Skip to main content

கந்தசாமியும் கலக்சியும் - புதுப்பதிப்பு

வணக்கம் நண்பர்களே,



என்னுடைய புத்தகங்களை மறுபதிப்பு செய்யவேண்டும் என்ற ஆவலை வெண்பா புத்தக நிலையத்தின் நிறுவனர் சுதர்சன் சென்ற வருடம் வெளிப்படுத்தியிருந்தார். தாமே பதிப்பகம் ஒன்றை ஆரம்பிக்கப்போவதாகவும் “கந்தசாமியும் கலக்சியும்” நாவலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்றும் சொன்னார். அப்படித்தொடங்கியதுதான் இந்த மூன்றாம் பதிப்புக்கான வேலைகள்.

டக்ளஸ் அடம்ஸ், டெரி பிரச்சட் போன்ற எழுத்தாளர்களின் புத்தகங்களை என் பதின்மங்களில் வாசிக்காமல் தவறவிட்டதற்காக வருந்தியிருக்கிறேன். நாளாந்த வாழ்க்கையின், அரசியலின், சமூகத்தின் அபத்தங்களை முழுக்க முழுக்க அங்கதம் கலந்து ஒரு எளிமையான அறிவியல் புனைவினூடாக வெளிப்படுத்துகின்ற எழுத்துகள் அவை. ஒருவித cognitive estrangement.

“கந்தசாமியும் கலக்சியும்” நாவலும் அப்படிப்பட்ட எழுத்துகளின் சிறு தழுவல் முயற்சிதான். ஆனால் அதன் முதலிரு பதிப்புகளும் பதின்மங்களில் இருக்கும் வாசகர்களை பெரிதாக சென்றடையவில்லை. இப்போது வெளியாகியிருக்கும் மூன்றாவது பதிப்பு அதனை நிறைவேற்றும் என்று நம்புகிறேன். வெண்பா பதிப்பகத்துக்கு நான் சொன்னதும் அதைத்தான். அதனடிப்படையில்தான் அவர்கள் அட்டைப்படத்தையும் புதிதாக வடிவமைத்திருக்கிறார்கள்.

முதன்முதலாக பதிப்புத்துறைக்குள் காலடி எடுத்து வைக்கும் வெண்பாவுக்கு வாழ்த்துகள்.

“கந்தசாமியும் கலக்சியும்” நாவல் இப்போது வெண்பா புத்தக நிலையங்களில் கிடைக்கிறது. இணையத்திலும்.

அன்பும் நன்றியும்.

Popular posts from this blog

அயலும் உறவும்

ஊரிலே ஒரு வீடு திருமண நிகழ்வு ஒன்றுக்குத் தயாராகிறது. அந்த வீட்டின் இளைய பெண்ணுக்குத் திருமணம். வீடே திருவிழாக்கோலம் பூணுகிறது. ஒரு திருமண வீட்டின் அமளிகளை நாம் எல்லோருமே அனுபவித்திருப்போம் அல்லவா? அதுவும் நிகழ்வுக்கு முந்தைய சில தினங்கள் அங்கு நடக்கும் ஆயத்தங்கள்தான் உண்மையிலே ஒரு திருமணத்தின் முத்தாய்ப்பான கணங்கள் என்பது என் எண்ணம். சுவர்களுக்குப் பூச்சு அடிப்பது. வீட்டைக் கழுவித்  தரைக்குப்  பிழிந்த தேங்காய்ப்பூ போட்டுப் பாலிஷ் பண்ணுவது. கிணறு இறைப்பது. சுவர்களில் சோடனைகளைத் தொங்கவிடுவது. வெளியே சொக்கட்டான் பந்தல் போடுவது. சவுண்டு சிஸ்டம் ஒன்றை வாடகைக்கு எடுத்து காலையிலிருந்தே கோயில் திருவிழாக்கள்போல பாடல்களை ஒலிக்கவிடுவது. தூக்குக் கணக்கில் விறகுகளையும் பொச்சு மட்டைகளையும் வாங்கி இறக்குவது. பலகாரச்சூட்டுக்கென உறவெல்லாம் கூடுவது. பாத்திரங்களாலும் அடுப்புப்புகையாலும் ஊர் வம்புகளாலும் நிரம்பும் கொல்லைப்புறம். சிறுவர்களின் விளையாட்டுகளால் எழும் புழுதி. முற்றத்தில் சும்மா உட்கார்ந்து பத்திரிகை படித்தும், வெற்றிலை பாக்கு போட்டுக்கொண்டும் அரசியல் பேசும் பெரிசுகள். திருமணத்துக்குத...

அம்மாளாச்சி கொடியேற்றம்

பசித்தது. சமைக்கப் பஞ்சியாகவும் இருந்தது. அம்மாவுக்கு அழைப்பெடுத்தேன். இரவு உங்க என்ன சாப்பாடு? மரக்கறிதான். இண்டைக்கு அம்மாளாச்சிண்ட கோயில் கொடி. மறந்திட்டியா? அய்யய்யோ. அப்ப முட்டைகூட பொரிக்கமாட்டீங்களா?

பழக்கப்படுத்திக்கொள்ளு பாப்பா

‘ஓ ஜனனி, என் ஸ்வரம் நீ’ என்ற பாடலைத் தொண்ணூறுகளில் வானொலி கேட்டு வளர்ந்தவர்களுக்குத் தெரிந்திருக்கும். புதிய ராகம் திரைப்படத்துக்காக இளையராஜா இசையில் மனோ பாடிய பாடல் என்ற அறிவிப்பாளரின் குரல்கூட இக்கணம் இதனை வாசிக்கும் சில நேயர்களின் காதுகளில் கேட்கவும் கூடும். அதேபோல இரண்டாயிரமாம் ஆண்டளவில் சக்தி, சூரியன் எப்.எம் வானொலிகளைக் கேட்டவர்கள் ‘ஏதோ மின்னல், ஏதோ மின்னல்’ என்ற பாடலை மறந்திருக்கமாட்டார்கள். சபேஷ் முரளி இசையில் மாதங்கியும் திப்புவும் பாடிய பாடல் அது. அக்காலத்தில் ஈழத்து வானொலி நேயர்கள் மத்தியில் மிகப் பிரபலமாக இருந்த இப் பாடல் வெளிவந்த திரைப்படத்தின் பெயர் ‘ஆயிரம் பொய் சொல்லி’.