக இருக்க விடுவதாயில்லை. அவரை மீண்டும் சிறையில் அடைக்கும் முயற்சியில் அந்தத் தர்மகர்த்தா முழு முயற்சியுடன் ஈடுபடுகிறான். சாதித் தடிப்பும் சாதியின் பெயரால் நிகழும் கொடுமையும் இத்தனை வருடங்கள் கழிந்தும் ஊரில் இன்னமும் உயிர்ப்போடு இருக்கின்றன என்பதை சின்னான் அறிகிறார். இந்த நிலையை சின்னான் எப்படிச் சமாளித்தார் என்றும் அவர் உண்மையிலேயே யார் என்று அறிவதும் மீதிக்கதை.

சின்னான் வெறுமனே எழுபத்திரண்டு பக்கங்கள் நீடிக்கும் ஒரு சிறிய நாவல்தான். எனினும் நாவல் முழுதும் யாழ்ப்பாணத்தில், அதிலும் தீவுப்பகுதிகளில் நிகழும் மிக மோசமான சாதியப்பாகுபாடு தொடர்ச்சியாகப் பேசப்படுகிறது. குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமூகத்தின் தரப்பின் பாத்திரங்களினூடாக அது நிகழ்கிறது. எப்போதும்போல இந்தப் பாகுபாட்டுக்கு வேறு வழியின்றி இசைவாக்கப்பட்ட மூத்த தலைமுறைக்கும் இது பொறுக்காமல் வெகுண்டெழுகின்ற இளைய தலைமுறைக்குமிடையேயான உரையாடல் நிகழ்கிறது. கொலை நிகழ்கிறது. சாதிக்கொரு கிணறு வெட்டி ஒருத்தர் மற்றவரை நீர் அள்ளவிடாமல் தடை செய்யும் கீழ்மை, ஒவ்வொரு சாதிகளுக்கும் நின்று கும்பிடுவதற்காக ஒதுக்கப்பட்ட பல்வேறு பிரகாரங்கள், பிரகாரங்களைத் துப்புரவு செய்யும்போது தவறுதலாக வேறொரு பிரகாரத்தை மிதித்துவிட்டால் ஏற்படக்கூடிய தீட்டு எனக் கோயிலையும் மதத்தை மையப்படுத்திய கலாச்சாரத்தையும் பின்பற்றி எழுந்த சாதியப்பாகுபாடுகள் நாவல் முழுதும் தொடர்ச்சியாகக் காட்டப்படுகின்றன.

இவற்றுக்கு ஒரு தீர்வாக நாவலில் சின்னான் ஓரிடத்தில் கூறும் வார்த்தைகள் கொஞ்சம் நெருடலாகவே இருந்தது.

“என் அண்ணன் படித்து ஆளாகி தனக்கு என்றொரு கோயிலைக் கட்டியிருக்கவேண்டும். இந்த மதத்துக்கு இன்ன கோயில் என்று இருக்கும்போது, இன்ன சாதிக்கு இன்ன கோயில் என்று கட்டிக் கும்பிட்டிருக்க வேண்டும். எமக்கென்றும் கடவுள்கள், அவர்களுக்கு நாமே பூசாரிகள் என்றிருக்கவேண்டும்.”

இப்படி சின்னான் விவரித்துக்கொண்டுபோகிறார். இந்தத் தீர்வு சமயத்தில் ஆதிக்கச் சாதிகளாலும் முன்மொழியப்படுவதுண்டு. மிக ஆபத்தான இந்தத் தீர்வில் இருக்கும் அடிப்படைப் பிரச்சனை, இது சாதிப்பாகுபாட்டையும் அதனடிப்படையிலான ஒடுக்குமுறையையும் மேலும் மேலும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும். சாதிக்கொரு கோவில், ஒருவர் கோயிலுக்கு மற்றவர் போகமுடியாது, காலடி வைக்கமுடியாது என்பது ஆதிக்கச் சாதிகளுக்கு எத்தனை வசதியான ஒன்று பாருங்கள். அவர்கள் தமது நிலையைத் தொடர்ந்து தக்க வைத்துக்கொள்வார்கள். சின்னான்கள் எத்தனை கோயில்களைக் கட்டிக்கொண்டாலும் அவற்றை அவர்கள் கணக்கெடுக்கப்போவதில்லை. தவிர எதற்காகத் தமக்கு உரித்தான கோயில்களை விட்டுவிட்டு சின்னான்கள் இன்னொரு கோயிலைக் கட்டிக்கொள்ள வேண்டும்? கடவுள் என்றொன்று இருக்குமென்றால், மதம் என்றொன்று இருக்குமென்றால் அது எல்லாவற்றுக்கும் பொதுவான ஒன்றாகத்தானே இருக்கவேண்டும்? தான் மானசீகமாக நம்பும் கடவுளுக்கு அதன் சந்தியிலேயே ஏறி நின்று பாலூற்றி அர்ச்சனை செய்யும் உரிமை சின்னானுக்கும் இருக்கிறதல்லவா? அவருடைய பிறப்பின் நிமித்தம் அந்த உரிமையைப் பறிக்கும் கொடுமையைத்தானே நாம் தடுக்கவேண்டும்? அதை விடுத்து சின்னானைப்போய் நீயே ஒரு கோயில் கட்டி வழிபடு என்று சொல்வது நரித்தனம் இல்லையா?

சமூக நீதியின் மிக நுட்பமான இச்சிக்கலும் அதற்கான தீர்வும் சின்னான் நாவலில் மிக அலட்சியமாக இப்படிக் கடக்கப்பட்டுவிடுகிறது. சின்னானை வாசிக்கும்போது தோன்றும் பெரும் குறையே இந்நாவல் முழுதும் இருக்கின்ற இந்த மேம்போக்குத்தனம்தான். சின்னானின் தீவு வாழ்வும் சிறை வாழ்வும் நானூறு பக்கங்கள் நீடிக்கக்கூடிய ஆழமான பல அனுபவங்களைக் கொண்டது. அதனை வெறுமனே எழுபத்திரண்டு பக்கங்களில் அவசர அவசரமாகத் தொகுக்கும்போது எல்லா விசயங்களும் மிக மேலோட்டமாகவே அமைந்துவிடுகின்றன. சின்னான் தீவிரமாகப் பேச முயற்சி செய்யும் விசயமும் இதனால் சற்றே நீர்த்துப்போய்விடுகிறது. அதிலும் எழுபத்திரண்டு பக்கங்களில் பல விசயங்களைச் சொல்லிவிடவேண்டும் என்ற அவசரத்தில் எல்லாமே அவிந்தும் அவியாமலும் கலந்து கொடுக்கப்படுகிறது. காலப்பரிமாணம்கூட சில இடங்களில் தவறிவிடுகிறது. உதாரணத்துக்கு சின்னான் முப்பது வருடங்களுக்குப் பின்னர் ஊருக்குத் திரும்புவதாகக் கதை நிகழ்கிறது. அப்போது அவனுக்குக் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. அப்படியானால் இது 2020ம் ஆண்டுக்குப் பின்னர் நிகழ்ந்த ஒன்று. முப்பது ஆண்டு கணக்குப் பார்த்தால் சின்னான் சிறைசென்றது1990ம் ஆண்டு என்றாகிறது. கதையில் சின்னான் சிறையிலிருந்த காலத்தில் குமுதினிப்படகு படுகொலைகள் இடம்பெறுவதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் நிஜத்தில் குமுதினிப் படுகொலைகள் இடம்பெற்றது 1985ம் ஆண்டு. இது ஓர் எளிமையான கணக்கு. ஆனால் நெடுந்தீவுக் கதையில் குமுதினி படுகொலையை எங்கேயாவது செருகவேண்டும் என்ற அவசரத்தில் நாவலில் பத்து வருடங்கள் கழித்து படுகொலை இடம்பெற்றுவிட்டது. வரலாற்றுச் சம்பவங்கள் புனைவில் இடம்பெறும்போது அவற்றையும் நாம் புனையமுடியாது. இதேபோன்ற நிறையக் குழப்பங்கள் நாவல் முழுதும் கிடக்கின்றன. இலக்கியத்தை ஈடுபாட்டுடன் உள்வாங்கி வாசிக்கும் வாசகர்களுக்கு இவை அயர்ச்சியையே கொடுத்துவிடும். இதனால் கதை சொல்ல முனைகின்ற ஆதாரச் செய்தி கவனிக்கப்படாமற்போய்விடும்.

அறுபதுகளிலிருந்தே ஈழத்தின் சாதியப்பிரிவினைகளையும் ஒடுக்குமுறைகளையும் பல தலைமுறை எழுத்தாளர்கள் பேசி வந்திருக்கிறார்கள். வரலாறு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்களை இலக்கியங்கள் பதிவு செய்தே வந்திருக்கின்றன. எங்கெல்லாம் மனிதர்கள் ஒடுக்கப்படுகிறார்களோ அங்கெல்லாமிருந்து சீரிய இலக்கியங்கள் தலையெடுத்திருக்கின்றன. சமகால ஈழத்துச் சமூகத்தில், அது உள்நாடாக இருக்கட்டும் அல்லது புலம்பெயர் சமூகமாக இருக்கட்டும், சாதி ஒரு நீறு பூத்த நெருப்பாகக் கழன்றுகொண்டே இருக்கிறது. புலம்பெயர் சமூகம் இதனைக் கொஞ்சம் விஞ்ஞானரீதியாக நிகழ்த்துகிறது. அவுஸ்திரேலியாவின் பல தமிழ் அமைப்புகளின் தலைவர், செயலாளர்கள் எல்லாம் வெள்ளாளர்களாகவே இருப்பர். பிரபலத் தமிழ்ப் பாடசாலைகளின் பழைய மாணவர் அமைப்புகளை ஒருங்கிணைப்பவர்களும் இவர்களே. இங்குள்ள கோயில் தர்மகர்த்தாக்களும் இவர்களே. கேட்டால் அவங்களுக்கு இதெல்லாத்தையும் கொண்டு நடத்தத் தெரியாது என்று பச்சையாகவே சொல்வர். சமூகத்தின் நிகழ்வுகளுக்குப் பிரதம விருந்தினராக வந்து பொன்னாடைகளைப் பெற்றுக்கொள்பவர்களும் அவர்களே. ஒரு சில விதி விலக்குகள் இருக்கக்கூடும். ஆனால் கூர்ந்து கவனித்தால் இந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்ளலாம். ஈழத்திலும் இதன் இன்னொரு வடிவமே இன்றும் இருக்கிறது. சமீப காலத்தில் திடீரென்று முளைத்திருக்கும் சைவ நெறி ஈடுபாடு சற்றே அடங்கியிருந்தாற்போலத் தெரிந்த இப்பிரிவினைகளை மீளப் புதுப்பிக்கிறது.

இப்படியான சூழ்நிலையில்தான் சின்னான் நாவல் அதன் வெளிப்படையான குறைகளையும் மீறி அவசியமானதொன்றாகிறது. அதனாலேயே இது வாசிக்கப்படவேண்டிய நூலாகிறது. அது சொல்லும் கருத்து நம் சமூகத்தில் தொடர்ந்து பேசப்பட்டு, நாம் நிகழ்த்துகின்ற இந்த இரகசிய, வெளிப்படையான சாதிப் பிரிவினைச் செயற்பாடுகள் கேள்விக்கு உட்படுத்தவேண்டியதாகிறது. சின்னான் கதையை எங்கேயோ நெடுந்தீவில் நிகழும் ஒன்றாகக் கருதாமல் நம் சுற்றத்துக்குள்ளேயே இது நடக்கிறது என்ற பிரக்ஞையை நமக்கு நாமே உருவாக்கவேண்டிய தேவையும் இங்கே வலிதாகிறது.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக