Skip to main content

மூளா தீ


காலி எண்ணெய்க்கலனுடன் பெற்றோல் வரிசையில் பல மணி நேரம் கால் கடுக்க நின்ற மாதனமுத்தாவை பின்னால் நின்ற காசிம் பாவா தட்டிக் கேட்டார்.

‘லாம்புக்கா? அடுப்புக்கா?’
‘இல்லை, வீட்டுக்கு. நான் வீட்டை எரிக்கப்போகிறேன்’
காசிம் பாவா உற்சாகமடைந்தார்.
‘எந்த மினிஸ்டர் என்று சொன்னால் நானும் வருகிறேன்’
‘மினிஸ்டர் வீடில்லை, என் வீட்டைத்தான் எரிக்கப்போகிறேன்’
‘என்ன பிசுக்கதை இது? அவனவன் மினிஸ்டர் வீடுகளை எரிக்கிறான். நீ என்னடா என்றால் உன் வீட்டை எரிக்கப்போகிறேன் என்கிறாய்’
‘அவனெல்லாம் திருடன், முடிச்சவிக்கி, ஒன்றுக்கும் உதவாதவன், கொலைகாரன் என்று தெரிந்துதானே வாக்களித்து அனுப்பினோம். அவன் தன்னிலை மாறவில்லை. உண்மையில் எரிப்பதாக இருந்தால் அவனைத் தேரில ஏத்திவிட்ட எங்கள் வீடுகளைத்தானே எரிக்கவேண்டும்? அதைத்தான் செய்யப்போகிறேன்’
மாதனமுத்தா சொன்னதைக் கேட்டதும் டென்சனாகிய காசிம் பாவா வரிசையில் கொஞ்சம் பின் தங்கிவிட்டார். நாள் முழுதும் வரிசையில் நின்று ஒருவாறாக அரைப்போத்தில் எண்ணெயை வாங்கியபடி மாதனமுத்தா வீட்டுக்குத் திரும்பியபோது நன்றாக இருட்டிவிட்டிருந்தது. மின் வெட்டும் வந்து சேர மாதனமுத்தாவின் மனைவி விளக்கை ஏற்றலாம் என்று நெருப்புப்பெட்டியைத் தேடி எடுத்தார். உள்ளே குச்சி இல்லை. குச்சி இல்லாமல் விளக்கை மட்டுமல்ல, வீட்டையும் எரிக்கமுடியாது என்ற உண்மை அப்போதுதான் மாதனமுத்தாவுக்கு உறைத்தது.
மாதனமுத்தா மீண்டும் கடைக்குப்போனார். கடையில் நெருப்புப்பெட்டி தீர்ந்துபோயிருந்தது. திரும்பும் வழியில் அவரது நண்பரான ஆறுமுகத்தின் வீட்டு கேற்றடியில் நின்று அவரை அழைத்தார். வெளியே வந்த ஆறுமுகத்திடன் ‘ஒரு நெருப்புப்பெட்டி கடனாகக் கிடைக்குமா?’ என்று கேட்டார். ‘பொறு, வாறன்’ என்று உள்ளே போன ஆறுமுகம் வெறுங்கையுடன் திரும்பிவந்தார். ‘விளக்கு வச்சாப்பிறகு நெருப்புப்பெட்டி குடுத்தா வீடு விளங்காது எண்டு மனிசி சொல்லுது’ என்றார். ‘யாருடைய வீடு விளங்காது? என் வீடு என்றால் பரவாயில்லை, நான் எப்படியோ எரிக்கத்தான் போகிறேன்’ என்றார் இவர். ‘இல்லை, தரித்திரம் வந்துவிடும், கொடுக்கமுடியாது, வீட்டை எரிக்கிறதென்றால் சிகரெட் லைட்டர் நல்ல சாமான்’ என்று ஆறுமுகம் உபரியாக ஒரு அறிவுரையும் கொடுக்க கடுப்பில் மாதனமுத்தா தொடர்ந்து நடந்தார்.
‘இந்தத் தமிழர்கள் ஒன்றுக்கும் விளங்காத கூட்டம். குச்சி கேட்டாக் குடுக்கமாட்டினம். ஆனா அவை நாடு கேப்பினமாம். நாங்கள் குடுக்கோணுமாம். ச்சைக். வீட்டைக் கட்டக்கூட இத்தனை சிரமம் இருக்காது, ஆனால் ஒரு வீட்டை எரிப்பது இவ்வளவு கடினமாக இருக்கிறதே? அவனவன் எப்படி ஒரே நாளில் நூறு வீடுகளை எரிக்கிறானோ?’
கவலைப்பட்டபடியே மாதனமுத்தா வீடு வந்து சேர்ந்தார். வீடு இருள் மண்டிக்கிடந்தது. இவர் வாயிற்படியால் உள்ளே நுழையவும் வாசல் நிலத்தில் படுத்திருந்த மனைவிமீது கால் பட்டு இடறி விழுந்தார்.
“ஏண்டி வாசலில கிடக்கிறாய்? வீட்டுக்குத் தரித்திரம்”
“காத்தோட்டமா இருக்கட்டும் எண்டுதான். உள்ள வெக்கையா இருக்கு”
“அதுக்கு மனுசன் வாற வழியிலயா கிடப்பாய்?”
“இது எண்ட அப்பனிண்ட வீடு. நான் கூரையிலகூடக் கிடப்பன், நீ கதைக்காதே”
“நல்லாக்கிட, இண்டைக்கு மட்டும்தான் இப்பிடிக்கிடக்கலாம், ஒரு தீக்குச்சி மட்டும் கிடைக்கட்டும். உன் அப்பன் கட்டின வீட்டை எரிச்சு உன் அப்பன் இருக்கிற இடத்துக்கே அனுப்பப்போறன்”
மாதனமுத்தாவின் மனைவிக்கு சுருக்கென்றது.
“என்னது வீட்டை எரிக்கப்போறியா?”
“பின்ன? இந்த பிஸ்ஸன்களை ஆட்சில ஏத்தினதுக்கு எங்கள் வீடுகளைத்தானே எரிக்கோணும்? அவங்கட வீட்டை எரிச்சு என்ன பிரயோசனம்? நாளைக்கும் நாங்கள்தானே இப்பிடியான பிஸ்ஸன்களை வாக்களிச்சு ஆட்சில ஏத்தப்போறம்?”
மாதனமுத்தாவின் மனைவிக்கு விளங்கிவிட்டது. மனுசனுக்கு முற்றிவிட்டது. அவர் இருட்டில் கையை எட்டினார். வாசல்கரையோரமாய்ச் சாய்த்து வைத்திருந்த பார்த்தடி கையில் சிக்கியது. எடுத்து உடனே சுற்றத் தொடங்கினார். 'குருடி புருசனுக்கு அடிப்பதுபோல' என்று ஊரில் ஒரு சொல் வடை இருக்குமே. அப்படி. சுற்றிச் சுழன்று அடிக்க ஆரம்பித்தார். ‘மின்சாரக் கண்ணா' பாட்டு இறுதியில் ரம்யாகிருஷ்ணன் சுத்திற சுத்துப்போல சுழன்றடித்தார். மாதனமுத்தா ஒரு மூலைக்குள் சென்று பதுங்கினார். ஆனால் இந்த மனுசி அது தெரியாமல் சுற்றிக்கொண்டேயிருந்தது. ‘மின்சாரக் கண்ணா… மின்..சார கண்ணா…’ ஷோகேஸ் உடைந்தது. ‘மின்சார…’ ஸ்டூலில் எரியாமல் வைக்கப்பட்டிருந்த மேசை விளக்கின் சிமினி பறந்தது. குடித்துவிட்டு மண்டியோடு அப்படியே வைத்திருந்த தேத்தண்ணிக் கப் நொறுங்கியது. ஊருலகம் சுற்றிக் களைத்ததில் பால் குடிக்கலாம் என்று உள்ளே நுழைந்த வீட்டுப்பூனையும் அடி வாங்கியது. மனுசி சூறாவளிபோலச் சுற்றிக்கொண்டேயிருந்தது. மாதனமுத்தா மாத்திரம் எந்த ஜதியும் சொல்லாமல் மூலையில் ஒடுங்கிப்போயிருந்தார். நித்யஶ்ரீயின் ஆலாப்பு உயரப்பறந்து ஈலோன் மஸ்குடன் செவ்வாய்க்கிரகத்துக்குப் போய்க்கொண்டிருந்தது. “மின்சார….கண்ணா…”. பஞ்சதன் ஸ்டூடியோவின் கண்ணாடி யன்னல்களும் தெறித்துப் பறந்தன. “மின்சார……கண்….”
மின்சாரம் வந்துவிட்டது.
டியூப் லைட்டுகள் தட்டுத்தடுமாறி ஒளிர ஆரம்பிக்க, மாதனமுத்தாவின் மனைவி இப்போது சுற்றுவதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தார். மல்டி பரல் அடி வாங்கிய சாவகச்சேரி வீடுபோல அவர்களுடைய ஹோல் நொறுங்கிப்போய்க்கிடந்தது. மனிசிக்கு இருந்த ஆத்திரம் இரட்டிப்பாகி மாதனமுத்தாவைத் தேடினார். சிங்கன் செற்றிக்கு அருகே மூலையோரமாக ஒடுங்கி உட்கார்ந்திருந்தார். பயத்தில் வியர்த்து அவரது உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கிட்டத்தட்ட பொக்ஸ் அடிக்கப்பட்டிருந்தார். தப்பமுடியாது என்று தெரிந்துவிட்டது. அடி விழப்போகிறது. உயிர் தப்புவதே சிரமம் என்று தோன்றியது. தப்பினால் கைகால்கள் விளங்காமல் தன் மீதி நாட்களைக் கழிக்கவேண்டிவரும். என்ன செய்வது. அவள் கால்களில் விழுந்து அழுது பார்க்கலாம்.
மாதனமுத்தா யோசித்துக்கொண்டிருக்கையில் அவரது மனைவி பார்த்தடியும் கையுமாய் நெருங்கிவந்தார்.
“என்ன நீ என் வீட்டையே எரிக்கப்பார்க்கிறாயா? அவ்வளவு தைரியமா?”
“இல்லை, அது, சும்மாதான் அப்படிச்சொன்னேன். யாராவது தங்களது வீட்டைத் தாமே எரிப்பார்களா? லூசா எனக்கு?”
அவ்வளவுதான். மாதனமுத்தாவின் மனைவியின் கோபம் தணிந்துவிட்டது.
“அதானே பார்த்தன், நீயாவது எரிப்பதாவது. சரி எழும்பி வா. சாப்பிடுவம். பின்னர் வீட்டைத் துப்பரவு செய்யவேண்டும். பிஸ்ஸன்கள் திரும்பவும் கரண்டைக் கட் பண்ணிடுவாங்கள்”
அவர் பார்த்தடியை நீட்ட மாதனமுத்தா அதைப் பிடித்து நிதானமாக எழுந்தபடியே கேட்டார்.
“பலயா குழம்புதானே?”
“ம்ம்ம் … பலாக்காய்க்கறியும் இருக்கு.”
மனைவி சொல்ல, மாதனமுத்தா கவனமாக அந்த பார்த்தடியை வாங்கி சுவரில் சாய்த்து வைத்துவிட்டு சாப்பாட்டு மேசையில் போய்க் குந்தினார். மனைவி சாப்பாடு எடுத்துவர உள்ளே போனார். இவர் மேலே கூரையைப் பார்த்து கடவுளுக்கு நன்றி சொன்னார். நல்லகாலம். தப்பிவிட்டேன். இவ்வளவும் போதும். ரிமோட்டை எடுத்து டிவியைப் போட்டார். டிவியில் சில வீடுகள் எரிந்துகொண்டிருந்தன. மூத்தவர் கோணமாமலையமர்ந்திருக்கிறார் என்று செய்தி சொன்னது.
இருவரும் சோறைப் பிசைய ஆரம்பித்தார்கள்.
சுபம்.

Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக