Skip to main content

பூப் புனிதக் கொலைகள் : பாகம் 6


 

சிவகடாட்சம் சிவபதமடைந்திருந்தார்.

வழமைபோல, இரத்தம் சுத்தமாகத் துடைக்கப்பட்டு, கழுத்திலும் நெஞ்சிலும் காயங்களுக்குக் கட்டுப்போடப்பட்டிருந்தன. பட்டு வேட்டி கட்டி, வெற்று மேலில் இரட்டை வடச் சங்கிலியும் கைச்செயினும் அணிந்து, செத்துச் சில மணி நேரங்கள் கழிந்தும் சிவகடாட்சம் செகச்சோதியாக இன்னமும் மின்னிக்கொண்டிருந்தார். வேட்டி நழுவா வண்ணம் இடுப்பில் வெள்ளை நிறத்தில் பெல்ட் கட்டியிருந்தார். மேலே அவர் அணிய இருந்த விதம் விதமான சரிகை ஜிப்பாக்கள் அயர்ன் செய்யப்பட்டு, கட்டிலில் விரித்து வைக்கப்பட்டிருந்தன. எல்லாமே இந்தியாவிலிருந்து வாங்கப்பட்டவை என்று அறுத்து எறியப்பட்டிருந்த அவற்றின் விலைப்பட்டிகள் சொல்லின. அந்தப் பிரமாண்டப் படுக்கை அறைக்குள் ஆளுயர டிரெஸ்ஸிங் டேபிள் ஒன்றுமிருந்தது. ஒரு சுவரில் அவர்களுடைய குடும்பப் படம் தொங்கியது. இன்னொன்றில் ஷீரடி பாபாவின் படம் மாட்டப்பட்டிருந்தது. அறையோடு கூடவே குளியலறை இணைத்துக்கட்டப்பட்டிருந்தது. அங்கிருந்து பின் தோட்டத்துக்கு செல்வதற்கெனத் தனியாகக் கதவு அமைத்திருந்தார்கள். அதுதான் கொலையாளிக்கு வசதியாகிப்போய்விட்டது. சிவகடாட்சத்தின் முகம் ஒருவித மயான அமைதியுடன் எந்தச் சலனங்களும் இன்றி கிடந்தது. அலுங்காமல் குலுங்காமல் கட்டியிருந்த பட்டு வேட்டிகூடக் கசங்காமல் எப்படி ஒருவரைக் கத்தியால் குத்திக் கொல்லமுடியும் என்று நிலாப்தீனுக்கு ஆச்சரியமாக இருந்தது. சாகப்போகும்போது சின்ன எதிர்ப்பையேனும் மனுசன் காட்டாமல் இருந்திருப்பானா? கொலைகாரன் ‘தண்ணிக்குள்ளாலே நெருப்பைக் கொண்டுபோகத் தெரிஞ்சவன்’ என்று அவர் எண்ணிக்கொண்டார்.
நிலாப்தீன் தன் செல்பேசியில் அந்த அறையைச் சுற்றிச் சுற்றி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கையில் காவல்துறையின் படப்பிடிப்பாளரும் கைரேகை நிபுணர்களும் வந்துவிட்டிருந்தார்கள். அவர்களுக்கு இடத்தைவிட்டு நிலாப்தீன் வெளியே வந்தார். சாமத்திய வீட்டுக்கு வந்திருந்த கூட்டத்தைப் பதிவு செய்துவிட்டு பொலிஸ் ஒவ்வொருத்தராக வெளியே அனுப்பிக்கொண்டிருந்தது. சிவகடாட்சத்தின் மனைவி தயாளினியின் ஒப்பாரி இன்னமும் வேறொரு அறைக்குள்ளிருந்து கேட்டுக்கொண்டிருந்தது. வாசல் கதவின் ஒரு பக்கச் சுவரில் ‘பூப்புனித நீராட்டு விழா, செல்வி அனகா சிவகடாட்சம்’ என்று திகதி குறிப்பிட்டு கலர் கலராக மினுங்கல்களோடு ரெஜிபோமில் வெட்டி ஒட்டப்பட்டிருந்தது. அடுத்த பக்கத்தில் அனகா வட இந்திய லெஹங்கா சோளி அணிந்து கும்பிட்டபடி நிற்கும் பெரிய பானர் ஒன்று தொங்கியது. ‘எம் அருமைத் தோழி அனகாவுக்கு வாழ்த்துகள், இப்படிக்கு அன்பான பாடசாலைத் தோழிகள்’ என்று அச்சடிக்கப்பட்டிருந்தது. நிலாப்தீன் இவற்றையெல்லாம் வியப்புடன் பார்த்தபடி கேற்றடிக்கு வந்தார். அங்கே பட்டு வேட்டியும் சேர்ட்டும் அணிந்து நின்று ஜெயரத்தினம் பக்கத்து வீட்டுக்காரரை அழைத்து விசாரித்துக்கொண்டிருந்தார். வேட்டியை மடித்துக் கட்டியிருந்தார். யாரோ அவருக்குப் பிளேன்ரி கொடுத்திருந்தார்கள். நிலாப்தீனைக் கண்டதும் பக்கத்துவீட்டுக்காரரை அனுப்பிவிட்டு ஜெயரத்தினம் இவரிடம் திரும்பினார்.
“ச்சைக். நல்லாத் தெரிஞ்ச மனுசன். நான் நிண்ட சாமத்தியச் சடங்கிலேயே கொலை விழுந்திருக்கு. ஆனால் என்னால தடுக்க முடியேல்ல. அதே ஆள்தான் இல்லையா?”
“அதில டவுட்டு இல்ல. இங்கிட்டும் ஒரே சிக்னேச்சர்தான்”
ஜெயரத்தினம் நிலாப்தீனுடைய கைப்பையில் இருந்த பைஃலை வாங்கி வாகனத்தின் போனட்டில் வைத்து விரித்தார்.
“முழு வேஸ்டா போயிட்டுது நிலாப்தீன். நாங்கள் அவ்வளவு பொலிஸையும் வீணா சதீசன் வீட்டில கொண்டுபோய் நிப்பாட்டினது.”
“சதீசனுக்குத்தான் புரபைல் மட்ச் பண்ணினது சேர். சதீசனிண்ட மனுசி புள்ளத்தாச்சியா இரிக்கிறா. அத்தோட அவிங்களுக்கு ஒன்பது வயதில ஒரு பொம்பிளைப் பிள்ளையும் இரிக்கிது.”
“ஆனா அந்தப்பிள்ளை இன்னும் சாமத்தியப்படேல்லை நிலாப்தீன். சாமத்திய வீடு நடந்தது சதீசனிண்ட அக்காண்ட மகளுக்கு. வெளிநாட்டிலயிருந்து வந்து சதீசன் வீட்டை அந்தக் குடும்பம் நிண்டிருக்கு. அவ்வளவுதான். ஆனால் இஞ்ச சிவகடாட்சத்தின் மகள் சாமத்தியப்பட்டிருக்கு. அவருக்குக் கைக்குழந்தை இல்லைதான். ஆனா, தயாளினி மே பி பிரக்னண்ட்”, ஜெயரத்தினம் குரலில் சற்று எரிச்சல் எட்டிப்பார்த்தது.
“இருக்காது சேர். அவுங்க அவ்வுளவு இளசு இல்லித்தானே.”
“ஆனாக் கருத்தரிக்கலாம் இல்லையா? பனங்கொட்டை எப்ப வேணுமெண்டாலும் முளை விடும் நிலாப்தீன். சிவகடாட்சம் வேற ஹோமியோபதி கொஞ்சம் தெரிஞ்ச சாத்திரி. எனக்கே பைபாஸை ஹோமியோபதியில செஞ்சு மாத்தலாம் எண்டு சொன்ன ஆளு. எந்த வேரைப் பிழிஞ்சி எந்த சாறைக் குடிச்சினம் எண்டு ஆருக்குத் தெரியும்? அவரிண்ட பெஞ்சாதி தயாளினியை விசாரிச்சிங்களா?”
“எப்பிடி சேர் கேக்கிறது? மய்ய வூட்டில மஸ்தானா போட்டுக்கிட்டுப் போய் நிக்காதே என்னு உம்மா சொல்லுவா சேர். மனிசன் மவுத்தாயிக் கிடக்கி. நான் போய் உம்மா நீங்க உண்டாயிருக்கிங்களா எண்டு கேட்டா செவுளு கிழியாதா? நான் நல்லா அவிங்கட அறை, பாத்ரூம் எல்லாம் செக் பண்ணிட்டன். அவரு புள்ளத்தாச்சியா இருக்கிறதுக்குரிய எந்தத் தடயமும் இல்லை. பில்ஸ் இல்ல. டெஸ்ட் கிட் இல்ல. வேலைக்காரிக்கிட்டகூட நைஸா கேட்டுப்பார்த்தன் சேர். மனிசி என்னிய ஒரு மாதிரிப் பார்க்குது. ஐ திங் வி ஆர் சேசிங் அவர் ஓன் டெயில் சேர்”
ஜெயரத்தினம் பெருமூச்செறிந்தார். அவர் அனுபவத்தில் இத்தனை இடியப்பச் சிக்கலான கேஸை சந்தித்ததேயில்லை. யுத்தக்காலத்தில்கூட இயக்கம் கொழும்பில் அடுத்ததாக எங்கெல்லாம் குண்டு வைக்கும் என்பதைத் துல்லியமாகக் கணித்துப் பல தாக்குதல்களைத் தடுத்தவர் அவர். தனக்கு எப்படி வேட்டு வைக்க முனைவார்கள் என்பதைக்கூட அனுமானித்து அவற்றைத் தவிர்த்தவர். இயக்கம் அவரை வன்னியில் கடத்தி வைத்திருந்தபோதுகூட டபுள் ஏஜண்டாக மாறுவதற்குச் சம்மதித்துத் தப்பி வந்தவர். அரசாங்கம் லசந்த விக்கிரமதுங்கவைக் கொல்லப்போவதைத் திகதி, இடம் விபரங்களுடன் அறிந்து அவருக்கு எச்சரிக்கை செய்தவர். அப்படிப்பட்டவருக்கு யாழ்ப்பாண வட்டு ஒன்று தண்ணி காட்டுவதை அவரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அதுவும் இம்முறை அவருக்குத் தெரிந்த ஒருவரே கொல்லப்பட்டுவிட்டார். தனக்கு வயதாகிவிட்டதா? பேசாமல் ஆட்டுக்கு இலை குத்திக்கொண்டு, பத்திரிகை வாசித்து, சாயி பஜன் செய்து, அவ்வப்போது சாராயம் அடித்துவிட்டு, பள்ளிக்கூடம் என்ன கேடு கெட்டாலும் கவலைப்படாமல் பழைய மாணவர் சங்கக் கொண்டாட்டங்களில் கலந்து கூத்தடித்துக்கொண்டு, ஆண்டுக்கு ஒருமுறை புதிதாகப் பேரப் பிள்ளை பிறக்கும்போது வெளிநாட்டுக்குப் பிள்ளை வளர்ப்புக்குப் போய் வந்து, சத்தம்போடாமல் ஒரு நாள் சிவனேயென்று போய்ச் சேர்ந்திருக்கவேண்டுமோ? தேவையில்லாமல் இந்தக் கேஸில் தலையைக் கொடுத்து அவமானப்படுகிறாரா?
ஜெயரத்தினம் யோசித்துக்கொண்டிருக்கும்போது வட்சப் குரூப்பில் சுபத்திரா மெசேஜ் அனுப்பியிருந்தாள். தற்போதைய நிலைமையில் அந்த குரூப்பை வைத்திருப்பது ஆபத்து என்று அதை அழித்துவிடப்போவதாகச் செய்தி வந்திருந்தது. ஜெயரத்தினம் அவளுடைய மெசேஜுக்கு கும்பிடும் ரியாக்சனைப் போட்டுவிட்டு தன் போனில் அந்த குரூப்பை அப்படியே அழித்தெறிந்தார். பின்னர் நிலாப்தீன் பக்கம் நிமிர்ந்தார்.
“நிலாப்தீன். தயாளினி பிள்ளைத்தாச்சியா தப்பித்தவறி இருக்கிறாவெண்டால்? அதுவும் அவ பிள்ளைத்தாச்சி எண்டது அவவுக்கே இன்னும் தெரியாது எண்டால்?”
“அதில என்ன பொயிண்ட் சேர்? அவிங்களுக்கே தெரியாட்டி, கொலை செஞ்ச ஆளுக்கு எப்பிடித் தெரியவரும்? மையா போட்டுப் பார்ப்பான்?”
“ஓகே, அதிலயும் ஒரு லொஜிக் இருக்கு. சரி அவ பிள்ளைத்தாச்சிதான். அதுவும் அவவுக்குத் தெரியும். ஆனா கிளினிக் ஒண்டுக்கும் போகாமல் இருந்திருக்கலாம் இல்லையா? சிவகடாட்சம் தன் ஹோமியோபதி முறையைக் கடைப்பிடித்திருக்கக்கூடும் அல்லவா?”
“பொஸிபிள் சேர். ஆனால் எங்குட லொஜிக்கின்படி அவிங்க, ஒண்டு அந்தக் கிளினிக்குக்குப் போயிருக்கவேண்டும், அல்லது அங்கினிக்க ஒரு பார்மசிக்குப் போயிருக்கோணும். என்னியக் கேட்டிங்கன்னா நாங்க வேற ஆங்கிளில இதை அணுகிறதுதான் பெட்டர்னு தோணுது. எதுக்கு உந்தப் புள்ளத்தாச்சியை புடிச்சிக்கிட்டுத் தொங்கவேணும்? அது ஒரு கோ இன்சிடன்ஸ் ஆக இருக்கலாம் இல்லியா? ஆணத்தில விழுந்த ஆணிய ஆப்பத்தில தேடினா கிடைக்காதுதானே சேர்? நாங்கள் சாமத்திய வூட்டை மட்டும் ஆராய்ந்தால் என்ன? இவுங்க ஏதும் சாமத்திய வூட்டுச் செலவுக்கு மைக்ரோ பைஃ னான்ஸ் கடன் எதும் எடுத்திரிப்பாங்களோ? இப்பெல்லாம் வங்கிகள் ரவுடியை அனுப்பி வெருட்டிறாய்ங்க சேர். வங்கிக் கடன வாங்கிக் கட்ட ஏலாம தற்கொலை செய்யிறவனும் இரிக்கிறான். லோனை வாங்கிட்டு லோஞ்சில வெளிநாட்டுக்கு தப்பி ஓடுறவனும் இரிக்கிறான். இந்தப் பக்கம் அவனுக்குக் கடனைக் குடுத்திட்டு அதைத் திருப்பி வாங்கேலாமல், கைக்காசைப் போட்டு கௌரவத்தைக் காப்பாத்திற பாங்க் ஒபிசரும் இரிக்கிறான்”
“இல்ல நிலாப்தீன்”
“சேர் குறை நினிக்கவேணாம். எனக்கி மிச்சம் உங்ககிட்ட ரெஸ்பெக்ட் இரிக்கு. ஆனா கடிக்கிறது மூட்ட, ஒத வாங்கிறது கட்டிலா? என்னு ஆயிடக்கூடாது சேர். மெடம் பயிங்கரமா டென்சன் ஆறாங்க. ரெண்டு நாளில கில்லரைப் பிடிக்கோணுமாம். ரணில் சேர்வரைக்கும் விசயம் போயிடிச்சு. நான் எங்குட குணதிலக மாத்தயாட்ட ஒரு ஒப்பினீயன் கேக்கலாமின்னு இருக்கிறன் சேர். அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் ஸ்டேசனிலதான் வந்து நிக்கிறார். நீங்க வாங்க சேர். போற வழில உங்கள வூட்டில வுட்டிட்டுப் போறன். இங்கை புரசீஜர்ஸ் முடிய இரண்டு மணித்தியாலமாவது எடுக்கும். உங்களுக்கு வூட்டில புள்ளத்தாச்சி ஆடு இருக்கில்ல?”
ஜெயரத்தினத்துக்குக் கண்கள் சிவந்துவிட்டன.
“நாயிண்ட சகவாசம் சீலையத்தான் கிழிக்கும் எண்டுவா … எண்ட கொம்மா ஐஸே”
நிலாப்தீன் ஜெயரத்தினத்துக்குக் கோபம் வந்துவிட்டதை அறிந்து சுதாரித்தார்.
