Skip to main content

பொன்னியின் செல்வன் - இராட்சச மாமனே



கடந்த சில வாரங்களாக நான் திரும்பத் திரும்பக் கேட்டு லயித்துக்கிடக்கும் பாடல்கள் பொன்னியின் செல்வனுடைய பாடல்கள். தலைவர் ரகுமான் எப்போதும்போல நெருப்பெடுத்திருக்கிறார். என் ரசனையின் அடிப்படையில் ரகுமான் என்றைக்குமே அவுட் ஓஃப் போர்மில் இருந்ததில்லை என்றே தோன்றுகிறது. உதாரணத்துக்கு அண்மையில் வெளியான “தமிழ் நாட்டின்” வெந்து தணிந்தது காடு, இரவின் நிழல், கோப்ரா, மலயான் குஞ்சு, அற்றாங்கி ரே எல்லாமே அட்டகாசம். அதற்கும் முன்னர் வந்த 99 Songs பற்றி பேசவே தேவையில்லை. என்ன ஒன்று பலருக்கு ஒரு இசைத்தொகுப்பை ஆற அமர இருந்து, திரும்பத் திரும்பக் கேட்பதற்கு இப்போதெல்லாம் சந்தர்ப்பங்கள் அமைவதில்லை. முன்னர் வானொலிகள் அந்த வேலையை எமக்குச் செய்துகொண்டிருந்தன. இப்போது நாமே பாடல்களைத் தெரிவுசெய்து கேட்பதால் ஒன்று பழைய பாடல்களையே திரும்பவும் தெரிவு செய்கிறோம். அல்லது வைரலாக சுற்றும் பாடல்களைக் கேட்கிறோம். புதிய ரகுமான் பாடல்கள் இவற்றுக்கிடையில் என்னைப் போன்ற ரசிகர்களிடம் மாத்திரமே சென்று சேர்கின்றனவோ தெரியாது.
பொன்னியில் செல்வனில் ரகுமான் தனியாக ஒரு தேவராளன் ஆட்டமே ஆடியிருக்கிறார். பொன்னி நதி, காதொடு சொல், அலை கடல், தேவராளன் ஆட்டம் என எல்லாமே ரிப்பீட்டு மோடு பாடல்கள். ஆயினும் இந்தத் தொகுப்பில் ஒரு பாட்டு சீவனை அங்கிங்கு அசைய விடாமல் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது.


அதுதான் இராட்சச மாமனே.

தலைவரின் இசையைச் சொல்லவே வேண்டாம். ஷெரயா கோசலின் குரலையும் சொல்லத் தேவையில்லை. ஷெரயா அந்த மென்மையான குரலோடு செய்யும் சங்கதி உருட்டல்களும் பிர்க்கா சாலங்களும் ஆகா. முடிவில் மின்சாரக் கண்ணன் பாலக்காடு ஶ்ரீராமும் வந்து இணைய பாட்டு வேறு தளத்துக்குச் சென்று விட்டது.

பொன்னியின் செல்வன் பாடல்களை நான் ஸ்பொட்டிபையில் கேட்டு வந்ததால் எனக்கு அவற்றின் புகைப்பட வீடியோவைக் காண்கின்ற சந்தர்ப்பம் முதல் சில வாரங்களுக்குக் கிடைக்கவில்லை. ஒரு நாள் கஜனுக்கும் கேதாவுக்கும் இந்தப் பாடலை அனுப்பி “மக்களே இது ஒரு இராட்சச பாட்டு, பாரு யாரோ ஒரு சிறுமி சுப்பர் சிங்கரில் பாடி, நாலு ஜட்ஜுமார் அழுதாப்பிறகுதான் இந்தப்பாட்டு மெயின்ஸ்றீமைச் சென்றடையும்” என்று மெசேஜ் பண்ணினேன். கேதா உடனேயே அழைப்பெடுத்து அதன் வரிகளைப் பற்றி சிலாகிக்க ஆரம்பித்தான். அதுவரைக்கும் நூறு முறையாவது நான் பாட்டைக் கேட்டிருப்பேன். ஆயினும் பாட்டு கம்சனுக்கும் கண்ணனுக்குமிடையான யுத்தக் காட்சி என்பது என் மண்டைக்குள் ஏனோ ஏறவேயில்லை.
 
எனக்குப் பாடல்களின் வரிகள் நீண்ட காலத்துக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வருவதுண்டு. சில சமயங்களில் அது பல ஆண்டுகளுக்குப் பிறகே நிகழும். யாருடைய பாடலென்றாலும் அப்படித்தான். ஆனால் கேதா அழுத்திச் சொன்னதன் பின்னர் இராட்சச மாமனின் வரிகளைக் கவனிக்க ஆரம்பித்தேன்.

கபிலனின் வரிகள். கண்ணன் கம்சனைப் பார்த்து ‘நீ ஒரு வீரன்தான், ஆனால் தேர புத்திகொண்ட அறிவிலி’ என்று எள்ளி நகையாடுகிறான். கம்சன் தன்னை வம்சவழி வந்தரசன் என்றும் நக்கீரனின் புத்திரன் என்றும் பெருமை பேசுகிறான். டேய் பாலகனே அண்டங்களின் சுற்றுகளையும் கண்டங்களையும் வென்றெடுத்தவன் நான் என்று பீற்றுகிறான். ஆனால் கண்ணன் அசருவதாக இல்லை. 'டேய் நான் உனக்கு சின்னப்பிள்ளையாடா?, உன்னை என்ன செய்கிறேன் பார்’ என்று கம்சனிடம் வீம்பு பேசுகிறான். ஆனால் அடுத்த கணமே ‘டேய் ஒரு சின்னப் பிள்ளையை இப்படி வைவது தகுமா?’ என்று கண்ணனுக்கே உரிய பாணியில் தட்டைத் திருப்பிப்போடுகிறான். இப்படி மாறி மாறி பேச்சுவார்த்தைப்பட்டு ஈற்றில் ஜதியும் இசையும் உச்சம் கண்டு கம்ச வதை நிகழ்கிறது.
ஆனால் இந்தப் பாடலை சற்று உள்ளே சென்று கவனித்தால் இது ஒரு காதல் பாடல்தான். கண்ணனை ஷெரயா கோசல் குரலில் பாட வைத்தது வெறும் தற்செயல் அல்லவே. குந்தவை போன்ற ஒரு புத்திசாலி அழகி வந்தியத்தேவன் போன்ற அவசரக்குடுக்கை வீரனைப் பார்த்துப் பாடும் காதல் பாடல்தான் இது. “நீ காட்டு முள்ளில் வேட்டிபோல மாட்டிக்கொள்வதா?” என்பதும் தனக்குப் பிடித்தவனைப் பார்த்து “டேய் தேர புத்தி மூடனே” என்று வைவதும் பெண்களின் இயல்பு அல்லவா? “தொல்லை செய்வதா? பிள்ளை வைவதா? பள்ளி கொள்வதா (கொல்வதா என்று யோசித்தால் சாலப்பொருந்தும்)?” எல்லாமே ஊடலில் குறுந்தொகைப் பெண்கள் மருதத்திணையில் பாடும் தலைவன் ஏக்கப் பாடல்கள் இல்லையா?

ஆண்டாள் கண்ணனை நினைந்து ஏங்கும் பாடல்கள் தமிழில் நிறையவே வந்திருக்கின்றன. ஆனால் இங்கு கண்ணன் கம்சன் முடிச்சைக் காதலுக்குப் பயன்படுத்திய அழகு இருக்கிறதே. ஆஹா. 

“அண்ணை படத்தின் ஒவ்வொரு பாட்டிண்ட வரிகளும் இப்படித்தான், நெய்திருக்கிறாங்கள்” என்கிறான் கேதா.

இசையும் வரிகளும் இப்படி இணையும்போது வேறு என்ன வேணும் ரசிகர்களுக்கு?



Popular posts from this blog

பர்மா புத்தர் - சிறுகதை

பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது .   அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன . பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன . முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க , சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன . பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தன .  கார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது .  

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக