Skip to main content

பர்மா புத்தர் - சிறுகதை




பனம் பாத்தி மெதுவாக முளைவிட ஆரம்பித்திருந்தது. 


அதிகாலைக் குளிருக்கு அத்தனை பனங்கொட்டைகளும் நிலவண்டுகளின் கூட்டம்போல ஒட்டிக்குறண்டியபடி தூங்கிக்கொண்டிருந்தன. பாத்தியில் இடையிடையே கோரைப்புற்கள் கிளம்பியிருந்தன. முந்தைய நாள் அடித்து ஊற்றிய மழையில் இருக்காழிகள் சில குப்புறப்புரண்டு சாம்பல் நரையேறிய மயிர்க்கற்றைகளோடு வானம் பார்த்தபடி அண்ணாந்து கிடக்க, சில கொட்டைகள் பாத்தியினின்று சளிந்து அடிவாரங்களில் சிதறிக்கிடந்தன. பூரானுக்காகப் பிளக்கப்பட்டிருந்த கொட்டைகள் எல்லாம் ஒரு பக்கம் குவிக்கப்பட்டிருந்தனகார்த்திகை விளக்கீட்டுக்குப் பாத்தியடியில் குத்திவிடப்பட்டிருந்த பந்தத்தடி பாதி எரிந்த நிலையில் கறுப்பு வெள்ளைத் தொப்பியோடு இன்னமும் எஞ்சி நின்றது. 


யோகநாதன் கலுசானைக் கழட்டி கையில் பிடித்தபடி கக்கூசுக்காகக் குந்தினான். தடித்த கோரைப்புற்கள் சில அவனுடைய மெல்லிய குண்டியில் ஊசிக்கணக்காய்க் குத்தியபோது கூசியது. அவன் முன்னாலிருந்த புல்லை எட்டிப்பிடுங்கி, அதன் தண்டை நுனிப்பற்களால் சப்பினான். கயர்ந்தது. கைக்கெட்டும் தூரத்தில் கிடந்த பனங்கொட்டைகளை எடுத்து பாத்தியை நோக்கி எறிந்தான். சிலது பூரான் வேரோடு வந்தது. சிலது மச்சுப்போய் ஊமலாக வந்ததுஒரு கொட்டையைப் பிரட்டும்போது உள்ளேயிருந்த நத்தை ஒன்று அவசர அவசரமாகத் தன்னை உள்ளிழுத்துக்கொண்டது.


அதான் கண்டுட்டனே, பிறகென்னத்துக்கு ஒளியிறாய்?”


நத்தை பேசாமல் அப்படியே கல்லுப்போல் சமைந்திருந்தது. யோகநாதன் கையிலிருந்த புல்லினால் நத்தையைப் புரட்டிப்போட்டான். இப்போதும் அது தன்னை உள்ளிழுத்தபடியே கிடந்தது. அவன் அந்த நத்தையை கையால் எடுத்து, சற்றுத்தள்ளி ஊர்ந்துகொண்டிருந்த இன்னொரு நத்தையை நோக்கிக் குறிபார்த்து எறிந்தான். படவில்லை. ஆனால் சலசலப்பில் அந்த நத்தையும் இப்போது தன்னை கூட்டுக்குள் உள்ளிழுத்துக்கொண்டது. மலம் முட்டியதும் யோகநாதன் எழுந்து சற்றுத்தள்ளி உட்கார்ந்தான். அங்கும் ஒரு நத்தை கிடந்தது. அதனையும் எடுத்து பழைய நத்தையை நோக்கி எறிந்தான். இம்முறை குறி தவறவில்லை. அவனுக்கு இந்த விளையாட்டின் சுவாரசியம் பிடித்துக்கொண்டது. சுற்றிச் சுற்றி உட்கார்ந்தபடியே நத்தைகளை எடுத்து ஒரு குறிப்பிட்ட நத்தையை நோக்கி எறிய ஆரம்பித்தான். அந்த நத்தையைச் சுற்றி இப்போது அவன் எறிந்த நத்தைகள் எல்லாம் சுற்றிக்கிடந்தன. யோகநாதனுக்கு தன்னுடைய ஆரம்பக்குறி எது என்று இப்போது குழம்பிவிட்டது. ஆனாலும் எறிகையில் ஏதோ ஒரு நத்தையில் போய்ப் பட்டது உற்சாகத்தைக் கொடுத்தது. அவன் தொடர்ந்து இப்படி எறிந்துகொண்டேயிருக்க நத்தைக்கூட்டமும் பனம்பாத்திபோல ஓரிடத்தில் குவியத்தொடங்கியது.


யோகுஇருந்து முடிஞ்சால் அங்கனக்க கிடந்தது அடிபுண்ணாத. குண்டியைக் கழுவீட்டு, கக்காவை வெட்டித்தாட்டிட்டு இஞ்சால வா


பங்கயம் குரல் கொடுத்தது யோகுவுக்குக் கேட்கவில்லை. அவன் அந்த நத்தைக் குவியலையே பார்த்துக்கொண்டிருந்தான். அந்த நத்தைக் குவியலை மண் போட்டுப் பாத்தியாக்கினால் சில மாதங்களில் நத்தைக் கிழங்கு எடுக்கலாமா என்று யோசித்தான். பாத்தியருகிலிருந்த பந்தத்தடியைப் பிடுங்கி எடுத்து நத்தைக் குவியலைச் சுற்றிக் கோடு கீறினான். பல நத்தைகள் கூட்டுக்குள்ளிருந்து தலைநீட்டி மீண்டும் ஊர ஆரம்பித்திருந்தன. யோகு பந்தத்தடியால் அவற்றை எல்லாம் மீண்டும் கோட்டுக்குள் தள்ளினான். சில நத்தைகளைப் புரட்டிப்போட்டு பூரான் வந்துவிட்டதா என்று கவனித்தான்.


என்ன அரியண்ட வேலை பாத்துக்கொண்டிருக்கிறாய்? உன்னையல்லோ பாத்திக்குப் பக்கத்தில கக்கூஸ் இருக்கக்கூடாது எண்டு சொல்லுறனான்?”


பங்கயம் சத்தம்போட்டவாறே ஓடிவந்து அவனைத் தரதரவென கிணற்றடிக்கு இழுத்துச்சென்று அவனது குண்டியைக் கழுவிவிட்டாள். பின்னர் மண்வெட்டியை அவன் கையில் கொடுத்து, சிறு குழி வெட்டி மலத்தை உள்ளே தள்ளி மூடச்செய்தாள்.


ஏமலாந்திக்கொண்டு நிக்காம போய்ப் பல்லை விளக்கி வெளிக்கிடு, முதல் லோஞ்சி வரமுதல் ஆமத்துறுட்ட போயிட்டு வரோணும்


யோகு ஆலங்குச்சியை ஒடித்துப் பல் துலக்கியவாறே மீண்டும் பாத்தியடிக்கு வந்தான். பனம்பாத்தி அப்படியே குலையாமல் இன்னமும் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. அவன் போட்டுவைத்திருந்த நத்தைப்பாத்தி கலைந்து நத்தைகள் தறிகெட்டு நாலா திசையிலும் இழுத்து இழுத்து ஊர்ந்துகொண்டிருந்தன. யோகு பந்தக்கழியைத் தேடியெடுத்து அந்த நத்தைகளை திரும்பவும் கட்டத்துக்குள் தள்ளத்தொடங்கினான். அதே கழியால் நிலத்தைக் கிளறிச் சிறு பாத்தி மேடை அமைத்து நத்தைகளை அடுக்கத்தொடங்கினான். தண்ணீர் தெளித்து, பூவரசு இலைகளால் நத்தைப் பாத்தியை மூடிவிட்டு, பந்தத்தடியை அருகிலேயே நாட்டிவிட்டான்.


இப்ப ஒருத்தருக்கு அகப்பங்காம்பு தேடி வரப்போகுது. கொண்ணனுக்கு செல்லங்குடுத்துத்தான் அவன் எடுபட்டுத் திரியிறான். இப்ப நீயும் சொல்வழி கேக்கிறதில்லை. எனக்கெண்டு வந்து பிறந்துதுகள்


தாய்க்காரியின் சத்தம் கேட்டதும் யோகு நத்தைகளைக் கைவிட்டுவிட்டு கிணற்றடியை நோக்கி ஓடினான்.


000


பங்கயம் உள்ளதுக்குள்ளேயே கொஞ்சம் விருத்தமாக இருந்த நூல் சேலையை எடுத்து அவசரமாக அணிந்துகொண்டாள். கொட்டிலின் தட்டியைத் திறந்து வெளிச்சத்தைப் பரவவிட்டு, சாமித்தட்டிற்கு விளக்கு ஏற்றினாள். வெளியே, இடைநடுவில் கைவிடப்பட்ட அவர்களின் புதுவீடு இவளையே இறைஞ்சிக்கொண்டிருந்தது. வீரவாகு இருக்கும்போதே போடப்பட்ட அத்திவாரம். யாழ்ப்பாணத்தில் எவனுக்கும் சரியாகச் சீமெந்தில் ஓட்டு வீடு கட்டத்தெரியாது என்று வீரவாகு எங்கோ தெற்கே மாவனல்ல என்ற கிராமத்திலிருந்து தனக்குத்தெரிந்த மேசனையும் கட்டடப் பணியாளர்களையும் அழைத்து வந்திருந்தான். இங்கே வளவுக்குள்ளேயே சிறு கொட்டில் போட்டு சில மாதங்கள் அவர்கள் தங்கியிருந்தார்கள். பகலிரவாகத் தொடர்ந்து  கட்டப்பட்டு எழுந்துகொண்டிருந்த கல் வீடு அது. அம்மாள் கோயிலின் கோபுரத்து உச்சியைத் தாண்டாமல் உயரத்தை எப்பன் இறக்கிக் கட்டவேண்டும் என வீரவாகு சொல்லிக்கொண்டிருந்தான். ஆனால் தூண் எழுப்பி நாலு சுவர் கட்டுவதற்குள் சீமான் செத்துப்போனான். பின்னர் அவள்தான் மீதி வேலையைப் பார்க்கவேண்டியிருந்தது. அட்டியலை, ஒட்டியாணத்தை, மூக்குத்தியை என்று கிடந்த நகை நட்டு எல்லாவற்றையும் விற்றும் கூரைக்கு ஒரு தீராந்திகூடப் போடமுடியவில்லை. அதுவரைக்கும் பங்கயத்துக்கு வறுமை என்றால் என்னவென்றே தெரிந்திருக்கவில்லை. பணம் ஒரு பிரச்சனையாக அவர்கள் வீட்டில் என்றைக்குமே இருந்ததேயில்லை. ஆனால் வீரவாகு இறந்து இரண்டே மாதங்களில் எல்லாமே தலை கீழானது. எவரும் உதவிக்கும் வரவில்லை. தனியே வாழும் பெண்களை மோசமாக அணுகும் ஆண்களைப்பற்றி அவள் அறிவாள். ஆனால் பெண்கள் இத்தனை குரோதம் மிகுந்த சாகசக்காரிகளாகவும் நம்பி ஏமாற்றும் கழிசடைகளாகவும் இருப்பார்கள் என்பது அவள் எதிர்பாராதது. பேசாமல் அவள் தன் ஊருக்கே போயிருக்கலாம்தான். ஆனால் அங்கு மட்டும் கொண்டாடித் தீர்த்துவிடுவார்களா என்ன? சில வருடங்களே என்றாலும் நயினாதீவில் காணி, பூமி என்று செல்வாக்காக அவர்கள் வாழ்ந்துவிட்டார்கள். இதே ஊரிலே புண்ணியலிங்கத்தையும் யோகநாதனையும் ஆளாக்கி, கல் வீட்டிலேயே காலம் முழுதும் வாழ்ந்து, இந்தச் சனத்துக்கு நாம் யார் என்று ஒரு காட்டு காட்டிவிடவேண்டும். ஓட்டு வீட்டு மாமி என்று அத்தனை பேரும் நம் காலடியில் வந்து கிடக்கவேண்டும். இதனைச் சாதித்துக்காட்டாமல் ஊரை விட்டு அசைவதில்லை என்று பங்கயம் மீண்டுமொருமுறை சொல்லிக்கொண்டாள். அம்மாளாச்சி என்று கும்பிட்டபடியே சாமித்தட்டிலிருந்த விபூதி, சந்தனத்தை எடுத்துப்பூசினாள். கொழும்பில் வேட்டி சால்வையோடு நின்று எடுத்த வீரவாகுவின் ஒரே புகைப்படம் அவளைப் பார்த்துப் புன்னகைத்தது. பூ வைத்தாள்.


இந்த மார்கழி கழிந்தால் வீரவாகு இறந்துபோய் இரண்டு வருடங்கள் ஓடிவிடும். கொழும்புக்கு வெங்காயம் ஏற்றிப்போன இடத்தில் ஊரவர் யாரோ அவனுக்குச் செய்வினை வைத்துவிட்டிருந்தார்கள். புறக்கோட்டைக் கடையில் மூட்டையை இறக்கும்போதே நெஞ்சுவலி வந்து, அடுத்த அரை மணி நேரத்திலேயே உயிர் போய்விட்டது. அது யாருடைய வேலை என்று கண்டறிவது கடினமாக இருந்தது. வீரவாகுமீது ஊர் முழுதும் பகையும் புகைச்சலும் இருந்தது. அவன் நன்றாக வியாபாரம் செய்யக்கூடியவன். முழுத் தீவுமே வெங்காய அந்தர்களை யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி அனுப்பும்போது இவன் நேரடியாகக் கொழும்புக்கு அவற்றைக் கொண்டுபோனான். நிறைய உழைத்தான். சில கொழும்பு முதலாளிகளின் நட்பும் அவனுக்குக் கிடைத்தது. பின்னர் படகுகளில் வெங்காயம் எடுத்துச்சென்று இந்திய மீனவர்களுடனும் வியாபாரம் செய்தான் என்று ஒரு கதை கிளம்பியது. நயினாதீவின் வரலாற்றிலேயே முதன்முதலில் யாழ்ப்பாணத்தில் பெண் எடுத்தவன் என்ற புகழும் அவனுக்கு இருந்தது. கொழும்புக்கு வெங்காயம் ஏற்றுகையில் கூடவே தெல்லிப்பழையில் புகையிலையும் கொள்வனவு செய்துகொண்டு போவது வீரவாகுவின் வழக்கமாக இருந்தது. அதற்காக சித்தியம்புளியடியில் சினேகிதன் வீட்டில் அவன் தங்கி நிற்பதுண்டு. அந்தச் சினேகிதனின் தங்கைதான் பங்கயம். அப்போது ஏற்பட்ட சினேகம். பங்கயம் என்றால் முழு வலிகாமமே கிறங்கிக்கிடந்த காலம் அது. இரண்டாம் உலக யுத்தத்துக்குப் பயந்து, பிரித்தானியாவிலிருந்து தப்பியோடி இங்கு வந்து பணிபுரிந்த பல வெள்ளைக்கார ஆசிரியர்களும் அதிபர்களும்கூட பங்கயம்மீது ஒரு கண் வைத்திருந்தார்கள். பங்கயம் அப்போது இருந்த இருப்புக்கு லண்டனுக்கே வாழ்க்கைப்பட்டுப்போயிருப்பாள். ஆனால் ஏனோ அவளுக்கு வீரவாகுவைப் பிடித்துப்போனதில் நயினாதீவுக்கு வந்துவிட்டாள். ஆனால் அதையிட்டு பங்கயம் ஒரு கணம்கூட மனம் வருந்தியதில்லை. அவள் நயினாதீவுக்கு முதன்முதலாக வந்திறங்கியபோதுஅந்த சாட்சாத் துர்க்கை அம்மனே இந்த நாகபூசணிக்கு மருமகளாக வந்திருக்கிறாள்' என்று பாலத்தடியில் அவர்களை வரவேற்று நாவூறு கழித்த ஐயர் பெருமிதத்தோடு குறிப்பிட்டிருந்தார். ஆயினும் ஊரின் இளைஞர்கள் அவளைத் துர்க்கை அம்மனாகத்தான் பார்த்தார்களா என்பது கேள்விக்குரியது. வீரவாகு இருந்தவரை நயினாதீவில் அவள் செல்வாக்கும் வசதியுமாகத்தான் வாழ்ந்தாள். அவளை அவன் நல்லபடியாகவே பார்த்துக்கொண்டான். புண்ணியன் வயிற்றிலிருக்கும்போது வீரவாகு கொழும்பிலிருந்து பன்னிரண்டு பவுணில் பதக்கம் சங்கிலி ஒன்றை வாங்கிக்கொண்டு வந்தான். நீண்ட இடைவெளி விட்டு யோகநாதன் பிறந்த சமயம் வானொலி ஒன்று ஊரை வந்தடைந்தது. அதுதான் மொத்த நயினாதீவுக்குமே முதன்முதலாகக் கொண்டுவரப்பட்ட வானொலி. அதில் ஆகாசவாணி கேட்பதற்கென்றே தெற்கே எட்டாம் வட்டாரத்திலிருந்து ஆட்கள் வண்டி கட்டிக்கொண்டுவந்த காலம் ஒன்றிருந்தது. 


கொஞ்சம் கொஞ்சமாக ஊரில் இவர்களுக்குச் செல்வாக்கு அதிகரித்தது. பிள்ளையார் கோயில் மஞ்சத்திருவிழாவும் அம்மாள் கோயிலின் கொடியேற்றமும் இவர்கள் கைக்கு வந்தன. பர்மாவிலிருந்து பெரும் புத்தர் சிலை ஒன்று ஊர் விகாரைக்கு வந்த சமயம் அதற்குத் திருவிழா எடுத்து, வீரவாகுவின் வண்டிலில் வைத்துத்தான் அதனைத் தீவு முழுதும் சுற்றி வந்தார்கள்.  வீரவாகு புண்ணியனையும் ஆமத்துறுவையும ஏற்றிக்கொண்டு  பெருமையுடன் வண்டிலை ஓட்டியது இன்னமும் அவள் மனதில் தெரிகிறது. சிலையை விகாரையின் உட்பீடத்தில் தூக்கி வைத்ததுகூட வீரவாகும் பங்கயமும்தான். அதன் பிரதிட்டை செலவு முழுதையும் அவர்களே பார்த்துக்கொண்டார்கள். மகா வித்தியாலயத்தில் விளையாட்டுப்போட்டிகள் நிகழ்ந்தபோது பங்கயத்தைத்தான் பரிசு அளிக்க அழைத்தார்கள். அவளும் இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட எம். எஸ். சுப்புலட்சுமி அணியும் நீலக் காஞ்சிபுரம் சேலையைக் கட்டிக்கொண்டு, பதக்கம் சங்கிலியும் தங்க ஒட்டியாணமும் மினுங்க மினுங்க ஊர் நிகழ்ச்சிக்கெல்லாம் சென்று வந்தாள். இவற்றையெல்லாம் வீரவாகுவின் உற்றத்தினர் அவ்வளவாக ரசிக்கவில்லை என்பது ஆரம்பத்தில் அவளுக்கு விளங்கவில்லை. நல்ல தண்ணிக் கிணற்றில் உப்பு சவருவதுபோல ஊர் முழுதும் பொறாமையும் எரிச்சலும் கொஞ்சம் கொஞ்சமாகச் சவரத் தொடங்கியது. பனையடிவாரங்களிலும் பலகாரச்சூடுகளிலும் இவர்கள் குடும்பத்தைப்பற்றியே புரளி பேசப்பட்டது. கொழும்புக்காரங்கள் வீரவாகுவை வைத்துத் தங்கம் கடத்துகிறாங்கள் என்று பங்கயத்தின் காது படவே பலர் ஊரில் பேசிக்கொண்டார்கள். பங்கயத்தின் லாவுள் பழ நிறத்துக்குக் காரணம் ஊரில் அவள் குடும்பத்துக்கும் வெள்ளைக்காரர்களுக்குமிடையிலிருந்த இரகசியத் தொடர்பு என்றார்கள். பங்கயத்தின் இரண்டாவது தம்பிக்கு எப்படி பூனைக்கண் வந்தது என்று கேட்டுக்கொண்டார்கள். நயினாதீவிலேயே முதன்முதலாக ஓடு வேய்ந்த சீமெந்து வீட்டுக்கு அவர்கள் குடும்பம் அத்திவாரம் போட்டபோது கிணற்று நீரில் கடலைவிட அதிகமாக உப்புக்கரிக்க ஆரம்பித்தது. வீரவாகுவுக்கு சூனியம் வைக்கவேண்டும் என்ற பேச்சு எழுந்ததும் அப்போதுதான். அவன் பாரிசவாதம் வந்து படுத்த படுக்கையாகவேண்டும். பங்கயம் சாப்பாட்டுக்கு வழியின்றி வீடு வீடாகப் பிச்சை எடுக்கவேண்டும். இதுதான் ஊரவரின் கனவு. சின்னக்குட்டியன் இதற்காகவே மட்டக்களப்புக்குச் சென்று வந்ததாக ஒரு பேச்சு உண்டு. அப்போதுதான் புது லோஞ்சி அவிழ்த்து ஊர்காவற்துறை லைன் ஓடிக்கொண்டிருந்த ஆசைப்பிள்ளையரிலும் ஒரு சந்தேகம் இருந்தது. அனேகமான பெண்களுக்குப் பங்கயத்தின் எடுப்புமீதுதான் கடும் எரிச்சல் இருந்தது. ஆண்களுக்கு அவள் தனிக்கட்டையாவதில் ஒருவித ஆதாயம் இருந்தது. அந்தக்குடும்பம் வீழ்ச்சி அடையவேண்டும் என்ற பொதுப்புள்ளியில் எல்லோருடைய இச்சைகளும் அங்கு இணைந்துகொண்டன.


000


புண்ணியன் எங்கடா? காலைமையே எங்கயோ அடிபுன்னப் போயிட்டானா? கொஞ்ச நாளா அவண்ட போக்கெதுவும் சரியில்ல


தெரியேல்ல, ராசாத்தி மாமி வீட்ட கிணறு இறைக்கினமாம். அண்ணன் ஆமை பிடிக்கப் போயிருப்பான். நானும் போட்டா?”


கிளுவைக்காம்பு முறிக்கவா? பேசாம வாடா


யோகுவையும் அழைத்துக்கொண்டு பங்கயம் புறப்பட்டபோது இறுவிட்டி லோஞ்சியின் சத்தம் வெகுதூரத்தே சன்னமாகக் கேட்டது. அவர்களின் வீட்டிலிருந்து புத்த கோயில் கூப்பிடு தூரம்தான். பங்கயம் வேகமாக நடக்க முயன்றபோது அவளது செருப்பு அறுந்துவிட்டது. இது இப்போது அடிக்கடி நிகழ்கிறது. சவம், செருப்பின் வாரைத் தைத்துப் போட்டாலும் நாலு எட்டு நடந்து நூல் தேய்ந்ததும் மறுபடியும் கழன்றுவிடுகிறது. ஆனாலும் அதனை வீசிவிடவும் அவளுக்கு மனமில்லை. நயினாதீவில் பெண்கள் எவரும் செருப்பு அணிவதேயில்லை. ஒரு சில முதலாளிமார் அணிந்தாலும் அவையெல்லாம் வெறும் இரப்பர் செருப்புகள்தாம். இவள்தான் மகாராணிகள் போடுகின்ற தோலில் செய்த சோலாபுரியை அணிபவள். இவள் செருப்பு அணிந்துகொண்டு எடுப்பாக நடப்பதைப் பார்ப்பதற்கென்றே சில இளவட்ட விசிறிகள் ஊரில் உண்டு. இந்தச் சோலாபுரி வீரவாகு அவளுக்க வாங்கிக்கொடுத்தது. கலியாணமான புதிதில் இரத்தினபுரியில் காமன் கூத்து பார்க்கப்போன இடத்தில் அங்காடியில் யாரோ இராஜஸ்தான் வியாபாரியிடம் பேரம் பேசி வாங்கியது இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. அதுதான் அவளுடைய முதலாவது வெளியூர்ப் பயணம். யாழ்ப்பாணம் ரவுணிலிருந்து மெயில் றெயினில் கொழும்பு சென்று அப்புறம் கண்டி, இரத்தினபுரி என்று இருவரும் திரிந்தார்கள். இரவு ஏழு மணிக்கு ஆரம்பிக்கும் காமன் கூத்தை விடிய விடியப் பார்த்துவிட்டு அடுத்தநாள் பகல் முழுதும் லொட்ஜு அறையிலேயே தூங்கியும் தூங்காமலும் கிடந்து, கதைகள் பேசி, அடங்காப்பிடாரிகளாய்க் கலந்து, சாப்பாடும் தேநீரும் உள்ளூர்ச் சாராயமும் சுருட்டும் அங்கேயே வரவழைக்கப்பட்டு. வீரவாகுவும் பங்கயமும் அந்நாட்களில் ஆடிய விசர்க்கூத்துகள் கொஞ்சம் நஞ்சமா?


பச்சைக் கலாபமயிலே அச்சுதன் மருமகளே

பாங்கான மாமயிலே பூங்காவன குயிலே

பங்கமில்லா மாமணியே மங்கள சிரோன்மணியே

பத்தினிப்பெண்ணே பங்கயமே. என் கச்சையணிந்த மாவலியே

டண்ட ணக்கு, டண்ட ணக்கு, , டண்ட ணக்கு, டண்ட ணக்கு


வீரவாகு சாரத்தை குறுக்குக் கட்டுக் கட்டியபடியே அந்த அறை முழுதும் சுற்றிச் சுற்றி ஆடுவான். பங்கயமும் சளைத்தவளா என்ன?


பூமானே சீமானே கோமானே மன்மதனே

பூமேகும் சந்திரனே மாமோக சுந்தரனே

வாகாகும் உன் வீரம் பூவோடு தோற்பதென்ன?

பார் புகழும் நின் பெருமை பரணுக்குள் ஒளிவதென்ன?”


இவள் அவனைச் சீண்ட, அவன் முறைத்தவாறு அவளைப் பிடித்து அணைத்தபடி கட்டிலில் சரிப்பான். பழங்காலத் தும்பு மெத்தை அது. சின்னி எறும்புகள் ஒட்டு மொத்தமாய் மொய்த்துக் கடிப்பதுபோல தென்னம் தும்புகள் உடல் முழுதையும் குத்திச் சுணைக்க வைக்கும்.


எந்தன் மலர்க்கணைக்கு எதிருமுண்டோடி

இதையறியாது சொல்ல வந்தாய் நீ போடி

சந்ததம் தியாகராசன் சொல் கவி பாடி

சந்தோசமாய் வருவேன், இடை தாடி


பொழுதும் புலர்ந்து, ஊரெல்லாம் எழுந்து அமளி கொண்டபின்னும், அறைக்குள் இருவரும் பிணம்போலத் தூங்கிய அக் கணங்களை அவள் எப்படி இழந்தாள்? ஏனடா என் மாமணியே, என்னை மட்டும் உன் நினைவுகளுடன் தனியே விட்டுவிட்டு அநியாயமாய்ச் செத்துப்போனாய்? ஐயோ. ஐயோ. ஐயோ.


தான் அழுவதைப் பிள்ளை கவனித்துவிடக்கூடாது என்று நுங்குப்பனைகளைப் பராக்குப் பார்த்தவாறு பங்கயம் தொடர்ந்து நடந்தாள்.


000


ஆமத்துறு தயங்கினார்.


பங்கயம் குறை நினையாதேயும். நான் வீரவாகுவுக்கு நிறையக் கடமைப்பட்டிருக்கிறன். அவன் இல்லாம இண்டைக்கு இந்தக் கோயிலில பர்மா புத்தர் இல்லை. ஆனா நீர் இன்னமும் இளம்பிள்ளை. தனிக்கட்டை. இப்ப உமக்கு நான் உதவி செய்தா ஊர் எங்களைப்பற்றிப் பிழையாக் கதைக்கும். அதுவும் உம்மைப்பற்றி விடுப்பு கதைக்க எண்டே ஒரு கூட்டம் இருக்கு. எண்ட பெயருக்கு மரியாதை போயிடும்.”


அப்படிச் சொல்லாதீங்கோ. நீங்கள்தான் மனசு வைக்கவேணும். ஊரில வேற ஒருத்தரிட்டயும் நான் போய்க் கேக்கேலாது. நாகபூசணிண்ட ஊர் எண்டதால அவ்வளவு சவங்களும் கொடுக்குக்க விசத்த வச்சுக்கொண்டு திரியுதுகள். இதுகளிட்ட ஈடு வச்சா காணியை ஒருகாலமும் மீட்க ஏலாது. நீங்கள் நியாயம் தெரிஞ்சவர்.”


பங்கயமும் ஆமத்துறுவும் வாசலில் நின்று பேசிக்கொண்டிருக்கையில் யோகு தனியனாக விகாரை வளவில் கொஞ்ச நேரம் விளையாடிக்கொண்டிருந்தான். பின்னர் பொறுமை இழந்து விகாரைக்குள்ளே நுழைந்தான்.  அங்கே பர்மா புத்தர் நடு நாயகமாக வீற்றிருக்க அருகேயே அமைச்சர் பெருமக்கள்போல முருகனும் பிள்ளையாரும் நாகபூசணி அம்மனும் அவரை சூழ்ந்திருந்தார்கள். யோகு அந்தப் புத்தரையே வாய் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தான். பர்மாவிலிருந்து இந்தப் புத்தரைத் தருவிப்பதற்கு அப்பாதான் காசு கொடுத்ததாகத் தாய் சொல்லிக் கேட்டிருக்கிறான். தங்க நிறத்திலிருந்த புத்தர் நன்றாகத் துடைக்கப்பட்டு பளிச்சென்று மின்னினார். தலையில் கோபுரம்போல மணிமுடி அணிந்திருந்தார். இரவுத் தூக்கம் தொலைத்த அதிகாலை சோர்வுக் கண்கள். தோடுகளின் எடை தாளாமல் தொங்கி விழுகின்ற கிழவியின் நீண்ட செவிகள். புத்தர் வேறு நகைகள் எதையும் அணிந்திருக்கவில்லை. மேலோட்டமாகப் பார்த்தால் முகத்தில் சீனத்து முகவெட்டுத் தெரிந்தாலும் ஊன்றிக்கவனித்தபோது அவரும் ஊரவராகத்தான் தோன்றினார். தங்கள் கொட்டிலின் சாமித்தட்டிலும் ஒரு புத்தரைக் கொண்டுவந்து வைக்கவேண்டும் என்று யோகு நினைத்தான். அவனுக்குத் தெரிந்த சாமிகள் எல்லோருடனும் இவன் விளையாடியிருக்கிறான். வீட்டு மாம்பழத்துக்காய் இவனும் முருகனும் சண்டை பிடித்திருக்கிறார்கள். அம்மாவின் செல்லம் யார் என்று பிள்ளையார் அவனோடு முரண்டு பிடித்ததுண்டு. பனங்காட்டில் நாகப்பாம்பு சரசரத்து படமெடுக்கையில்அம்மாளச்சியிட்ட சொல்லிடுவன்என்று மிரட்டினால் அது பயத்தில் ஓடிவிடும். தான் புத்தரோடு என்ன விளையாடமுடியும் என்று யோகு யோசித்தான். இப்படியே உட்கார்ந்திருப்பார் என்றால் இவரோடு தாயம் விளையாடலாம் என்று தோன்றியது. அவரது சோகிகளையும் தானே உருட்டிப்போட்டு, அவர் அசந்த சமயத்தில் கூழ் விழுந்தால் அலாப்பி, நாலை எட்டாக்கி, எட்டைப் பழமாக்கி. 


தம்பி, சாமியைத் தொட்டுக்கிட்டு ஊத்தையாக்கிடாதை, அது ஒண்டும் விளையாட்டுச்சாமான் இல்லை


பங்கயம் இவனைத்தேடி உள்ளே வர ஆமத்துறுவும் பின்னாலே தொடர்ந்தார்.


சாமிதானே, தொட்டுப்பார்க்கட்டும், பிரச்சனையில்லை”, ஆமத்துறு அவனருகே போய் கை நிறையப் பூக்களைக் கொடுத்து புத்தரின் தட்டில் வைக்கச்சொன்னார். யோகுவும் பவ்வியமாக அதனை வாங்கி புத்தருக்கும் ஏனைய சாமிகளுக்கும் வைத்து வணங்கினான். இவர் அவன் முதுகில் செல்லமாகத் தட்டிவிட்டு பங்கயம் பக்கம் திரும்பினார். 


நீர் பேசாம உம்மட ஊருக்கே போனா என்ன? இஞ்ச இருந்து வீணா கஷ்டப்பட்டுக்கொண்டு. நாட்டு நிலைமையும் முந்திமாதிரி இல்லை. அங்கை போய் இவங்களைப் படிப்பிச்சு கவுண்மேந்து உத்தியோகத்தில சேத்துவிட்டா ராணிமாதிரி இருக்கலாமே? ஏலுமெண்டா இன்னொரு கலியாணமும் செய்யலாம். பாதகமில்லை


இல்லை ஆமத்துறு. இதுதான் என் ஊர். அவர் பிறந்து வளர்ந்த ஊர். என்ன நல்லா மகாராணியாத்தான் வச்சிருந்தார். இப்ப எனக்கென்ன குறை? எப்பன் வசதி வந்திட்டா ஊர் வாய் தன்னால மூடிடும். புண்ணியன் கொஞ்சம் வளர்ந்தாப்போதும், யாவாரத்தை திரும்பத் தொடங்கிடுவம். இவன் யோகுவை யாழ்ப்பாணம் அனுப்பிப் படிக்க வைக்கவேண்டும். எல்லாமே அவரிண்ட கனவு. நான் செஞ்சு முடிப்பன். அதுவரைக்கும் தோட்டத்தில வாறதை வச்சுச் சமாளிக்கலாம்


நான் சொல்லுறதை சொல்லிட்டன். எனக்கு வட்டியெல்லாம் வேணாம். சனம் எனக்கு உதவி செய்யுது. நான் சனத்துக்கு உதவி செய்யிறன். இதில நான் கொண்டுவந்தது ஒண்டும் இல்லை. ஆனா என் பெயரில சின்னப் புரளி கிளம்பினாலும் பத்திரத்தைத் திருப்பித் தந்திடுவன். நீர் காசைக் குடுத்திடோணும். ஊர் முழுக்க அன்பா மரியாதையா வாழ்ந்தாத்தான் அவன் ஆமத்துறு. இல்லாட்டி காவியைப் போட்டுக்கொண்டு உபதேசம் செய்யிறதில என்ன பிரயோசனம் சொல்லும்?”


ஆமத்துறு ஈட்டுக்கு சம்மதித்தவுடனேயே பங்கயத்துக்கு முகம் மலர்ந்தது. அவள் காணிப் பத்திரத்தை அவர் கையில் கொடுத்துவிட்டு, கொண்டு வந்திருந்த வெங்காய முடிச்சையும் சில காய்கறிகளையும் உள்ளே சென்று வைத்தாள். மூலையில் வைக்கப்பட்டிருந்த தும்புத்தடியையும் வாளியையும் எடுத்துவந்தாள்.


டேய் யோகு, இந்தா இதில தண்ணி வாத்துத்தா. கோயிலை ஒருக்கா ஆமத்துறுவுக்கு தட்டிக்குடுத்திட்டுப் போவம்


வேண்டாம் பங்கயம். லோஞ்சி வாற நேரம். ஆக்கள் வரத் தொடங்குவினம். உம்மட மூத்த மகன் ஒருநாளும் இல்லாத திருநாளா காலமையே வந்து முற்றத்தைக் கூட்டிக் குடுத்துட்டுப் போயிற்றான். ஆள் இப்ப பெரியவனாயிட்டார். ஐஞ்சு சதம் குடுத்ததுக்கு முறைக்கிறார். பத்தியம் வேண்டுமாம். வீரவாகுண்ட பெடியல்லோ


ஆமத்துறு சிரித்துக்கொண்டே சொல்ல, பங்கயமும் புன்னகைத்தபடி பீடத்தைப் பார்த்துக் கை தொழுதாள். கண்கள் சொருகியிருந்தாலும் பர்மா புத்தர் அவளையே வாஞ்சையோடு கவனித்தாற்போலத் தோன்றியது. உதடுகளிடையே ஆதரவுடன் ஓர் இள நகை. ஊரின் அத்தனை ஆண்களுமே ஏன் இந்தப் புத்தரைப்போல, ஆமத்துறுவைப்போல பண்பானவர்களாக இல்லை என்று பங்கயத்துக்கு அங்கலாய்ப்பு வந்தது. அப்படி என்னத்தைத்தான் அவள் கேட்டுவிட்டாள்? கணவன், குழந்தைகளோடு நிம்மதியான ஒரு வாழ்க்கையைத்தானே. சரி, அதைக் கொடுக்காமல் விட்டிருந்தாற்கூட அவள் இத்தனை துன்பப்பட்டிருக்கமாட்டாள். ஆனால் வீரவாகு என்ற ஒப்பற்ற தம்போனைக் கொடுத்து, மணி மணியாக இரண்டு குழந்தைகளையும் கொடுத்து, பெருஞ் செல்வத்தையும் செல்வாக்கையும் கொடுத்து, சொட்டு சொட்டாய் அவற்றை அனுபவித்துக்கொண்டிருந்த கணத்தில் விறுக்கென்று பறித்துவிட்டால் அது என்ன கதை? அரிசிப்பல் தெரியச் சிரிக்கும் குழந்தையிடமிருந்து யாராவது பொம்மையைப் பறிப்பார்களா? பிறந்த இடமும் அம்மாள் அருள் பாலிக்கும் இடம். புகுந்த இடமும் அம்மாள் கோலோச்சும் இடம். ஆனால் ஒரு இளம் பெண்ணின் வாழ்க்கை சந்தி சிரிக்கிறது. பங்கயம் அழக்கூடாது என்றுதான் நினைத்தாள்.


சாது, சாது, சாது 


வெளியே ஆட்கள் சத்தம் கேட்டது. பங்கயம் சேலைத்தலைப்ப்பால் முகத்தைத் துடைத்தபடி யோகுவையும் அழைத்துக்கொண்டு வெளியேறினாள். சிங்கள யாத்திரிகள் பலர் வெள்ளை உடையும் மலர்த்தட்டுமாய் நன்றாக முதுகு வளைத்தும் குனிந்தும் ஆமத்துறுவை வணங்கிக்கொண்டிருந்தார்கள். யோகு அங்கு வந்து நின்ற சிறுமி ஒருத்தியை வியப்போடு பார்த்தான். வெள்ளை வேட்டி கட்டி, மேலே பொங்கிய கை வைத்த ரவிக்கை அணிந்து, மெல்லிய தொந்தியோடு கும்பிட்டு நிமிர்ந்த அச்சிறுமி, யோகு தன்னையே பார்த்துக்கொண்டு நின்றதை உணர்ந்து, அவனிடம் திரும்பிச்  சிரித்தாள். இடதுபுறம் தெத்திப்பல் தெரிந்தது. அப்பா வெளியூருக்குப் போய் அம்மாவைக் கலியாணம் செய்து கூட்டி வந்ததுபோலத் தானும் வளர்ந்து இவளைத் தேடிப்போய்க் கலியாணம் செய்துவரவேண்டும் என்று யோகுவுக்கு சடுதியாக ஒரு கற்பனை வந்தது. தன் வயதுக்கு விளையாடுவதற்கு ஒரு துணை கிடைக்கும். கூரை வீடு கட்டிய பின்னர் சாமியறையில் பெரிதாக ஒரு புத்தர் சிலையை இவளுக்காக வைத்துவிடலாம் என்றும் யோசனை வந்தது.  இப்படி வெள்ளை உடை எல்லாம் எங்கள் ஊரின் புழுதிக்குத் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகமும் அவனுக்கு வந்தது. அம்மாவிடம் சொல்லி ஒரு சிறிய சோட்டியைத் தைத்துக் கொடுக்கலாம். அவளது பெயர் என்னவாக இருக்கும்? எப்படிக் கேட்பது? அப்புறம் என்னத்தையெல்லாம் பேசுவது? ஊரில் தங்கி நிற்பாளென்றால் பூரான் வெட்டிக்கொடுக்கலாம். நத்தைப்பாத்தி பற்றியும் இவளுக்குச் சொல்லவேண்டும். காலையில் போட்டுவிட்டு வந்த நத்தைப்பாத்தி இப்போது கலைந்துபோயிருக்கும் என்ற எண்ணம் வந்தது. சுற்றிவர வரிச்சு கட்டியிருந்தால் ஒரு வேளை அவை ஏறித் தப்பமுடியாது. நத்தைகள் கிழங்கு போடுமா என்று அம்மாவிடம் கேட்க நினைத்தது மறந்துபோய்விட்டது.


அம்மோய், நத்தைப்பாத்தி போட்டா கிழங்கு வருமா?”


என்னடா அலம்புற? இவையளுக்கு முழிவியலமா நிக்காம போவம் வா”, பங்கயம் அவனை இழுத்துக்கொண்டு பக்கவாட்டுப் படலையால் வெளியேறினாள்.  


ஒரு கிழமை தாரும் பங்கயம். நான்  காசை பிரட்டிக் குடுக்கிறன்.”


ஆமத்துறுவின் குரல் தொடர, அவள் திரும்பி அவரைப்பார்த்து நன்றியுடன் புன்னகைத்துவிட்டு வடக்கு வீதியில் இறங்கி நடக்கத்தொடங்கினாள். அம்மாள் கோயில் பூசை ஆரம்பிக்கும் நேரமிது. போய்க் கும்பிட்டுவிட்டு திருவிழாவுக்குக் கடைபோட சங்கரப்பிள்ளையரிடம் அனுமதி கேட்கவேண்டும். அந்தாளைப் பார்த்துப் பேசவேண்டும் என்று நினைக்கவே அவளுக்கு குதத்துக்குள் பனங்கருக்கைச் செருகுமாற்போலக் கூசியது. அவள் அனிச்சையாகத் தன் சேலையை இழுத்து மார்பை மூடிவிட்டாள். இந்த நாயளையெல்லாம் கடிச்சு விசமேத்திக் கொல்லாமல் உண்ட பக்கத்திலேயே வச்சிருக்கிறியே நாகபூசணி? ஒரு ஞாயம் தருமமே கிடையாதா? உனக்கு மருமகளா வந்ததாலத்தான் என்னோட நீ மாமியார் ஆட்டம் ஆடுறியா? சிங்க வாகனத்தில சுத்தித் திரிஞ்ச உண்ட மருமகள் இப்பிடிப் பிஞ்ச செருப்போடு அலையிறதை எப்பிடி உன்னால் பொறுத்துப்போக முடியுது? ஒரு ஊருக்கு ஒரு அம்மாளாச்சிதான் எண்டு நினைச்சியா? ஊர்ப் பொம்பிளையளோட கூட்டுச் சேர்ந்து என்ர மனுசனுக்கு சூனியம் வச்சும் கொண்டதும் நீதானா? பொறுங்கடி. உங்கள் எல்லாருக்குமே சேர்த்து நான் மொத்தமா ஒரு சூனியம் வச்சுக்காட்டுறன். இல்லாட்டி எண்ட பிள்ளையள் உங்களுக்கு வைப்பாங்கள். 


அம்மாச்சிநாங்களும் பர்மாவிலயிருந்து ஒரு புத்தர் சிலையை கொண்டு வந்து வீட்டில வைப்பமா? வடிவா வித்தியாசமா தங்க நிறத்தில சொலிக்கிறமாதிரி


உண்ட கொப்பர் கட்டிக் குடுத்த வீட்டிண்ட திறத்துக்கு புத்தர் ஒண்டுதான் இல்லாத குறை.”


பங்கயம் யோகுவை அதட்டியபடியே வேகமாக நடந்தாள். யோகு கடற்கரையில் எம்பி நிற்கும் முருகைக்கற்களை மிதிக்காமல் கவனமாகத் தாண்டித் தாண்டி ஓடினான். நடு நடுவே பாறைகளைப் புரட்டிப் பார்த்து மட்டிகள் ஒட்டிக்கிடக்கின்றனவா எனச் சோதித்தான். ஒரு பாறைமீது அகலவாயன் ஒன்று நின்றதைக் கண்டான். அது ஒரு நத்தையைத் தன் அலகால் பிடித்து நீரில் அதனை நன்றாக உதறிக் கழுவியது. பின்னர் தன் கால்களின் இடுக்கில் அதனை வைத்தபடி  நிதானமாக அதன் ஓடுகளை உடைத்து, உள்ளிருந்த சதையைக் கொத்தித் தின்றது. இத்தனை நடந்தும் அந்த நத்தை ஏன் தன் கூட்டை விட்டு வெளியே வர முயற்சி செய்யாமல் உள்ளேயே அமைதியாக உட்கார்ந்திருந்தது என்று யோகு ஆச்சரியப்பட்டான். சிறு குரல்கூட அது எழுப்பவில்லை. யோகுவுக்கு ஏனோ விகாரைக்குள் சாதுவாட்டம் அமர்ந்திருந்த பர்மா புத்தரின் முகம் ஞாபகத்துக்கு வந்தது. இப்போது பனை உச்சியில் ஓய்வெடுத்துக்கொண்டிருந்த மேலும் சில அகலவாயன்கள் இந்த நாரையோடு கூட்டுச்சேர்ந்தன. அவ்வளவு உயரத்திலிருந்து குதித்துப் பறக்கும்போது அவற்றுக்குப் பயமாக இருக்காதா என்று அவன் ஆச்சரியப்பட்டான். பறக்கும்போது கீழே பார்க்காமல் மேலே வானத்தைப் பார்த்தபடியே பறந்தால் பயம் அவ்வளவாக இருக்காது என்று தோன்றியது. தரையிறங்கிய அகலவாயன்கள் எல்லாம்  நத்தைகளைத் தேடிக்கண்டுபிடிப்பதும் கழுவுவதும் தம் அலகுகளால் நத்தையோட்டை உடைத்து தின்னுவதுமாய்ப் பரபரப்பாக இயங்கின. சில தாம் கழுவிய நத்தைகளை அலகிலும் கால்களிலும் பிடித்தபடி பனை உச்சிக்கே திரும்பிச்சென்றன. அங்கே கூடுகளில் அவற்றின் குஞ்சுகள் நத்தை இரைக்காகக் காத்துக்கிடக்கக்கூடும். யோகுவுக்கு தன் நத்தைப் பாத்தியின் நிலைமை என்னவாயிருக்கும் என்று கவலை வந்திருந்தது. ஒரேயொரு நத்தைத்தின்னி அவற்றைப் பார்த்துவிட்டால் தொலைந்தது. தன் நத்தைகளை எப்படி இந்தத் தின்னிகளிடமிருந்து காத்துக்கொள்வது என்று யோசித்தான். கரகத்தால் மூடிவைக்கலாம்தான். ஆனால் எத்தனை நாட்களுக்குப் பொத்தி வைத்திருப்பது? கடவுள் நத்தைகளுக்கு ஆமையோடு போன்ற ஓட்டைப் படைத்திருக்கலாம் என்று தோன்றியது. ஆமைகள் அளவுக்கு நத்தைகள் அம்பாளை வணங்காமற்போனதால்தான் அவற்றுக்கு இந்த நிலைமையாக இருக்கலாம். அல்லது நத்தைகள் முற்பிறப்பில் ஏதாவது பாவத்தைச் செய்திருக்கவேண்டும். சிலவேளை அவை நத்தைத் தின்னிகளாகவே பிறந்திருக்கக்கூடும்.


யோகுஇழுபடாம வாடாகதவு சாத்தப்போறாங்கள்


தாய் கூப்பிட யோகு வேகமாக அவளிடம் ஓடினான். பங்கயம் அவனது கையைப் பிடித்து இழுத்தபடியே கதி பிடித்தாள்.


அம்மா, உந்த நத்தைகளை நாரையள் எல்லாம் கொத்தித்தின்னுதுகள். பாவம்


ஏன் நத்தை மட்டும் சும்மாவா? அது நாத்தையும் சாப்பிடும். புழுவையும் சாப்பிடும். சில நேரம் வேறை நத்தையளைக்கூட சாப்பிடும். இஞ்ச எல்லாமே எல்லாத்தையும் சாப்பிட்டுக்கொண்டுதான் திரியுதுகள்


பங்கயம் எரிச்சலுடன் புறுபுறுத்தாள். அவளுக்குச் சங்கரப்பிள்ளை முன்னாலே போய் நிற்கவேண்டுமே என்ற பதற்றம். அவள் ஏன் இந்தச் சங்கரப்பிள்ளையிடம் சென்று பல்லிளிக்கவேண்டும்? பேசாமல் ஆமத்துறுவிடமே வேலைக்குச் சேர்ந்துவிட்டால் என்ன? பங்கயம் எட்டாம் வகுப்புவரையும் படித்தவள். பள்ளிக்கூடத்தில் கணக்குப் பாடம் என்றால் பங்கயம்தான் அதிகப் புள்ளி எடுப்பது. கணக்கு எழுதுவதோடு புத்த கோயிலிலேயே நிரந்தரமாக ஒரு கடை போட்டு பூ, பழம் என விற்கலாம். நன்கொடைகளைக் கணக்கு வைத்து, கொடுத்தவர்களுக்கு வருடாவருடம் வாழ்த்துக் கடிதங்கள் அனுப்பி, அரசு மானியங்களுக்கான விண்ணப்பங்களை நிரப்பி, அவளைப்போலக் காணி நகைகளை ஈடு வைப்பவர்களின் கணக்குகளைப் பார்த்து என்று பலவித வேலைகள் ஆமத்துறுவிடம் இருக்கும் என்று தோன்றியது. மாசச் சம்பளத்துக்குச் சேர்ந்துவிட்டால் கொஞ்சம் கொஞ்சமாகச் சம்பளத்திலிருந்தே கடனை அடைத்துவிடலாம். யோகு சொல்வதுபோல புது வீட்டில் புத்தர் சிலையைக்கூட வைக்கலாம். அந்தச் சில கணங்களுக்குள்ளேயே மனக்கண்ணில் அவர்களது ஓட்டு வீடு மிக வேகமாகக் கட்டப்பட்டு, குடிபூரலும் நிகழ்ந்து முடிந்தது. வெளிச்சுவருக்குச் சொட்டு நீலத்தில் பூச்சு இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. கொல்லைப்புறத்தில் வெள்ளைக்காரர் கட்டுவதுபோல கக்கூஸ் கட்டி வெளியே தண்ணீர்த்தொட்டி அமைக்கவேண்டும். உயரமான அவளது வீட்டுப் புகைக்கூண்டிலிருந்து பரவும் சமையற் புகையில் முழு ஊருமே கண்ணெரிஞ்சு சாகவேண்டும். அந்த எரிச்சலை நிவர்த்தி செய்ய வாசலில் ஒன்றுக்கு இரண்டு திருஷ்டிப் பூசனிகளை அவள் தொங்கவிட வேண்டிவரும். எல்லாவற்றையும் மாரிக்கு முன்னமே முடித்துவிடுதல் சிறந்தது. மழைக்காலம் வந்தால் பொருட்களைக் கடல் தாண்டிக் கொண்டுவருவது சிரமமாகும். வீரவாகு சொல்வதுபோல யாழ்ப்பாணத்தான்களைச் சமாளிப்பதும் கடினம். மாவனல்லைக்குப் போய் அதே மேசனைத் தேடிப் பிடித்துவரவேண்டும். செலவு முன்னப் பின்ன ஆனாலும் பரவாயில்லை. வீரவாகுவின் திட்டத்தின்படி எப்பன் பழுதில்லாமல் வீட்டைக் கட்டி முடிக்கவேண்டும். மனுசன் இல்லாமலும் தனிக்கட்டையாகப் பங்கயம் காரியத்தைச் சாதித்தாள் என்ற பெயர் ஊரில் எழவேண்டும். காசு தேவையென்றால் ஆமத்துறுவிடம் திரும்பவும் கேட்டுப்பார்க்கலாம். மனுசன் நல்லமாதிரி. விகற்பம் இல்லாதவர். சூதுவாது தெரியாது. சைவக் கோயில் பூசாரிகள்போல கடமைக்குப் பூசை செய்து, தட்சணைக்கு வழிந்து, கேட்டுக்கேள்வியின்றிப் பெண்கள் நெற்றியில் தொட்டுப் பொட்டினை வைத்து, உச்சந்தலையைத் தடவிவிடும் சின்னத்தனங்கள் இல்லாமல் தானும் தன்பாடுமாகப் புத்தர்போலவே பழகுபவர். இப்படி ஒரு மனுசன், ஒரே ஒரு மனுசன் இந்த ஊரில் புரிந்துணர்வுடன் அவளோடு வாழ்க்கையைக் கொண்டுசெல்ல இசைந்தால் எத்தனை நன்றாக இருக்கும்? அவள் விதி. நல்லவர்கள் எல்லாம் ஒன்று இறந்துவிடுகிறார்கள். அல்லது புத்தனாகிப் போகிறார்கள். அவளுக்கு ஏன் இப்படிப் புத்தி தடுமாறுகிறது? ஏன் சலனம் அடைகிறாள்? ஆயிரம் வேலைகள் இருக்கின்றனவே. உந்த ஆமத்துறு வேறு கோயிலுக்கு மாற்றலாகிப் போக முன்னர் வீட்டைக் கட்டி முடித்து, காணிப்பத்திரத்தையும் மீட்கவேண்டும். நாளையே புண்ணியனை மாவனல்லைக்கு அனுப்பி மேசனையும் கூட்டத்தினரையும் அழைத்து வரச்சொல்லலாம். வேண்டுமானால் தேவைக்கில்லாத தாலிக்கொடியையும் அடகு வைத்துக்கொள்ளலாம். இந்தப் புண்ணியன் எங்கே போனான்? 


பாலத்தடியில் புண்ணியனின் சில நண்பர்கள் தார் வாளிகளோடு நின்றிருந்தார்கள். 


என்னடா இஞ்ச நிக்கிறிங்கள்? றோட்டுத்தான் போட்டு முடிஞ்சுதே? எங்கையாவது கோறை விழுந்திட்டா?”


அவர்கள் தமக்குள் மாறி மாறிப் பார்த்தார்கள். கந்தசாமி மட்டும் பேசினான்.


இல்லை, ஒழுங்கா காய முதல் புழுகரிண்ட வண்டில் றோட்டுக்குள்ள போயி குண்டு விழுந்திட்டுஅதான் அடைக்கலாம் எண்டு …”


சரி சரிவெயிலுக்கு முதல் வேலையை முடியுங்கோஇந்த புண்ணியன் எங்கையாவது கண்டனிங்களா? உங்களோடதானே திரிஞ்சான்?”


அவர்கள் தயங்கினார்கள்.


அவன் .. இல்லை, புண்ணியனை நாங்கள் காணேல்ல. ராசாத்தி குஞ்சம்மா வீட்டில இறைப்பு. எக்கணம் ஆமை பொறுக்க போயிருப்பான்


000


மதியம் தாண்டியும் புண்ணியன் வீட்டுக்கு வரவில்லை. பொறுமையிழந்த பங்கயம் யோகுவை ராசாத்தி வீட்டிற்கு அனுப்பி அவன் அங்கிருந்தால் கையோடு கூட்டிவரச் சொன்னாள். கிணறு இறைப்புக்குப் புண்ணியன் வரவேயில்லை என்று யோகு திரும்பி வந்து சொன்னபோது மத்தியானம் மூன்று மணி ஆகிவிட்டிருந்தது. காலையில் புத்த கோயிலுக்கு வந்ததாக ஆமத்துறு சொல்லியதைத்தவிர அவன் வேறு எங்கு போனான் என்ற எந்தத் தகவல்களும் இல்லை. சாப்பாடு, தண்ணி இல்லாமல் பிள்ளை என்ன செய்கிறான் என்ற கவலை முதன்முதலாக அப்போதுதான் பங்கயத்துக்கு வந்தது. அவன் பொதுவாகச் சொல்லாமல் கொள்ளாமல் எங்கும் போவதில்லை. அப்படியே போனாலும் தாயிடம் வேளாவேளைக்குச் சாப்பிடவென ஓடிவந்துவிடுவான். பின்னேரம் விளக்கு வைத்த பின்னரும் அவனது சிலமனைக் காணவில்லை என்றதும் பங்கயத்துக்குச் சாதுவாகப் பயம் பிடித்துக்கொண்டது. இரவுச் சாப்பாட்டுக்கும் அவன் வரவில்லை என்றதும் பங்கயம் அரிக்கன் இலாம்பை எடுத்துக்கொண்டு யோகுவோடு புறப்பட்டுவிட்டாள். முதலில் லோஞ்சிக்காரர் ஆசைப்பிள்ளையர் வீட்டுக்குத்தான் சென்றாள்.


இல்ல பிள்ளை, அவன் இண்டைக்கு லோஞ்சில ஏறினதா ஞாபகம் இல்லை. இவன் கந்தசாமியோடைதான் இரண்டு மூண்டு நாளா ஊரளந்துகொண்டு நிண்டதா ஞாபகம்


காலையில் பங்கயம் கந்தசாமியிடம் கேட்டபோது அவன் எதுவுமே தெரியாதவனைப்போலப் பேசியது சின்ன சந்தேகத்தை வரவழைத்தது. நேராக அவள் கந்தசாமியின் வீட்டுக்குச் சென்றாள். அவனும் அங்கே இல்லை என்று அறிந்ததும் அவர்களுடைய நண்பர்கள் வீடுகளுக்கு எல்லாம் சென்று விசாரித்தாள். கந்தசாமியின் கூட்டத்திலிருந்த எவனுமே வீடுகளில் இல்லை என்றதும் சந்தேகம் மேலும் வலுத்தது. எங்கு போயிருப்பார்கள்? லோஞ்சியில் யாழ்ப்பாணம் செல்லவில்லை. படகு எதையும் அவிழ்த்துக்கொண்டு இராமேஸ்வரம் போயிருப்பார்களா? ஏதாவது கடத்தல் செய்கிறார்களா? அப்பனின் குணம் இவனுக்கும் வந்துவிட்டதா? அப்படியென்றால் இரண்டு துணியையாவது எடுத்துச் சென்றிருக்கவேண்டுமே? எங்கே போனார்கள்? எங்கு போவதென்றாலும் பணம் வேண்டுமல்லவா? கோயிலைத் துப்புரவாக்கிவிட்டு பத்துச் சதம் கேட்டதாக ஆமத்துறு சொன்னது மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது. பத்துச் சதத்துக்கு வேலை மெனக்கெட்டு கோயில் முற்றம் கூட்டப் போயிருப்பானா? எங்கோ தவறு நிகழ்கிறது. நாட்டு நடப்புகள் சரியில்லை என்று கோயிலடியில் ஆட்கள் பேசிக்கொண்டது நினைவுக்கு வந்தது. ஏதோ தோன்றியவளாய்வாடா கெதியெண்டுஎன்று யோகுவைத் தரதரவென இழுத்துக்கொண்டு பங்கயம் புத்த கோயிலை நோக்கி விரைந்து நடக்க ஆரம்பித்தாள்.


அப்போது நள்ளிரவுப் பனி கொட்ட ஆரம்பித்திருந்தது. நான்காம் பிறையின் கீற்றும் நட்சத்திர வெளிச்சமும் நடைபாதைக்குப் போதவில்லை. யோகு வண்டில் தடத்தில் வேகமாக நடக்கையில் ஊரிகள் அவன் பாதங்களைப் பதம் பார்த்தன. நடுவே முழித்துக்கொண்டு நின்ற கற்கள் பெருவிரலைப் பதம் பார்த்தன. அவனிடமும் ஒரு இரப்பர் செருப்பு இருந்தது. ஆனால் அதனை யாழ்ப்பாணம் போகும்போது மட்டும் போடவேண்டும் என்று தாய்க்காரி அறிவுறுத்தியிருந்தாள். யோகு கற்களை மிதிக்காமல் கரையோரமாக வளர்ந்திருந்த அறுகம்புற்களின்மேல் நடக்கலானான். பூவரசுகளில் தூங்கிக்கொண்டிருந்த புலுனிகள் இவர்களின் அரவத்துக்குத் தூக்கம் கலைந்து கிசுகிசுத்துவிட்டு மீண்டும் அமைதியாயின. வௌவால் ஒன்று பரபரப்பாக இறக்கை அடித்துக்கொண்டு அவர்களைக் கடந்து சென்றது. தூக்கமும் குளிரும் யோகுவைத் துவளச்செய்ய அவன் அம்மாவோடு உரஞ்சியபடியே நடக்கலானான். நத்தை தன் ஓட்டுக்குள் சுருள்வதுபோல இப்பவே வீடு திரும்பி, தன் தாயின் மடிக்குள் குறண்டிக்கொண்டு படுத்தால் நன்றாக இருக்கும் என்று அவனுக்குத் தோன்றியது. அண்ணன் தன்னைப்போலச் சின்னப் பெடியன் இல்லையே. எப்படியும் அவன் வீட்டுக்கு வந்துவிடுவான். மத்தியானம் அம்மா ஒரு நண்டுக்கறியை அடுப்பில் ஏற்றினால் அதன் வாசத்துக்கே தேடி வந்துவிடமாட்டானா?


எனக்கு நித்திரை வருது. அண்ணன் எப்பிடியும் வந்திடுவான். வாம்மா திரும்பிப்போவம்.”


யோகுவுக்குப் பதில் சொல்லாமல் அவன் கையை இறுக்கிப்பிடித்தபடி பங்கயம் மேலும் வேகம் பிடித்தாள்.


000


பொறுங்கடாஇப்பத்தான் ஆமத்துறு லாம்பை நூத்திருக்கிறான். அரை மணித்தியாலம் பார்ப்பம்


கந்தசாமி மெதுவாகக் கிசுகிசுக்கவும் புண்ணியனும் அவனது நண்பர்களும் ஆசுவாசமாக வைக்கோல்போரில் சாய்ந்து அமர்ந்தனர். 


முழிச்சிருந்தா மட்டும் புடுக்கர் எங்களில கை வச்சிடுவாரா? எக்கணம் சூடைய அரியிறமாதிரி அரிஞ்சிடுவன்


ஒருத்தன் தான் கொண்டுவந்திருந்த மீன் அரிவாளின் கூரினை விரல்களால் நீவி விட்டான். 


இண்டையோட கொழும்பில கிடக்கிற அத்தினை ஆமத்துறுக்கும் பேதி கழியோணும்


சத்தம் போடாமல் இருங்கடாகொஞ்சநேரம்தான்திரும்பவும் சொல்லுறன், ஆளைக் கொண்டிடாதீங்கோ .. பிறகு கேஸ் கீஸ் ஆனா நான் பொறுப்பில்ல


பனை வடலிக்குள் தூங்கிக்கொண்டிருந்த அகலவாயன்கள் சில இவர்களின் அரவத்துக்கு எழுந்து இறக்கை அடித்துப் பின்னர் அமைதியாயின. தூரத்தே ஓரிரண்டு வீட்டு நாய்களும் குரைத்து ஓய்ந்தன. சாமத்துக் கடற்காற்றுக்கு அடித்த அலையோசையும் பனையோலை சரசரப்பும் கூதலும் கொஞ்சம் அச்சமும் சேர்ந்துகொண்டதில் புண்ணியனின் பற்கள் நடுக்கத்தோடு கிடுக்கிக்கொண்டன. ஒரு மேற் சட்டையைப் போட்டுக்கொண்டு வந்திருக்கலாம் என்று தோன்றியது. அன்று முழுதும் சரியாகச் சாப்பிடவில்லை என்று வயிறு புலம்பியது. அவனுக்கு அம்மாவின் ஞாபகம் வந்தது. நாளை அவன் பொலிசில் பிடிபட்டால் அதிகம் பாதிப்படையப்போவது அம்மாதான் என்று அவன் கவலைப்பட்டான். மனிசி வீம்புக்கு நின்று அந்த வீட்டைக் கட்டுவேன் என்று அடம் பிடிக்கிறது. ஆனால் வீட்டைவிட நாடுதான் முக்கியம் என்பதை எப்படி அவன் தாய்க்கு விளங்கவைப்பது? ஒரு சின்னச் சில்லெடுப்புத்தான். முளையிலேயே கிள்ளிவிடவேண்டும். நாட்டுப் பிரச்சனையைத் தீர்த்துவிட்டால் பின்னர் வீட்டைக் கட்டுவது சுலபமாகிவிடும். சிங்களவரிடம் போய் நின்று சிங்களத்தில் இறைஞ்சிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. எங்கள் அரசிடமே கடன் கேட்கலாம். புத்த கோயில் ஆமத்துறுவிடம் போய் அஞ்சியத்துக்கும் பத்தியத்துக்கும் கூட்டிப்பெருக்கத் தேவையில்லை. நாங்கள் செய்வதுபோலவே ஒவ்வொரு தமிழ் நிலத்திலும் இளந்தாரிகள் களத்தில் இறங்கினால் போதும். பொன்னம்பலத்தார் பண்டாவிடம் சென்று முழங்கால் போடவேண்டி வராது. அது பொன்னம்பலமா செல்வநாயகமா என்று ஒரு கணம் அவனுக்குக் குழப்பம் வந்தது. கந்தசாமியிடம் கேட்கலாம் என்று திரும்பினான். அவனோ தார் வாளியையும் மண்ணெண்ணெய்ப் போத்தலையும் கையிலெடுத்தபடி தயாராக முன்னே வந்து நின்றான்.


என்னங்கடா வெளிக்கிடுவமா?”


எல்லோரும் கத்தி, அலவாங்கு, அருவாள் என்று அவரவர் ஆயுதங்களைக் கையில் எடுத்துக்கொண்டார்கள். புண்ணியன் ஆமர் ஒன்றை எடுத்து வந்திருந்தான். ஒருத்தன் தீவட்டிகளைக் கொழுத்தித் தயார் செய்தான். எல்லோரும் அவர்கள் ஒளிந்திருந்த தோட்டக்காணியிலிருந்து வெளியேறி, வீதியைத் தாண்டி, எதிரே இருந்த புத்த கோயில் பக்கவாட்டுப் படலையைத் திறந்துகொண்டு உள்ளே நுழைந்தார்கள். புண்ணியன் நேரே போய் விகாரை வாசற்கதவில் தொங்கிய பூட்டைத் தன் ஆமரால் ஒரே போடாய்ப்போட அது பிளந்தது. அவர்கள் கதவைத் தள்ளிக்கொண்டு உள்ளே ஓடினார்கள். அங்கே நடுவில் புத்தரோடு வீற்றிருந்த சிவனையும் முருகனையும் பிள்ளையாரையும் பார்த்த ஒருவன் கத்தினான்.


டேய், நீங்கள் எல்லாம் இஞ்ச என்னடா செய்யுறீங்கள்?”


அவன் சாமிப் படங்களை எடுத்து மூலையில் வீசியெறிந்தான். புண்ணியன் பர்மா புத்தரை கைகளால் உலுக்கிப்பார்த்தான். வரவில்லை. பின்னர் கையில் வைத்திருந்த ஆமரால் அதனைத் தாக்கினான். இதற்குள் சத்தம் கேட்டு எழுந்த ஆமத்துறு உள்ளே ஓடிவந்தார்.


ஐயோஎன்ன செய்யிறிங்கவேணாம் பிள்ளையள். நிப்பாட்டுங்கோ


யாரோ ஒருத்தன் தூஷணத்தில் திட்டினான். இருவர் ஆமத்துறுவைப் பிடித்துக்கொண்டார்கள். கந்தசாமி தார் வாளியைச் சூடாக்கிக் காய்ச்ச ஆரம்பித்தான். பந்தத்தை உள்ளே அமுக்கி எடுத்து, ‘சிறீஎன்று தமிழில் தூபத்தின் சுவர் முழுதும் எழுதத்தொடங்கினான். புண்ணியன் மூன்றாவது முறை ஆமரை வீசியபோது புத்தர் சிலை சரிந்துவிட்டது. வெளியே ஆமத்துறு தமிழிலும் சிங்களத்திலும் அலறிக்கொண்டிருந்தார். புண்ணியன் என்ன நினைத்தானோ தெரியாது. ஆமரைப் போட்டுவிட்டு புத்தரைத் தூக்கிக்கொண்டு வெளியே ஓடினான்.


டேய் என்னடா செய்யிற?”


கந்தசாமி கத்தியதற்கும் பதில் சொல்லாது, புண்ணியன் இருட்டில் மலக்க மலக்க விழித்தபடி கடற்கரையை நோக்கி ஓடினான். கழுத்து சேதமடைந்து, உள்ளிருந்த கம்பியின் தயவில் பர்மா புத்தரின் தலைமட்டும் தனியே தொங்கியது. மரத்தால் தவறி விழுந்து கழுத்து முறிந்த குழந்தையைக் கையிலேந்தியபடி ஆஸ்பத்திரிக்கு ஓடும் தகப்பனைப்போல இரண்டு கைகளாலும் அந்தப் புத்தரைத் தாங்கியபடி புண்ணியன் வேகமாக ஓடினான். இருட்டில் வழியில் கிடந்த முருகைக்கற்களைத் தெரியாமல் மிதித்தலில் கால்கள் கிழிபட்டு அவனுக்கு இரத்தம் கொட்டியது. அவன் அதனைச் சட்டை செய்யாது இன்னமும் வேகமாக ஓடினான்.


தம்பி …. எங்கேடா நிக்கிறாய்ஐயோ புண்ணியன்…”


தூரத்தே பங்கயத்தில் அலறல் கேட்டது. புண்ணியன் தாயின் குரலைக் கேட்டதும் சற்றுத் தயங்கியவனாய் ஓடுவதை நிறுத்தித் திரும்பிப்பார்த்தான். அரிக்கன் இலாம்போடு பங்கயம் பதைப்புடன் விரைந்து வருவது தெரிந்தது. பின்னாலேயே யோகுவும் இழுபட்டான். இரவின் சன்னத்து வெளிச்சத்திலும் பங்கயமும் இவனை அடையாளம் கண்டுவிட்டாள்.


எண்ட அம்மாளாச்சி. என்ன காரியமடா செய்யிறாய்? இதெல்லாம் எங்களுக்கு வேண்டாம். ராசா. அந்தச் சாமியைக் கொண்டுபோய் வச்சிட்டு வீட்ட வாடா


பங்கயம் அவனை நெருங்கிவிட்டாள்.


இதுகளுக்க நீ இப்ப எதுக்க வந்தனி? வீட்ட ஓடு முதலில


புண்ணியன் தாயைப் பார்த்துக் கத்திவிட்டு மீண்டும் கடலை நோக்கித் திரும்பி ஓடத்தொடங்கினான். நீருக்குள் சென்றதும் கையில் புத்தரோடு தாண்டித் தாண்டி நடப்பது கடினமாக இருந்தது. இடையே ஒரு பாறையில் தெரியாமல் கால் இடறுபட்டுத் தடக்கி விழுந்தான். பின்னர் தடுமாறி எழுந்தபோது தலையற்ற புத்தர்தான் கையில் எஞ்சியிருந்தார். அவன் இன்னமும் முன்னே நகர்ந்து, கழுத்துவரை ஆழத்துக்குச் சென்ற பின்னர் பர்மா புத்தரின் முண்டத்தைப் பலம் கொண்டவரைக்கும் சுழற்றிக்  கடலுக்குள் வீசி எறிந்தான்.


பேப்பூழல், இனிமேல் நீ இஞ்சாலை தலை வச்சுப்பாரன். நிலைமையே வேற


புறுபுறுத்தபடியே புண்ணியன் கடலுக்குள் நின்றவாறே கரையை நோக்கித் திரும்பிப்பார்த்தான். கொள்ளி வாய்ப் பிசாசுகளைப்போல புத்த கோயிலடியில் இன்னமும் தீவட்டிகள் வேகமாக அங்குமிங்கும் ஓடித்திரிந்தன. அக்கம் பக்கத்து வீடுகளிலும் வெளிச்சங்கள் முளைத்து வெளியே வர ஆரம்பித்தன. காற்று இன்னமும் வேகமாக வீசிக்கொண்டிருந்தது. தலையை விரித்துப்போட்டு ஒப்பாரி ஓலத்தோடு தலையிலடிக்கும் கிழவிகளைப்போல பனை மரங்கள் தம் ஓலைத் தலைப்புகளால் அடித்துக்கொண்டிருந்தன. இந்த அமளியில் வடலிகளில் தூங்கிக்கொண்டிருந்த அகலவாயன்களும் சாம்பல் நாரைகளும் பெரும் ஒலியை எழுப்பியவாறு காற்றின் திசையில் பறக்க ஆரம்பித்தன. வட திசையில் அம்மாள் கோவில் கோபுரத்துக்கு மேலாக உயரே வெள்ளி ஒன்று வேகமாக நகர்ந்து சென்றுகொண்டிருந்தது. வெகு தூரத்திலிருந்து நேவிப் படகின் மோட்டர் சத்தம் மெதுவாகக் கேட்க ஆரம்பித்தது.


கரையில் ஒரு முருகைக்கற் பாறை மேலே பங்கயம் அதிர்ந்துபோய் உட்கார்ந்திருந்தாள். மெதுவாக அவளிடம் நெருங்கிச்சென்ற புண்ணியன் தாயின் தோள்களைப் பிடித்து உலுக்கி, வீட்டுக்குப் போகுமாறு அறிவுறுத்தினான். அவள் அவன் தலையைத் தொட்டுத் தடவிவிட்டவாறே அமைதியாகச் சொன்னாள்.


ஓடிடு அப்பன், அப்பிடியே தெற்கால போய் ஒரு படகைப் பிடிச்சு யாழ்ப்பாணம் போயிடு. இல்லாட்டி இராமேஸ்வரம் போய்க் கொஞ்ச நாள் இருந்திட்டு வா. இங்கனக்க திரியாத. அம்மாவிண்ட சொல்வழி கேளு. என்ர குஞ்சல்லோ


நான் எதுக்கு ஓடோணும்? இது எங்கட ஊர்இஞ்சதான் எங்களுக்கு வீடு இருக்கு.”


எங்கிருந்து பங்கயத்துக்கு அந்த வலு வந்ததோ தெரியாது. திடீரென்று அவள் புண்ணியனை இழுத்து வைத்து மொத்தத்தொடங்கினாள்.


கழுசடை, அந்த வீட்டைத்தான் கண் முன்னாலேயே உடைச்சு ஒரேடியாக் கடலுக்க போட்டிட்டயே. நாய் வீட்டு மூதேசி. உண்ட அப்பனை நம்பி இஞ்ச வந்து, இதுகளிண்ட ஏச்சு பேச்செல்லாம் தாங்கி, உங்களை எல்லாம் வளர்த்தது விழல் வேலை எண்டு இப்பதான் தெரியுது. சவமேஞாயம் கதைக்காம ஓடிப்போயிடுஅவங்கள் வந்து உன்னை வெட்டிப் போடுறதையும் இந்த அம்மாவைப் பாக்க வைக்காதசொன்னாக் கேக்கமாட்டியா? தப்பி ஓடு சனியனே


பங்கயம் புண்ணியனை தாறுமாறாக அடிக்கவும் புண்ணியன் மிரண்டுபோய் அவளுக்குப் பயந்து ஓடத்தொடங்கினான். இவர்கள் போட்ட ஆரவாரத்தை வேறு எவருமே கவனித்ததாய்த் தெரியவில்லை. யாரோ புத்த விகாரையின் தூபிக்குத் தீ வைக்க முயன்றுகொண்டிருந்தார்கள். சிலர் ஓரிரு பெட்டிகளைத் தூக்கிக்கொண்டு ஊருக்குள் ஓடினார்கள். கந்தசாமி இப்போது புத்த கோயிலின் வாசல் வரவேற்புப் பலகையில் தாரினால் சிறீ என்று தமிழில் எழுதிக்கொண்டிருந்தான். மரத்தில் கட்டப்பட்டிருந்த ஆமத்துறு தனக்குள் இன்னமும் புலம்பிக்கொண்டிருந்தார்.


பிள்ளையளே இது வேணாம். இதால நாசம்தான் விளையும். சொல்லுறதை கேளுங்கோ


பங்கயம் புண்ணியனை தெற்கு வீதியில் இன்னமும் துரத்திச்சென்றுகொண்டிருந்தாள்.


ஓடுடாநாசமறுவானே, எண்ட கண்ணிலயே நீ அம்பிடக்கூடாது … ”


அம்மாள் கோயில் கோபுரத்தைத் தாண்டி அந்த வெள்ளி இப்போது நாலாம் பிறையை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. இடையிடையே அது மின்னி ஒளிர்ந்தது. மின்னியபடி நகருமானால் அது நட்சத்திரம் அல்ல, ஆகாய விமானம் என்று யோகுவுக்கு அம்மா சொல்லியிருக்கிறாள். இங்கிருந்து அத்தனை உயரத்துக்கு அந்த விமானம் எப்படி எழுந்து பறந்திருக்கும் என்று யோகுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. எத்தனை மனிதர்கள் அதற்குள் இருப்பார்கள் என்று ஒரு எண்ணம் எழுந்தது. விமானத்தில் யன்னல் இருக்குமா? அவர்களுக்கு மேலிருந்து கீழே தரையைப் பார்க்க அச்சமாக இருக்காதா? வளர்ந்த பின்னர் தானும் ஒருநாள் ஆகாய விமானத்தில் ஏறிப் பயணிக்கவேண்டும் என்ற ஆசை யோகுவுக்கு வந்தது. இயலுமானால் காலையில் கோயிலில் பூத்தட்டு கொண்டு வந்த அந்தச் சிங்களச் சிறுமியையும் அழைத்துப்போகவேண்டும். விமானத்திலிருக்கும்போது கீழே குனிந்து பார்க்காவிட்டால் பயமாக இருக்காது. அகலவாயன்களைப்போல. உயரே பறக்கும்போது அவை தரையைப் பார்ப்பதேயில்லை. அப்படியே தப்பித்தவறிக் குனிய நேர்ந்தாலும் கண்களை இறுக்க மூடிக்கொண்டால் பயம் அவ்வளவாகத் தோற்றாது என்று அவனுக்குத் தோன்றியது.


நத்தை தன் ஓட்டுக்குள்ளே சுருங்குவதைப்போல.


***

வெட்சி 2023

Popular posts from this blog

பரியோவான் பொழுதுகள் - உரை

 பரியோவான் பொழுதுகள் வெளியீட்டில் இடம்பெற்ற என் உரையாடலில் காணொலி.

விளமீன் - சிறுகதை

அந்த ஒரு மீன் மாத்திரம் முழித்துக்கொண்டுத் தனித்துத் தெரிந்தது. அந்தக் குவியலில் கிடந்த மீதி அத்தனை மீன்களும் இளஞ்சிவப்பு நிறத்திலிருக்க இது மாத்திரம் வெள்ளைத்தோலில் மெலிதாகப் படர்ந்திருந்த தங்கநிறக் கண்ணாடிச் செதில்களோடும், சற்றே திறந்துகிடந்த இரத்தச்சிவப்பு செவுள்களோடும் குவிந்த கண்களோடும். சரசு மாமி ராசனிடம் திரும்பவும் சொல்லிப்பார்த்தார். இம்முறை சற்றுக் கெஞ்சலாக. “தம்பி. நான் சொல்லுறன். அது எங்கட ஊர் விளமீன்தான். விறைச்சுக்கொண்டு கிடக்கு. நல்ல உடன் மீன். வாங்கித்தாவன்.” “அரியண்டம் பண்ணாம வாங்கோம்மா. ஊர் விளமீனை ஊருக்குப்போகேக்க சாப்பிட்டுக்கொள்ளலாம்.” மாமி அந்த விளமீனையை பார்த்தபடி நின்றார். இனி எப்போது ஊருக்குப் போய், எப்போது விளமீன் வாங்கி. இதுவெல்லாம் நடக்கிற காரியமா? ராசன் வேகமாக அடுத்த கடையை நோக்கி நடக்க ஆரம்பித்திருந்தான். சந்தை முழுதும் ராசனும் ரூபிணாவும் நடந்த வேகத்துக்குச் சரசு மாமியால் ஈடு கொடுக்கமுடியவில்லை. சேலை நிலத்தில் அரிபட அவர் பின்னாலேயே இழுபட்டுக்கொண்டுபோனார். அந்த விளமீன் அவர் பின்னாலேயே இழுபட்டு வந்துகொண்டிருந்தது. “இந்த ஊர் சினப்பரும் விளமீன்மாதிரித்தான் இருக