“சொறி சேர். எனக்கு மேலிடத்திலயிருந்து செரியான பிரசர். உங்களுக்கு விளங்கும்தானே”
நிலாப்தீன் சொல்லியபடியே வாகனத்தில் பாய்ந்து ஏற, வேண்டா வெறுப்பாக ஜெயரத்தினமும் உள்ளே ஏறினார். நிலாப்தீன் டிரைவரிடம் ஜெயரத்தினத்தை வீட்டில் கொண்டுபோய் விடவேண்டும் என்று சொன்னார். ஜெயரத்தினம் வாகன இருக்கையிலிருந்து சிவகடாட்சத்தின் வீட்டையே பார்த்துக்கொண்டிருந்தார். மாளிகைபோல ஒரு வீடு. போதாததுக்கு நீச்சல் தடாகம் வேறு கட்டிக்கொண்டிருந்தார்கள். இப்படி ஒரு வீட்டில் ஒருவன் எந்தத் தடயமுமின்றி இறங்கி, கொலையையும் செய்து, பிரேதத்தில் காயங்களுக்கு டிரெஸ்ஸிங்கும் செய்து, சாவகாசமாய்த் தப்பிப் போகிறான் என்பது எப்படிச் சாத்தியமானது? அவர்களது வாகனம் ஆடியபாதம் வீதிக்குள் இறங்கி, கொக்குவில் சந்தியை நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. நிலாப்தீன் செல்பேசியில் லவுட் ஸ்பீக்கரை அழுத்திவிட்டு, குணதிலகவுக்கு அழைப்பெடுத்தார்.
“கட் கட்… போனை கட் பண்ணும் நிலாப்தீன். நான் சொல்லுறன் அல்லோ. மல்லி பொட்டக் நவத்தன்ன.”
ஜெயரத்தினம் வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு நிலாப்தீனைத் தீர்க்கமாகப் பார்த்தார்.
“ஏதோ உங்கட பழமொழி சொன்னீரே நிலாப்தீன் .. ஆணம் ஆப்பம் எண்டு ஏதோ”
“அது சேர்…. உம்மாதான் சொல்லுவா… ஆணத்தில விழுந்த ஆணிய ஆப்பத்தில தேடினா கெடைக்குமா என்னு”
“ஆ … அததான் நானும் சொல்லுறன். ஆணத்தில விழுந்த ஆணியைத் தேடி எடுக்குறது கஷ்டம்தான் நிலாப்தீன். அதுக்காக ஆப்பத்தில போய்த் தேட முடியுமா என்ன? ஆணத்தில விழுந்த ஆணியை ஆணத்திலதான் தேடியாகோணும்”
“என்ன சொல்லுறீங்க சேர்?”
“திரும்ப சிவகடாட்சத்திண்ட வீட்டுக்கு வாகனத்தை விடும். எனக்கு என்னவோ இடிக்குது. யூ நோ. துப்பறிவாளனின் உள்ளுணர்வு. ஜெயரத்தினம் இன்ஸ்டிங்ட் எண்டா சும்மா இல்ல நிலாப்தீன். நாப்பது வருசமா டிபார்ட்மெண்டில இருந்த அனுபவம். எனக்கு மைண்டு அங்கேயே ஸ்டக் ஆயிட்டுது. தயாளினியை விசாரிச்சு அவ பிள்ளைத்தாச்சியா இல்லையா எண்டதைக் கண்டுபிடிக்காட்டி எண்ட மூளை மேல வேலை செய்யாது. தெரிஞ்ச ஆள் எண்டதால எப்பிடிக் கேக்கிறதெண்டு தெரியேல்ல. ஆனாலும் கேக்கத்தான் போறன்”
“அழறா சேர். புரியனும் பொஞ்சாதியும் மிச்சம் நெருக்கம்போல. மனுசி சத்தமா அழுது. இது விசாரணை பண்ணுற டைம் இல்லை. வேணாம் சேர். போலாம்”
“அப்ப வெயிட் பண்ணி இன்னும் இரண்டு கொலை விழுந்தாப்பிறகு விசாரிக்கலாமா? நீங்க வெணுமெண்டா அந்த குணதிலகவோட போய்க் கொஞ்சுங்கோ. நான் தயாளினியை விசாரிக்கத்தான் போறன்”
ஜெயரத்தினம் சொல்ல நிலாப்தீன் வேண்டா வெறுப்புடன் டிரைவரிடம் மீண்டும் சிவகடாட்சம் வீட்டுக்கு வாகனத்தைத் திருப்பச் சொன்னார். சிவகடாட்சத்தின் வீட்டு வாசலில் வாகனம் சென்று நின்றதும் ஜெயரத்தினம் அவசரமாக இறங்கி கேற்றைத் திறந்துகொண்டு உள்ளே நுழைய, நிலாப்தீன் தயக்கத்தோடு பின் தொடர்ந்தார். வாசலில் யாருடனோ தொலைப்பேசியில் உரையாடிக்கொண்டிருந்த சுபத்திரா, இவர்களைக் கண்டதும் அமைதியாகிச் சந்தேகத்துடன் பார்த்தாள். வெற்றிலை போட்டுக்கொண்டு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த சில ஆண்களும் உடனே பேச்சை நிறுத்தி இவர்களையே விடுப்புப் பார்த்தார்கள். இரண்டு குழந்தைகள் ஒரு மூலையில் உட்கார்ந்து செல்பேசியில் கேம் விளையாடினார்கள். தயாளினியின் அறை இன்னமும் மூடிக்கிடந்தது. ஜெயரத்தினம் சென்று கதவை மெதுவாகத் தட்ட ஒரு இளம்பெண் வந்து திறந்தாள். அவளுக்கும் அழுததில் கண்கள் சிவந்து கிடந்தது. உள்ளே கட்டிலில் தயாளினி சரிந்து கிடக்க எல்லோரும் சுற்றி அமர்ந்திருந்தார்கள். நகை, நட்டு, காஞ்சிபுரம், முடியலங்காரங்களுடன் ஒரு கூட்டம் வெளிக்கிட்டு நின்று ஒப்பாரி வைப்பது ஜெயரத்தினத்துக்குப் புதிதாக இருந்தது. பொதுவாகக் கொலை நடக்கும் இடங்களில் வீட்டு உடுப்புடன் ஆட்களைப் பார்த்துத்தான் அவருக்குப் பழக்கம்.
“தயாளினி. மன்னிக்கோணும். இவ்வளவு துன்பத்தை கடவுள் உங்களுக்குக் குடுத்திருக்கக்கூடாது. சிவாவுக்கு இப்பிடி நடக்கும் எண்டு. ச்சிக். அதுவும் நாங்கள் எல்லாரும் இருந்தும். இவர் பெயர் நிலாப்தீன். இந்தக் கேஸையும் இதுக்கு முதல் நடந்த சாமத்திய வீட்டுக் கொலைகளையும் விசாரிக்கிற சி.ஐ.டி ஓஃபிசர். இந்தக் கஷ்டமான நேரத்தில உங்களைத் தொந்தரவு செய்ய விரும்பேல்ல. இவரிட்ட சில கேள்விகள் இருக்காம். நான் வேண்டாமெண்டுதான் சொன்னனான். ஆனாலும் இன்னும் தாமதிச்சா வேறொரு வீட்டிலயும் இப்பிடியொரு துன்பம் நிகழ்ந்திடும் எண்டு இவர் சொல்லுறார். நியாயம்தானே?”
தயாளினி நிமிர்ந்து உட்கார்ந்தார். சேலைத் தலைப்பால் கண்ணீரைத் துடைத்தார். அப்போது கண் மையும் பவுண்டேசனும் சேலையில் ஒட்டியதை உணர்ந்தவர், தனக்கொரு ஐந்து நிமிடம் கொடுக்க முடியுமா என்று ஜெயரத்தினத்திடம் கேட்டார். ஜெயரத்தினம் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு நிலாப்தீனுடன் அறையைவிட்டு வெளியேறினார். கூடவே அங்கு உட்கார்ந்து அழுதுகொண்டிருந்தவர்கள் நைசாக நழுவ ஆரம்பித்தார்கள். ஜெயரத்தினம் வீட்டின் ஹோலையே சுற்றிச் சுற்றி வந்தார். கொலை நிகழ்ந்த படுக்கையறைக்கு மீண்டும் ஒரு முறை சென்று ஆராய்ந்துவிட்டுத் திரும்பினார். அதுவரைக்கும் ஹோலில் நின்று செல்போனில் பேசிக்கொண்டிருந்த சுபத்திரா திடீரென மாயமானதை அவர் கவனிக்கத் தவறவில்லை. அங்கு நின்ற பொலிஸ் சப் இன்ஸ்பெகடரிடம் ஜெயரத்தினத்தை நிலாப்தீன் அறிமுகப்படுத்தி வைக்க, இவர் மெதுவாகப் பேச்சுக் கொடுத்தார்.
“வீடியோகாரனிடம் மெமரி கார்டை வாங்கிட்டிங்களா தம்பி?”
“யெஸ் சேர். ஒரு டீம் அதை செக் பண்ணிக்கொண்டிருக்கு.”
“குட். போட்டோகிராபர்?”
“அவர் உடனேயே ஸ்பொட்டை விட்டுப் போயிட்டார் சேர். இப்ப கூப்பிட்டிருக்கிறம். வந்திடுவார்.”
“சிவகடாட்சத்திண்ட செல்போன் ரெக்கோர்ட்ஸ்?”
“ஐபோன் சேர். பின் நம்பர் ஆருக்கும் தெரியேல்ல. அப்பிள் கொம்பனிக்கு ரிப்போர்ட் பண்ணப்போறம். டயலொக்கிலயும் ரிக்குவஸ்ட் பண்ணியிருக்கு. டைம் எடுக்கும்.”
“ஷிட். டிரைவர். சிவகடாட்சத்தின் டிரைவரிட்ட கேட்டிங்களா? ஏதாவது பார்மசி, கிளினிக் என்று போனாங்களாமா?”
“ஏற்கனவே நிலாப்தீன் சேர் சொல்லிப் புல்லா விசாரிச்சிட்டன் சேர். சாமத்திய வீட்டு வேலை முழுக்க டிரைவர்தான் ஓடியாடிச் செய்திருக்கிறார். அவருக்கும் ஒண்டும் தெரியேல்ல சேர். ஆனா சில நாள்ல காரை விட்டிட்டு ஓட்டோலயும் அவங்கள் போயிருக்கிறாங்களாம்.”
“பிறகு என்ன? சிவகடாட்சத்திண்ட யூசுவல் ஓட்டோகாரனைப் பிடிச்சு விசாரிக்கவேண்டியதுதானே?”
“மொத்தமா மூன்று பேரை வாடிக்கையா பிடிக்கிறவங்களாம் சேர். எல்லாரிட்டையும் விசாரிச்சிட்டம். ஒருத்தரும் எந்தக் கிளினிக்குக்கும் பார்மசியளுக்கும் இவங்களைக் கூட்டிப்போகேல்ல.”
ஜெயரத்தினம் நிலாப்தீனிடம் திரும்பினார்.
“இவையள் விசயத்தை மறைக்கோணும் எண்டு நினைச்சா டிரைவரை கூட்டிக்கொண்டு போயிருக்கமாட்டினம் நிலாப்தீன். தெரிஞ்ச ஓட்டோக்காரனையும் பிடிச்சிருக்க மாட்டினம். எங்காவது டவுனுக்கோ, வேற ஒரு இடத்துக்கோ போய், அங்கயிருந்துதான் ஓட்டோ பிடிச்சிருப்பினம். என் அனுமானப்படி இவையள் தங்கட பெயரையும்கூட கிளினிக்கில மாற்றிக்குடுத்திருக்கலாம். யாழ்ப்பாண விலாசம் குடுக்காம, வேற ஊர் விலாசம் குடுத்ததாலதான் நாங்கள் கவனிக்காமல் விட்டிருக்கிறம்”
“பொசிபிள் சேர். ஆனா அப்பிடி ஓளிஞ்சு மறைஞ்சு செய்யவேண்டிய விசயம் இல்லியே. வம்பரு எங்க போயிட்டு வாறாரு என்னு அம்பரு வாசம் காட்டிக்குடுத்திடுமே சேர்?”
“உண்மைதான் நிலாப்தீன். ஆனா யோசியும். பிள்ளைக்கு சாமத்திய வீடு. அங்க மேடைல அம்மாக்காரி பிள்ளைத்தாச்சியா நிண்டா ஊரே சிரிக்காதா? அதுவும் யாழ்ப்பாணத்தான் எங்கையெண்டு பாத்துக்கொண்டிருப்பான். சின்னதா ஒரு விடுப்புக் கிடைச்சா போதும். பாண்டல் குசுவ விட்டிட்டுப் போய்க்கிட்டேயிருப்பான். அதாலதான் பஃங்சன் முடியும்வரைக்கும் வெளில சொல்லவேண்டாம் எண்டு யோசிச்சிருக்கலாம்”
ஜெயரத்தினத்துக்குக் கொஞ்சம் பதற்றமாகத்தான் இருந்தது. எல்லாவற்றுக்கும் விளக்கம் கொடுக்க முடிகிறதே தவிர, கொலையாளியைப் பிடிப்பதற்கான பாதையை இன்னமும் சரியாக அறியமுடியவில்லையே என்று அவருக்கு விசனம் வந்தது. தான் கொஞ்சம் கொஞ்சமாகத் தோற்றுக்கொண்டிருக்குமாற்போலத் தெரிந்தது. என்ர சந்நிதியானே, தயாளினியை எப்படியும் கர்ப்பமாக்கி விடு என்று அவர் வேண்டிக்கொண்டார். அப்போது வாசலில் சின்னச் சலசலப்புக் கேட்டது. அங்கிருந்த பொலிஸிடம் யாரோ ஒருவர் பேசிக்கொண்டிருந்ததை நிலாப்தீன் கவனித்தார். வந்த நபர் திரும்பி இவர்களைப் பார்த்த கணமே நிலாப்தீனுக்குப் பொறி தட்டியது.
“சேர், இந்தாளை எங்கியோ கண்டிரிக்கமே”
ஜெயரத்தினமும் இப்போது திரும்பிப்பார்த்தார்.
“இது போட்டோகிராபர் … பெயர் டொமினிக். பி.சி லாப் எண்டு ஒரு ஸ்டூடியோ வச்சிருக்கிறார். எடுத்த படங்களைத் தர வந்திருக்கலாம். அதுக்கு என்ன?”
“என்ன சேர் இப்டிச் சொல்லுறீங்கை? இவருதான் ரமாதேவிண்ட பொண்ணோட சாமத்திய வூட்டிலயும் போட்டோ புடிச்சவர். மறந்திட்டிங்களா?”
“அதுக்காகச் சந்தேகப்படமுடியுமா? இவர் யாழ்ப்பாணத்தில இப்ப பேஃமஸ் போட்டோகிராபர் நிலாப்தீன். அத்தோட கொலை நடந்த மற்ற மூன்று சாமத்திய வீட்டிலயும் அவர் போட்டோகிராபர் இல்லையே. ஆனா…”, ஜெயரத்தினம் எதையோ யோசித்தார். பின்னர், “இவர்கூட ஏதோ மெடிக்கல் கிளினிக்கிலதான் புல்டைம் வேலை செய்யோணும். போட்டோ எடுக்கிறது பார்ட் டைம்தான். எதுக்கும் அவர்ல ஒரு கண் வைத்திரும்”
“அப்டியா? அப்போ இவந்தான் சேர் ஆள். புடிச்சு உள்ள போட்டு ரெண்டு தட்டுத் தட்டினா கக்கிடப்போறான். ரெண்டு வூட்டில இருந்திருக்கான். கிளினிக்கில வேற வேலை. அல்லாமே பொருந்தி வருதுதானே?”
“போஃக்கஸ் நிலாப்தீன். எங்களுக்கு இந்த மெடிக்கல் கிளினிக் தொடர்பு சரியா இருக்கோணுமெண்டா தயாளினி கர்ப்பமா இருக்கவேணும். மறந்திடாதீங்க”
அந்த நேரம் பார்த்து தயாளினி கதவைத் திறந்துகொண்டு வெளியே வர, இருவரும் பேச்சை நிறுத்தினார்கள்.
“சொல்லுங்கோ இன்ஸ்பெக்டர். என்னட்ட என்ன கேக்கோணும்?”
தயாளினி இப்போது தன் கொண்டை அலங்காரத்தை அவிழ்த்து தலை மயிரைத் தளைய விட்டிருந்தார். காஞ்சிபுரத்தையும் மாற்றி எளிமையான கொட்டன் சேலையை உடுத்தியிருந்தார். முகத்தை நன்றாகக் கழுவி, மெலிதாகப் பவுடர் போட்டு, எளிமையாகக் காட்சியளித்தார். தொடர்ந்து அழுததில் கண்கள் சற்று வீங்கியிருந்தாலும் அதற்கும் மேலாக முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தாற்போல ஜெயரத்தினத்துக்குத் தோன்றியது. ஆர்வமிகுதியில் ஓரக்கண்ணால் அவர் தயாளினியின் வயிற்றைக்கூட நோட்டம் விட்டுப்பார்த்தார். ம்ஹூம் கண்டுபிடிக்கமுடியவில்லை.
“உங்களுடன் கொஞ்சம் தனியாகப் பேசவேண்டும். கன நேரம் மெனக்கெடுத்த மாட்டோம் மிஸ்”
நிலாப்தீன் சொல்ல, சரி என்றபடி தயாளினி சிவகடாட்சத்தின் அலுவலக அறைக்குள் அவர்களைக் கூட்டிச்சென்றார். அங்கிருந்த பழம்பெரும் புத்தகங்களையும் சுவடிகளையும் மருந்துக்குடுவைகளையும் கண்டு நிலாப்தீன் ஆச்சரியப்பட்டார். புரஜெக்டர் பூட்டப்பட்டு ஒரு பக்க சுவரில் திரையுமிருந்தது. ஜெயரத்தினம் ஒரு கதிரையில் உட்கார்ந்துகொண்டு அங்கிருந்த புத்தகங்களையும் கொப்பிகளையும் எழுமாற்றாகத் தட்டிக்கொண்டிருக்க நிலாப்தீன் பேசலாமென குரலைச் செருமினார். அதற்குள் தயாளினி புலம்ப ஆரம்பித்துவிட்டார்.
“என்னண்டு சொல்லுங்கோ. எனக்கு எதுவுமே விளங்கேல்ல. அவர் ஆருக்கும் எந்தக் கொடுமையும் செஞ்சதில்லை. இந்த சமூகத்துக்கு நல்லது மட்டும்தான் நினைச்சவர்.”
“உங்களுக்கு ஆர் மேலயும் சந்தேகம் இருக்கா மிஸ்?”
“தெரியேல்ல. அவரிண்ட வளர்ச்சியைப் பிடிக்காத கனபேர் இருக்கிறினம். ஆனால் கொல்லுற அளவுக்கு ஆர் எண்டு எனக்குத் தெரியேல்ல.”
“சரி அத நாங்கள் கண்டுபிடிக்கிறம். ஆனா உங்களிட்ட ஒரு சங்கடமான கேள்வியக் கேக்கப்போறம் மிஸ். கோவிக்கக்கூடாது”
தயாளினி சந்தேகத்துடன் அவர்களைப் பார்த்தார்.
“என்னெண்டா … இதுக்கு முன்னால கொலை நடந்த வீடுகளில ஒண்டு ஒரு கைக்குழந்தை இருந்துது, இல்லாட்டி …”
தயாளினியின் புருவங்கள் சுருங்கின.
“இல்லாட்டி? என்ன சொல்ல வாறிங்கள்?”
“இல்லாட்டி சாமத்தியப்பட்ட பிள்ளைண்ட அம்மா கர்ப்பமா இருந்திருக்கிறா”
தயாளினிக்குத் தூக்கிவாரிப்போட்டது. அவர் தன்னிச்சையாகத் தன் அடிவயிற்றைப் பற்றிக்கொண்டார்.
“தங்கச்சி … ஆர் யு ஒகே?”
ஜெயரத்தினம் கேட்க தயாளினி சன்னமாக விசும்ப ஆரம்பித்தார்.
“வெளிய சொல்லவே கேவலமா இருக்கு. நானும் … ஐயோ நான் இனி எப்பிடி இந்தக் குடும்பத்தைக் கொண்டு நடத்தப்போறன் .. ஐயோ என்ர அம்மாளாச்சி”
தயாளினி குரலெடுத்து அழ ஆரம்பித்தார். ஜெயரத்தினம் மெதுவாக நிலாப்தீனைத் திரும்பிப்பார்த்தார். முகத்தைக் கவலையுடன் வைத்துக்கொண்டு ‘ஐ டோல்ட் யு ஸோ’ என்று கண்களால் சிரித்தார்.
“அழாதீங்கோ மிஸ். இந்த விசயத்தை நாங்களா வெளிய சொல்லமாட்டம். ஆனா எங்கட இன்வெஸ்டிகேசனுக்கு இது முக்கியம். தெளிவா சொல்லுங்க பிளீஸ். நீங்கள் கர்ப்பிணியா?”
“இரண்டு கிழமையாத்தான் தெரியும். நான் மெனோபஸ் எண்டுதான் நினைச்சன். ச்சிக். இந்த வயசில இப்பிடி ஒரு அவமானத்தைக் குடுத்திட்டு அவர் நிம்மதியாப் போயிட்டார்”
நிலாப்தீனுக்கு இருப்புக் கொள்ளமுடியவில்லை.
“அம்மா ஒரேயொரு கேள்வி. நீங்கள் அதுக்காக கிளினிக் எங்காவது போனீங்களா?”
“காந்தாரி கிளினிக் எண்டு…”
“உங்கட போட்டோகிராபர் டொமினிக் வேலை செய்யிற கிளினிக்தானே அது?”
நிலாப்தீன் சத்தமாகாவே கேட்டுவிட்டார். ஜெயரத்தினம்தான் நிலைமையை உணர்ந்து சமாளிக்க முயன்றார்.
“சரி தயாளினி. இதுக்குமேல உங்களை நாங்கள் தொந்தரவு செய்யமாட்டம். நடந்தது நடந்துபோச்சு. யூ டேக் கெயார். நீங்கள் தேவையான செக் அப்புகளை செய்யவேண்டும். இந்த நேரத்திலதான் தைரியமா இருக்கோணும். வேற யாருக்கும் இந்த விசயம் தெரியுமா?”
“ஒருத்தருக்கும் சொல்லேல்ல. இனியும் சொன்னா அசிங்கமாயிடும்… ஐயோ இது தெரிஞ்சா ஊர் அரியண்டமா கதைக்குமே. இந்தச் சனியனை நான் கலைக்கப்போறன்”
“அப்பிடிச் சொல்லாதீங்க. எல்லாமே நல்லதுக்குத்தான். சிவகடாட்சம்தான் உங்களுக்குப் பிள்ளையாப் பிறக்கப்போகிறாரோ யார் கண்டது? புருசன் தன்ர மடில குழந்தையாக் கிடக்கோணும் எண்டுதானே ஒவ்வொரு மனுசிமாரும் வேண்டிறவை. உங்களுக்கு அது உண்மையிலேயே நடக்கப்போகுது”
நிலாப்தீன் இப்போது ஜெயரத்தினத்தைக் கொஞ்சம் கேவலமாகவே பார்த்தார். தயாளினி தொடர்ந்து விசும்பினார்.
“மிஸ், நான் கவுன்சிலிங் எதின்னாலும் அரேஞ் பண்ணுறன். எந்த முடிவையும் சுருக்குன்னு எடுக்காதீங்கோ பிளீஸ். எல்லாத்தையும் எழந்தவனுக்கு அல்லாவின் துணை எப்போதுமிருக்குமின்னு எங்குட உம்மா அடிக்கடி சொல்லுவா. நாங்கள் வாறம். ஏதாவது அப்டேட் இரிந்தா மெசேஜ் குடுக்கிறம்”
நிலாப்தீன் ஆறுதல் சொல்லிக்கொண்டிருக்கையில் ஜெயரத்தினம் போனில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார். கையில் வைத்திருந்த நிலாப்தீனின் பைஃலையும் படபடவென்று திரும்பி எதையோ ஆராய்ந்தார். பின்னர் தயாளினியிடம் சொல்லிக்கொண்டு இருவரும் விடைபெற்றுக்கொண்டு வெளியேறினார்கள். வீட்டு வாசலைத் தாண்டியதும் வேகமாக வாகனத்தை நோக்கி நடந்தார்கள்.
“சேர், யு ஆர் எ ஜீனியஸ். என்னால நம்பவே ஏலா. எப்பிடி இந்தப் புள்ளத்தாச்சி விசயத்தில் உறுதியா இரிந்திங்க?”
ஜெயரத்தினம் சிரித்தபடியே வாகனத்தில் அமர்ந்திருந்த டிரைவரை இறங்கச் சொல்லிவிட்டுத் தானே டிரைவர் சீட்டில் ஏறி உட்கார்ந்தார். மடித்துக் கட்டிய வேட்டி, அரையில் சால்வைக்கட்டு, வெள்ளைச் சட்டை போட்டபடி அவர் அமர்ந்திருக்க, அவருடைய பரந்த வண்டி, விபத்து நடந்த வண்டியில் எயார் பாக் ஊதிக் கிடப்பதுபோல, ஸ்டியரிங் வீலினை நிறைத்துக்கொண்டிருந்தது. அதைப் பார்க்க நிலாப்தீனுக்குக் கொஞ்சம் சிரிப்பும் வந்தது.
“சிரிக்கிற நேரமில்லை இது. ஏறுங்க நிலாப்தீன், போவம்”
“டொமினிக் வூடுதானே சேர். பத்து நிமிசம் முன்னாடியும் அவன் இங்கிட்டு நின்னானே சேர். அப்பவே புடிச்சிருக்கலாம். சரி வாங்கோ போலாம். எங்கிட்டு போறம் சேர்?”
“கோட்டைக்கு”
“என்னது? கோட்டையா? அங்கிட்டு எதுக்கு சேர்?”
“கோட்டைல ஒரு சிலை திறப்பு விழா நடக்குது நிலாப்தீன்.”
“அதுக்கு ஏன் சேர் நாங்கள் … ஆ புரியுது. டொமினிக் அத போட்டோ புடிக்க போயிரிக்கான். அவனை புடிக்க நாங்கள் போறோம். அதானே சேர்?”
“சீற் பெல்டை போடுங்கோ நிலாப்தீன். பக்கிள் அப்”
ஜெயரத்தினம் கொஞ்சம் குரலை அதட்டிச்சொல்ல நிலாப்தீன் எதுவுமே புரியாதவராய் சீற் பெல்டை எடுத்து மாட்டினார். வாகனம் வேகமாக முன்னே சென்று, யு டேர்ன் அடித்துக்கொண்டு பிரதான வீதியில் ஏறி, கோட்டையை நோக்கிப் பறந்தது. ஜெயரத்தினம் விசிலடித்தபடியே முன்னால் சென்றுகொண்டிருந்த லாண்ட் மாஸ்டர் ஒன்றை படு வேகமாக ஓவர் டேக் பண்ணினார்.
“அடக் கோதாரி பிடிச்சவங்களே … ரெண்டு கண்ணையும் என்ன கொட்…”
லாண்ட் மாஸ்டர் ஓட்டிக்கொண்டிருந்த ஐயா, பொலிஸ் வாகனம் என்றும் பார்க்காமல், இவர்களைப் பார்த்து மோசமாகத் திட்டியது காற்றோடு கரைந்துபோனது. --- தொடரும் ---

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக